பரலோக ராஜ்யத்தின் மறைபொருள் வேதாகமத்தில் உள்ள கர்த்தர் கற்பித்த ஜெபத்தில் மறைக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 8, 2022

ஜுன்வேய், சீனா

அநேக சகோதர சகோதரிகள் கர்த்தர் கற்பித்த ஜெபத்தை நன்கு அறிந்தவர்களாய் இருக்கிறார்கள், ஒவ்வொரு முறை நாம் ஜெபிக்கும்போதும் அதை மனப்பாடமாக சொல்கிறோம்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக(மத்தேயு 6:9-10). ஆனால், நாம் அடிக்கடி கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொன்னாலும், கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் உண்மையான அர்த்தத்தை நாம் அரிதாகவே சிந்திக்கிறோம். கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு சத்தியத்தின் எந்த அம்சங்களைப் பற்றி நமக்குச் சொல்கிறார், கர்த்தருடைய சித்தம் என்ன, கர்த்தருடைய ஜெபத்தில் எத்தகைய மறைபொருள்கள் அடங்கியுள்ளன? இந்த விஷயங்களை இன்று விவாதிப்போம்.

ஒரு முக்கிய கண்டுபிடிப்பு: கர்த்தரால் நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இடம் பரலோகத்தில் இல்லை

தேவனை விசுவாசிக்கத் துவங்கியதிலிருந்தே, கர்த்தர் நமக்காக ஆயத்தம்பண்ணியிருக்கும் இடம் பரலோகத்தில் இருப்பதாக நாம் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தர் திரும்பிவரும்போது எடுத்துக்கொள்ளப்படவும், தேவனால் அருளப்படும் ஜீவ விருட்சத்தைப் புசித்து, ஜீவத் தண்ணீரைப் பானம்பண்ணவும், அவருடைய சமூகத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நித்தியகாலமாக அனுபவிக்கவும் நாம் காத்திருக்கிறோம். ஆனால், நாம் நினைப்பது கர்த்தருடைய சித்தத்திற்கு ஒத்துப்போகிறதா? கர்த்தர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள இடம் உண்மையிலேயே பரலோகத்தில் உள்ளதா? கர்த்தர் கற்பித்த ஜெபம் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்போம். மத்தேயு 6:10, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” என்று கூறுகிறது. தேவனுடைய ராஜ்யம் பரலோகத்தில் அல்ல, பூமியில் இருக்கிறது என்றும், மேலும், தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படும் என்றும் கர்த்தராகிய இயேசு நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். தேவனுடைய ராஜ்யம் பரலோகத்தில் இல்லை, பூமியில் இருக்கிறது என்று பல இடங்களில் வெளிப்படுத்தின விசேஷமும் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 11:15 கூறுகிறது, “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்.” வெளிப்படுத்தின விசேஷம் 21:2-3 மேலும் கூறுகிறது, “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.” இந்தத் தீர்க்கதரிசனங்கள், “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின,” “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்;” என்றும், “மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” என்றும் கூறுகின்றன. தேவனுடைய ராஜ்யம் பூமியில் உணரப்படும் என்பதையும், மேலும் இந்த உலகத்தின் ராஜ்யங்கள் கிறிஸ்துவின் ராஜ்யங்களாக மாறும் என்பதையும் இவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது, கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது, அவர் பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். அந்த நேரத்தில், தேவன், இன்னும் பூமியில் வாழ்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும் ஜனங்களை வழிநடத்துவார், எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிப்பார்கள், தேவனுடைய வார்த்தைகள் காரியங்களைச் செய்வதற்கான அறிவுரைகளாகவும் வாழ்விற்கான அடித்தளமாகவும் மாறும், பூமியில் உள்ள அனைவரும் பரலோகத்தில் உள்ள ஒரே மெய்யான தேவனை ஆராதிப்பார்கள் மற்றும் அவரை எல்லாவற்றிற்கும் மேலாகவும், எல்லாவற்றையும் விட பெரியவராகவும் மதிப்பார்கள், அதன் மூலம் தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும். நமது கருத்துக்களின்படி தேவனுடைய ராஜ்யம் பரலோகத்தில் இருப்பதாகவும், தேவனால் நாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றும் விசுவாசித்தால், அப்போது, இந்த தீர்க்கதரிசனங்கள் வெறும் வெற்று வார்த்தைகளாய் இருக்கும் அல்லவா?

தேவனுடைய சித்தம் பூமியில் செய்யப்படும், மனிதகுலம் சென்றடையும் இடம் பூமியில் உள்ளது

ஒருவேளை சில சகோதர சகோதரிகள் இன்னும் புரிந்து கொள்ளாமல், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்(யோவான் 4:2-3). என்று கர்த்தராகிய இயேசு நமக்குச் சொல்கிறார் என்று கூறுவார்கள். கர்த்தராகிய இயேசு தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பரலோகத்திற்கு ஏறிச் சென்றதால், அவர் பரலோகத்தில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார், அப்படியானால், நாம் இறுதியாக சென்றடையும் இடம் பூமியில் எப்படி இருக்க முடியும்? சகோதர சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு நமக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துவதாகச் சொன்னது உண்மைதான், ஆனால் நமக்காக ஆயத்தம் செய்யப்பட்ட இடம் பரலோகத்தில் இருக்கும் என்று கர்த்தர் சொன்னாரா? கர்த்தராகிய இயேசு நம்மை பரலோகத்திற்குள் சேர்த்துக்கொள்வார் என்று சொன்னாரா? இவையெல்லாம் நமது சொந்த எண்ணங்களும் கற்பனைகளும் இல்லையா? முதலில் கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார் என்று பார்ப்போம். கர்த்தர் சொன்னார், “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை(யோவான் 3:13). கர்த்தராகிய இயேசு தம்மைத் தவிர வேறொருவரும் பரலோகத்திற்கு ஏறிச்சென்றிருக்கவில்லை என்று தெளிவாகக் கூறினார், மேலும் சங்கீதம் 115:16 கூறுகிறது, “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” பரலோகம் தேவனுடைய வாசஸ்தலம் என்பதையும், மனிதகுலம் வாழ்வதற்கு தேவன் வழங்கிய இடம் தான் பூமி என்பதையும் நாம் காணலாம், ஆனால், அழிந்துபோகும் மாம்சீக மனுஷர்களாகிய நாம் எப்போதும் பரலோகத்தில் வாழ விரும்புகிறோம். இது மனிதகுலத்தின் வீணான ஆசைகளில் ஒன்றல்லவா?

உண்மையில், தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது மனிதகுலத்தைப் பூமியில் சிருஷ்டித்தார் என்பதையும், தேவனுடைய சித்தம் எப்போதும் பூமியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். ஆதியாகமம் 2:7-8 கூறுகிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.” தேவன் மனுஷனை சிருஷ்டித்தபோது, அது பூமியில் செய்யப்பட்டது என்பதையும், ஏதேன் தோட்டம் பூமியில் இருந்தது என்பதையும் வேதத்திலிருந்து நாம் அறிகிறோம். தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தபோது, அவர் அவர்களுக்கு சிறகுகளை வைக்கவும் இல்லை, அல்லது பரலோகத்தில் வாழும்படி தேவன் அவர்களைக் கூட்டிச் செல்லவுமில்லை. மாறாக, எல்லா சிருஷ்டிகளையும் கண்காணிக்க ஆதாமையும் ஏவாளையும் பூமியில் வைத்தார்.

பின்னர், ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிடும்படிக்கு சர்ப்பத்தால் தூண்டப்பட்டு, தேவனுக்கு துரோகம் செய்து, தேவனால் சபிக்கப்பட்டு ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போதிலிருந்து, மனிதகுலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தது. அவர்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, தீங்கிழைக்கப்பட்டு, மென்மேலும் வழிதவறிச் சென்றனர். அவர்கள் விக்கிரகங்களை வணங்கினார்கள், தேவனை எதிர்க்கும் பல காரியங்களைச் செய்தார்கள், மெய்யான தேவனை ஆராதிக்கவே இல்லை. அத்தகைய மிகவும் அசுத்தமானதும், சீர்கெட்டதுமான மனிதகுலத்தைப் பார்க்க தேவன் விரும்பவில்லை, எனவே அதை அழிக்க உலகத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் கிரியையை அவர் செய்தார். எட்டு பேர் கொண்ட நோவாவின் குடும்பத்தினர் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் உயிர்வாழவும் மீண்டும் பலுகிப்பெருகவும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, தேவன் மனிதகுலத்தை இரட்சிக்க தமது நிர்வாகத் திட்டத்தைத் தொடங்கினார். நியாயப்பிரமாண காலத்தில், தேவன் மோசேயைப் பயன்படுத்தி இஸ்ரவேலர்களின் வாழ்க்கையை பூமியில் வழிநடத்திய நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் பிரகடனப்படுத்தினார், அதனால் தேவனை எவ்வாறு ஆராதிக்க வேண்டும், மற்றவர்களுடன் எவ்வாறு பழகுவது, தேவனை மகிழ்விப்பது எது மற்றும் அவருக்கு அருவருப்பானது எது என்பது போன்ற இன்னும் பல விஷயங்களை ஜனங்கள் அறிந்திருந்தனர். இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இரண்டாயிரம் வருடங்களாக பூமியில் தேவனை ஆராதித்து வாழ்ந்தார்கள். நியாயப்பிரமாண காலத்தின் முடிவில், மனுஷர்கள் மிகவும் அதிகமாகக் கெட்டுப்போனார்கள், நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கத் தவறிவிட்டனர், மேலும் நியாயப்பிரமாணத்தாலேயே மரண ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருந்தனர். மனிதகுலத்தை வழிநடத்த தேவன் தனிப்பட்ட முறையில் மனுவுருவாகி பூமிக்கு வந்து, ஜனங்களுக்கு ஒரு புதிய திசையை காட்டுவதற்காக மனந்திரும்புதலின் போதனைகளை வெளிப்படுத்தினார், மேலும் ஜனங்கள் பாவம் செய்யும் போது, சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், பொறுமையாக இருக்கவும், தங்களது சத்துருக்களை நேசிக்கவும் வேண்டும் என்றும், மேலும் பல விஷயங்களையும் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார், அதனால் ஜனங்கள் பாவம் செய்தபோது, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படி, தேவனிடத்தில் ஜெபம் செய்து மனந்திரும்புவது மட்டுமே ஆகும். இறுதியாக, கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்கான பாவநிவாரண பலியாக சிலுவையில் அறையப்பட்டார், இது மனிதகுலம் இன்றுவரை பூமியில் தொடர்ந்து வாழ அனுமதித்தது. கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களில் மீண்டும் வந்து, பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து, உலக ராஜ்யத்தை என்றென்றும் கிறிஸ்துவின் ராஜ்யமாக்குவார் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். இதில் தேவன் மனிதகுலத்தை சிருஷ்டித்தது முதல் ஜலப்பிரளயம் முடியும் வரையிலும், நியாயப்பிரமாண காலத்தின் கிரியை, கிருபையின் காலத்தின் கிரியை மற்றும் கடைசி நாட்களில் திரும்பி வந்திருக்கிற கர்த்தரால் நிறைவேற்றப்பட வேண்டிய கிரியை அனைத்தும் பூமியில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், மேலும், தேவனுடைய சித்தம் எப்போதும் பூமியில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் காணலாம்.

மனிதகுலம் இறுதியாக சென்றடையும் இடமும் பரலோகத்தில் இல்லை, பூமியில்தான் உள்ளது. தேவனின் வார்த்தை கூறுகிறது: “தேவன் தமது ஆதி ஸ்தலத்துக்கு திரும்புவார், மேலும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் இடத்துக்குத் திரும்பிச் செல்வார்கள். தேவனின் முழு நிர்வாகமும் முடிந்துவிட்ட பின்னர் தேவனும் மனிதர்களும் தங்கும் ஸ்தலங்கள் இவைகளே. தேவனுக்கு தேவனுக்கான போய்ச்சேரும் இடம் உண்டு, மற்றும் மனுக்குலத்திற்கு மனுக்குலத்திற்கான போய்ச்சேரும் இடம் உண்டு. இளைப்பாறுதலின்போது, பூமியின் மேல் மனிதர்களுடைய வாழ்வில் தேவன் தொடர்ந்து வழிகாட்டுவார், அதே வேளையில் அவருடைய ஒளியில், அவர்கள் பரலோகத்தில் இருக்கும் ஒரே மெய் தேவனைத் தொழுதுகொள்வார்கள். … மனிதர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் சிருஷ்டிப்பின் மெய்யான இலக்குகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமாகும்; அவர்கள் பூமியின் மேல் இருந்து தேவனைத் தொழுதுகொள்வார்கள், மேலும் சாதாரண மனித வாழ்வை வாழ்வார்கள். ஜனங்கள் இனிமேல் ஒருபோதும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது அவரை எதிர்க்கமாட்டார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் ஆதி வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் இது முறையே தேவன் மற்றும் மனிதர்களின் வாழ்வும் சென்றடையும் ஸ்தலமுமாகும். … மனுக்குலத்தின் இளைப்பாறுதல் ஸ்தலம் பூமியிலும், மேலும் தேவன் இளைப்பாறுதல் ஸ்தலம் பரலோகத்திலும் உள்ளன. மனிதர்கள் தங்கள் இளைப்பாறுதலில் தேவனைத் தொழுதுகொள்ளும் போது, அவர்கள் பூமியில் வாழ்வார்கள், மற்றும் தேவன் மீதமுள்ள மனுக்குலத்தை இளைப்பாறுதலுக்குள் வழிநடத்தும்போது, அவர் அவர்களை பூமியில் இருந்தல்ல பரலோகத்தில் இருந்து வழிநடத்துவார். தேவன் இன்னும் ஆவியானவராகவே இருப்பார், மனிதர்கள் இன்னும் மாம்சமாகவே இருப்பார்கள். தேவனும் மனிதர்களும் வெவ்வேறு விதமாக இளைப்பாறுவார்கள்(“தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). மனிதகுலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் கிரியை முடிவடைந்ததும், தேவனும் மனிதகுலமும் தங்களுடைய இளைப்பாறும் முறைகளைக் கொண்டிருப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. பூமியில் மனிதகுலத்தின் வாழ்க்கையை தேவன் தொடர்ந்து வழிநடத்துவார், பூமியில் மனிதகுலம் தேவனை ஆராதிக்கும். இதுதான் மனிதகுலத்திற்கு தேவனால் ஆயத்தம் செய்துவைக்கப்பட்டிருக்கிற மிகச்சரியான சென்றடையும் இடம். அந்த நேரத்தில், மனுஷர்கள் இனி தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யவோ அல்லது தேவனை எதிர்க்கவோ மாட்டார்கள், மேலும் ஆதியில் ஆதாம் மற்றும் ஏவாள் இருந்ததைப் போலவே அவர்களால் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவும் தேவனுடைய கோரிக்கைகள் மற்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் முடியும். ஆனால், அந்த நேரத்தில், மனிதகுலமும் சத்தியத்தையும் ஜீவனாகக் கொண்டிருக்கும், எனவே, மனிதகுலம் இனி சாத்தானால் சீர்கெடுக்கப்படாது, மேலும் பூமியில் மகிழ்ச்சியுடன் தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் தலைமைத்துவத்திற்கு மத்தியில் வாழும். மேலே உள்ள ஐக்கியத்திலிருந்து, தேவனுடைய சித்தம் எப்போதும் பூமியில் நிறைவேற்றப்படும் என்பதையும், மனிதகுலத்தின் எதிர்கால சென்றடையும் இடம் பூமியில் உள்ளது என்பதையும், மனிதகுலம் பூமியில் நித்தியகாலமாக வாழும் என்பதையும், இது நீண்ட காலத்திற்கு முன்பே தேவனால் நியமிக்கப்பட்டது என்பதையும் நாம் காணலாம்.

யதார்த்தத்திற்குத் திரும்புதல் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்துப்போகிறது

கர்த்தருடைய ஜெபத்தை நாம் மீண்டும் கவனித்தால், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற வார்த்தைகள், தேவன் தம்முடைய ராஜ்யத்தை பரலோகத்தில் அல்ல, பூமியில் ஸ்தாபிப்பார் என்பதையும், தேவனுடைய சித்தம் பூமியில் செய்யப்படும் என்பதையும் இன்னும் அதிகமாக உறுதிப்படுத்துகின்றன. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). வெளிப்படுத்துதல் 2-3 இல் இது பலமுறை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த தீர்க்கதரிசனங்கள், கடைசி நாட்களில், திரும்பி வந்திருக்கிற கர்த்தர் தம்முடைய சத்தியம் மற்றும் மறைபொருள்கள் முழுவதையும் நமக்குச் சொல்லும்படி திருச்சபைகளில் பேசுவார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. ஆகவே, நாம் புத்தியுள்ள கன்னிகைகளாக இருக்க வேண்டும், தேவனுடைய சத்தத்தைக் கவனமாகக் கேட்க வேண்டும், கர்த்தர் திரும்பி வந்ததாக யாராவது சாட்சி கூறும்போது கவனமாகக் கருதி விடாமுயற்சியுடன் விசாரிக்க வேண்டும், ஏனென்றால், அப்போதுதான் நாம் கடைசி நாட்களில் கர்த்தருடைய தோற்றத்தை வரவேற்று இரட்சிப்பைப் பெற முடியும். அப்போதுதான் நாம் தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களாகி, பூமியில் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்போம்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்?

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 வைரஸானது உலகை உலுக்கி, உலகை பீதிக்குள் ஆழ்த்தியது. மேலும், ஆப்பிரிக்காவில் பரவிய பெரும் எண்ணிக்கையிலான...

நாம் நம்முடைய கோபமான சுபாவத்தை எவ்வாறு சரி செய்வது?

கேள்வி: பல வருடங்களாக கர்த்தரை விசுவாசித்து இருந்தாலும், நான் இன்னும் பாவம் பண்ணுதலும் பாவத்தை அறிக்கை செய்தலும் என மாற்றி மாற்றி வாழ்ந்து...

விசுவாசம் பிரசங்கம்: விசுவாசம் என்றால் என்ன? தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தை நாம் எப்படிக் கட்டி எழுப்புவது?

இந்த கடினமான நேரத்தில் கஷ்டங்களை அனுபவிக்க நாம் எப்படி தேவன் மீது உண்மையான நம்பிக்கையை அதிகரிக்க முடியும்? இந்த கட்டுரையில் கிரியை மற்றும் ஆபிரகாமின் கதைகளிலிருந்து நீங்கள் பாதையைக் காணலாம்.

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.