தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 393

அக்டோபர் 13, 2022

எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதைக் கைக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். ஏனென்றால், ஒருபுறம், அவர்கள் அதற்கான விலைக்கிரயத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை, மறுபுறம், அவர்களின் பகுத்தறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது; அன்றாட வாழ்க்கையில் உள்ள பல சிரமங்களை அவர்களால் பார்க்க முடிவதில்லை, அதை எப்படிச் சரியாகப் பயிற்சி செய்வது என்று தெரிவதில்லை. மக்களின் அனுபவங்கள் மிகவும் ஆழமற்றவை என்பதாலும், அவர்களின் திறமை மிகவும் குன்றி உள்ளதாலும், மேலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் அளவு குறைவாக இருப்பதாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களைத் தீர்க்க அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. அவர்கள் தேவனை வார்த்தையில் மட்டுமே விசுவாசிக்கிறார்களே தவிர, தேவனைத் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டுவர முடிவதில்லை. அதாவது, தேவன் தேவனாக இருக்கிறார், வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கிறது, மக்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் தேவனுடன் எந்த உறவும் இல்லை என்பது போல இருக்கிறது. எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். இவ்வாறு தேவனை விசுவாசித்தால், மக்கள் உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்பட மாட்டார்கள். உண்மையில், தேவனின் வார்த்தை முழுமையாக உணரப்படவில்லை என்பதனால் அல்ல, மாறாக, அவருடைய வார்த்தையைப் பெறுவதற்கான மக்களின் திறன் மிகவும் குறைவாக உள்ளது. தேவனின் உண்மையான சித்தத்தின்படி யாரும் செயல்படுவதில்லை என்று ஒருவர் கூறலாம்; மாறாக, தங்களுடைய சொந்த நோக்கங்கள், கடந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த மதக் கருத்துக்கள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான அவர்களின் சொந்த வழி ஆகியவற்றிற்கு ஏற்ப தேவன் மீதான அவர்களுடைய விசுவாசம் இருக்கிறது, தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மறுரூபமாதலுக்கு உள்ளாகி, அவருடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்குபவர்கள் மிகக் குறைவு. மாறாக, அவர்கள் தவறான நம்பிக்கைகளில் நிலைத்திருக்கிறார்கள். மக்கள் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது, மதத்தின் வழக்கமான விதிகளின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றார்கள், மேலும் முற்றிலும் அவர்களுக்குச் சொந்தமான வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்கிறார்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். பத்துப் பேரில் ஒன்பது பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூறலாம். தேவனை விசுவாசிக்கத் தொடங்கியபின், மற்றொரு திட்டத்தை வகுத்து, ஒரு புதிய நிலைக்குத் திரும்புகிறவர்கள் மிகக் குறைவு. தேவனுடைய வார்த்தையைச் சத்தியமாகக் கருத அல்லது அதைச் சத்தியமாக ஏற்றுக் கொண்டு அதைக் கைக்கொள்ள மனிதகுலம் தவறிவிட்டது.

உதாரணமாக, இயேசுவின் மீதான விசுவாசத்தை எடுத்துக்கொள்வோம். யாராவது இப்போதுதான் விசுவாசிக்க ஆரம்பித்திருந்தாலும் அல்லது மிக நீண்ட காலமாக விசுவாசித்திருந்தாலும், அனைவருமே தங்களிடம் இருந்த தாலந்துகளைப் பயன்படுத்தவும், அவர்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்தவுமே அவ்வாறு செய்தனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் "தேவன் மீதான விசுவாசம்" என்ற இந்த மூன்று வார்த்தைகளையும் வெறுமெனே சேர்த்தனர், ஆயினும் அவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, தேவன் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் சிறிதளவும் வளரவில்லை. அவர்களின் பின்தொடர்தல் அனலாகவோ குளிராகவோ இல்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவதாகச் சொல்லவில்லை, ஆனால் அனைத்தையும் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தவும் இல்லை. அவர்கள் ஒருபோதும் தேவனை மெய்யாக அன்புகூர்ந்ததில்லை அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்ததில்லை. தேவன் மீதான அவர்களின் விசுவாசம் என்பது உண்மை மற்றும் போலி ஆகியவற்றின் கலவையாகும், அவர்கள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டும் மறு கண்ணை மூடிக்கொண்டும் அதை அணுகினர். அவர்கள் விசுவாசத்தைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் குழப்பமான நிலையில் தொடர்ந்தனர், கடைசியில் ஒரு குழப்பமான மரணம் அடைந்தனர். அவை எல்லாவற்றினாலும் என்ன பயன்? இன்று, நடைமுறைத் தேவனை விசுவாசிக்க, நீ சரியான பாதையில் நடக்க வேண்டும். நீ தேவனை விசுவாசித்தால், நீ ஆசீர்வாதங்களை மட்டுமே தேடாமல், தேவனை நேசிக்கவும், தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும். அவருடைய பிரகாசத்தின் மூலமும், உன் தனிப்பட்ட தேடலின் மூலமும், நீ அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம் பண்ணலாம், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் உன் உள்ளான இருதயத்திலிருந்து வரும் தேவனின் உண்மையான அன்பைப் பெறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதான உன் அன்பு மிகவும் உண்மையானதாக இருந்தால், மேலும், அவர் மீது நீ வைத்திருக்கும் அன்பின் வழியை ஒருவரும் அழிக்கவோ அதற்கு எதிராக நிற்கவோ முடியாது, இந்த நேரத்தில் நீ தேவன் மீதுள்ள உன் விசுவாசத்தில் சரியான பாதையில் செல்கிறாய். நீ தேவனுக்குரியவன் என்பதை இது நிரூபிக்கிறது, ஏனென்றால் உன் இருதயம் ஏற்கனவே தேவனின் வசம் உள்ளது, வேறு எதுவும் உன்னை ஆட்கொள்ள முடியாது. உன் அனுபவத்தின் மூலமாகவும், நீ செலுத்திய விலைக்கிரயத்தின் மூலமாகவும், தேவனின் கிரியையின் மூலமாகவும், தேவன் மீது கோரப்படாத அன்பை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும். நீ அவ்வாறு செய்யும்போது, நீ சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்வாய். அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து நீ விடுபட்டால்தான் நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறாய் என்று உன்னால் கூற முடியும். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நீங்கள் யாரும் தற்போதைய விவகாரத்தின் நிலைமைகளில் திருப்தி அடையக்கூடாது. தேவனின் கிரியையைக் குறித்து உங்களால் இருமனமுள்ளவராக இருக்க முடியாது, உங்களால் அதை லேசானதாகக் கருதவும் முடியாது. நீங்கள் எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் தேவனைப் பற்றி சிந்திக்க வேண்டும், எல்லாவற்றையும் அவர் பொருட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் பேசும்போதும் அல்லது செயல்படும்போதும், முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். இதன் மூலமாக மட்டுமே உங்களால் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக இருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க