தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 296

மே 14, 2023

இயேசு மாம்சமாகியிருக்கிறார் என்ற உண்மை வெளிவந்த பிறகு, பரலோகத்தில் பிதா மட்டுமல்ல, குமாரனும் ஆவியானவரும் கூட இருக்கின்றனர் என்பதை மனிதன் நம்பினான். பரலோகத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்ற திரித்துவ தேவன் போன்ற ஒரு தேவன் இருக்கிறார் என்று மனிதன் கொண்டிருக்கும் வழக்கமான கருத்து இதுதான். முழு மனுக்குலமும் இந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது: தேவன் ஒரே தேவன்தான், ஆனால் மூன்று அங்கங்களை வகிக்கிறார். வழக்கமான கருத்துக்களில் ஆழமாக வேரூன்றியுள்ள எல்லோருமே அவரை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்று கருதுகின்றனர். அந்த மூன்று அங்கங்களும் ஒன்றாகி உருவாக்கிய ஒருவரே முழுமையான தேவனாக இருக்கிறார். பரிசுத்த பிதா இல்லாமல், தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். அதேபோல, குமாரனோ பரிசுத்த ஆவியோ இல்லாமல் தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். பிதாவையோ அல்லது குமாரனையோ தனியாக தேவனாகக் கருத முடியாது என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களில் நம்புகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரைச் சேர்த்து மட்டுமே தேவனாகக் கருத முடியும். இப்போது, எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களும், உங்கள் மத்தியில் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் கூட இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கை சரியானதா என்பதை யாரும் விளக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் எப்போதும் தேவனுடைய காரியங்களைப் பற்றிய குழப்பத்திலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். இவை கருத்துக்களாக இருக்கின்றபோதிலும், இவை சரியானவையா அல்லது தவறானவையா என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் மதக் கருத்துக்களால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். மதத்தைப் பற்றிய இந்த வழக்கமான கருத்துக்களை நீங்கள் மிகவும் ஆழமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். மேலும், இந்த விஷம் உங்களுக்குள் மிகவும் ஆழமாக ஊடுருவிச் சென்றுள்ளது. ஆகையால், நீங்கள் இந்த காரியத்திலும் பொல்லாங்கான ஆதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் திரித்துவ தேவன் என்பவரே கிடையாது. அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. இவை எல்லாம் மனிதனின் வழக்கமான கருத்துக்களும், மனிதனின் தவறான நம்பிக்கைகளும் ஆகும். பல நூற்றாண்டுகளாக, மனிதன் இந்தத் திரித்துவத்தை நம்பிக்கொண்டிருக்கின்றான். இது மனிதனின் மனதிலுள்ள கருத்துக்களால் உண்டாகியிருக்கின்றன. மனிதனால் பொய்யாக புனையப்பட்டிருக்கின்றன. இதை மனிதன் இதற்கு முன் பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகளில், திரித்துவத்தின் "உண்மையான அர்த்தத்தை" விளக்கிக்கூறிய பல வேதாகம விளக்கவுரையாளர்கள் உள்ளனர், ஆனால் மூன்று தனித்துவமான ஒத்த ஆட்களான திரித்துவ தேவனைப் பற்றிய விளக்கங்கள் தெளிவற்றவையாக இருந்து வருகின்றன. மேலும் ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய "கட்டமைப்பால்" குழப்பமடைந்திருக்கின்றனர். எந்த ஒரு பெரிய மனிதனாலும் ஒரு முழுமையான விளக்கத்தை வழங்க முடியவில்லை. பெரும்பாலான விளக்கங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலும் காகிதத்தில் உள்ளவற்றின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் ஒரு மனிதனுக்குக் கூட அதன் அர்த்தத்தைப் பற்றிய முழுமையான தெளிவானப் புரிதல் கிடையாது. ஏனென்றால், மனிதனின் இருதயத்தில் இடம்பிடித்துள்ள இந்தப் பெரிய திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. ஏனென்றால், தேவனுடைய உண்மையான முகத்தை இதுவரை ஒருவரும் கண்டதுமில்லை, தேவன் இருக்கும் இடத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆராய்வதற்காகவும், "தேவனுடைய வீட்டில்" எத்தனை பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் தலைமுறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறியவும் அல்லது தேவனுடைய இயல்பான கட்டமைப்பு எத்தனை அங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கவும் தேவனுடைய இருப்பிடத்திற்கு ஏறிச்செல்லுமளவிற்கு ஒருவரும் அதிர்ஷ்டசாலியும் இல்லை. முக்கியமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது என்னவென்றால் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் காலமும், அவர்கள் ஒவ்வொரு நபருடைய தோற்றங்களும், அவர்கள் எப்படிப் பிரிந்தார்கள் மற்றும் அவர்கள் எப்படி ஒன்றானார்கள் என்பவையே ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இத்தனை ஆண்டுகளில், ஒரு மனிதனால் கூட இந்தக் காரியங்களின் உண்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் எல்லோரும் வெறுமனே அனுமானம் செய்கின்றார்கள், ஏனென்றால் திரித்துவத்தின் மீது ஆர்வமுள்ள மற்றும் பக்தியுள்ள மத நம்பிக்கையுள்ளவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயத்தைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்க ஒரு மனிதன் கூடப் பரலோகத்திற்கு ஏறிச்சென்று, முழு மனுக்குலத்திற்கான ஒரு "ஆய்வு அறிக்கையுடன்" திரும்பி வரவில்லை. நிச்சயமாகவே, இதுபோன்ற கருத்துக்களை உருவாக்கியதற்காக மனிதன் மீது பழி சுமத்த முடியாது, ஏனென்றால் பிதாவாகிய யேகோவா மனிதனைச் சிருஷ்டித்த போது குமாரனாகிய இயேசு அவருடன் இருக்கவில்லையா? ஆதியில் எல்லாமே யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், அது நன்றாக இருந்திருக்கும். குற்றம் சுமத்தப்பட வேண்டுமானால், சிருஷ்டிப்பின் வேளையில் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் தமக்கு முன்பாக அழைக்காமல், தமது கிரியையை மட்டும் செய்த யேகோவா தேவனுடைய குறுகிய காலத்தின் மீதே சுமத்தப்படட்டும். அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் கிரியை செய்திருந்தால், அவர்கள் ஒருவராகியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஆதியிலிருந்து அந்தம் வரை, யேகோவா என்ற பெயர் மட்டுமே இருந்து, கிருபையின் காலத்திலிருந்த இயேசுவின் பெயர் அல்ல, அல்லது அவர் இன்னும் யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், மனுக்குலத்தினால் உண்டான இந்தப் பிரிவின் துயரத்தை தேவன் மன்னித்திருக்க மாட்டாரா? உண்மையிலேயே, இதற்கெல்லாம் யேகோவாவை குற்றஞ்சாட்ட முடியாது. குற்றம் சுமத்தப்பட வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யேகோவா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் பெயரால் தனது கிரியையைத் தொடர்ந்து செய்த மற்றும் தேவன் யார் என்று மனிதனால் சரியாக அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனிதனைக் குழப்பி வைத்திருந்த பரிசுத்த ஆவியானவர் மீது சுமத்தப்படட்டும். உருவமோ அல்லது சாயலோ அல்லது இயேசு போன்ற ஒரு பெயரோ இல்லாமல் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்திருந்தால், மனிதனால் அவரைத் தொட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ முடியாமல், இடியோசைகளை மட்டுமே கேட்டிருந்தால், இந்த வகையான கிரியை மனுக்குலத்திற்கு அதிக நன்மையை விளைவித்திருக்காதா? அப்படியானால் இப்போது என்ன செய்ய முடியும்? மனிதனுடைய கருத்துக்கள் மலை போல உயரமாகவும், கடல் போல அகலமாகவும், இன்றைய தேவனால் இனிமேல் தாங்க முடியாத அளவிற்கும் மற்றும் குழப்பமடையும் அளவிற்கும் பெருமளவில் திரண்டுள்ளன. கடந்த காலங்களில், அது யேகோவா, இயேசு, பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்கு இடையில் இருந்தபோதே, மனிதன் எவ்வாறு சமாளிப்பது என்று பெரும் குழப்பத்தில் இருந்தான், இப்போதோ தேவனுடைய அங்கமாக இருப்பதாக கூறப்படும் சர்வவல்லவரும் கூடுதலாக சேர்ந்திருக்கிறார். அவர் யார் மற்றும் திரித்துவத்தின் எந்த ஆள்தத்துவத்துடன் அவர் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாகக் கலந்துள்ளார் அல்லது மறைந்துள்ளார் என்று யாருக்குத் தெரியும்? மனிதனால் இதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? திரித்துவ தேவனைக் குறித்து மட்டுமே மனிதனுக்கு விளக்கிக்கூறவே ஒரு ஆயுட்காலம் தேவைப்பட்டது, ஆனால் இப்போதோ "நான்கு ஆள்தத்துவங்களில் ஒரு தேவன்" இருக்கிறார். இதை எவ்வாறு விளக்க முடியும்? உன்னால் அதை விளக்க முடியுமா? சகோதர சகோதரிகளே! இந்நாள் வரை நீங்கள் இத்தகைய தேவனை எப்படி விசுவாசித்திருந்தீர்கள்? நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். திரித்துவ தேவன் ஏற்கனவே தாங்கிக்கொள்வதற்குப் போதுமானவராக இருந்தார். நான்கு ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரு தேவன் மீது நீங்கள் எவ்வாறு தொடர்ந்து அசைக்க முடியாத விசுவாசத்தை வைக்க முடியும்? நீங்கள் வெளியேறுமாறு வற்புறுத்தப்படுகின்றீர்கள், ஆனாலும் நீங்கள் மறுக்கின்றீர்கள். எவ்வளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது! நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்கள்! ஒரு நபரால் உண்மையில் நான்கு தேவர்களை விசுவாசித்தும், அது குறித்து ஒன்றும் புரிந்துகொள்ளவில்லை என்றால், இது ஒரு அற்புதம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பெரிய அற்புதத்தை உங்களால் செய்ய முடியும் என்று யாருக்கும் தெரியாது! உண்மையில், இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் திரித்துவ தேவனே கிடையாது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவனுக்குப் பிதாவும் கிடையாது குமாரனும் கிடையாது, பிதாவும் குமாரனும் ஒன்றாகச் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் கிடையாது. இவை எல்லாம் உலகிலுள்ள மிகப் பெரிய பொய், உண்மையில் எதுவும் கிடையாது! ஆனாலும், இத்தகைய ஒரு தவறான கருத்து தோன்றி, முற்றிலும் அடிப்படையின்றி காணப்படவில்லை, ஏனென்றால் உங்கள் உள்ளங்கள் மிகவும் எளிமையானவை அல்ல, உங்கள் எண்ணங்கள் காரணமின்றி உதிப்பதில்லை. மாறாக, இவை மிகவும் பொருத்தமானவையாகவும் சாமர்த்தியமானவையாகவும் இருக்கின்றன. இவை எந்த சாத்தானாலும் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன. பரிதாபம் என்னவென்றால், இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறான கருத்துக்களாக இருக்கின்றன, மேலும் இவை உண்மையில் இல்லை! நீங்கள் உண்மையான சத்தியத்தைக் கண்டிருக்கவே இல்லை. நீங்கள் அனுமானங்களையும் கற்பனைகளையும் மட்டுமே செய்கிறீர்கள், அதன்பின்னர் வஞ்சகமாக மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும், புத்தியோ அல்லது பகுத்தறிவோ இல்லாத மிகவும் முட்டாள்தனமான ஜனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், இவை அனைத்தையும் ஒரு கதையாகப் புனைகின்றீர்கள், இதனால் அவர்கள் உங்கள் சிறந்த மற்றும் புகழ்பெற்ற "நிபுணத்துவமான போதனைகளை" நம்புகின்றனர். இதுதான் சத்தியமா? இதுதான் மனிதன் பெற வேண்டிய ஜீவவழியா? இது எல்லாமே முட்டாள்தனம்! ஒரு வார்த்தை கூட சரியானதல்ல! இத்தனை ஆண்டுகளில், உங்களால் தேவன் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறார், ஒரு தேவன் வெளிப்படையாக மூன்று தேவர்களாகப் பிரிக்கப்படுமளவிற்கு தலைமுறைதோறும் சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டு வருகிறார். இப்போது மனிதனால் தேவனை மீண்டும் ஒன்றாக இணைப்பது உண்மையில் கூடாத காரியமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அவரை மிகவும் சிறியவராகப் பிரித்திருக்கின்றீர்கள்! தாமதமாவதற்கு முன்பே நான் காலம் தாழ்த்தாமல் எனது கிரியையை செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறு வெட்கக்கேடான வழியில் தொடர்வீர்கள் என்று சொல்வது கடினம்! இவ்விதமாக தேவனைத் தொடர்ந்து பிரிப்பீர்களேயானால் அவரால் எப்படி இன்னும் உங்கள் தேவனாக இருக்க முடியும்? நீங்கள் இன்னும் தேவனை உணர்ந்துகொள்வீர்களா? நீங்கள் இன்னும் உங்கள் பூர்வீகங்களைக் கண்டறிவீர்களா? நான் தாமதமாக வந்திருந்தால், நீங்கள் "பிதாவையும் குமாரனையும்," யேகோவாவையும் இயேசுவையும் இஸ்ரவேலுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, நீங்களே தேவனுடைய ஒரு அங்கமாக இருக்கிறீர்கள் என்று கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக, இப்போது கடைசி நாட்களாக இருக்கிறது. இறுதியாக, நான் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் வந்துள்ளது. நான் என் கையால் இந்தக் கட்டக் கிரியையை செய்த பிறகே, நீங்கள் தேவனைப் பிரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது நடந்திருக்காவிட்டால், நீங்கள் எழுந்து, ஆராதனைக்கான பீடங்களின் மீது உங்களுக்கு மத்தியில் எல்லா சாத்தான்களையும் வைத்திருப்பீர்கள். இது உங்கள் வஞ்சனை! இது நீங்கள் தேவனைப் பிரிக்கும் வழிமுறை! நீங்கள் இப்போதும் இவ்வாறு தொடர்ந்து செய்வீர்களா? உங்களிடம் கேட்கிறேன்: எத்தனை தேவர்கள் இருக்கின்றார்கள்? எந்த தேவன் உங்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவார்? முதல் தேவனா, இரண்டாவது தேவனா அல்லது நீங்கள் எப்போதும் ஜெபத்தை ஏறெடுக்கும் மூன்றாவது தேவனா? நீங்கள் எப்போதும் யாரை நம்புகிறீர்கள்? பிதாவையா? அல்லது குமாரனையா? அல்லது ஆவியானவரையா? நீ யாரை நம்புகிறாய் என்று சொல். ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் தேவனை நம்புவதாகச் சொன்னாலும், நீங்கள் உண்மையில் நம்புவது உங்கள் சொந்த மூளையைத்தான்! உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையில் தேவனைக் கொண்டிருக்கவில்லை! உங்கள் உள்ளங்களில் இன்னும் அத்தகைய "திரித்துவங்களே" ஏராளமாக உள்ளன! நீங்கள் சம்மதிக்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "திரித்துவம் என்பது உண்டா?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க