3 தியானங்களில் நல்ல பலன்களை அடைவதற்கு கிறிஸ்தவர்களுக்கான கோட்பாடுகள்

அக்டோபர் 20, 2021

நீங்கள் எப்போதாவது இந்தக் குழப்பத்தை எதிர்கொண்டு இருக்கிறீர்களா, அதாவது நீங்கள் அனுதினமும் உங்கள் தியானங்களையும் ஜெபத்தையும் செய்தாலும், நீங்கள் இன்னும் அதிகமாக எதையும் பெறாமலும் அல்லது ஏவப்பட்ட உணர்வுகளை அடையாமலும் இருக்கிறீர்களா? உண்மையில், அது ஏன்? நமது தினசரி தியானங்களிலிருந்து நாம் எவ்வாறு பலன்களை அடைய முடியும்? கீழே உள்ள மூன்று நடைமுறைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் வரை, நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்து பெறுகிறதில் மேம்படலாம் மற்றும் வாழ்க்கையில் நாம் மிகவும் வேகமாக வளருவோம்.

Daily devotional in tamil

1. தியானங்களில் தேவனுக்கு முன்பாக உங்களையே அமைதிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்

நம் ஆவிக்குரிய வாழ்க்கை கனிதருவதற்கு தியானங்களுக்கான சரியான அணுகுமுறையைக் கண்டறிவது அவசியமாகும். முதலாவதாக, நாம் தேவன் முன் நம்மையே அமைதிப்படுத்த வேண்டும். இதை நாம் எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு எளிதாக பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அடைய முடியும். நம்மால் அதைச் செய்ய முடியாவிட்டால், பின் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, அப்போதும் வேலை, பள்ளி மற்றும் குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அதன்பின் நாம் நம் தியானங்களில், ஏனோதானோவென்று அக்கறையின்றி இருந்துகொண்டு, தேவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருப்போம், ஏனென்றால் தேவனை ஆராதிப்பதிலும், ஜெபத்துடன் அவருடைய வார்த்தைகளைப் படிப்பதிலும் மாத்திரம் பிரத்தியேகமாக நாம் கவனம் செலுத்தவில்லை. அது நாம் தேவனுடைய வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் எந்தப் பிரகாசத்தை பெறுவதையும் சாத்தியமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

தேவனின் வார்த்தை கூறுகிறது, “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜீவியமாகும். ஜெபிக்கும்போது, ஒருவர் தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். மேலும் ஜெபத்தின் மூலம் ஒருவர் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைத் தேடலாம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளலாம். அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதன் மூலமும், பருகுவதன் மூலமும், தேவனின் தற்போதைய கிரியையைப் பற்றி ஜனங்கள் தெளிவான மற்றும் முழுமையான புரிதலைப் பெற முடியும். அவர்கள் நடைமுறையில் பழைய ஜீவிதத்தோடு ஒட்டிக்கொள்ளாமல் ஒரு புதிய பாதையையும் பெற முடியும்; அவர்கள் செய்யும் அனைத்தும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடையச்செய்யும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து”). “உங்கள் இருதயம் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருந்தால், உணர்வுபூர்வமாக ஒத்துழைக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். அதாவது உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் ஆராதனைகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தில் ஜனங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர காரியங்களை ஒதுக்கிவிட வேண்டும். இருதயத்தை நிலைப்படுத்தி தேவன் முன் உங்களை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆராதனைக்கான குறிப்பேடுகளை வைத்திருக்க வேண்டும், தேவனுடைய வார்த்தை பற்றிய அவர்களது அறிவையும், அவர்களது ஆவி ஆழமாகவோ அல்லது மேலோட்டமாகவோ ஆட்கொள்ளப்பட்டதையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்; அனைவரும் உணர்வுபூர்வமாக தேவனுக்கு முன்பாக அவர்களது இருதயத்தை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நீ ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தை உண்மையான ஆவிக்குரிய வாழ்விற்கு அர்ப்பணித்தால், அந்தநாளில் உன் வாழ்வு செழிப்பாகும். உன் இருதயம் பிரகாசமும் தெளிவும் அடையும். நீ தினந்தோறும் இத்தகைய ஆவிக்குரிய வாழ்வை வாழ்ந்தால், உனது இருதயம் தேவனின் ஆட்கொள்ளுதலுக்குள் அதிகமாகத் திரும்ப இயலும். உனது ஆவி மென்மேலும் வலிமை பெறும். உனது நிலைமை தொடர்ச்சியாக முன்னேற்றமடையும்; பரிசுத்த ஆவி வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அதிகத் திறன் பெறுவாய். தேவன் உனக்கு அதிகமான ஆசீர்வாதங்களை அளிப்பார். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உணர்வுபூர்வமாக பெறுவது உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் நோக்கம் ஆகும். சட்டங்களைக் கடைபிடிப்பதோ மத சடங்குகளை அனுசரிப்பதோ அல்ல; மாறாக தேவனுடனான உடன்பாட்டுடன் உண்மையாக செயல்படுவதும், உனது சரீரத்தை உண்மையாக கட்டுப்படுத்துவதுமே ஆகும்—இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். எனவே நீ இதனை மிகச் சிறந்த முயற்சியுடன் செய்ய வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் செல்கின்றது”). ஒரு நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவன் முன் நம் இருதயத்தை அமைதிப்படுத்தப் பழக்குவது அவசியம் என்பதை தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் காணலாம். தியானங்களுக்கு முன், நம்மைக் குறுக்கிடுகிற எந்தக் காரியத்திலிருந்தும், எல்லா ஜனங்களிடமிருந்தும், நிகழ்வுகளிலிருந்தும், மற்றும் தேவனிடமிருந்து நம் இருதயத்தை விலக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலிருந்தும் நாம் மனமறிந்து விலகிச் செல்ல வேண்டும். பொதுவாக, நம் வாழ்வில் மற்றும் வேலையில் வருகிற எண்ணற்ற சிறிய விஷயங்களைக் கையாள்வதற்கு முன், காலை நேரத்தில் நம் இருதயங்கள் அதிக அமைதியுடன் இருக்கும். நாம் இந்த நேரத்தில் நம்முடைய எல்லாக் கஷ்டங்களையும் குறைபாடுகளையும் அவரிடம் சொல்லி ஜெபிக்கலாம்; நாம் கவனமாக தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, சிந்தித்து, அவருடைய சித்தத்தையும், நடைமுறைப் பாதையையும் தேடலாம். இவ்வகையில் நாம் தேவனுக்கு முன்பாக எவ்வளவு அதிகமாக நம்மை அமைதிப்படுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். நாம் தியானங்களில் இருந்து ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள இதுவே ஒரு சிறந்த வழியாகும், மேலும் நமது ஆவிக்குரிய நிலை தொடர்ந்து மேம்படும்.

2. தியானங்களில் தேவனுடைய வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்க கவனம் செலுத்துங்கள்

தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி சிந்திப்பதில் கவனம் செலுத்துவதே நமது தியானங்களிலிருந்து அதிகம் பெற்றுக்கொள்வதற்கான இரண்டாவது வழியாகும். அநேக ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் தியானங்களில் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையாக அவற்றைக் கருத்தில் கொள்வதில்லை, அவர்கள் அவற்றை அவசர அவசரமாக வாசித்து, மேலோட்டமான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் திருப்தி அடைகிறார்கள். இருப்பினும், அவர்கள் தேவனுடைய சித்தம் அல்லது தேவைகளைப் பற்றிய உண்மையானப் புரிதலை அடைவதில்லை. இந்த அணுகுமுறையோடு, அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை எவ்வளவு படித்தாலும், அவர்களால் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்பதையும், அவை அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்றும், அவை அவருடைய ஜீவனையே வெளிப்படுத்துகின்றன என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அவை தேவனுடைய சொந்த சித்தத்தால் நிறைந்திருக்கின்றன, எனவே அவை ஏதோ ஒரு கணம் மாத்திரம் சிந்தித்து நாம் உண்மையில் புரிந்துகொள்ளக் கூடியவையல்ல. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றுக் கொள்ளும்படி, அவற்றைப் பயபக்தியுடனும் ஏக்கத்துடனும் நாம் அவற்றை மீண்டும் மீண்டும் ஜெபத்துடன் வாசித்து சிந்திக்க வேண்டும், இதுவே தேவனுடைய வார்த்தைகளில் உள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கான, அவை உண்மையில் நமக்கு என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழியாகும். தேவன் சொல்லுகிறார்: “தேவனுடைய வார்த்தைகளுக்கு முழு மனதுடன் அர்ப்பணிப்பது என்பது சத்தியத்தைத் தேடுவது, தேவனுடைய நோக்கங்களை அவருடைய வார்த்தைகளுக்குள் தேடுவது, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து அதிக சத்தியத்தைப் புரிந்துகொள்வது மற்றும் பெறுவது ஆகியவற்றுடன் முதன்மையானத் தொடர்புடையதாக இருக்கிறது. அவருடைய வார்த்தைகளை வாசிக்கும் போது, பேதுரு உபதேசங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தவில்லை, இறையியல் அறிவைப் பெறுவதிலும் அவன் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அவன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும், தேவனுடைய சித்தத்தைக் கிரகித்துக்கொள்வதிலும், அத்துடன் அவருடைய மனநிலை மற்றும் அவருடைய அன்பைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினான். அதோடு கூட தேவனுடைய வார்த்தைகள் மூலமாக மனுஷனுடைய பல்வேறு சீர்கேடான நிலைகளையும், அத்துடன் மனுஷனுடைய சீர்கேடான சுபாவத்தையும் உண்மையான குறைபாடுகளையும் புரிந்துகொள்ள பேதுரு முயற்சி செய்தான், இவ்வாறு அவரைத் திருப்திப்படுத்துவதற்கு மனிதனிடத்திலான தேவனுடைய தேவைகளின் சகல அம்சங்களையும் நிறைவேற்றினான். தேவனுடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட பல சரியான நடைமுறைகளை பேதுரு கொண்டிருந்தான்; இதுவே தேவனுடைய சித்தத்திற்குப் பெரிதும் ஏற்புடையதாக இருந்தது, மேலும் இது தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் போது ஒருவர் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த வழியாக இருந்தது(“பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி”). நாம் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, இதைச் சொல்வதற்கு பின்னாலிருக்கும் தேவனுடைய நோக்கம் என்ன, தேவனுடைய சித்தம் என்ன, அது நமக்குள் எதை அடைய முடியும், நாம் எந்தெந்த வழிகளில் கலகக்காரர்களாகவோ அல்லது பற்றாக்குறை உள்ளவர்களாகவோ இருக்கிறோம், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க சத்தியத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும், என்பதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கே காண்கிறோம். நாம் இவ்வகையில் நாடி, சிந்திக்கும் போது, தேவனுடைய வார்த்தைகள் உண்மையில் என்ன சொல்கின்றன தேவனுடைய நோக்கம் மற்றும் திட்டங்கள் என்ன என்பதை புரிந்துகொள்ள அனுமதிக்கும்படி, நாம் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே தேவனுடைய வெளிச்சத்தை நாம் பெற்றிருப்போம். அதன் பின்பு, தேவனுடைய வார்த்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப நாம் செயல்படும்போது, நாம் படிப்படியாக சத்தியத்தைப் புரிந்துகொண்டு யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும். இது நமது தியானங்களிலிருந்து பலனை அறுவடை செய்வதை எளிதாக்கிவிடும்.

உதாரணமாக, கர்த்தராகிய இயேசு சொல்வதைக் காண்கிறோம்: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்(மத்தேயு 18:3). இந்தக் கூற்றின் மேலோட்டமான அர்த்தத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள முடியும், அதாவது, நாம் சிறு குழந்தைகளைப் போலக் கள்ளங்கபடமில்லாமலும் பொய்யற்றும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், மேலும் தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப நேர்மையான ஜனங்களாக மாறுவதன் மூலமாக மட்டுமே நாம் தேவனால் அவருடைய ராஜ்யத்திற்குள் வழிநடத்தப்பட முடியும். ஆனால் ஒரு நேர்மையான நபராக இருப்பதனுடைய முக்கியத்துவம், தேவன் ஏன் நேர்மையானவர்களை நேசிக்கிறார், நாம் எந்த நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறோம், மற்றும் நாம் எப்படி நேர்மையான மனிதர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை நாம் இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, நம்மிடம் இருக்கும் வஞ்சகத்தின் வெளிப்பாடுகளைப் பற்றி சிந்திக்கும் போது நாம் இதைக் கண்டுபிடிப்போம்: நாம் மற்றவர்களுடன் பழகும்போது, நம்முடைய சொந்த விருப்பங்களையும், நற்பெயர் மற்றும் அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக, நம்மால் பொய் சொல்லாமலும் அல்லது ஏமாற்றமலும் எப்போதும் இருக்க முடிவதில்லை என்று கண்டுபிடிப்போம். நாம் தேவனுக்காக நம்மைப் பயன்படுத்தும் போது, நம் தேவனை நேசிக்கவும் தேவனை திருப்திப்படுத்தவும் விரும்புகிறோம் என்று ஜெபத்தில் கூறலாம், ஆனால் நம் குழந்தை நோய்வாய்ப்படுகையில், அல்லது நாமோ அல்லது நம் குடும்ப உறுப்பினர் ஒருவரோ வேலையை இழக்கும்போது, இதனால் நாம் தேவனுக்காகக் கிரியை செய்து, பயன்படுவதை விட்டுவிடும் அளவிற்கு நாம் தேவனிடம் முறையிட ஆரம்பிக்கிறோம்; இதில், நாம் கறைபடிந்த முறையிலும் நாம் தேவனோடு ஒப்பந்தம் பண்ணுகிற முறையிலும் தேவனுக்காக நம்மைப் பயன்படுத்துவதைக் காணலாம். தேவனிடமிருந்து நன்மை பெறுவதற்காக நாம் நம்மை தேவனுக்காகப் பயன்படுத்துகிறோமே அல்லாமல், உண்மையில் தேவனைத் திருப்திபடுத்துவதற்காக அப்படிச் செய்வதில்லை. இவை நமது வஞ்சக வெளிப்பாடுகளுக்கான சில உதாரணங்களே ஆகும். இந்த வெளிப்பாடுகளிலிருந்தது, நாம் உண்மையில் நேர்மையானவர்கள் அல்ல என்பதை நாம் காண முடியும். நாம் நம்முடைய சொந்தக் குற்றங்களையும் குறைபாடுகளையும் தெளிவாகக் கண்டவுடன், சத்தியத்திற்காகத் தாகம் கொள்ள நமக்குள் தீர்மானம் எழுகிறது, மேலும் நாம் படிப்படியாக நேர்மையான மனிதர்களாக மாறும்படி தேவனுடைய வார்த்தைகளை நம் வாழ்வில் அதிகமாகக் கடைபிடிக்க முற்படுகிறோம். இதுவே தேவனுடைய வார்த்தைகளைச் சிந்திப்பதால் அடையப்படும் பலனாகும்.

3. உங்கள் தியானங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களை ஆழ்ந்து ஆராயுங்கள்.

நம் ஆவிக்குரிய வாழ்வில் பலன்களை அடைய, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலும் பொறுப்பேற்க வேண்டும், மேலும் அதை நமது உண்மை நிலையோடு இணைக்கவும் சத்தியத்தைத் தேடவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது போலவே, “நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது, அவைகளுக்கு எதிராக உன் சொந்த நிலையின் யதார்த்தத்தை நீ அளவிட வேண்டும். அதாவது, உன்னுடைய உண்மையான அனுபவத்தின் போக்கில் உன் குறைகளை நீ கண்டறியும்போது, நடைமுறைக்கு ஒரு பாதையைக் கண்டறியவும், உன் தவறான உந்துதல்கள் மற்றும் கருத்துக்களை புறக்கணிக்கவும் நீ திறமை உள்ளவனாக இருக்க வேண்டும். நீ எப்போதும் இந்த விஷயங்களுக்காக பாடுபட்டு அவற்றை அடைய மனதார செயல்பட்டால், அப்போது நீ பின்பற்ற ஒரு பாதை இருக்கும், நீ வெறுமையாக உணர மாட்டாய், இவ்வாறு, நீ ஒரு இயல்பான நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்போதுதான் நீங்கள் உங்கள் சொந்த ஜீவனில் ஒரு பாரத்தை சுமப்பவராக, விசுவாசம் உடையவராக இருப்பீர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (7)”).

நீ நுகத்தை சுமந்தவனாக தேவனுக்கு முன்பு வருவதால், பலவிதங்களில் குறைபாடு உள்ளவன் என்று உணர்வதால், அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இருக்கின்றன; அனுபவிக்கவேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன; தேவ சித்தத்தின் மீது முழுவதும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணங்கள் எப்போதும் உன் மனதில் இருக்கும். இவை மூச்சுவிட இயலாமல் எப்போதும் உன்னை அழுத்திக்கொண்டே இருப்பதால், நீ எதிர்மறை நோக்கில் இல்லையென்றாலும்கூட இருதயத்தில் பாரத்தை உணர நேரிடும். இப்படி இருக்கும் மக்கள் மட்டுமே தேவனுடைய வார்த்தையின் ஞானத்தை ஏற்றுக்கொள்ளவும் தேவ ஆவியினால் ஏவப்படவும் தகுதியுடையவர்களாவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்”). மனுக்குலத்தின் குறைபாடுகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்ய தேவன் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது நமது உண்மையானப் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி சத்தியத்தைத் தேட வேண்டும். நாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தைப் பெறும்படி தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் நமது உண்மையான பிரச்சனைகளையும் சிரமங்களையும் ஆய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக, நாம் சகோதர சகோதரிகளுடன் இருக்கும்போதோ அல்லது நாம் கடமையில் ஒருவருடன் ஒத்துழைக்கும்போதோ, நாம் எப்போதும் ஆணவத்தை வெளிப்படுத்திக் கொண்டு, நம்முடைய சொந்த கருத்துக்களைப் பற்றிக் கொண்டு, மற்றவர்கள் நம்மை கவனிக்கும்படி செய்து, மேலும் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணியும் அவர்களை அடக்கிக் கொண்டும் இருப்பதாக நாம் தெரிந்து கொண்டால், நமது தியானத்தில் இந்தப் பிரச்சனையைப் பற்றிக் கவனமாக சிந்திக்க வேண்டும். நாம் ஏன் இவ்வகையான சீர்கேட்டை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், ஏன் எப்போதும் மாறுவது போல் தெரிவதில்லை? நம்மால் ஏன் பாவத்தின் கட்டுகளிலிருந்து தப்பித்து பாவம் செய்வதை நிறுத்த முடிவதில்லை? நம்முடைய சொந்த முகத்தையும் அந்தஸ்தையும் நிலைநிறுத்தும்படி நாம் அடிக்கடி பொய் சொல்லாமலும் வஞ்சிக்காமலும் இருக்க முடிவதில்லை, இது ஏன்? நேர்மையான நபராக இருப்பது ஏன் மிகவும் கடினமாய் இருக்கிறது? நம்முடைய பாவங்கள் கர்த்தராகிய இயேசுவினால் மன்னிக்கப்பட்டன, அப்படியானால் நாம் ஏன் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருக்கிறோம்? எப்போதும் பாவம் செய்யும் நம்மைப் போன்றவர்கள் உண்மையில் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியுமா? இந்தக் கேள்விகளையும் மேலும் பல கேள்விகளையும் கேளுங்கள். குறிப்பாக இப்போது ஒரு கொள்ளைநோய் உலகை ஆட்டிப் படைக்கிறது மற்றும் பேரழிவுகள் நம்மீது வருகின்றன, நாம் இன்னும் கர்த்தருடைய வருகையை வரவேற்கவில்லை, எனவே நிச்சயமாக விரைவில் பேரழிவுகளுக்கு நாம் அடிபணிந்து விடுவோம். பேரழிவுகள் இப்போது வந்துவிட்டதால் கர்த்தரிடம் ஜெபிப்பதிலும் அவருடைய சித்தத்தை நாடுவதிலும் எந்த நேரத்தையும் நாம் வீணடிக்க முடியாது. நாம் சில நடைமுறைக் கேள்விகளை முழுமையாக சிந்திக்க வேண்டும்: கர்த்தர் திரும்பிவந்து கிரியை செய்யத் தோன்றி விட்டாரா? திருச்சபைகளில் பரிசுத்த ஆவியானவர் எங்கே பேசுகிறார்? கர்த்தர் திரும்பி வந்துவிட்டார் என்ற சாட்சியத்தைக் கேட்கும்போது தேவனுடைய குரலைக் கேட்கவும் கர்த்தரை வரவேற்கவும் நாம் எப்படி புத்தியுள்ள கன்னிகைகளாக இருக்க முடியும்? இந்த நடைமுறைக் கேள்விகளை நாம் தியானங்களிலும் தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பதிலும் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய உண்மையான சித்தத்தைத் தேடுவதன் மூலமும், நம்மால் தேவனுடைய வெளிச்சத்தையும் வழிகாட்டுதலையும் எளிதாகப் பெற முடியும். இது நமது பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் தீர்த்து, நாம் நடக்க ஒரு பாதையையும் கொடுக்கும். நாம் வேதாகமத்தை இயந்திரத்தனமாக வாசித்து ஜெபித்தால், நாம் தியானத்தை மற்றொரு பணியாக மாத்திரம் கருதி, எப்பொழுதும் போல அக்கறையின்றி காரியங்களைச் செய்தால், நம் ஆவிக்குரிய வாழ்க்கைப் பாதிக்கப்படும், மேலும் அது ஒரு மதச்சடங்காகவும் ஒரு மதக் கூட்டமாகவும் இருக்குமே தவிர வேறோன்றாகவும் ஆகாது.

இவைதான் நம்முடைய ஆவிக்குரிய தியானங்களில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று நடைமுறைக் கொள்கைகளாகும். இந்தக் கொள்கைகளை நாம் கடைபிடித்து நமது தினசரி தியானத்தில் செயல்படுத்தும் வரை நாம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிக வெளிச்சத்தைப் பெறுவோம், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தைக் காண்போம், மேலும் படிப்படியாக வாழ்க்கையில் வளர்ச்சியை அனுபவிப்போம்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம்

நமது அன்றாட ஜீவியத்தில், தேவனுக்கு நெருக்கமாகி, தேவனுடன் உண்மையான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, நாம் தேவனுடன் ஒரு சரியான உறவைப்...

ஜெபம் செய்யும் முறை: கர்த்தரால் கேட்கப்படும்படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான 3 கோட்பாடுகள்

கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற ஜெபிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த 3 கொள்கைகளும் உங்கள் ஜெபங்களை தேவனின் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம்.

நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள்

“நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு மருத்துவரைக் கண்டுபிடிப்பதற்காக சுற்றித் திரியுங்கள்” என்ற சொற்றொடர், மக்கள்...

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

நான் ஒரு நெரிசலான தெருவில்நிற்கிறேன், கார்களின் கடுமையான சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருக்கேன், பாதசாரிகள் விரைந்து செல்வதைப் பார்க்கிறேன்,...