பாதை … (3)

என் வாழ்க்கையில், என் மனதையும் சரீரத்தையும் முற்றிலுமாக தேவனுக்குக் கொடுப்பதில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். அப்போதுதான் என் மனச்சாட்சி குற்ற உணர்வு இல்லாமல் ஓரளவு சமாதானத்துடன் இருக்கிறது. ஜீவனைப் பின்தொடர்பவர்கள் முதலில் தங்கள் முழு இருதயத்தையும் தேவனுக்குக் கொடுக்க வேண்டும்; இது ஒரு முன் நிபந்தனையாகும். என் சகோதர சகோதரிகள் என்னுடன் சேர்ந்து தேவனிடத்தில் ஜெபம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்: “தேவனே! பரலோகத்தில் இருக்கிற உம்முடைய ஆவியானவர் பூமியில் இருக்கிற ஜனங்கள் மீது கிருபை அருள்வாராக, அதனால் என் இருதயம் முழுமையாக உம்மிடத்திற்குத் திரும்பும், அதனால் என் ஆவி உம்மால் ஏவப்படும், அதனால் நான் உம்முடைய சௌந்தரியத்தை என் இருதயத்திலும் என் ஆவியிலும் காணமுடியும், மேலும் அதனால்தான் பூமியில் உள்ளவர்கள் உமது அழகைக் காணும்படி ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனே! உம்முடைய ஆவியானவர் மீண்டும் ஒருமுறை எங்களது ஆவிகளை ஏவுவாராக, இதனால் எங்கள் அன்பு என்றென்றும் நிலைத்திருப்பதாகவும் மாறாததாகவும் இருக்கும்!” நம் எல்லோரிலும், தேவன் முதலில் நம் இருதயங்களைச் சோதிக்கிறார்—நம் இருதயங்களை நாம் அவரிடத்தில் ஊற்றியவுடன், அவர் நம் ஆவிகளை ஏவத் தொடங்குகிறார். நம்முடைய ஆவியில் மட்டுமே நாம் தேவனுடைய சௌந்தரியத்தையும், மேன்மையையும், மகத்துவத்தையும் பார்க்க முடிகிறது. மனுஷர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவரின் பாதை இதுவேயாகும். நீ இது போன்ற வாழ்க்கையைக் கொண்டிருக்கிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கும் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறாயா? உன் ஆவி தேவனால் ஏவப்பட்டிருக்கிறதா? பரிசுத்த ஆவியானவர் ஜனங்களிடத்தில் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை நீ பார்த்திருக்கிறாயா? உன் முழு இருதயத்தையும் தேவனுக்கு அர்ப்பணித்துவிட்டாயா? நீ உன் முழு இருதயத்தையும் தேவனுக்கு அர்ப்பணித்திருக்கும்பொழுது, நீ பரிசுத்த ஆவியானவருடைய ஜீவனை நேரடியாக அனுபவிக்க முடிகிறது, மேலும் அவருடைய கிரியை உனக்குத் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். அந்த நேரத்தில், நீ பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுகிற ஒருவனாய் மாறுவாய். நீ அத்தகைய நபராய் மாற விரும்புகிறாயா? நான் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, முதன்முறையாக என் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தபோது, நான் அவர் முன் விழுந்து எவ்வாறு கதறினேன் என்பதை நினைவுகூருகிறேன்: “தேவனே! நீர் என் கண்களைத் திறந்து உமது இரட்சிப்பை அறிய என்னை அனுமதித்தீர். நான் என் இருதயத்தை முற்றிலுமாக உமக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன், உம்முடைய சித்தம் மட்டுமே நிறைவேறுவதாக என்று நான் கேட்கிறேன், உம்முடைய சமூகத்தில் என் இருதயம் உமது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன், உம்முடைய சித்தத்தை மட்டுமே நான் பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறேன்.” அந்த ஜெபத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்; நான் மிகவும் அதிகமாக ஏவப்பட்டேன், தேவனுக்கு முன்பாக வேதனையுடன் கண்ணீர் விட்டேன். இரட்சிக்கப்பட்ட ஒருவராக தேவனுடைய சமூகத்தில் எனது முதல் வெற்றிகரமான ஜெபம் இதுவேயாகும், மேலும் இதுவே என் இருதயத்தின் முதல் ஆசையாக இருந்தது. அதன்பிறகு, நான் அடிக்கடி பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டேன். நீ இது போன்ற அனுபவத்தைப் பெற்றிருந்திருக்கிறாயா? பரிசுத்த ஆவியானவர் உன்னில் எவ்வாறு கிரியை செய்திருக்கிறார்? அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ, இந்த அனுபவம் தேவனை நேசிக்க நாடுகிற அனைவராலும் பகிரப்படுகிறது—அவர்கள் மறந்துவிடுவதும் இதைத்தான் என்று நான் நினைக்கிறேன். தாங்கள் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருந்ததில்லை என்று யாராவது சொன்னால், அவர்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும், அவர்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் இருப்பதையும் இது நிரூபிக்கிறது. நம் அனைவருக்கும் பொதுவான பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பரிசுத்த ஆவியானவருடைய பாதையாக இருக்கிறது, மேலும் அது விசுவாசிப்பவர்கள் மற்றும் தேவனைத் தேடுபவர்களின் பாதையாகவும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களிடத்தில் நடப்பிக்கிற முதல் கட்ட கிரியையே, அவர்களுடைய ஆவியை ஏவுவதுதான், அதன் பிறகு அவர்கள் தேவனை நேசிக்க ஆரம்பித்து, ஜீவனைப் பின்தொடர்கிறார்கள், மேலும் இந்தப் பாதையில் நடப்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவருடைய பாதையில் உள்ளனர். இவைகள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள தேவனுடைய கிரியையின் வல்லமைகள் மட்டுமல்ல, மாறாக முழு பிரபஞ்சத்திலும் உள்ளவைகளாகும். அவர் ஒவ்வொருவரிலும் இவ்வாறுதான் கிரியை செய்கிறார். யாராவது ஒருவர் ஒருபோதும் ஏவப்பட்டிருக்கவில்லை என்றால், அவர்கள் மீட்பின் பாதைக்கு வெளியே இருப்பதை இது நிரூபிக்கிறது. என் இருதயத்தில், அவர் எல்லா ஜனங்களையும் ஏவும்படி கெஞ்சி, நான் தேவனிடம் இடைவிடாமல் ஜெபிக்கிறேன், இதனால் சூரியனுக்குக் கீழே உள்ள அனைவரும் அவரால் ஏவப்பட்டு இந்தப் பாதையில் நடக்க இயலும். ஆனால் இது தேவனுக்கு என்னிடமிருந்து சென்ற ஒரு சிறிய வேண்டுகோளாக இருக்கலாம், ஆனால் அவர் இதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். என் சகோதர சகோதரிகள் அனைவரும், தேவனுடைய சித்தம் செய்யப்பட்டு, அவருடைய கிரியை விரைவில் நிறைவு பெற வேண்டும் என்று ஜெபம் செய்வார்கள் என நான் நம்புகிறேன், அதனால் பரலோகத்தில் இருக்கிற அவருடைய ஆவியானவர் ஒய்ந்திருக்க முடியும். இது எனது சொந்த சிறிய நம்பிக்கையாகும்.

தேவன் தமது கிரியையை பிசாசுகளின் கோட்டை ஒன்றில் ஸ்தாபிக்க முடியுமானால், பிரபஞ்சம் முழுவதும், மற்ற எண்ணற்ற இடங்களிலும் அவர் நிச்சயமாக அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்று சொல்லப்பட்டதைப் போலவே, கடைசி காலத்தில் இருக்கிற நாம் தேவனுடைய மகிமையின் நாளைக் காண்பதற்கான நிச்சயத்தை உடையவர்களாய் இருக்கிறோம். அவருடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் தேவனுக்கு யாராலும் மாற்றாக முடியாது—இந்தக் கிரியையை தேவனால் மட்டுமே செய்ய முடியும், ஏனென்றால் இந்தக் கட்ட கிரியையானது அசாதாரணமானதாகும், இது ஜெயங்கொள்ளுகிற கிரியையின் ஒரு கட்டமாகும், மேலும் ஜனங்களால் மற்ற ஜனங்களை ஜெயங்கொள்ள முடியாது. தேவன் தமது சொந்த வாயால் பேசும்போது மற்றும் தமது கரத்தால் செயல்படும்போது மட்டுமே ஜனங்கள் ஜெயங்கொள்ளப்படுகிறார்கள். பிரபஞ்சம் முழுவதிலும், தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டை ஒரு சோதனைக்கான இடமாகப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அவர் பிரபஞ்சம் முழுவதிலும் இந்தக் கிரியையைத் தொடங்குவார். இவ்வாறு அவர் பிரபஞ்சம் முழுவதும் இன்னும் பெரிய கிரியையைச் செய்வார், மேலும் பிரபஞ்சத்தின் அனைத்து ஜனங்களும் தேவனுடைய ஜெயங்கொள்ளுதலின் கிரியையைப் பெறுவார்கள். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சபைப் பிரிவினரும் இந்தக் கட்ட கிரியையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே நடக்க வேண்டிய பாதையாகும்—யாராலும் அதற்குத் தப்பிச் செல்ல முடியாது. தேவனால் உனக்கு ஒப்படைக்கப்பட்ட இதை நீ ஏற்றுக்கொள்ளத் தயாரா? பரிசுத்த ஆவியானவரின் கட்டளையை ஏற்றுக்கொள்வது மகிமையான ஒன்று என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். நான் அதை எவ்விதத்தில் பார்க்கிறேன் என்றால், இதுவே மனிதகுலத்திற்கு தேவன் அளிக்கும் மிகப்பெரிய கட்டளையாகும். என் சகோதரர்களும் சகோதரிகளும் என்னுடன் சேர்ந்து கடினமாக உழைத்து தேவனிடத்திலிருந்து வருகிற இந்தக் கட்டளையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், இதனால் தேவன் பிரபஞ்சம் முழுவதிலும் மற்றும் மேலே உள்ள ராஜ்யத்திலும் மகிமையைப் பெற்றுக்கொள்ள முடியும், மேலும் நம்முடைய வாழ்க்கையும் வீணாகாது. நாம் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் அல்லது நாம் ஆணையிட்டுக் கொடுக்க வேண்டும். ஜனங்கள் தேவனை விசுவாசிக்கும்போது, எந்த இலக்கையும் பின்தொடரவில்லை எனில், அவர்களின் வாழ்க்கை ஒன்றுக்கும் உதவாது, அவர்கள் மரிக்கும் நேரம் வரும்போது, அவர்கள் நீல வானத்தையும் தூசி நிறைந்த பூமியையும் மட்டுமே பார்ப்பார்கள். இது ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையா? நீ வாழும் போது தேவனுடைய கோரிக்கைகளை உன்னால் நிறைவேற்ற முடிந்தால், அது ஓர் அழகான விஷயம் அல்லவா? நீ ஏன் எப்போதும் இதுபோன்ற பிரச்சனைகளை உன் மீது வரவழைத்துக்கொள்கிறாய், ஏன் நீ எப்போதும் மிகவும் விரக்தியடைந்தவனாக இருக்கிறாய்? அப்படி செயல்படுவதற்கு, நீ தேவனிடமிருந்து ஏதாவது பெற்றுக்கொண்டாயா? மேலும் தேவன் உன்னிடமிருந்து எதையாவது பெற முடியுமா? தேவனுக்கு நான் செய்த என் சத்தியத்தில், என் இருதயத்தின் வாக்குறுதி மட்டுமே இருந்தது; நான் அவரை வார்த்தைகளால் ஏமாற்ற முயற்சி செய்யவில்லை. நான் ஒருபோதும் அத்தகைய காரியத்தைச் செய்யமாட்டேன்—என் முழு இருதயத்துடன் நான் நேசிக்கும் தேவனை திருப்திப்படுத்த மட்டுமே விரும்புகிறேன், அதனால் பரலோகத்தில் இருக்கிற அவருடைய ஆவியானவர் திருப்தியடையட்டும். இருதயம் மதிப்புமிக்கதாக இருக்கலாம், ஆனால் அன்பு மிகவும் விலையேறப்பெற்றது. நான் தேவனுக்கு என் இருதயத்தில் மிகவும் விலையேறப்பெற்ற அன்பைக் கொடுப்பேன், அதனால் என்னிடம் இருக்கும் மிக அழகான விஷயத்தை அவர் அனுபவிக்கட்டும், அதன்மூலம் நான் அவருக்கு அளிக்கும் அன்பால் அவர் திருப்தியடைவாராக. உன் அன்பை தேவன் அனுபவிக்கும்படி நீ அதை அவரிடம் கொடுக்க விரும்புகிறாயா? இதை உன் வாழ்வின் மூலதனமாக்க நீ ஆயத்தமா? என் அனுபவங்களில், நான் தேவன் மீது எவ்வளவு அதிகமாக அன்பு செலுத்துகிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் வாழ்வதில் சந்தோஷத்தைக் கண்டிருக்கிறேன்; இன்னும் அதிகமாக, என் பெலத்துக்கு எல்லை இல்லை, மேலும் நான் என் முழு சரீரத்தையும் மனதையும் மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கிறேன், என்னால் தேவனைப் போதுமான அளவு நேசிக்க முடியவில்லையே என்ற தொடர்ச்சியான உணர்வு எனக்கு இருக்கிறது. எனவே உன் அன்பு ஓர்அற்பமான அன்பா, அல்லது அது எல்லையற்றதும் அளவிட முடியாததுமாக இருக்கிறதா? நீ உண்மையிலேயே தேவனை நேசிக்க விரும்பினால், அவருக்குத் திருப்பிச் செலுத்த உனக்கு எப்போதும் அதிகமான அன்பு இருக்கும்—அப்படியானால், எந்த நபரால் அல்லது பொருளால் தேவன் மீதான உன் அன்பின் வழியில் குறுக்கே நிற்க முடியும்?

தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய அன்பையும் நினைவில் வைத்திருக்கிறார். அவரை நேசிக்கும் அனைவரிடமும் அவருடைய ஆசீர்வாதம் இரட்டிப்பாகிறது, ஏனென்றால் மனுஷனுடைய அன்பு கிடைப்பது மிகவும் கடினம், அதிலும் மிகக் குறைவாகவே கிடைக்கும், அது கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாததாக இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும், தேவன் தம்மை மீண்டும் நேசிக்கும்படி ஜனங்களிடம் கேட்க முயன்றார், ஆனால் இது வரையிலுமான காலங்களில், ஒரு சிலரே—குறைந்த எண்ணிக்கையிலானவர்களே—அவருக்கு உண்மையான அன்பை திருப்பிச் செலுத்தியுள்ளனர். எனக்குத் தெரிந்த வரையில், பேதுரு அதில் ஒருவனாக இருந்தான், ஆனால் அவன் தனிப்பட்ட முறையில் இயேசுவால் வழிநடத்தப்பட்டான், அவன் மரிக்கும் போதுதான், அவன் தேவனுக்குத் தன் முழு அன்பையும் கொடுத்தான், பின்னர் அவனது வாழ்க்கை முடிந்தது. எனவே, இந்த மிக மோசமான நிலைமைகளின் கீழ், தமது கிரியையை அதிக பயனுள்ளதாக்குவதற்கும், தமது சாட்சிக்கு அதிக பலனைக் கொண்டுவரும்படிக்கும், தமது வல்லமை மற்றும் தமது முயற்சிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் மையப்படுத்தி, தேவன் பிரபஞ்சத்தில் தமது கிரியையின் வரம்பைக் குறைத்து, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டை ஒரு காட்சிப்படுத்தும் மண்டலமாகப் பயன்படுத்தினார். இந்த இரண்டு நிலைமைகளின் கீழ்தான் தேவன் தமது முழு பிரபஞ்சத்தின் கிரியையை சீனாவின் பிரதான நிலப்பகுதியிலுள்ள, எல்லாரையும் விட மிகக் குறைந்த திறமையைக் கொண்டிருந்த இந்த ஜனங்களிடத்திற்கு மாற்றினார், மற்றும் தமது அன்பான ஜெயங்கொள்ளுதலின் கிரியையைத் தொடங்கினார். அவர்கள் அனைவரையும் தம்மை நேசிக்கச் செய்த பிறகு, அவர் தேவனுடைய திட்டமான தம்முடைய அடுத்த கட்ட கிரியையைச் செயல்படுத்துவார். இவ்வாறு அவரது கிரியை மிகப்பெரிய விளைவை அடைகிறது. அவரது கிரியையின் எல்லையானது மையம் மற்றும் வரம்புகள் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கிறது. நம்முடைய நாள் வரும்பொருட்டு, நம்மில் தம்முடைய கிரியையைச் செய்யும்போது தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரயம் கொடுத்திருக்கிறார் மற்றும் அவர் எவ்வளவு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இதுவே நம்முடைய ஆசீர்வாதமாகும். எனவே, ஜனங்களுடைய கருத்துகளைக் குழப்புவது என்னவென்றால், ஒரு நல்ல இடத்தில் பிறந்ததற்காக மேற்கத்தியர்கள் நம்மீது பொறாமைப்படுகிறார்கள், ஆனால் நாம் அனைவரும் நம்மைத் தாழ்ந்தவர்களாகவும் ஏழ்மையானவர்களாகவும் பார்க்கிறோம். இது தேவன் நம்மை உயர்த்துவது அல்லவா? எப்போதுமே மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர் மேற்கத்தியர்களால் நோக்கிப் பார்க்கப்படுகிறார்கள்—இது உண்மையிலேயே நம்முடைய ஆசீர்வாதமாகும். நான் இதை நினைக்கும்போது, தேவனுடைய தயவினாலும், மேலும் அவரது அன்பினாலும், நெருக்கத்தினாலும் நான் வெகுவாய் ஈர்க்கப்பட்டேன். தேவன் செய்யும் அனைத்தும் மனுஷீகக் கருத்துக்களுடன் பொருந்தாது என்பதை இது காட்டுகிறது. இந்த ஜனங்கள் அனைவரும் சபிக்கப்பட்டிருந்தாலும், அவர் நியாயப்பிரமாணத்தின் கண்டிப்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை மற்றும் அவர் வேண்டுமென்றே தமது கிரியையின் மையத்தை பூமியின் இந்தப் பகுதிக்கு மாற்றியிருக்கிறார். இதனால்தான் நான் களிகூருகிறேன், இதனால்தான் நான் அளவிடமுடியாத மகிழ்ச்சியை உணர்கிறேன். கிரியையில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் ஒருவராக, இஸ்ரவேலர்கள் மத்தியில் இருக்கிற பிரதான ஆசாரியர்களைப் போலவே, நான் நேரடியாக ஆவியானவரின் கிரியையைச் செய்து முடிக்கவும் தேவனுடைய ஆவியானவருக்கு நேரடியாக ஊழியம் செய்யவும் முடிகிறது; இது என் ஆசீர்வாதமாகும். இத்தகைய ஒன்றைக் கற்பனை செய்ய யார் துணிவார்கள்? ஆனால் இன்று, இது எதிர்பாராத விதமாக நம்மீது வந்திருக்கிறது. இது உண்மையில் நமது கொண்டாட்டத்திற்குத் தகுதியான ஒரு மிகப்பெரிய சந்தோஷமாகும். தேவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார், மேலும் நம்மை உயர்த்துவார் என்று நம்புகிறேன், இதனால் இந்தக் குப்பையில் வாழும் நம்முடையவர்கள் தேவனால் பெரிதும் பயன்படுத்தப்படுபவர்களாவோம், இதனால் அவருடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவோம்.

நான் இப்போது நடந்து செல்லும் பாதை தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்தும் பாதையாகும், ஆனால் இது தேவனுடைய சித்தமும் அல்ல, நான் நடக்க வேண்டிய பாதையும் அல்ல என்ற உணர்வை நான் தொடர்ந்து பெற்றிருக்கிறேன். தேவனால் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு—இதுவே தேவனுடைய சித்தமும், இதுவே பரிசுத்த ஆவியானவரின் பாதையுமாக இருக்கிறது. ஒருவேளை நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம், ஆனால் இது என்னுடைய பாதை என்று நான் நினைக்கிறேன், அவர் என்னை வழிநடத்த வேண்டும் என்று நான் விரும்புவதாகவும், நான் அவசரமாக நடக்க வேண்டிய பாதையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும், மற்றும் தேவனுடைய சித்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீண்ட காலத்திற்கு முன்பே நான் தேவனிடம் பொருத்தனை செய்தேன். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது எதுவுமில்லை, மற்றும் இந்தச் சரியான பாதையிலிருந்து ஒருவரும் என்னை விலகச் செய்ய முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும், ஒருவேளை இதைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் இருக்கலாம், ஆனால் நான் இதை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செல்ல வேண்டிய பாதையில் நான் செல்வேன்—நான் செல்ல வேண்டிய பாதையை அடையாளம் கண்ட உடனே நான் அதில் செல்வேன், மற்றும் பின்வாங்க மாட்டேன். எனவே, நான் இந்த வார்த்தைகளுக்குத் திரும்பி வருகிறேன்: நான் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு என் இருதயத்தை நேராக்கியிருக்கிறேன். என் சகோதர சகோதரிகள் என்னை விமர்சிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! ஒட்டுமொத்தமாக, நான் தனிப்பட்ட முறையில் பார்ப்பது போல், மற்றவர்கள் தங்களுக்குப் பிடித்ததைச் சொல்ல முடியும், ஆனால் தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவதே மிக முக்கியமான விஷயம் என்றும், இதில் எதுவும் என்னைப் பின்வாங்கச் செய்யக்கூடாது என்றும் நான் உணர்கிறேன். தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவது ஒருபோதும் தவறாக இருக்க முடியாது! மேலும் இது ஒருவரின் சொந்த விருப்பங்களில் செயல்படுவதல்ல! தேவன் என் உள்ளான இருதயத்தைப் பார்த்துவிட்டார் என்று நான் நம்புகிறேன்! எனவே நீ இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? தேவனுக்காக உன்னை அர்ப்பணிக்க நீ ஆயத்தமாக இருக்கிறாயா? தேவனால் பயன்படுத்தப்பட நீ ஆயத்தமாக இருக்கிறாயா? தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவதாக நீ பொருத்தனை செய்கிறாயா? எனது வார்த்தைகள் என் சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது நுண்ணறிவுகளைக் குறித்தவைகள் எதுவும் மிக அதிகமாக இல்லை என்றாலும், அவைகளைப் பற்றி நான் இன்னும் உங்களுக்குச் சொல்கிறேன், அதனால் நமக்கு இடையே எந்தத் தடையும் இல்லாமல், நம் உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம், அதன்மூலம் தேவன் நம் மத்தியில் என்றென்றும் இருப்பார். இவைகள் என் இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாகும். சரி! இன்று நான் என் இருதயத்திலிருந்து பேச வேண்டியது அவ்வளவுதான். என் சகோதர சகோதரிகள் தொடர்ந்து கடினமாகக் கிரியை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன், மற்றும் தேவனுடைய ஆவியானவர் எப்போதும் நம்மை கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்!

முந்தைய: பாதை … (2)

அடுத்த: பாதை … (4)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக