தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 51

ஏப்ரல் 11, 2023

எல்லா திருச்சபைகளிலும் தேவன் தோன்றுவது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆவியானவர் தான் பேசுகிறார்; அவர் பொங்கி எழும் அக்கினியாக மகத்துவத்தைச் சுமந்துகொண்டு நியாயத்தீர்ப்பளிக்கிறார். அவர் பாதம்வரை தொங்கும் அங்கியொன்றை அணிந்து, தமது மார்பைச் சுற்றி பொற்கச்சை ஒன்றையும் அணிந்திருக்கும் மனுஷகுமாரனாக இருக்கிறார். அவருடைய தலையும் தலைமுடியும் வெண்பஞ்சைப்போலவும், அவரது கண்கள் அக்கினிஜுவாலைகள் போலவும் இருக்கின்றன; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலவும், அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலவும் இருக்கின்றன. அவர் தமது வலதுகரத்தில் ஏழு நட்சத்திரங்களையும், தமது வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும் ஏந்தியிருக்கிறார், மேலும் அவருடைய முகமானது கொழுந்துவிட்டெரியும் சூரியனைப் போலக் கடுமையாகப் பிரகாசிக்கிறது!

மனுஷகுமாரன் சாட்சிக் கொடுத்திருக்கிறார், மேலும் தேவனே தம்மை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனின் மகிமையானது வெளிப்பட்டு, கொழுந்துவிட்டெரியும் சூரியனைப் போலக் கடுமையாகப் பிரகாசிக்கிறது! அவரது மகிமையான முகமானது திகைப்பூட்டும் வெளிச்சத்தை வீசுகிறது; யாருடைய கண்களால் அவரை எதிர்க்க முடியும்? எதிர்ப்பு மரணத்திற்கு வழிவகுக்கிறது! உங்கள் இருதயத்தில் நீங்கள் நினைக்கும் எதற்கும், நீங்கள் சொல்லும் எந்த வார்த்தைக்கும், அல்லது நீங்கள் செய்யும் எதற்கும் சிறிதும் இரக்கம் காட்டப்படுவதில்லை. நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டு, அதைக் காண்பீர்கள்—அது எனது நியாயத்தீர்ப்பே தவிர வேறு எதுவும் இல்லை! நீங்கள் எனது வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க முயற்சிக்காமல், அதற்குப் பதிலாகத் தன்னிச்சையாகக் குறுக்கிட்டு எனது கட்டுமானத்தை அழிக்கும்போது என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? இவ்வாறான நபரை நான் கனிவாக நடத்த மாட்டேன்! உனது நடத்தை மிகவும் தீவிரமாகச் சீர்கெட்டுப்போனால், நீ அக்கினிஜுவாலைகளால் பட்சித்துப்போடப்படுவாய்! சர்வவல்லமையுள்ள தேவன், தலை முதல் பாதம் வரை சிறிதளவு கூட மாம்சத்தாலோ இரத்தத்தாலோ இணைக்கப்படாமல் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வெளிப்படுகிறார். அவர் பிரபஞ்ச உலகத்தைத் தாண்டிச் சென்று மூன்றாம் வானத்தில் இருக்கும் மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்! பிரபஞ்சமும் சகலமும் எனது கரங்களுக்குள் இருக்கின்றன. நான் ஒன்றைச் சொன்னால், அது அப்படியே நடக்கும். நான் ஒன்றை நியமித்தால், அது அப்படியாகவே இருக்கும். சாத்தான் எனது பாதத்திற்குக் கீழே இருக்கிறான்; அவன் பாதாளத்தில் இருக்கிறான்! எனது குரல் வெளிப்படும் போது, வானமும் பூமியும் ஒழிந்து, ஒன்றுமில்லாமற்போகும்! அனைத்தும் புதுப்பிக்கப்படும்; இது முற்றிலும் சரியான மாற்றமுடியாத உண்மையாக இருக்கிறது. நான் உலகத்தையும், பொல்லாத அனைத்தையும் ஜெயங்கொண்டிருக்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து உங்களுடன் பேசுகிறேன், காதுள்ளவர்கள் அனைவருமே இதைக் கேட்க வேண்டும், ஜீவிக்கும் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்கள் முடிவுக்கு வரும்; இந்த உலகில் உள்ள அனைத்தும் ஒன்றும் இல்லாத நிலைக்குச் செல்லும், மேலும் அனைத்தும் புதிதாகப் பிறக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! மறந்து விடாதீர்கள்! தெளிவின்மை இருக்கவே கூடாது! வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் எனது வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை! நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிவுறுத்துகிறேன்: வீணாக ஓடாதீர்கள்! விழித்தெழுங்கள்! மனந்திரும்புங்கள், இரட்சிப்பு சமீபித்திருக்கிறது! நான் ஏற்கனவே உங்களிடையே தோன்றியிருக்கிறேன், எனது சத்தம் தொனித்திருக்கிறது. எனது சத்தம் உங்களுக்கு முன்பாக தொனித்திருக்கிறது; ஒவ்வொரு நாளும் அது உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது, ஒவ்வொரு நாளும் எனது சத்தம் உங்களுக்குப் புதிதாக இருக்கிறது. நீ என்னைப் பார்க்கிறாய், நான் உன்னைப் பார்க்கிறேன்; நான் உன்னிடம் தொடர்ந்து பேசுகிறேன், உன்னுடன் நேருக்கு நேர் வருகிறேன். ஆயினும்கூட, நீ என்னை நிராகரிக்கிறாய், என்னை அறியாதிருக்கிறாய். எனது ஆடுகள் எனது சத்தத்துக்குச் செவி கொடுக்கிறது, ஆனாலும் நீங்கள் தயங்குகிறீர்கள்! நீங்கள் தயங்குகிறீர்கள்! உங்கள் இருதயமானது உணர்ந்து குணப்படாமல், உங்கள் கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டுவிட்டன, எனது மகிமையான முகத்தை உங்களால் காண முடியாது—நீங்கள் எவ்வளவு பரிதாபகரமானவர்களாக இருக்கிறீர்கள்! எவ்வளவு பரிதாபகரமானவர்கள்!

எனது சிங்காசனத்திற்கு முன்னால் உள்ள ஏழு ஆவிகளும் பூமியின் எல்லா மூலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் நான் எனது தூதனை திருச்சபைகளிடத்தில் பேச அனுப்புவேன். நான் நீதியுள்ளவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறேன்; மனுஷனின் இருதயத்தின் ஆழமான பகுதிகளை ஆராயும் தேவன் நானே. பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறார், மேலும் எனது குமாரனுக்குள் இருந்து வெளிப்படும் வார்த்தைகளானது எனது வார்த்தைகள்தான்; காதுள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்! ஜீவிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்! வெறுமனே அவற்றைப் புசித்துக் குடிக்க வேண்டும், சந்தேகப்படக் கூடாது. எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவற்றிற்குச் செவிசாய்க்கும் அனைவருக்கும் பெரும் ஆசீர்வாதம் கிடைக்கும்! எனது முகத்தை ஆர்வத்துடன் தேடும் அனைவரும் நிச்சயமாகப் புதிய வெளிச்சம், புதிய தெளிவு மற்றும் புதிய நுண்ணறிவு ஆகியவற்றைப் பெறுவார்கள்; அனைத்தும் புத்தம் புதியதாக இருக்கும். எனது வார்த்தைகள் எந்த நேரத்திலும் உனக்குத் தோன்றும், மேலும் அவை உனது ஆவியின் கண்களைத் திறக்கும், இதன்மூலம் நீ ஆவிக்குரிய ராஜ்யத்தின் அனைத்து இரகசியங்களையும் காண்பாய், மேலும் ராஜ்யமானது மனுஷரிடையே இருப்பதையும் நீ காண்பாய். அடைக்கலத்திற்குள் பிரவேசித்துவிடு, எல்லா கிருபையும் ஆசீர்வாதங்களும் உன் மீது இருக்கும்; பஞ்சத்தாலும் வாதையினாலும் உன்னைத் தொட முடியாது, மேலும் ஓநாய்கள், சர்ப்பங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் ஆகியவற்றால் உனக்கு தீங்கு செய்ய முடியாது. நீ என்னுடன் வருவாய், என்னுடன் நடப்பாய், என்னுடன் மகிமைக்குள் பிரவேசிப்பாய்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 15" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க