அத்தியாயம் 13

தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அனைத்து சந்ததியினர்களையும் அருவருக்கிறார், மேலும் அவர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை இன்னும் அதிகமாக வெறுக்கிறார்: இது தேவனுடைய இருதயத்திற்குள் உள்ள கோபத்தின் ஆதாரமாக இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்குச் சொந்தமான அனைத்தையும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் எறிந்து சுட்டெரித்துப்போடும்படி தேவன் விரும்புகிறார் என்பதாகத் தெரிகிறது. தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைத் தனிப்பட்ட முறையில் அழித்துப்போடும்படி தமது கரத்தை நீட்ட விரும்புகிறார் என்று தோன்றும் சமயங்களும் உள்ளன—அது தான் அவரது இருதயத்தில் உள்ள கடுமையான வெறுப்பை நீக்க முடியும். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் மனிதத்தன்மை இல்லாத ஒரு மிருகமாய் இருக்கின்றனர், அதனால்தான் தேவன் தமது கோபத்தை வலுவாக அடக்கி பின்வருவனவற்றைச் சொன்னார்: “என்னுடைய எல்லா ஜனங்களுக்குள்ளும், என்னுடைய எல்லா குமாரர்களுக்குள்ளும், அதாவது, முழு மனித இனத்திலிருந்தும் நான் தெரிந்துகொண்டிருக்கிற, நீங்கள் மிகச் சிறிய கூட்டத்தினரைச் சேர்ந்தவர்களாவர்.” தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துடன் அதன் சொந்த நாட்டிலேயே இறுதி யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார், மேலும் அவருடைய திட்டம் பலனளிக்கும் போது, அவர் அதை அழித்துவிடுவார், மேலும் அது மனிதகுலத்தைச் சீர்கெடுக்கவோ அல்லது அவர்களின் ஆத்துமாக்களை அழிக்கவோ இனி அனுமதிக்க மாட்டார். உறங்கிக் கொண்டிருக்கும் ஜனங்களை இரட்சிக்கும்படி தேவன் ஒவ்வொரு நாளும் அவர்களைக் கூப்பிடுகிறார், ஆனால் அவர்கள் அனைவரும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டது போல் மயக்க நிலையில் இருக்கிறார்கள். தேவன் ஒரு கணம் கூட அவர்களை எழுப்புவதை நிறுத்திவிட்டால், அவர்கள் எல்லாவற்றையும் மறந்துபோனவர்களாய், தங்கள் தூக்க நிலைக்குத் திரும்புவார்கள். அவருடைய ஜனங்கள் அனைவரும் மூன்றில் இரண்டு பங்கு செயலிழந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் தங்கள் சொந்தத் தேவைகளையோ அல்லது தங்கள் சொந்தக் குறைபாடுகளையோ அறியாதவர்களாய் இருக்கிறார்கள், எதை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது ஜனங்களைச் சீர்கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பதைக் காட்ட இது போதுமானது. அதன் அசிங்கம் சீனாவின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியிருக்கிறது, மேலும் இந்தத் தரம் குன்றிய, மோசமான தேசத்தில் இனியும் இருக்க விரும்பாத ஜனங்களை இது சஞ்சலப்படுத்தியிருக்கிறது. தேவன் மிகவும் வெறுப்பது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சாராம்சத்தைத்தான், அதனால்தான் அவர், தம்முடைய கோபத்தில், ஒவ்வொரு நாளும் ஜனங்களுக்கு நினைவூட்டுகிறார், மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய கோபமான கண்ணின் கீழ் வாழ்கிறார்கள். அப்படியிருந்தும், பெரும்பாலான ஜனங்களுக்கு இன்னும் தேவனை தேடத் தெரியவில்லை; மாறாக, அவர்கள் அங்கே அமர்ந்து, பார்த்துக் கொண்டு, கையால் ஊட்டிவிடப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் பட்டினியால் மரிக்க வேண்டி இருந்தாலும், அவர்கள் தங்கள் உணவைத் தேட இன்னும் தயாராக மாட்டார்கள். மனுஷனுடைய மனச்சாட்சி நீண்ட காலத்திற்கு முன்பே சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, சாராம்சத்தில் இரக்கமற்ற ஒரு மனச்சாட்சியாக மாறிவிட்டது. “நான் உங்களை எழுப்பாமல் இருந்திருந்தால், நீங்கள் இன்னும் விழித்திருக்க மாட்டீர்கள், மாறாக உறைந்துபோனதைப் போலவும், மீண்டும் உறக்கநிலையில் இருப்பதைப் போலவும் இருந்திருப்பீர்கள்” என்று தேவன் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் விலங்குகளைப் போல, உணவு அல்லது பானத்திற்கான தேவையின்றி குளிர்காலத்தைக் கடந்து செல்கிறார்கள்; துல்லியமாக, இதுவே தேவனுடைய ஜனங்களின் தற்போதைய நிலையாக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, வெளிச்சத்தில் இருக்கிற மனுவுருவான தேவனையே ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று மட்டுமே தேவன் கோருகிறார்; ஜனங்கள் பெரிய அளவில் மாற வேண்டும் என்று அவர் கோருவதில்லை, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கோருவதில்லை. அசுத்தமானதும், இழிவானதுமான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைத் தோற்கடித்து, அதன் மூலம் தேவனுடைய மகத்தான வல்லமையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு இது போதுமானதாக இருக்கும்.

ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவற்றின் நேரடி அர்த்தத்தை மட்டுமே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் அவற்றின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். “கோரமான அலைகள்” என்ற சாதாரண வார்த்தைகள் ஒவ்வொரு கதாநாயகனையும் வெற்றியாளனையும் குழப்பிவிட்டன. தேவனுடைய உக்கிர கோபம் வெளிப்படும்போது, அவருடைய வார்த்தைகளும், செயல்களும், மனநிலையும் கோரமான அலைகளைப் போல இருக்கின்றன அல்லவா? தேவன் முழு மனிதகுலத்தையும் நியாயந்தீர்க்கும்போது, இது அவருடைய உக்கிர கோபத்தின் வெளிப்பாடாக இருக்கிறது அல்லவா? அந்தக் கோரமான அலைகள் ஆற்றலுடன் வரும் காலம் இதுவல்லவா? அவர்களது சீர்கேட்டின் நிமித்தமாக, இத்தகைய கோரமான அலைகளுக்கு மத்தியில் மனுஷர்களில் யார் வாழாமல் இருக்கிறார்கள்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய உக்கிர கோபத்திற்கு மத்தியில் வாழாதவன் யார்? தேவன் மனித குலத்தின் மீது பேரழிவை அனுப்ப விரும்பும்போது, அது ஜனங்கள் “கார்மேகங்களின் சுவடுகளைப்” பார்க்கும் நேரமாக இருக்காதா? பேரழிவில் இருந்து தப்பிச் செல்லாமல் இருப்பவன் யார்? தேவனுடைய உக்கிர கோபமானது கனமழையைப் போலப் பொழிகிறது, பலத்த காற்றைப் போல ஜனங்களை அடித்துச் செல்லுகிறது. சுழலும் பனிப்புயலைச் சந்தித்ததைப் போல் ஜனங்கள் அனைவரும் தேவனுடைய வார்த்தைகளால் சுத்திகரிக்கப்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மனிதகுலம் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானவைகளாய் இருக்கின்றன. தம்முடைய வார்த்தைகள் மூலமாக, அவர் உலகத்தைச் சிருஷ்டித்தார், தம்முடைய வார்த்தைகள் மூலமாக அவர் முழு மனிதகுலத்தையும் வழிநடத்துகிறார் மற்றும் சுத்திகரிக்கிறார். இறுதியில், தேவன் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக முழுப் பிரபஞ்சத்தையும் சுத்திகரிக்கும்படி மீட்டுக்கொள்வார். தேவனுடைய ஆவியானவர் இருப்பது பொய்யானது அல்ல என்பதை அவர் சொல்கிற எல்லாவற்றிலும் காணலாம், மேலும் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதைப் பற்றிய பார்வையை அவரது வார்த்தைகளிலிருந்து மட்டுமே ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். எல்லா ஜனங்களும் அவருடைய வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள், ஏனென்றால் அவை வாழ்க்கைக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. எவ்வளவு அதிகமாக ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவன் அவர்களிடம் கேள்விகளை கேட்கிறார்—அதாவது, அவர்களைக் குழம்பச் செய்து, பதில் சொல்ல வாய்ப்பில்லாமல் போகும்படி செய்கிறார். தேவனுடைய மீதமுள்ள வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், தேவனுடைய தொடர்ச்சியான கேள்விகள் மட்டுமே ஜனங்கள் சிறிது நேரம் சிந்திப்பதற்குப் போதுமானவையாக இருக்கின்றன. தேவனில், அனைத்தும் உண்மையிலேயே நிறைவாகவும் ஏராளமாகவும் இருக்கின்றன, மேலும் ஒன்றுக்கும் குறைவில்லை. இருப்பினும், ஜனங்களால் அவற்றில் அநேகமானவற்றை அனுபவிக்க முடிவதில்லை; கோழியின் தோலைப் பார்த்தாலும், அதன் இறைச்சியை உண்ண முடியாதவனைப் போல, அவருடைய வார்த்தைகளானது மேலோட்டமாக மட்டுமே அவர்களுக்குத் தெரியும். தேவனை அனுபவிக்க முடியாத அளவுக்கு ஜனங்கள் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். ஒவ்வொரு நபரும் தங்களது கருத்துக்களில், தேவனைக் குறித்த தங்களது சொந்தக் கருத்தை வைத்திருக்கின்றனர், அதனால்தான், கண்ணுக்குப் புலப்படாத தேவன் எப்படிப்பட்டவர் என்றும், சாத்தானின் உருவம் எப்படிப்பட்டது என்றும் யாருக்கும் தெரியாது. ஆகவே, “ஏனென்றால் நீ நம்புவது சாத்தானின் உருவம் மட்டுமே, தேவனுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தேவன் சொன்னபோது, அனைவரும் ஊமையாகிவிட்டனர்: அவர்கள் அநேக வருஷங்களாக விசுவாசம் கொண்டிருந்தனர், ஆனாலும், அவர்கள் நம்பியது சாத்தான், தேவன் அல்ல என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் திடீரென்று உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்ந்தார்கள், ஆனால் என்ன சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர் அவர்கள் மீண்டும் குழப்பமடையத் துவங்கினர். இவ்வாறு கிரியை செய்வதால் மட்டுமே, ஜனங்களால் புதிய ஒளியை நன்றாக ஏற்றுக்கொள்ளவும், அதன் மூலம் பழைய விஷயங்களை மறுக்கவும் முடியும். அந்த விஷயங்கள் எவ்வளவு நல்லது என்று தோன்றினாலும், அவைகளால் பயனில்லை. நடைமுறை தேவனையே புரிந்துகொள்வதுதான் ஜனங்களுக்கு அதிக நன்மை பயக்கும்; இது அவர்களின் கருத்துக்கள் பிடித்துவைத்திருக்கிற நிலையிலிருந்து அவர்களது இருதயங்கள் விடுபட உதவுகிறது, மேலும் தேவன் மட்டுமே அவர்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறது. இந்த வழியில் மட்டுமே மனுவுருவாதலின் முக்கியத்துவத்தை அடைய முடியும், இது ஜனங்கள் நடைமுறை தேவனைத் தங்கள் மாம்சீகக் கண்களால் அறிந்துகொள்ள உதவுகிறது.

ஆவிக்குரிய உலகத்தின் நிலைமையைப் பற்றி தேவன் பலமுறை ஜனங்களுக்கு இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “சாத்தான் என் முன் வரும்போது, நான் அதன் மூர்க்கத்தனத்திலிருந்து பின்வாங்குவதுமில்லை, அதன் கொடூரத்தைக் கண்டு நான் பயப்படுவதுமில்லை: நான் அதை வெறுமனே புறக்கணிக்கிறேன்.” இதிலிருந்து ஜனங்கள் புரிந்துகொண்டது ஒரு யதார்த்த நிலை மட்டுமேயாகும்; ஆவிக்குரிய உலகத்தைப் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாது. தேவன் மாம்சமாகியிருப்பதால், தேவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணி, சாத்தான் எல்லாவிதமான குற்றச்சாட்டையும் பயன்படுத்துகிறான். எனினும், தேவன் பின்வாங்குவதில்லை; அவர் வெறுமனே மனிதகுலத்தின் மத்தியில் பேசுகிறார் மற்றும் கிரியை செய்கிறார், தம்முடைய மனுவுருவான மாம்சத்தின் மூலம் தம்மை அறிய ஜனங்களை அனுமதிக்கிறார். இதைப் பார்த்து சாத்தான் சீற்றத்தால் சிவந்த கண்களுடன் காணப்படுகிறான், மேலும் தேவனுடைய ஜனங்களை எதிர்மறையாக ஆக்குவதற்கும், பின்வாங்கச் செய்வதற்கும், தங்கள் வழியை இழந்துபோகச் செய்வதற்கும் அதிக முயற்சியை மேற்கொண்டிருக்கிறான். இருப்பினும், தேவனுடைய வார்த்தைகளின் விளைவால், சாத்தான் முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறான், இது அதனுடைய மூர்க்கத்தனத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, தேவன், “உங்கள் வாழ்க்கையில், நீ இத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கும் ஒரு நாள் வரலாம்: நீ சாத்தானைச் சிறைபிடிக்க உன்னை மனமுவந்து அனுமதிப்பாயா அல்லது உன்னைப் பெற என்னை அனுமதிப்பாயா?” என்று அனைவருக்கும் நினைவூட்டுகிறார். ஆவிக்குரிய உலகில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து ஜனங்கள் அறிந்திருக்கவில்லை என்றாலும், தேவனிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், அவர்கள் எச்சரிக்கையுடனும் பயத்துடனும் இருக்கிறார்கள். இது சாத்தானின் தாக்குதல்களை முறியடித்து, தேவனுடைய மகிமையைக் காட்ட போதுமானதாகும். நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு புதிய கிரியைக்கான வழிமுறைக்குள் பிரவேசித்திருந்தாலும், ஜனங்கள் இன்னும் ராஜ்யத்தின் வாழ்க்கையைப் பற்றி தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் அதைப் புரிந்து கொண்டாலும், அவர்களுக்கு அதைக் குறித்த தெளிவு இல்லை. எனவே, ஜனங்களுக்கு ஓர் எச்சரிக்கையை வழங்கிய பிறகு, தேவன் ராஜ்யத்தில் இருக்கிற வாழ்க்கையின் சாராம்சத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்: “ராஜ்யத்தில் இருக்கிற வாழ்க்கை என்பது ஜனங்களின் வாழ்க்கை மற்றும் தேவனையே குறிக்கிறது.” தேவன் தாமே மாம்சத்தில் மனுவுருவாகியிருப்பதால், மூன்றாம் வானத்தின் வாழ்க்கையானது பூமியில் உணரப்பட்டிருக்கிறது. இது தேவனுடைய திட்டமாக மட்டுமே இல்லை—அவர் அதை நிறைவேற்றியிருக்கிறார். காலம் செல்லச் செல்ல, ஜனங்கள் தேவனைப் பற்றி நன்கு அறிந்து கொள்கிறார்கள், இதனால் அவர்களால் பரலோக வாழ்க்கையை அதிகமாக ருசிக்க முடிகிறது, ஏனென்றால், தேவன் பரலோகத்தில் கண்ணுக்குப் புலப்படாதவராய் இருப்பதை விட, பூமியில் இருக்கிறார் என்பதை அவர்கள் உண்மையாக உணர்கிறார்கள். எனவே, பூமியின் மீதான வாழ்க்கையானது பரலோகத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறது. உண்மை என்னவென்றால், மனுவுருவான தேவன் மனித உலகின் கசப்பைச் சுவைக்கிறார், மேலும் அவரால் எவ்வளவு அதிகமாக அவ்வாறு செய்ய முடிகிறதோ, அவ்வளவு அதிகமாக அவரே நடைமுறை தேவன் என்பதை அது நிரூபிக்கிறது. எனவே, “நான் மறைந்திருக்கும் இடமாகிய என் வாசஸ்தலத்திலே—ஆயினும், என் வாசஸ்தலத்திலே, நான் என் சத்துருக்கள் யாவரையும் தோற்கடித்துவிட்டேன்; என் வாசஸ்தலத்திலே, நான் பூமியில் வாழும் உண்மையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்; என் வாசஸ்தலத்திலே, நான் மனுஷனின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் கவனித்து வருகிறேன், மேலும் மனித இனம் முழுவதையும் கண்காணித்து நடத்துகிறேன்” என்ற வார்த்தைகள் இன்றைய தேவன் நடைமுறைக்குரியவர் என்ற உண்மையை நிரூபிக்க போதுமான சான்றாக இருக்கின்றன. உண்மையில் மாம்சத்தில் வாழ்வது, உண்மையில் மாம்சத்தில் மனித வாழ்க்கையை அனுபவிப்பது, உண்மையில் மாம்சத்தில் முழு மனிதகுலத்தையும் புரிந்துகொள்வது, உண்மையில் மாம்சத்தில் மனிதகுலத்தின் மீது ஜெயங்கொள்வது, உண்மையில் மாம்சத்தில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராக ஓர் இறுதி யுத்தத்தை நடத்துவது மற்றும் மாம்சத்தில் தேவனுடைய அனைத்துக் கிரியைகளையும் செய்வது—இது நடைமுறை தேவன் இருக்கிறார் என்பதற்கானதல்லவா? ஆனாலும் தேவனால் உரைக்கப்பட்ட இந்தச் சாதாரண வரிகளில் முக்கியமான கருத்தைப் பார்ப்பவர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள்; அவர்கள் வெறுமனே அவற்றைக் கடந்து செல்கிறார்கள், மேலும் தேவனுடைய வார்த்தைகளின் விலையேறப்பெற்ற தன்மையையோ அல்லது விசேஷ தன்மையையோ உணர்வதில்லை.

குறிப்பாக தேவனுடைய வார்த்தைகள் சிறப்பாக மாறுகின்றன. “மனிதகுலம் மயக்க நிலையில் கிடப்பதைப் போல” என்ற சொற்றொடர், தேவனைப் பற்றிய விளக்கத்தை எடுத்து, முழு மனிதகுலத்தினுடைய நிலையின் விளக்கமாக மாற்றுகிறது. இங்கே, “குளிர்ந்த பிரகாசத்தின் ஊடுருவல்” என்பது கிழக்கத்திய மின்னலைக் குறிப்பதில்லை; மாறாக, இது தேவனுடைய வார்த்தைகளைக் குறிக்கிறது, அதாவது அவருடைய புதிய கிரியை செய்யும் வழிமுறையைக் குறிக்கிறது. எனவே, ஒருவனால் இதில் மனுஷனுடைய எல்லாவிதமான ஆற்றலையும் காண முடியும்: புதிய வழிமுறைக்குள் பிரவேசித்த பிறகு, எல்லா ஜனங்களும் தங்கள் திசையைக் குறித்த அறிவை இழந்து போகிறார்கள், மேலும் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள், மேலும் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. “பெரும்பாலான ஜனங்கள் லேசர் போன்ற கற்றைகளால் தாக்கப்படுகிறார்கள்” என்பது புதிய முறையில் புறம்பாக்கப்படுபவர்களைக் குறிக்கிறது; அவர்கள் உபத்திரவங்களில் நிலை நிற்க முடியாதவர்களாகவும், துன்பத்தின் புடமிடுதலைத் தாங்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள், எனவே மீண்டும் ஒருமுறை பாதாளத்தில் தள்ளப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் காணும்போது பயப்படுகிற அளவிற்கு தேவனுடைய வார்த்தைகள் மனிதகுலத்தை வெளிப்படுத்துகின்றன, மேலும், அவர்கள் ஓர் இயந்திர துப்பாக்கியானது தங்கள் இருதயத்தை நோக்கி குறிவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததைப் போல, அவர்கள் எதையும் சொல்லத் துணிய மாட்டார்கள். இருப்பினும், தேவனுடைய வார்த்தைகளில் நல்ல விஷயங்கள் இருப்பதாகவும் அவர்கள் உணர்கிறார்கள். அவர்களின் இருதயங்களில் பெரும் போராட்டம் காணப்படுகிறது, மேலும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். இருப்பினும், அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக, தேவன் தங்களைக் கைவிட்டுவிடுவாரோ என்ற பயத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே உருக்கிக்கொண்டு அவருடைய வார்த்தைகளை ஆழமாக ஆராய்கின்றனர். “மனுஷர்களில் யார் இந்த நிலையில் இல்லை? என் வெளிச்சத்திற்குள் வாழாதவன் யார்? நீ பலமுள்ளவனாக இருந்தாலும், அல்லது நீ பலவீனமானவனாக இருந்தாலும், என்னுடைய வெளிச்சத்தின் வருகையை நீ எவ்வாறு தவிர்க்க முடியும்?” என்று தேவன் சொன்னது போல், தேவன் ஒருவனைப் பயன்படுத்தினால், அவர்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் கூட, தேவன் இன்னும் தமது சிட்சையின் மூலம் அவர்களை ஒளிரச் செய்து பிரகாசிப்பிப்பார்; எனவே, எவ்வளவு அதிகமாக ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரைப் புரிந்துகொள்கிறார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை ஆராதிக்கிறார்கள், மேலும் அவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கத் துணிவதில்லை. ஜனங்கள் இன்று அவர்கள் இருக்கும் நிலைக்கு வந்திருப்பது முழுக்க முழுக்க தேவனுடைய மகத்தான வல்லமையால்தான் ஆகும். அது அவருடைய வார்த்தைகளின் அதிகாரத்தின் நிமித்தமாகவேயாகும்—அதாவது, இது அவருடைய வார்த்தைகளில் உள்ள ஆவியானவரின் பலனாக இருக்கிறது, அதாவது—ஜனங்கள் தேவனுக்குப் பயப்படுகிறார்கள். தேவன் மனுஷர்களுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் போது, அவர் மீதான அவர்களின் பிரமிப்பு அதிகரிக்கிறது, இதனால் அவர்கள் அவர் இருக்கிறார் என்ற உண்மைத்தன்மையைக் குறித்து இன்னும் அதிக நிச்சயமுள்ளவர்களாகிறார்கள். இது தேவன் மனுதகுலத்திற்கு வழங்கியிருக்கிற உபத்திரவமாகிய தேவனைப் புரிந்துகொள்வதற்கான அவர்களின் பாதையில் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கிறது. இதைக் குறித்து கவனமாக சிந்தியுங்கள்: இது அப்படித்தான் அல்லவா?

மேலே சொல்லப்பட்டவைகள் மனிதகுலத்திற்கு முன்பாக இருக்கிற, அவனது பாதையை வெளிச்சமாக்குகிறதான கலங்கரை விளக்கமாக இருக்கின்றன அல்லவா?

முந்தைய: அத்தியாயம் 12

அடுத்த: அத்தியாயம் 14

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக