தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்

இந்தக் காலங்களில் தேவன் செய்யும் கிரியையை அறிந்து கொள்வது, அநேகமாக, கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனுடைய பிரதான ஊழியம் என்ன, மற்றும் அவர் பூமியில் என்ன செய்ய வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதுமாகும். தேவன் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு ஒரு முன்மாதிரியை அமைப்பதற்காக (கடைசி நாட்களின் போது) பூமிக்கு வந்திருக்கிறார் என்று நான் முன்பு என் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளேன். தேவன் இந்த முன்மாதிரியை எவ்வாறு அமைக்கிறார்? அவர் தாம் பேசுகிற வார்த்தைகள் மூலமும், செய்கிற கிரியையின் மூலமும் மற்றும் தேசம் முழுவதும் பேசுவதன் மூலமுமாக அவ்வாறு செய்கிறார். கடைசி நாட்களில் இது தேவனின் கிரியையாயிருக்கிறது; பூமியை வார்த்தைகளின் உலகமாக மாற்றுவதற்காக மட்டுமே அவர் பேசுகிறார், இதனால் ஒவ்வொரு நபரும் அவருடைய வார்த்தைகளால் வழங்கப்படுகிறான் மற்றும் ஒளியூட்டப்படுகிறான், அதனால் மனிதனின் ஆவி விழித்தெழுகிறது மற்றும் அவன் தரிசனங்களைக் குறித்தத் தெளிவையும் பெறுகிறான். கடைசி நாட்களின் போது, மாம்சமாகிய தேவன் வார்த்தைகளைப் பேசுவதற்காக பூமிக்கு பிரதானமாக வந்திருக்கிறார். இயேசு வந்தபோது, அவர் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார், மேலும் தாம் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மீட்பின் கிரியையை அவர் நிறைவேற்றினார். அவர் நியாயப்பிரமாண யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து பழையவை அனைத்தையும் ஒழித்தார். இயேசுவின் வருகை நியாயப்பிரமாண யுகத்தை முடித்து, கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தியது; கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனின் வருகை கிருபையின் யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது. அவர் பிரதானமாக அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், ஒளியூட்டி மனிதனை பிரகாசிப்பிக்கச் செய்வதற்கும், மற்றும் மனிதனின் இருதயத்திற்குள் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை அகற்றுவதற்குமே வந்திருக்கிறார். இயேசு வந்தபோது அவர் செய்த கிரியையின் கட்டம் இதுவல்ல. இயேசு வந்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், மற்றும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் மீட்பின் கிரியையைச் செய்தார். இதன் விளைவாக, ஜனங்களின் கருத்துக்களில் தேவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இயேசு வந்தபோது, மனிதனின் இதயத்திலிருந்து கற்பனை தேவர்களுடைய உருவத்தை அகற்றும் கிரியையை அவர் செய்யவில்லை; அவர் வந்தபோது, பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஒருபுறம், கடைசி நாட்களின் போது தேவனுடைய மனித அவதாரமானது மனிதனின் கருத்துக்களில் கற்பனை தேவர்கள் வைத்திருந்த இடத்தை நீக்குகிறது, இதன் நிமித்தம் மனிதனின் இதயத்தில் கற்பனை தேவர்களின் உருவம் இனி இருக்காது. அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் உண்மையான கிரியை, எல்லா தேசங்களிலுமுள்ள அவரது செயல்பாடு மற்றும் மனிதர்களிடையே அவர் செய்யும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பான கிரியை ஆகியவற்றின் மூலம், அவர் தேவனுடைய யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் மனிதனின் இதயத்தில் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை நீக்குகிறார். மறுபுறம், மனிதனை முழுமையாக்குவதற்கும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் தேவன் தம்முடைய மாம்சத்தால் பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன:

1. தேவனுடைய கிரியையானது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, அதைப் பற்றிய கருத்துக்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

2. மாம்சமாகிய தேவன் இந்த நேரத்தில் செய்ய வந்திருக்கிற முக்கியமான கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தவோ, அல்லது பிசாசுகளைத் துரத்தவோ, அல்லது அற்புதங்களைச் செய்யவோ வரவில்லை, மேலும் மனந்திரும்புதலின் சுவிசேஷத்தை பரப்பவோ, அல்லது மனிதனுக்கு மீட்பை வழங்கவோ அவர் வரவில்லை. ஏனெனில், இயேசு ஏற்கனவே இந்தக் கிரியையைச் செய்துவிட்டார், மேலும் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை. இன்று, கிருபையின் யுகத்தினை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும், மற்றும் கிருபையின் யுகத்திலுள்ள அனைத்து நடைமுறைகளையும் துரத்தவுமே தேவன் வந்திருக்கிறார். நடைமுறை தேவன் அவர் உண்மையானவர் என்பதைக் காண்பிக்கவே முக்கியமாக வந்துள்ளார். இயேசு வந்தபோது, அவர் சில வார்த்தைகளைப் பேசினார்; அவர் முதன்மையாக அற்புதங்களைக் காண்பித்தார், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், இல்லையெனில் ஜனங்களை நம்ப வைக்கவும், அவர் உண்மையிலேயே தேவன்தான் என்பதையும், அவர் ஒரு உணர்ச்சிவசப்படாத அமைதியான தேவன் என்பதையும் காணும்படிக்கு தீர்க்கதரிசனங்களை உரைத்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்படுதல் என்னும் கிரியையையும் செய்து முடித்தார். இன்றைய தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பதில்லை, பிணியாளிகளைக் குணமாக்கி பிசாசுகளைத் துரத்துவதில்லை. இயேசு வந்தபோது, அவர் செய்த கிரியை தேவனின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது, ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்யவேண்டியதாயிருக்கிற கிரியையின் கட்டத்தைச் செய்யும்படிக்கு வந்திருக்கிறார், ஏனெனில் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை; அவர் எப்போதும் புதியவராக இருக்கிற தேவன், ஒருபோதும் பழையவர் அல்ல, ஆகவே இன்று நீ பார்ப்பது யாவும் நடைமுறை தேவனுடைய வார்த்தைகளும் கிரியையுமே ஆகும்.

கடைசி நாட்களில் மாம்சமான தேவன், அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விளக்குவதற்கும், மனிதன் பிரவேசிக்க வேண்டியதைச் சுட்டிக்காட்டுவதற்கும், தேவனுடைய செயல்களை மனிதனுக்குக் காண்பிப்பதற்கும், மனிதனுக்குத் தேவனுடைய ஞானம், சர்வவல்லமை மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காண்பிப்பதற்காகவும் முக்கியமாக வந்திருக்கிறார். தேவன் பேசுகிற பல வழிகளில், மனிதன் தேவனுடைய மேன்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், மேலும், தேவனுடைய தாழ்மையையும் மறைவான தன்மையையும் காண்கிறான். தேவன் உயர்ந்தவராக இருக்கிறார் என்பதை மனிதன் காண்கிறான், ஆனால் அவர் தாழ்மையுள்ளவராகவும் மறைக்கப்பட்டவராகவும் இருக்கிறார், மற்றும் எல்லாரிலும் சிறியவராக மாறக்கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய சில வார்த்தைகள் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து நேரடியாகவும், சில வார்த்தைகள் நேரடியாக மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், சில வார்த்தைகள் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசப்படுகின்றன. இதில், தேவனுடைய கிரியையின் முறையானது பெரிதும் மாறுபடுகிறது என்பதைக் காணலாம், மேலும் இதை வார்த்தைகள் மூலமாகத்தான் மனிதனைப் பார்க்கும் படிக்கு அவர் அனுமதிக்கிறார். கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, ஆகவே கடைசி நாட்களில் உள்ள ஜனக்கூட்டம் அனைத்து மாபெரும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தேவனுடைய இயல்பு நிலை மற்றும் யதார்த்தத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் பிரவேசித்திருக்கிறார்கள்; மனிதன் தேவனுடைய சோதனைகளில் இறங்கியிருப்பதற்கான காரணம் தேவனுடைய இயல்பு மற்றும் யதார்த்தமே ஆகும். இயேசுவின் யுகத்தில், எந்தவிதமான கருத்துக்களும் அல்லது சோதனைகளும் இல்லை. ஏனென்றால் இயேசு செய்த பெரும்பாலான கிரியைகள் மனிதனின் கருத்துக்களோடு ஒத்துப்போனதால், ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள், அவர்களுக்கு அவரைப் பற்றி எந்தக் கருத்துக்களும் இல்லை. மனிதன் எதிர்கொள்கிற இன்றைய சோதனைகள் மிகப் பெரியது, இந்த ஜனங்கள் பெரும் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படும் போது, குறிப்பிடப்படும் உபத்திரவம் இதுதான். இன்று, தேவன் இந்த ஜனங்களில் உண்டான விசுவாசம், அன்பு, துன்பத்தை ஏற்றுக்கொள்வது, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப் பேசுகிறார். கடைசி நாட்களில் மாம்சத்தில் வந்த தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் மனிதனின் சுபாவம் மற்றும் சாராம்சம், மனிதனின் நடத்தை மற்றும் இன்று மனிதன் பிரவேசிக்க வேண்டியவை ஆகியவற்றுக்கு ஏற்ப பேசப்படுகின்றன. அவரது வார்த்தைகள் உண்மையானவை மற்றும் இயல்பானவை: அவர் நாளைய தினத்தைப் பற்றி பேசுவதுமில்லை, நேற்றைய தினத்தைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை; இன்று பிரவேசிக்க வேண்டிய, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய, மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றை மட்டுமே அவர் பேசுகிறார். இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் கிரியையின் ஒரு கட்டத்தை முடித்ததும், அது தீய ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று தேவனுடைய கிரியையானது இயேசுவின் கிரியையிலிருந்து ஏன் வேறுபட்டதாய் இருக்கிறது? இன்று தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணமாக்காதது ஏன்? இயேசுவின் கிரியை நியாயப்பிரமாண யுகத்தின் போது செய்யப்பட்ட கிரியையை போலவே இருந்திருந்தால், அவர் கிருபையின் யுகத்தின் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? அவர் சிலுவையில் அறையப்பட்ட கிரியையைச் செய்து முடித்திருக்க முடியுமா? நியாயப்பிரமாண யுகத்தைப் போலவே, இயேசு தேவாலயத்திற்குள் பிரவேசித்து ஓய்வுநாளைக் கடைப்பிடித்திருந்தால், அவர் யாராலும் துன்புறுத்தப்படாமல் அனைவராலும் அரவணைக்கப்பட்டிருப்பார். அப்படியானால், அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்க முடியுமா? அவர் மீட்பின் கிரியையை முடித்திருக்க முடியுமா? கடைசி நாட்களில் மாம்சமாக வந்த தேவன் இயேசுவைப் போலவே அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பாரானால் என்ன பயன்? கடைசி நாட்களில் தேவன் தனது கிரியையின் மற்றொரு பகுதியைச் செய்தால் மட்டுமே, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராலேயே தேவனைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும், அப்போதுதான் தேவனுடைய நிர்வாகத் திட்டம் செய்து முடிக்கப்பட முடியும்.

கடைசி நாட்களின் போது, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்காக முக்கியமாக வந்திருக்கிறார். அவர் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்தும், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், மற்றும் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசுகிறார்; அவர் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார், ஒரு காலத்திற்கு ஒரு வழியைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனின் கருத்துக்களை மாற்றவும், கற்பனை தேவர்களின் உருவத்தை மனிதனின் இதயத்திலிருந்து அகற்றவும் அவர் பேசும் முறையைப் பயன்படுத்துகிறார். இதுதான் தேவனால் செய்யப்படுகிற முக்கியமான கிரியையாகும். பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும், மனிதனுக்கு உலகப்பிரகரமான பொருட்களின் ஆசீர்வாதங்களை வழங்கவும் தேவன் வந்திருக்கிறார் என்று மனிதன் நம்புவதால், இதுபோன்றவற்றை அகற்றுவதற்காக தேவன் இந்தக் கட்ட கிரியையை—அதாவது மனிதனின் கருத்துக்களிலிருந்து இந்தக் காரியங்களை நீக்குவதற்காகச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்—இதன்மூலம் தேவனுடைய யதார்த்தத்தையும் மற்றும் இயல்பான தன்மையையும் மனிதன் அறிந்துகொள்ளலாம், இயேசுவின் உருவம் அவனுடைய இருதயத்திலிருந்து அகற்றப்பட்டு, தேவனுடைய புதிய உருவத்தால் மாற்றப்படலாம். மனிதனுக்குள் தேவனுடைய உருவம் பழையதாக மாறியதும், அது ஒரு விக்கிரகமாக மாறுகிறது. இயேசு வந்து அந்தக் கட்ட கிரியையைச் செய்தபோது, அவர் தேவனை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், சில வார்த்தைகளைப் பேசினார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் தேவனுடைய ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எல்லாமுமாக இருக்கிற தேவனுடைய எல்லாவற்றையும் அவரால் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, மாறாக தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்வதில் அவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏனென்றால், தேவன் மிகவும் பெரியவர், அதிசயமானவர், அவர் புரிந்துகொள்ளப்பட முடியாதவர், ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் தம்முடைய கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறார். இந்த யுகத்தில் தேவன் செய்த கிரியை முக்கியமாக மனிதனின் வாழ்க்கைக்கான வார்த்தைகளை வழங்குவதாகும், மனிதனின் சுபாவம், சாராம்சம் மற்றும் அவனுடைய சீர்கெட்ட மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துதல், மேலும் மத கருத்துக்கள், பழமையான சிந்தனை, காலாவதியான சிந்தனை மற்றும் மனிதனின் அறிவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை நீக்குதல் ஆகும்; தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதன் மூலம் மனிதனின் அறிவும் கலாச்சாரமும் சுத்திகரிக்கப்பட வேண்டும். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்குத் தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை மாறாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதனை வெளிப்படுத்தவும், மனிதனை நியாயந்தீர்க்கவும், மனிதனை சிட்சிக்கவும், மனிதனை பரிபூரணமாக்கவும் அவர் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், இதனால் தேவனுடைய வார்த்தைகளில், மனிதன் தேவனுடைய ஞானத்தையும் அழகையும் காண்கிறான், மேலும் தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறான், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் மனிதன் தேவனின் செயல்களைக் காண்கிறான். நியாயப்பிரமாண யுகத்தின் போது, யேகோவா மோசேயை எகிப்திலிருந்து தனது வார்த்தைகளால் அழைத்துச் சென்றார், இஸ்ரவேலர்களிடம் சில வார்த்தைகளைப் பேசினார்; அந்த காலத்தில், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதி தெளிவுபடுத்தப்பட்டது, ஆனால் மனிதனின் திறமை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அவனுடைய அறிவை முழுமையாக்க எதுவும் செய்ய முடியாததினாலும், தேவன் தொடர்ந்து பேசினார் மற்றும் கிரியையைச் செய்தார். கிருபையின் யுகத்தில், மனிதன் தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியை மீண்டும் ஒரு முறைப் பார்த்தான். இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், சிலுவையில் அறையப்படவும் முடிந்தது, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு மனிதனுக்கு முன்பாக மாம்சத்தில் தோன்றினார். மனிதனுக்கு தேவனைப் பற்றி இதைவிட வேறு எதுவும் தெரியாது. தேவனால் மனிதனுக்கு எந்த அளவுக்குக் காண்பிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு மனிதனுக்குத் தெரியும், தேவன் மனிதனுக்கு ஒன்றும் காண்பிக்கவில்லை என்றால், அந்த அளவே தேவனைப் பற்றிய மனிதனின் வரம்பிடுதல் இருந்திருக்கும். இவ்வாறு, தேவன் தொடர்ந்து செயல்படுகிறார், இதனால் தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு ஆழமடையக்கூடும், இதனால் மனிதன் படிப்படியாகத் தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்ளலாம். கடைசி நாட்களில், தேவன் மனிதனைப் பரிபூரணமாக்க தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். உன் சீர்கெட்ட மனநிலையானது தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் உன் மதக் கருத்துக்கள் தேவனுடைய யதார்த்தத்தால் மாற்றப்படுகின்றன. கடைசி நாட்களில் மாம்சத்தில் அவதரித்த தேவன் “வார்த்தை மாம்சமாகிறது, வார்த்தை மாம்சத்தில் வருகிறது, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்கிறதான வார்த்தைகளை நிறைவேற்றவே முக்கியமாக வந்துள்ளார், இதைக் குறித்து உங்களுக்கு முழுமையான அறிவு இல்லையென்றால், பிறகு உங்களால் உறுதியாக நிற்கமுடியாமல் போகும். கடைசி நாட்களில், தேவன் முதன்மையாக ஒரு கட்ட வேலையை நிறைவேற்ற விரும்புகிறார், அதில் வார்த்தை மாம்சத்தில் தோன்றும், இது தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, உங்கள் அறிவு தெளிவாக இருக்க வேண்டும்; தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனிதன் தன்னை வரையறுக்க தேவன் அனுமதிக்கவில்லை. கடைசி நாட்களின் போது தேவன் இந்த கிரியையைச் செய்யவில்லை என்றால், அவரை பற்றிய மனிதனின் அறிவு மேலும் அதிகரித்துச் செல்ல முடியாது. தேவனால் சிலுவையில் அறையப்பட முடியும், சோதோமை அழிக்க முடியும் என்பதையும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பேதுருவுக்குத் தரிசனமாக முடியும் என்பதையும் மட்டுமே நீ அறியமுடியும். ஆனால் தேவனுடைய வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும், மனிதனை ஜெயங்கொள்ள முடியும் என்று நீ ஒருபோதும் சொல்ல மாட்டாய். தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே நீ அத்தகைய அறிவைப் பற்றிப் பேச முடியும், மேலும் நீங்கள் அனுபவிக்கும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு முழுமையாக அவரைப் பற்றிய உங்கள் அறிவு மாறும். அப்போதுதான் நீ உன் சொந்தக் கருத்துக்களுக்குள் தேவனை வரையறுப்பதை நிறுத்துவாய். மனிதன் தேவனுடைய கிரியையை அனுபவிப்பதன் மூலம் அறிந்துகொள்கிறான்; தேவனை அறிய வேறு சரியான வழி இல்லை. இன்று, அடையாளங்களையும் அதிசயங்களையும் பெரும் பேரழிவுகளின் காலத்தையும் காணக் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாத பலர் உள்ளனர். நீ தேவனை நம்புகிறாயா, அல்லது பெரிய பேரழிவுகளை நம்புகிறாயா? பெரிய பேரழிவுகள் வரும்போது அது மிகவும் தாமதமாகிவிடும், மேலும் பெரிய பேரழிவுகளை தேவன் அனுப்பவில்லை என்றால், அவர் பிறகு தேவன் இல்லை அல்லவா? நீ அடையாளங்களையும் அதிசயங்களையும் நம்புகிறாயா, அல்லது தேவனை நம்புகிறாயா? இயேசு மற்றவர்களால் பரியாசம் பண்ணப்பட்டபோது அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை, ஆனாலும் அவர் தேவனாக இல்லையா? நீ அடையாளங்களையும் அதிசயங்களையும் நம்புகிறாயா அல்லது தேவனுடைய சாராம்சத்தை நம்புகிறாயா? தேவன் மீதான விசுவாசம் பற்றிய மனிதனின் கருத்துக்கள் தவறானவை! நியாயப்பிரமாண யுகத்தில் யேகோவா பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் இன்றும் அவற்றில் சில இன்னும் நிறைவேறவேண்டியதாக இருக்கிறது. யேகோவா தேவனாயிருக்கவில்லை என்று நீ சொல்ல முடியுமா?

இன்று, உங்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனால் நிறைவேற்றப்பட்ட “வார்த்தை மாம்சமாகிறது” என்பதுதான் முக்கியமாக கடைசி நாட்களில் உண்மையாக இருக்கிறது. பூமியில் அவர் செய்த உண்மையான கிரியையின் மூலம், மனிதன் அவரை அறிந்து கொள்ளவும் அவருடன் ஈடுபடவும், மற்றும் அவருடைய உண்மையான செயல்களைக் காணவும் செய்கிறார். அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதையும், அவ்வாறு செய்ய முடியாத காலங்களும் உள்ளன என்பதை அவர் மனிதனைத் தெளிவாகக் காணும்படிச் செய்கிறார்; இது யுகத்தைப் பொறுத்தது. இதிலிருந்து, அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க தேவன் இயலாதவர் அல்ல என்பதை நீ கண்டுகொள்ளலாம், மாறாக செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்பவும், யுகத்திற்கு ஏற்பவும் அவர் செயல்படும் முறையை மாற்றுகிறார். தற்போதைய கிரியையின் கட்டத்தில், அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை; இயேசுவின் யுகத்தில் அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார், ஏனென்றால் அந்த யுகத்தில் அவருடைய கிரியை வேறுபட்டதாய் இருந்தது. தேவன் இன்று அந்தக் கிரியையைச் செய்யவில்லை, அவரால் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க இயலாது என்று சிலர் நம்புகிறார்கள், இல்லையென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்காவிட்டால், அவர் தேவன் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறானதல்லவா? தேவனால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடியும், ஆனால் அவர் வேறு யுகத்தில் கிரியை செய்கிறார், எனவே அவர் அத்தகைய கிரியையைச் செய்வதில்லை. ஏனென்றால் இது ஒரு வேறுபட்ட யுகம், இது தேவனுடைய கிரியையின் வேறுபட்ட கட்டமாக இருப்பதால், தேவனால் தெளிவுபடுத்தப்பட்ட செயல்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. தேவன் மீதான மனிதனின் நம்பிக்கை என்பது அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மீதான நம்பிக்கை அல்ல, அற்புதங்கள் மீதான நம்பிக்கையும் அல்ல, மாறாக புதிய யுகத்தில் அவருடைய உண்மையான கிரியையின் மீதான நம்பிக்கையாகும். தேவன் செயல்படும் முறையின் மூலம் மனிதன் தேவனை அறிந்துகொள்கிறான், இந்த அறிவு மனிதனில் தேவன் மீது விசுவாசத்தை ஏற்படுத்துகிறது, அதாவது தேவனுடைய கிரியை மற்றும் செயல்களில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்ட கிரியையில், தேவன் முக்கியமாகப் பேசுகிறார். அடையாளங்களையும் அதிசயங்களையும் காண காத்திருக்க வேண்டாம்; நீ எதையும் காண மாட்டாய்! ஏனென்றால், நீ கிருபையின் யுகத்தில் பிறக்கவில்லை. நீ கிருபையின் யுகத்தில் இருந்திருந்தால், நீ அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டிருக்கலாம், ஆனால் நீ கடைசி நாட்களில் பிறந்திருக்கிறாய், எனவே நீ தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் மட்டுமே காண முடியும். கடைசி நாட்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவைக் காண எதிர்பார்க்க வேண்டாம். எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபடாத மாம்சத்தில் வந்த நடைமுறை தேவனை மட்டுமே நீ காண முடியும். ஒவ்வொரு யுகத்திலும், தேவன் வெவ்வேறு செயல்களைச் செய்கிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவர் தேவனுடைய செயல்களின் தெளிவான பகுதியை உருவாக்குகிறார், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் உள்ள கிரியையானது தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியையும் குறிக்கிறது. அவர் செய்யும் செயல்கள் அவர் கிரியை செய்யும் யுகத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றன, ஆனால் அவை அனைத்தும் மனிதனுக்கு தேவனைப் பற்றிய ஆழமான அறிவைக் கொடுக்கின்றன, தேவன் மீதுள்ள விசுவாசம் உண்மையானது, மேலும் அது நடைமுறைக்கேற்றதாகும். தேவனுடைய எல்லா செயல்கள் நிமித்தமும் மனிதன் தேவனை விசுவாசிக்கிறான், ஏனென்றால் தேவன் மிகவும் அதிசயமானவர், மிகப் பெரியவர், ஏனென்றால் அவர் சர்வவல்லமையுள்ளவர், ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாதவர். தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்யக்கூடியவராகவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் கூடியவராக இருப்பதினால் நீ அவரை விசுவாசிக்கிறாய் என்றால், உன் பார்வை தவறானது, மேலும் சில ஜனங்கள் உன்னிடம், “அசுத்த ஆவிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூடுமல்லவா?” என்று கூறுவார்கள். இது தேவனுடைய உருவத்தைச் சாத்தானின் உருவத்துடன் குழப்பமடையச் செய்யவில்லையா? இன்று, தேவன் மீது மனிதன் விசுவாசம் வைப்பது அவருடைய பல கிரியைகளாலும், அவர் செய்யும் பெரும் காரியங்களாலும், அவர் பேசும் பல வழிகளாலும்தான். மனிதனை ஜெயங்கொண்டு அவனைப் பரிபூரணமாக்க தேவன் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதன் தேவனுடைய பல செயல்கள் நிமித்தம் அவரை விசுவாசிக்கிறான், அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதால் அல்ல; ஜனங்கள் தேவனுடைய செயல்களைக் காண்பதால் மட்டுமே அவரை அறிந்து கொள்கிறார்கள். தேவனுடைய உண்மையான செயல்கள், அவர் எவ்வாறு செயல்படுகிறார், அவர் என்னவிதமான ஞானமான முறைகளைப் பயன்படுத்துகிறார், எப்படி பேசுகிறார், மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—அதாவது அவர் எதை விரும்புகிறார், அவர் எதை வெறுக்கிறார், மற்றும் மனிதனின் மீது அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்கிறதான இந்த அம்சங்களை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—தேவனுடைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். தேவனுடைய விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீ நேர்மறையான மற்றும் எதிர்மறையானவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியும், மேலும் தேவனைப் பற்றிய உன் அறிவின் மூலம் உன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நீ தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவை அடைய வேண்டும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய உன்னுடைய பார்வைகளை நேராக வைக்க வேண்டும்.

முந்தைய: சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகும்

அடுத்த: மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக