அத்தியாயம் 88

எனது வேகம் எந்த அளவிற்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனங்களால் வெறுமனே கற்பனை செய்து பார்க்க முடியாது: இது மனிதன் புரிந்துகொள்ள முடியாதவாறு நிகழும் ஓர் அதிசயமாகும். உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து எனது வேகம் தொடர்கிறது, மேலும் எனது கிரியையும் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. முழு பிரபஞ்ச உலகமும் நாளுக்கு நாள் மாறுகிறது, ஜனங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவை அனைத்தும் எனது கிரியையின் பகுதியாகும், இவை அனைத்தும் எனது திட்டத்தின் பகுதியாகும், இவை எனது நிர்வாகத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன, மேலும் எந்த மனுஷனும் இந்த விஷயங்களை அறிந்துகொள்வதில்லை அல்லது புரிந்துகொள்வதில்லை. நான் உங்களிடம் சொல்லும்போது மட்டுமே, நான் உங்களுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே உங்களுக்கு மிகச்சிறிய விஷயங்களும் தெரிய வருகின்றன; இல்லையெனில், எனது நிர்வாகத் திட்டத்திற்கான வரைபடத்தைப் பற்றிய எந்த யோசனையும் ஒருவராலும் கொண்டிருக்க முடியாது. இதுவே எனது பெரிய வல்லமையாகும், மேலும், இவையே எனது அற்புதமான செயல்களாகவும் இருக்கின்றன. இவை யாராலும் மாற்ற முடியாத விஷயங்களாகும். எனவே, இன்று நான் சொல்வது அப்படியே நடக்கிறது, இது வெறுமனே மாறவும் முடியாது. மனுஷனின் கருத்துக்கள் என்னைப் பற்றிய குறைந்தபட்ச அறிவைக் கூட கொண்டிருப்பதில்லை—அவை அனைத்தும் வெறும் முட்டாள்தனமான உரையாடல்களாக இருக்கின்றன! நீங்கள் போதுமானவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என்றோ அல்லது நீங்கள் திருப்தி அடைந்துவிட்டீர்கள் என்றோ நினைக்க வேண்டாம்! இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இன்னும் அதிக தூரம் செல்லவேண்டியதாக இருக்கிறது! எனது முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சம்தான் அறிந்திருக்கிறீர்கள், எனவே நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு, நான் உங்களுக்குச் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் எனது விருப்பப்படி செயல்படுங்கள், நிச்சயமாக நீங்கள் எனது ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்; விசுவாசிக்கும் எவரும் பெற முடியும், அதேசமயம் விசுவாசிக்காத எவரும் தங்களுக்குள் நிறைவேறியதாக கற்பனை செய்துகொள்ளும் “ஒன்றையும்” பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவே எனது நீதியாக இருக்கிறது, மேலும் இதுவே எனது மகத்துவமாகவும், எனது கடுங்கோபமாகவும், எனது சிட்சையாகவும் இருக்கிறது. ஒரு சிறிய சிந்தனையையோ அல்லது செயலையோ கூட கொண்டிருப்பவர்கள் எவரையும் விட்டு விடமாட்டேன்.

எனது வார்த்தைகளைக் கேட்டதும், பெரும்பாலான ஜனங்கள் பயந்து நடுங்குகிறார்கள், அவர்களின் முகங்கள் கவலைகளால் சுருங்குகின்றன. நான் உனக்கு உண்மையிலேயே தீங்கிழைத்திருக்கிறேனா? நீ சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் பிள்ளையாக இருக்கக்கூடுமா? நீ நல்லவன் போன்றும் பாசாங்கு செய்கிறாய்! நீ எனது முதற்பேறான குமாரன் போன்றும் பாசாங்கு செய்கிறாய்! நான் பார்வையற்றவன் என்று நீ நினைக்கிறாயா? என்னால் ஜனங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று நினைக்கிறாயா? ஜனங்களின் உள்ளார்ந்த இருதயங்களைத் தேடும் தேவன் நான்: இதைத்தான் நான் எனது குமாரர்களிடம் சொல்கிறேன், மேலும் இதைத்தான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் பிள்ளைகளான உங்களுக்கும் நான் சொல்கிறேன். நான் எல்லாவற்றையும் தெளிவாகக் காண்கிறேன், சிறிதளவு பிழையும் ஏற்படுத்துவதில்லை. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி நான் தெளிவாக இருக்கிறேன்! நான்தான் தேவன் என்றும், நான்தான் பிரபஞ்சத்தையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவன் என்று ஏன் சொல்கிறேன்? ஜனங்களின் உள்ளார்ந்த இருதயங்களை ஆராயும் தேவன் நான்தான் என்று ஏன் சொல்கிறேன்? ஒவ்வொருவரின் நிலைமையையும் நான் நன்கு அறிவேன். என்ன செய்வது அல்லது என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது உங்கள் கவலை அல்ல. எனது கையால் கொலையுண்டு போகாமல் கவனமாக இருங்கள்; நீங்கள் அவ்வாறாக இழப்பைச் சந்திப்பீர்கள். எனது நிர்வாக ஆணைகள் மன்னிக்க முடியாதவையாக இருக்கின்றன. உங்களுக்குப் புரிகிறதா? மேற்கூறியவை அனைத்தும் எனது நிர்வாக ஆணைகளின் பகுதிகள்தான். நான் உங்களுக்கு அவற்றைச் சொல்லும் நாளிலிருந்து, நீங்கள் மேலும் மீறுதல்களைச் செய்தால், பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும், ஏனென்றால் முன்பு உங்களுக்குப் புரிந்திருக்கவில்லை.

இப்போது நான் உங்களுக்காக எனது நிர்வாக ஆணைகளை அறிவிக்கிறேன் (அவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருகிறது, வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சிட்சைகள் வழங்கப்படுகின்றன):

நான் எனது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறேன், மேலும் அனைத்தும் எனது கையில் தான் இருக்கின்றன: எவன் சந்தேகிக்கிறானோ அவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். எந்தவொரு பரிசீலனைக்கும் இடமில்லை; அவர்கள் உடனடியாக அழிக்கப்படுவார்கள், இதன்மூலம் எனது இருதயத்தில் இருந்து வெறுப்பானது அகற்றப்படும். (இப்போது முதல் கொல்லப்படுபவர்கள் எனது ராஜ்யத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது, சாத்தானின் சந்ததியினராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.)

முதற்பேறான குமாரர்களான நீங்கள் உங்களுக்கான நிலைகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், மேலும் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் உங்கள் சொந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனது நிர்வாகத் திட்டத்திற்காக நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும், நீங்கள் எனக்கு நல்ல சாட்சி கொடுத்து, எனது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். வெட்கக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்; எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருங்கள். ஒரு கணம் கூட ஒழுக்கம் தவறாதீர்கள்: நீங்கள் எப்போதும் முதற்பேறான குமாரர்களின் அடையாளத்தை ஏந்திக் கொண்டு அனைவருக்கும் முன்பாகத் தோன்ற வேண்டும், அடிமைத்தனமாக இருக்கக்கூடாது; மாறாக, நீங்கள் நிமிர்ந்த தலைகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். எனது நாமத்தை இழிவுபடுத்தாமல் மகிமைப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன். முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று தனிப்பட்ட செயல்பாடு இருக்கிறது, யாராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. இதுதான் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பாகும், அதைத் தட்டிக்கழிக்கக்கூடாது. நான் உங்களிடம் ஒப்படைத்ததை நிறைவேற்றுவதற்காக, உங்கள் முழு மனதுடனும், உங்கள் முழு பெலத்துடனும், உங்களை முழு இருதயத்துடன் நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.

இந்த நாளிலிருந்து, பிரபஞ்ச உலகம் முழுவதிலும், எனது குமாரர்களையும் எனது ஜனங்கள் அனைவரையும் வழிநடத்துவதற்கான கடமையை நிறைவேற்றும் காரியம் எனது முதற்பேறான குமாரர்களிடம் ஒப்படைக்கப்படும், மேலும் அதை நிறைவேற்ற தங்கள் முழு இருதயத்தையும் மனதையும் அர்ப்பணிக்க முடியாத எவரையும் நான் தண்டிப்பேன். இதுவே எனது நீதியாகும். எனது முதற்பேறான குமாரர்களைக் கூட நான் விட்டுவிடவோ அல்லது தப்பிக்கவோ விட மாட்டேன்.

எனது முதற்பேறான குமாரர்களில் ஒருவரை ஏளனம் செய்து அவமதிப்பவர்கள் யாராவது எனது குமாரர்களிடையேயோ எனது ஜனங்களிடையேயோ இருந்தால், நான் அவர்களைக் கடுமையாக தண்டிப்பேன், ஏனென்றால் எனது முதற்பேறான குமாரர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; யார் அவர்களுக்கு என்ன செய்தாலும், அவர்கள் அதனை எனக்கும் செய்கிறார்கள். எனது நிர்வாக ஆணைகளில் இதுவே மிகவும் கடுமையானதாகும். இந்த ஆணையை மீறும் எனது குமாரர்களுக்கும் எனது ஜனங்களுக்கும் எதிராக எனது நீதியை எனது முதற்பேறான குமாரர்களின் விருப்பப்படி அவர்களை நிர்வகிக்க அனுமதிப்பேன்.

என்னை அற்பமாகக் கருதுகிறவர்களையும், எனது போஜனம், ஆடை, நித்திரை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறவர்களையும், எனது வெளி விவகாரங்களில் மட்டுமே கலந்துகொள்கிறவர்களையும், எனது பாரத்தைக் கருத்தில் கொள்ளாதவர்களையும், தங்களின் சொந்த செயல்பாடுகளைச் சரியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாதவர்களையும் நான் படிப்படியாகக் கைவிடுவேன். காதுள்ள அனைவருக்கும் இது சொல்லப்படுகிறது.

எனக்காக ஊழியத்தை நிறைவேற்றுகிற யாவரும் சச்சரவு இல்லாமல் கீழ்ப்படிதலுடன் சென்றுவிட வேண்டும். கவனமாக இரு, இல்லையெனில் நான் உன்னைத் தண்டிப்பேன். (இது ஒரு கூடுதலான ஆணை.)

எனது முதற்பேறான குமாரர்கள் இப்போதிருந்து இரும்புக் கோலை எடுத்துக்கொண்டு, எல்லா தேசங்களையும் ஜனங்களையும் ஆளவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் நடந்து செல்லவும், எல்லா தேசங்களிடையேயும் ஜனங்களிடையேயும் எனது நியாயத்தீர்ப்பையும், நீதியையும், மகத்துவத்தையும் நிறைவேற்றுவதற்கும் எனது அதிகாரத்தை செயல்படுத்தத் தொடங்குவார்கள். எனது குமாரர்களும் எனது ஜனங்களும் இடைவிடாமல் எனக்குப் பயப்படுவார்கள், என்னைத் துதிப்பார்கள், என்னை உற்சாகப்படுத்துவார்கள், என்னை மகிமைப்படுத்துவார்கள், ஏனென்றால் எனது நிர்வாகத் திட்டம் நிறைவேறியிருக்கிறது, எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ஆட்சி செய்ய முடியும்.

இது எனது நிர்வாக ஆணைகளின் ஒரு பகுதியாகும்; இதற்குப் பிறகு, கிரியையானது முன்னேறிச் செல்லும்போது நான் அவற்றை உங்களுக்குச் சொல்வேன். மேலே உள்ள நிர்வாக ஆணைகளிலிருந்து, நான் எனது கிரியையைச் செய்யும் வேகத்தையும், எனது கிரியை எந்த கட்டத்தை எட்டியுள்ளது என்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஒரு உறுதிப்படுத்தலாக இருக்கும்.

நான் ஏற்கனவே சாத்தானை நியாயந்தீர்த்திருக்கிறேன். ஏனென்றால், எனது சித்தம் தடையின்றி இருப்பதாலும், எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் மகிமையை அடைந்திருப்பதாலும், நான் ஏற்கனவே எனது நீதியையும் மகத்துவத்தையும் உலகத்தின் மீதும் சாத்தானுக்குரிய எல்லாவற்றின் மீதும் பயன்படுத்தியிருக்கிறேன். சாத்தானுக்கு எதிராக நான் ஒரு விரலைக்கூட உயர்த்துவதில்லை அல்லது அவன்மீது கவனம் செலுத்துவதும் இல்லை (ஏனென்றால் அவன் என்னுடன் உரையாடக்கூட தகுதியற்றவனாக இருக்கிறான்). நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்கிறேன். எனது கிரியையானது சுமூகமாக, படிப்படியாக முன்னேறுகிறது, மேலும் எனது சித்தமானது பூமி முழுவதும் தடையின்றிப் பரந்திருக்கிறது. இது சாத்தானை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெட்கப்படுத்தியிருக்கிறது, மேலும் அவன் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டான், ஆனாலும் இது எனது சித்தத்தை நிறைவேற்றவில்லை. எனது முதற்பேறான குமாரர்களின் மீதும் எனது நிர்வாக ஆணைகளை நிறைவேற்ற நான் அனுமதிக்கிறேன். ஒருபுறம், அவன் மீதான எனது கோபத்தைக் காண மட்டுமே நான் சாத்தானை அனுமதிக்கிறேன்; மறுபுறம், அவனை எனது மகிமையைக் காண நான் அனுமதிக்கிறேன் (எனது முதற்பேறான குமாரர்கள் சாத்தானின் அவமானத்திற்கு மிகச் சிறந்த சாட்சிகள் ஆவர்). நான் அவனை நேரில் தண்டிப்பதில்லை; மாறாக, எனது முதற்பேறான குமாரர்களுக்கு எனது நீதியையும் மகத்துவத்தையும் செயல்படுத்த அனுமதிக்கிறேன். ஏனென்றால், சாத்தான் எனது குமாரர்களை துஷ்பிரயோகம் செய்திருக்கிறான், எனது குமாரர்களைத் துன்புறுத்தியிருக்கிறான், எனது குமாரர்களை ஒடுக்கியிருக்கிறான், இன்று, அவனது சேவை முடிந்ததும் நான் எனது முதிர்ச்சியடைந்த முதற்பேறான குமாரர்களை அதைக் கண்டுபிடிக்க அனுமதிப்பேன். விழுதலுக்கு எதிராக சாத்தான் வல்லமையற்றவனாக இருக்கிறான். உலகின் அனைத்து தேசங்களின் முடக்கமும் சிறந்த சாட்சியமாக இருக்கிறது; ஜனங்கள் சண்டை போடுவதும் மற்றும் யுத்தத்தில் ஈடுபடும் தேசங்களும் சாத்தானின் ராஜ்யத்தின் வீழ்ச்சியின் வெளிப்படையான வெளிப்பாடுகள் ஆகும். கடந்த காலத்தில் நான் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை என்பதற்கான காரணம் என்னவென்றால் சாத்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதும், படிப்படியாக எனது நாமத்தை மகிமைப்படுத்துவதுமாகும். சாத்தான் முற்றிலுமாக அழிந்து முடிந்ததும், நான் எனது வல்லமையைக் காட்டத் தொடங்குகிறேன்: நான் சொல்வது நடைமுறைக்கு வருகிறது, மேலும் மனுஷக் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிறைவேறும் (இவை விரைவில் வரவிருக்கும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றன). நான் நடைமுறையான தேவன் என்பதாலும், எனக்கு எந்த விதிகளும் இல்லை என்பதாலும், மேலும் எனது நிர்வாகத் திட்டத்தின் மாற்றங்களின்படி நான் பேசுவதாலும், கடந்த காலத்தில் நான் கூறிய விஷயங்கள் நிகழ்காலத்தில் பொருந்தவேண்டிய அவசியமில்லை. உங்கள் சொந்த கருத்துக்களையே பற்றிக்கொண்டிருக்க வேண்டாம்! நான் விதிகளைக் கடைபிடிக்கும் தேவன் அல்ல; என்னுடன், எல்லாம் சுதந்திரமாகவும், தலை சிறந்ததாகவும் மற்றும் முற்றிலும் விடுதலையோடும் இருக்கிறது. ஒருவேளை நேற்று கூறப்பட்டவை இன்று காலாவதியாகி இருக்கலாம், அல்லது ஒருவேளை அது இன்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் (இருப்பினும், எனது நிர்வாக ஆணைகளானது அறிவிக்கப்பட்டிருப்பதால், அவை ஒருபோதும் மாறாது). இவையே எனது நிர்வாகத் திட்டத்தின் படிகளாகும். விதிமுறைகளைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சமும், புதிய வெளிப்பாடுகளும் தோன்றுகின்றன, இதுவே எனது திட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனது வெளிச்சமானது உன்னில் வெளிப்படும், எனது குரலானது பிரபஞ்ச உலகிற்கு வெளிப்படுத்தப்படும். உனக்குப் புரிகிறதா? இதுவே உனது கடமையாகும், நான் உன்னிடம் ஒப்படைத்த பொறுப்பும் இதுதான். ஒரு கணம் கூட நீ இதைப் புறக்கணிக்கக்கூடாது. நான் அங்கீகரிக்கும் ஜனங்களை நான் இறுதிவரை பயன்படுத்துவேன், இது ஒருபோதும் மாறாது. நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதால், எந்த வகையான நபர் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், அதேபோல் எந்த வகையான நபரால் எந்த மாதிரியான காரியத்தைச் செய்ய முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இதுவே எனது சர்வவல்லமையாகும்.

முந்தைய: அத்தியாயம் 87

அடுத்த: அத்தியாயம் 89

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக