மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தையைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். தேவனை அவனால் பார்க்க முடியாதபோதும் கூட அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ராஜரீகத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்! இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் “உயர் கல்வி நிறுவனங்களில்” கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய தோன்றுதலைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்சக் கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைப் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?

மனிதனின் மனநிலையை மாற்றுவது அவனது சாராம்சத்தைப் பற்றிய அறிவு, அடிப்படை மாற்றங்களான அவனது சிந்தனை, சுபாவம் மற்றும் மனதின் கண்ணோட்டம் ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்தில் ஆரம்பிக்கிறது. இவ்வழியில் மட்டுமே மனிதனின் மனநிலையில் உண்மையான மாற்றங்கள் அடையப்படும். மனிதனில் எழும் சீர்கேடான மனநிலைகளுக்கான மூலக்காரணம் என்னவென்றால் சாத்தானுடைய வஞ்சகமும், சீர்கேடும் மற்றும் விஷமுமேயாகும். மனிதன் சாத்தானால் கட்டப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கிறான், மேலும் அவனுடைய சிந்தனை, அறநெறி, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மேல் சாத்தான் விளைவித்த மோசமான தீங்கை அவன் அனுபவிக்கிறான். அதனுடைய மிகச்சரியான காரணம் என்னவென்றால் மனிதனின் அடிப்படைக் காரியங்கள் சாத்தானால் கெடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவைகளை உண்மையாக எப்படிப் படைத்தாரோ அதைப்போல முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. மனிதன் தேவனை எதிர்க்கிறான், மேலும் அவனால் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி, மனிதனுடைய மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய புரிதலையும், சத்தியத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றக்கூடிய அவனுடைய சிந்தனை, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும். மிக ஆழமாகக் கெடுக்கப்பட்டிருக்கிற இடங்களில் பிறந்தவர்கள், தேவன் யார் அல்லது தேவனை நம்புவது என்றால் என்ன என்று இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர். எவ்வளவு அதிகமாக ஜனங்கள் கெடுக்கப்படுகிறார்களோ, அவ்வளவு குறைவாக அவர்கள் தேவன் இருப்பதை அறிந்திருப்பார்கள், மேலும் அவர்களுடைய பகுத்தறிவும் உள்ளுணர்வும் அவ்வளவு மோசமானதாக இருக்கும். தேவனுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மையின் மூலக்காரணம் மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டிருப்பதாகும். சாத்தானுடைய கெடுதலினால் மனிதனுடைய மனசாட்சி மரத்துப் போய்விட்டது. அவன் நெறிகெட்டு இருக்கிறான், அவனுடைய நினைவுகள் சீர்கெட்டதாக இருக்கின்றன, அவனுக்குப் பின்னோக்கிய மனக்கண்ணோட்டம் இருக்கிறது. சாத்தானால் கெடுக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் இயல்பாகவே தேவனைப் பின்பற்றினான், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிந்தான். அவன் இயற்கையாகவே நல்ல பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் இயல்பான மனிதத்தன்மையுடன் இருந்தான். சாத்தானால் கெடுக்கப்பட்டப் பிறகு, மனிதனின் உண்மையான பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனிதத்தன்மை மந்தமாகி, சாத்தானால் பலவீனமடைந்தது. இவ்வாறு, தேவனிடத்திலான கீழ்ப்படிதலையும் அன்பையும் அவன் இழந்துபோனான். அவனுடைய அறிவு ஒழுக்கம் தவறிப்போனது. அவன் மனநிலை மிருகத்தின் மனநிலையைப் போலவே மாறிவிட்டது. தேவனைப் பற்றின அவனுடைய கலகத்தன்மை ஏராளமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் மாறிவிட்டது. ஆயினும், மனிதன் இதை அறிந்திருக்கவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை, வெறுமனே எதிர்க்கிறான், கண்மூடித்தனமாகக் கலகம் செய்கிறான். மனிதனுடைய பகுத்தறிவு, உணர்வு மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடுகளில் அவனுடைய மனநிலை வெளிப்படுகிறது. ஏனென்றால் அவனுடைய பகுத்தறிவும், உள்ளுணர்வும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவனுடைய மனசாட்சி மிகப்பெரிய அளவில் மழுங்கிப் போயிற்று. இவ்வாறு அவனுடைய மனநிலை தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறதாய் இருக்கிறது. மனிதனுடைய அறிவும், உள்ளுணர்வும் மாற முடியாவிட்டால், அவனுடைய மனநிலையில் மாற்றங்கள் என்பது தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நடக்காத ஒன்றாகவே இருக்கும். மனிதனுடைய உணர்வு சீர்கெட்டதாக இருந்தால், அவனால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது, தேவனால் பயன்படுத்தப்பட தகுதியற்றவனாவான். “இயல்பான உணர்வு” என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது, அவருக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்காக வாஞ்சையாக இருப்பது, தேவனிடத்தில் முழுமையுடன் இருப்பது மற்றும் தேவனைக் குறித்த மனசாட்சியைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அது ஒரு மனதோடு, ஒரு சிந்தையோடு தேவனிடத்தில் இருப்பதையும், வேண்டுமென்றே தேவனை எதிர்க்காமல் இருப்பதையும் குறிக்கிறது. ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்டிருப்பது இது போன்றதல்ல. மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டதிலிருந்து, அவன் தேவனைக் குறித்த கருத்துக்களை எழுப்புகிறான், அவனுக்கு தேவனிடத்தில் விசுவாசமோ அவரிடத்தில் வாஞ்சையோ இருந்ததில்லை, தேவனிடத்திலான மனசாட்சியைக் குறித்துச் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை. மனிதன் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறான். அவர் மீது நியாயத்தீர்ப்புகளை வழங்குகிறான். மேலும் அவருடைய முதுகுக்குப் பின்னாக வசைமொழிகளை வீசியெறிகிறான். அவர் தேவன் என்ற தெளிவான புரிதலோடு, மனிதன் தேவனுடைய முதுகுக்குப் பின்பாக நியாயத்தீர்ப்பை வழங்குகிறான்; தேவனுக்குக் கீழ்ப்படிகிற எண்ணம் மனிதனுக்கு இல்லை. அவன் வெறுமனே கண்மூடித்தனமான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அவரிடத்தில் வைக்கிறான். ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்ட இத்தகைய ஜனங்களால் தங்கள் சொந்த இழிவான நடத்தையை அறிந்துகொள்ளவோ அல்லது அவர்களுடைய கலகத்தன்மைக்காக வருத்தப்படவோ இயலாது. ஜனங்களால் தங்களையே அறிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் உணர்வை சிறிதளவு திரும்பப் பெற்றிருப்பார்கள். இன்னும் தங்களைக் குறித்து அறிய முடியாத ஜனங்கள் தேவனை எத்தனை அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களின் உணர்வு அத்தனை குறைவுடன் இருக்கும்.

மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடானது அவனுடைய மந்தமான மனசாட்சி, அவனுடைய தீங்கிழைக்கும் சுபாவம் மற்றும் அவனுடைய ஆரோக்கியமற்ற உணர்வு ஆகியவற்றைத் தவிர வேறொன்றிலும் தனது ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுடைய மனசாட்சியும் உணர்வும் மீண்டும் இயல்பானதாக மாற முடியுமானால், அவன் தேவனுக்கு முன்பாகப் பயனுள்ள மனிதனாக மாற முடியும். ஏனென்றால் மனிதனின் மனசாட்சி எப்பொழுதும் உணர்ச்சியற்றதாக இருப்பதாலும், ஒருபோதும் நன்றாக இல்லாத மனிதனுடைய உணர்வு இன்னும் மந்தமாகி விட்டதாலும், மனிதன் தேவனிடத்தில் மேலும் மேலும் கலகம் செய்கிறவனாக இருப்பதாலுமேயன்றி வேறில்லை. அவன் இயேசுவையே சிலுவையில் அறைந்து, தன் வீட்டிற்குள் கடைசிக் கால தேவனுடைய மனுஷ அவதரிப்பை மறுத்து, தேவனுடைய மாம்சத்தை நிந்தித்து, அதைக் கீழ்த்தரமாய்ப் பார்க்கிறான். மனிதனுக்குச் சிறிதளவேனும் மனிதத்தன்மை இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் உணர்வு இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு இரக்கமற்றவனாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் மனசாட்சி இருந்திருந்தால், அவன் தேவனின் மனுஷ அவதரிப்புக்கு இவ்வகையில் “நன்றி செலுத்தியிருந்திருக்க” மாட்டான். தேவன் மாம்சமாக வந்த இந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வாழ்கிறான். ஆயினும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்த முடியாமல் இருக்கிறான். மாறாக அவன் தேவனுடைய வருகையைச் சபித்து அல்லது தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையை முற்றிலும் புறக்கணித்து, வெளிப்படையாய் அதற்கு எதிராகவும், அதைக்குறித்து சோர்வடைந்தும் போகிறான். தேவனுடைய வருகையை மனிதன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், சுருங்கச் சொன்னால், மனிதன் தேவனிடத்தில் கண்மூடித்தனமாக விண்ணப்பங்களை ஏறெடுத்து, அவரைச் சிறிதளவாகிலும் வரவேற்கவில்லை என்றாலும், தேவன் எப்போதும் அவருடைய கிரியையைப் பொறுமையாக நடத்திக் கொண்டுவந்திருக்கிறார். மனிதனின் மனநிலை மிகக் கொடூரமானதாக மாறிவிட்டது, அவனுடைய உணர்வு மிகவும் மந்தமாகி விட்டது, அவன் மனசாட்சி தீயவனால் முழுவதுமாக நசுக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு முன்பாகவே மனிதனுடைய உண்மையான மனசாட்சியாக இருப்பதை நிறுத்திக்கொண்டுள்ளது. மனிதகுலத்திற்கு இவ்வளவு அதிக ஜீவனையும் கிருபையையும் ஈந்ததற்காக மனித உருவான தேவனுக்கு மனிதன் நன்றி கெட்டவனாக இருப்பது மட்டுமல்ல, அவனுக்கு சத்தியத்தைத் தந்ததற்காக தேவனிடம் மிகவும் மனங்கசந்தும் கொள்கிறான்; மனிதனுக்கு சத்தியத்தின் மீது சிறிதளவும் விருப்பம் இல்லாததால்தான் அவன் தேவன் மீது மனக்கசப்படைகிறான். மனிதனாக அவதரித்த தேவனுக்காக மனிதனால் தன் ஜீவனைக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவன் அவரிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். மனிதன் தேவனுக்காகக் கொடுத்ததை விட டஜன் கணக்கு அதிகமான வட்டியைக் கோருகிறான். அத்தகைய மனசாட்சியையும் உணர்வையும் உடைய ஜனங்கள் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று நினைக்கின்றனர். அவர்கள் தேவனுக்காகத் தங்களையே அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்றும், தேவன் தங்களுக்கு மிகக்குறைவாகவே கொடுத்திருக்கிறார் என்றும் இன்னும் நம்புகின்றனர். ஒரு கிண்ணம் தண்ணீரை எனக்குக் கொடுத்து விட்டு, என்னிடத்தில் தங்கள் கரங்களை நீட்டி, இரண்டு கிண்ணம் பாலுக்கான பணத்தை அவர்களுக்கு நான் செலுத்தும்படி கோருகிறார்கள் அல்லது எனக்கு ஒரு இரவுக்கு ஒரு அறையைக் கொடுத்து விட்டு, பல இரவுகளுக்கான வாடகையை நான் செலுத்தும்படி கோருகிறார்கள். இத்தகைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் கொண்ட நீங்கள் எப்படி இன்னும் ஜீவனை அடைய விரும்புகிறீர்கள்? எத்தனை வெறுக்கத்தக்க பாவிகள் நீங்கள்! மனிதனிலிருந்த இவ்வகை மனிதத்தன்மையும், அவனில் இருந்த இவ்வகை மனசாட்சியும் மனிதனாக அவதரித்த தேவனை பூமியில் தங்க இடமில்லாமல் சுற்றிலும் அலைந்து திரிய வைத்த காரணங்களாகும். மனசாட்சியையும், மனிதத்தன்மையையும் உண்மையாகக் கொண்டிருக்கிறவர்கள் மனிதனாக அவதரித்த தேவனை ஆராதிக்கவும், அவருக்கு முழுமனதோடு ஊழியம் செய்யவும் வேண்டும். அவர் எவ்வளவு கிரியைகளைச் செய்தார் என்பதற்காக அல்லாமல், அவர் எந்த கிரியையுமே செய்யாவிட்டாலும் கூட அப்படிச் செய்ய வேண்டும். இதுதான் நல்ல உணர்வுள்ளவர்களால் செய்யப்பட வேண்டும், இது மனிதனின் கடமையாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவனுக்குச் செய்கிற ஊழியத்தில் நிபந்தனைகளைப் பற்றிக் கூட பேசுகிறார்கள். அவர் தேவனா அல்லது மனிதனா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களுடைய சொந்த நிபந்தனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றவே நாடுகிறார்கள். நீங்கள் எனக்காக உணவு சமைத்தால், சேவைக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எனக்காக ஓடினால், ஓடும் கட்டணத்தைக் கேட்கிறீர்கள், நீங்கள் எனக்காக வேலை செய்தால், வேலைக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் என்னுடைய வஸ்திரங்களைத் துவைத்தால், சலவைக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் சபைக்காக எதையாகிலும் கொடுத்தால், மீட்புச் செலவைக் கோருகிறீர்கள், நீங்கள் பிரசங்கம் பண்ணினால் பிரசங்கியாருக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் புத்தகங்களை விநியோகித்தால், விநியோகக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எழுதினால், எழுத்துக் கட்டணத்தைக் கோருகிறீர்கள். நான் கையாண்ட நபர்கள் கூட என்னிடத்தில் இழப்பீட்டைக் கோருகிறார்கள், வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்களோ அவர்கள் பெயருக்கு வந்த பாதிப்புக்காக இழப்பீட்டைக் கோருகிறார்கள். விவாகமாகாதவர்கள் வரதட்சணையைக் கோருகிறார்கள், அல்லது தங்களின் இழக்கப்பட்ட வாலிபத்திற்காக இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறார்கள். ஒரு கோழியைக் கொல்லுகிறவர்கள் கசாப்புக்காரரின் கட்டணத்தைக் கோருகிறார்கள், உணவை வறுக்கிறவர்கள் வறுப்பதற்கான கட்டணத்தைக் கோருகிறார்கள், சூப் தயாரிப்பவர்கள் அதற்கும்கூட கட்டணத்தைக் கோருகிறார்கள்…. இது உங்களுடைய இறுமாப்பான, வலுவான மனிதத்தன்மை ஆகும். இவைகள் உங்களுடைய வெதுவெதுப்பான மனசாட்சி கட்டளையிடும் செயல்களாகும். உங்கள் அறிவு எங்கே? உங்கள் மனிதத்தன்மை எங்கே? நான் உங்களுக்குச் சொல்கிறேன்! இப்படியே நீங்கள் தொடர்ந்தால், நான் உங்களிடையே கிரியை செய்வதை நிறுத்தி விடுவேன். மனித உடையில் இருக்கும் மிருகக்கூட்டங்களிடையே நான் கிரியை செய்ய மாட்டேன், கொடிய இருதயங்களை மறைத்துக் கொண்டிருக்கும் அழகான முகங்கள் கொண்ட ஜனக்கூட்டத்திற்காக நான் இப்படி பாடுபட மாட்டேன், சிறிதளவேனும் இரட்சிப்புக்கு சாத்தியமில்லா இந்த மிருகக் கூட்டங்களை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். நான் உங்களைக் கைவிடும் அந்த நாள் நீங்கள் மரிக்கும் நாளாகும், அந்த நாள் இருள் உங்கள் மேல் வருகிற நாளாகும், ஒளியினால் நீங்கள் கைவிடப்படும் நாளாகும். நான் உங்களுக்குச் சொல்கிறேன்! மிருகங்களை விடவும் கீழ்நிலையில் இருக்கும் உங்களுடைய கூட்டத்தைப் போல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு நான் ஒருபோதும் நன்மைசெய்கிறவராக இருக்க மாட்டேன். என்னுடைய வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் வரம்புகள் உண்டு. உங்களிடத்தில் இருக்கும் உங்களுடைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் அப்படியே மாறாமல் இருக்கும்போது, அவற்றை வைத்துக்கொண்டு நான் இனிமேல் எந்த கிரியையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உங்கள் மனசாட்சியில் மிகக் குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி விட்டீர்கள். உங்களின் இழிவான சுபாவம் என்னை மிகவும் வெறுப்பூட்டுகிறது. மனிதத்தன்மையிலும் மனசாட்சியிலும் மிகவும் குறைவுள்ளவர்களாக இருக்கும் ஜனங்கள் இரட்சிப்புக்குரிய வாய்ப்பை ஒருபோதும் பெற மாட்டார்கள். இதுபோன்ற இதயமற்ற, நன்றியுணர்வில்லாத ஜனங்களை நான் ஒரு போதும் இரட்சிக்க மாட்டேன். என்னுடைய நாள் வரும்போது, ஒரு சமயம் என்னுடைய கடுங்கோபத்தைத் தூண்டின கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மேல் நித்திய காலமாய் என்னுடைய கொளுத்தும் அக்கினியை பொழியப்பண்ணுவேன். ஒரு சமயம் என்மேல் கடுஞ்சொற்களை வீசியெறிந்து, என்னை நிராகரித்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய நித்திய தண்டனையைச் சுமத்துவேன். ஒருசமயம் என்னோடு உண்டு, என்னோடுகூட ஒன்றாக வாழ்ந்து, ஆனால் என்னை விசுவாசிக்காமல், என்னை அவமதித்து, எனக்குத் துரோகம்பண்ணின இந்தக் கீழ்ப்படியாமையின் புத்திரர்களுக்காக நான் எப்போதும் என் கோபத்தின் அக்கினியிலே பற்றியெரிவேன். என்னுடைய கோபத்தைத் தூண்டின அனைவரையும் என்னுடைய தண்டனைக்கு உட்படுத்துவேன். ஒரு சமயம் எனக்குச் சமமானவர்கள் போல என் அருகில் நின்றபோதும் என்னை ஆராதிக்காமல், எனக்குக் கீழ்ப்படியாமல் இருந்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய கோபம் முழுவதையும் பொழியப்பண்ணுவேன். முன்பு என் பராமரிப்பை அனுபவித்த, முன்பு நான் பேசின மறைப்பொருள்களால் மகிழ்ச்சியுற்ற, முன்பு என்னிடத்திலிருந்து பொருள் இன்பங்களை எடுக்க முயற்சித்த அந்த மிருகங்கள் மேல் நான் மனிதனை அடிக்கின்ற கோல் விழும். என்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒருவரைக்கூட நான் மன்னிப்பதில்லை. என்னிடத்திலிருந்து உணவையும், உடைகளையும் பறித்துக்கொள்ள முயற்சித்த ஒருவனைக் கூட நான் தப்பவிடமாட்டேன். இப்போதைக்கு நீங்கள் தீங்கிலிருந்து விடுதலையாகி, என்னிடத்தில் நீங்கள் செய்யும் கோரிக்கைகளில் மிதமிஞ்சுவதைத் தொடருங்கள். என்னுடைய கோபத்தின் நாள் வரும்போது, என்னிடத்தில் இனிமேல் நீங்கள் எந்தக் கோரிக்கைகளையும் வைக்க மாட்டீர்கள். அந்த நேரத்தில் உங்கள் இருதயம் திருப்தியாகும் வரையிலும் உங்களை “மகிழ்ச்சியுற” அனுமதிப்பேன். உங்கள் முகத்தை பூமிக்குள் தள்ளுவேன். உங்களால் திரும்பவும் ஒருபோதும் எழும்ப முடியாது. மிகச்சீக்கிரத்தில் நான் இந்தக் கடனை உங்களுக்குத் “திருப்பிச்செலுத்தப்” போகிறேன். அந்த நாள் வருவதற்காக நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த வெறுக்கத்தக்க ஜனங்கள் தங்கள் மிதமிஞ்சிய ஆசைகளை உண்மையிலேயே ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனிடத்தில் திரும்ப முடியுமானால், அப்பொழுது இரட்சிப்புக்குரிய வாய்ப்பு அவர்களுக்கு இன்னும் இருக்கும். மனிதனுக்கு உண்மையாகவே தேவனுக்காக வாஞ்சிக்கும் இருதயம் இருக்குமென்றால், அவன் தேவனால் கைவிடப்பட மாட்டான். தேவனுக்கு உணர்ச்சி இருப்பதாலும் அல்லது தன்னை மனிதன் ஆதாயமாக்கிக் கொள்வதற்கு விருப்பமற்றவராய் தேவன் இருப்பதாலும் அல்ல, மாறாக மனிதன் தேவன் தன்னை ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பாததால், அவரை உடனடியாகத் தேட விரும்பாததால், அவன் அவரை ஆதாயமாக்கிக் கொள்ளத் தவறுகிறான். தேவனை உண்மையாய்த் தேடுகிறவர்களில் ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? நல்ல உணர்வும், உணர்வுள்ள மனசாட்சியும் கொண்ட ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? தேவனை உண்மையாய் ஆராதித்து, அவருக்கு ஊழியம் செய்கிற ஒருவர் எப்படி அவருடைய கோபத்தின் அக்கினியினால் விழுங்கப்பட முடியும்? தேவனுக்கு மகிழ்ச்சியாய்க் கீழ்ப்படியும் ஒருவர் எப்படி தேவனுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட முடியும்? தேவனை அதிகமாக நேசிக்கும் ஒருவர் எப்படி தேவனுடைய தண்டனையில் வாழ முடியும்? தேவனுக்காக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாய் விட்டுவிடுகிற ஒருவர் எப்படி ஒன்றுமில்லாமல் விடப்படுவார்? மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்புவதில்லை, தன்னுடைய உடைமைகளைத் தேவனுக்காக செலவழிக்க விரும்புவதில்லை, வாழ்நாளின் பிரயாசத்தைத் தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, தேவனைப் பற்றின அதிகக் காரியங்கள் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதாயிருக்கும்படி, தேவன் மிக தூரம் போய்விட்டார் என்று அவன் சொல்லுகிறான். இப்படிப்பட்ட மனிதத்தன்மையுடன், நீங்கள் உங்கள் பிரயாசங்களில் தாராளமாக இருந்தாலும் கூட, தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள உங்களால் முடியாமல் போகும். நீங்கள் தேவனைத் தேடவில்லை என்ற உண்மையைக் குறித்து உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் மனித இனத்தின் குறைபாடுள்ள சரக்குகள் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைவிட கீழான மனிதத்தன்மை வேறில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைக் கனப்படுத்த மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை ஓநாயின் தகப்பன், ஓநாயின் தாய், ஓநாயின் மகன் மற்றும் ஓநாயின் பேரன் என்று அழைக்கிறார்கள். நீங்கள் ஓநாயின் சந்ததிகள், ஓநாயின் ஜனங்கள் ஆவீர்கள். உங்களின் சொந்த அடையாளம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. நீங்கள் உங்களை ஏதோ மேலான பிரபலம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் மனுக்குலத்தின் நடுவில் மிகக் கொடூரமான மனிதரல்லாத கூட்டம். இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியாதா? உங்களிடத்தில் கிரியை செய்கிறதால் நான் எத்தனை பெரிய இடர்நேரும் நிலையை எதிர்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உணர்வு மீண்டும் இயல்பானதாக மாற முடியாவிட்டால், உங்களுடைய மனசாட்சி இயல்பானதாக இயங்க முடியாவிட்டால், நீங்கள் “ஓநாய்” என்ற பெயரை ஒருபோதும் தள்ளிவிட முடியாது. நீங்கள் ஒருபோதும் சாபத்தின் நாளிலிருந்தும், உங்கள் தண்டனையின் நாளிலிருந்தும் தப்ப முடியாது. நீங்கள் தாழ்ந்தவர்களாக, எந்த மதிப்பும் இல்லாத ஒரு காரியமாய்ப் பிறந்தீர்கள். நீங்கள் சுபாவப்படி பசியாயிருக்கும் ஓநாய்க் கூட்டம், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல், நான் உங்களைப் போலல்லாமல் உங்களிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களிடம் கிரியை செய்யாமல், மாறாக என்னுடைய கிரியைத் தேவைப்படுவதால் அப்படிச் செய்கிறேன். நீங்கள் இப்படியே தொடர்ந்து கலகத்தன்மை உள்ளவர்களாக இருந்தால், நான் என்னுடைய கிரியையை நிறுத்திவிடுவேன். மீண்டும் ஒருபோதும் உங்களிடத்தில் கிரியை செய்ய மாட்டேன். மாறாக நான் என்னுடைய கிரியையை என்னைப் பிரியமான மற்றொரு கூட்டத்திற்கு கைமாற்றி விடுவேன். இவ்வகையில் நான் உங்களை என்றென்றும் விட்டு விலகுவேன். ஏனென்றால் என்னை விரோதிக்கிறவர்களை நோக்கிப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அப்படியானால், நீங்கள் என்னுடன் ஒத்துப்போக விரும்புகிறீர்களா அல்லது என்னை விரோதிக்க விரும்புகிறீர்களா?

முந்தைய: ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?

அடுத்த: தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக