அத்தியாயம் 11

மனுஷனின் வெளிப்படையான கண்ணுக்கு, இந்தக் காலகட்டத்தில் தேவனுடைய வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதாகத் தோன்றுகிறது, ஏனென்றால், தேவன் பேசும் விதிமுறைகளை ஜனங்கள் கிரகித்துக்கொள்ள இயலாதவர்களாயும், அவருடைய வார்த்தைகளின் சூழலைப் புரிந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகு, இந்த வார்த்தைகளில் புதிய இரகசியங்கள் எதுவும் இருப்பதாக ஜனங்கள் நம்புவதில்லை; இதனால், அவர்கள் அசாதாரணமான புதிய வாழ்க்கையை நடத்த இயலாதவர்களாய் இருக்கிறார்கள், மாறாக மந்தமான மற்றும் ஜீவனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தைகளில், ஆழமான அர்த்தம் இருப்பதை நாம் காண்கிறோம், அது மனுஷனால் புரிந்துகொள்ள முடியாத மற்றும் அடைய முடியாத ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு மனுஷனுக்கு இப்படிப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும் பாக்கியம் கிடைத்ததே எல்லா பாக்கியங்களிலும் மிகப் பெரிய பாக்கியமாய் இருக்கிறது. இந்த வார்த்தைகளை யாரும் வாசிக்கவில்லை என்றால், மனுஷன் என்றென்றும் கர்வம் கொண்டவனாக, சுயநீதியுள்ளவனாக, தன்னைப் பற்றி அறியாதவனாக, மற்றும் தனக்கு எத்தனை தோல்விகள் உள்ளன என்பதை அறியாதவனாக இருப்பான். தேவனுடைய ஆழமான, புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளை வாசித்த பிறகு, ஜனங்கள் அவற்றை இரகசியமாகப் போற்றுகிறார்கள், மேலும் அவர்களின் இருதயங்களில் பொய்யால் கறைபடாத உண்மையான நம்பிக்கை காணப்படுகிறது; அவர்களின் இருதயங்கள் உண்மையான பொருளாக மாறும், கள்ளப் பொருட்களாக அல்ல. இதுதான் உண்மையில் ஜனங்களுடைய இருதயத்தில் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் தங்களது இருதயத்தில் தங்களது சொந்தக் கதையை வைத்திருப்பார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வது போல் இருக்கிறது: “பெரும்பாலும் இது தேவனால் சொல்லப்பட்டிருக்கலாம்—தேவன் இல்லையென்றால், வேறு யாரால் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேச முடியும்? நான் ஏன் அவைகளைப் பற்றி பேசக் கூடாது? நான் ஏன் அத்தகைய கிரியையைச் செய்ய இயலாதிருக்கிறேன்? மனுவுருவான தேவனாகிய தேவனானவர் மெய்யாகவே பேசுபவைகள் உண்மையாய் இருக்கின்றன, மேலும் அவரே தேவனாக இருக்கிறார் என்பதாகத் தோன்றுகிறது! நான் இனி சந்தேகப்பட மாட்டேன். இல்லையெனில், தேவனுடைய கரமானது வரும்போது, வருந்துவதற்கு மிகவும் தாமதமாகிவிடும்! …” இதைத்தான் பெரும்பாலான ஜனங்கள் தங்கள் இருதயங்களில் நினைக்கிறார்கள். தேவன் பேசத் தொடங்கியதிலிருந்து இன்று வரை எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளின் ஆதரவில்லாமல் வீழ்ந்திருக்கக் கூடும் என்று சொல்வது நியாயமானதுதான். இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனால் மட்டுமே செய்யப்படுகின்றன, மனுஷனால் அல்ல என்று ஏன் கூறப்படுகிறது? திருச்சபையின் வாழ்க்கையை ஆதரிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றால், எல்லோரும் தடயமே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். இது தேவனுடைய வல்லமையல்லவா? இது உண்மையிலேயே மனுஷனின் பேச்சாற்றலா? இது மனுஷனின் தனித் திறமையா? முற்றிலும் இல்லை! வெட்டவில்லை என்றால், அவர்களின் நரம்புகளில் என்ன வகையான இரத்தம் ஓடுகிறது என்பதை ஒருவரும் அறியார்கள், அவர்களுக்கு எத்தனை இருதயங்கள் உள்ளன, எத்தனை மூளைகள் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்கள் அனைவரும் தேவனை அறிந்திருப்பதாக நினைப்பார்கள். அவர்களின் அறிவுக்குள் இன்னும் எதிர்ப்பு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாதா? “மனிதகுலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் என் ஆவியால் ஆராயப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் உன்னிப்பாக ஆராய வேண்டும், மேலும், எனது அதிசய செயல்களையும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்” என்று தேவன் கூறுவதில் ஆச்சரியமில்லை. தேவனுடைய வார்த்தைகள் நோக்கமற்றவையாகவும் அடிப்படையற்றவையாகவும் இருப்பதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். தேவன் எந்த மனுஷனையும் அநியாயமாக நடத்தியிருக்கவில்லை; யோபு கூட தனது முழு நம்பிக்கையுடனும் இருந்து கைவிடப்படவில்லை—அவனும் துண்டிக்கப்பட்டான், மற்றும் அவனது அவமானத்திலிருந்து மறைந்துகொள்ள எங்கும் இடமில்லாதிருந்தது. மேலும் இன்றைய ஜனங்களைப் பற்றி சொல்வதற்கென்று எதுவும் இல்லை. ஆகவே, தேவன்: “ராஜ்யம் பூமிக்கு வரும் நேரத்தில் அதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று உடனடியாகக் கேட்கிறார். தேவனுடைய கேள்வி சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் அது ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது: “நாங்கள் என்ன உணர்கிறோம்? ராஜ்யம் எப்போது வரும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, எனவே உணர்வுகளைப் பற்றி எங்களால் எப்படிப் பேச முடியும்? மேலும் என்னவென்றால், எங்களிடம் எந்தத் துப்பும் இல்லை. நான் எதையாவது உணர வேண்டும் என்றால், அது ‘வியப்பாக இருக்கும்,’ வேறு ஒன்றுமில்லை.” உண்மையில், இந்தக் கேள்வி தேவனுடைய வார்த்தைகளின் நோக்கம் அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, “என் புத்திரர்களும் மக்களும் என் சிங்காசனத்தை நோக்கி விரைந்து வரும்போது, பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன்பாக நான் முறையாக நியாயத்தீர்ப்பைத் தொடங்குகிறேன்”—என்ற இந்த ஒற்றை வாக்கியம் முழு ஆவிக்குரிய உலகத்தின் வளர்ச்சிகளையும் சுருக்கமாகக் கூறுகிறது. இந்தக் காலத்தில் தேவன் ஆவிக்குரிய உலகில் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது, தேவன் இந்த வார்த்தைகளைப் பேசிய பிறகுதான் ஜனங்களில் ஒரு சிறிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தேவனுடைய கிரியையில் வெவ்வேறு படிகள் இருப்பதால், பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய கிரியையும் மாறுபடுகிறது. இந்த நேரத்தில், தேவன் முக்கியமாக தேவனுடைய குமாரர்களையும் ஜனங்களையும் இரட்சிக்கிறார், அதாவது, தேவதூதர்களால் மேய்க்கப்பட்டு, தேவனுடைய குமாரர்களும் ஜனங்களும் கையாளப்படுவதையும் உடைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள், அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் அகற்றவும், மற்றும் இந்த உலகத்தின் எந்தத் தடயத்திலிருந்தும் விடைபெற்றுக்கொள்ளவும் தொடங்குகிறார்கள்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் சொல்லப்பட்ட “பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன்பாக நியாயத்தீர்ப்பு” அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்பதால், தேவன் தமது குரலை உச்சரிக்க வேண்டும்—உள்ளடக்கம் மாறுபடும் என்றாலும், நோக்கம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இன்று, தேவன் பேசும் தொனியில் இருந்து ஆராயும்போது, அவருடைய வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு உரைக்கப்படுவதாகத் தெரிகிறது. உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வார்த்தைகள் முழு மனிதகுலத்தின் சுபாவத்தைப் பற்றி பேசுகின்றன. அவை மனுஷனின் முதுகுத் தண்டுவடத்தை நேரடியாக வெட்டுகின்றன, அவை மனுஷனின் உணர்வுகளை விட்டுவைக்கவில்லை, மேலும் அவை எதையும் விட்டுவிடாமல், எதையும் அதன் வழியே அனுமதிக்காமல், அவனது சாராம்சத்தை முழுவதுமாக வெளிப்படுத்துகின்றன. எனவே, இன்று முதல், தேவன், “என் ஆவியின் சத்தத்தை முழு பிரபஞ்சத்திற்கும் வெளியிடுகிறேன்” என்று, மனுஷனின் உண்மையான முகத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார். இறுதியில் அடையப்படும் பலன் இதுதான்: “பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜனங்களையும் பொருட்களையும், என் வார்த்தைகளின் மூலம் நான் சுத்தமாகக் கழுவுவேன், இதனால் பூமியானது இனிமேல் அசுத்தமாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இல்லாமல் ஒரு பரிசுத்த ராஜ்யமாக இருக்கும்.” இந்த வார்த்தைகள் முற்றிலும் கிறிஸ்துவினுடைய ராஜ்யமாய் இருக்கிற, ராஜ்யத்தின் எதிர்காலத்தை முன்வைக்கின்றன, தேவன் கூறியது போல், “அனைத்தும் நல்ல கனிகளாய், அனைவரும் கடினமாக உழைக்கிற விவசாயிகளாய் இருக்கிறார்கள்.” இயற்கையாகவே, இது பிரபஞ்சம் முழுவதும் நிகழும், மேலும் இது சீனாவிற்கு மட்டுமேதான் என்று இருக்காது.

தேவன் பேசவும் செயல்படவும் தொடங்கும் போதுதான் ஜனங்கள் தங்கள் எண்ணங்களில் அவரைப் பற்றி சிறிது அறிவைப் பெற்றிருப்பார்கள். ஆரம்பத்தில், இந்த அறிவு அவர்களின் கருத்துக்களில் மட்டுமே காணப்படுகிறது, ஆனால் காலப்போக்கில், ஜனங்களின் எண்ணங்கள் மிகவும் பயனற்றவையாகவும் மற்றும் மனுஷ பயன்பாட்டிற்குத் தகுதியற்றவையாகவும் இருக்கின்றன; இவ்வாறு, அவர்கள் “நடைமுறை தேவனுக்கு அவர்களின் பிரக்ஞையில் ஓர் இடத்தை உருவாக்குகிற” அளவிற்கு தேவன் சொல்வதையெல்லாம் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஜனங்கள் நடைமுறைத் தேவனுக்கு தங்களது உணர்வில் மட்டுமே இடத்தைக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், உண்மையில், அவர்கள் தேவனை அறிவதில்லை, மற்றும் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் பேசுவதுமில்லை. இன்னும் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், அவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர், இருப்பினும், நடைமுறைத் தேவனிடமிருந்து இன்னும் பெரிய வித்தியாசம் உள்ளது. “ஒவ்வொரு நாளும் நான் இடைவிடாமல் பாயும் ஜனங்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நடக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நபருக்குள்ளும் செயல்படுகிறேன்” என்று தேவன் ஏன் எப்போதும் கூறுகிறார்? இத்தகைய விஷயங்களை தேவன் எவ்வளவு அதிகமாகக் கூறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜனங்கள் அவற்றை இன்றைய நடைமுறைத் தேவனுடைய செயல்களுடன் ஒப்பிட முடியும், எனவே அவர்கள் உண்மையில் நடைமுறைத் தேவனை நன்கு அறிந்து கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தைகள் மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து பேசப்படுவதாலும், மனுஷனுடைய மொழியைப் பயன்படுத்தி பேசப்படுவதாலும், ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை பொருள்சார்ந்த விஷயங்களுக்கு எதிராக அளவிடுவதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது, அதன் மூலம் அதிக பலன் அடையப்படுகிறது. அதோடு கூட, தேவன் மீண்டும் மீண்டும் ஜனங்களின் இருதயங்களில் உள்ள “நான்” என்ற சாயலைப் பற்றியும், மற்றும் யதார்த்தத்தில் “நான்” என்பது பற்றியும் பேசுகிறார், இது தங்கள் இருதயங்களில் கொண்டிருக்கிற தேவனுடைய சாயலை சுத்தப்படுத்துவதற்கு ஜனங்களை அதிக விருப்பமுடையவர்களாகவும், மேலும் நடைமுறைத் தேவனை அறிந்து, அவருடன் இணைந்துகொள்ள விருப்பமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது. இதுவே தேவனுடைய வார்த்தைகளின் ஞானம். இத்தகைய விஷயங்களை தேவன் எவ்வளவு அதிகமாகக் கூறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவுக்கு நன்மை கிடைக்கும், மேலும் தேவன், “நான் மாம்சமாக மாறாவிட்டால், மனிதன் என்னை ஒருபோதும் அறியமாட்டான், அவன் என்னை அறிய நேர்ந்தாலும்கூட, அத்தகைய அறிவு அப்போதும் ஓர் எண்ணமாக இருக்காதா?” என்று கூறுகிறார். உண்மையில், ஜனங்கள் தங்கள் சொந்த எண்ணங்களின்படி தேவனை அறிந்து கொள்ள வேண்டியிருந்தால், அது அவர்களுக்கு எளிதாக இருக்கும்; அவர்கள் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள், இதனால் தேவன் ஜனங்களின் இருதயங்களில் என்றென்றும் தெளிவற்றவராகவும் நடைமுறையில்லாதவராகவும் இருப்பார், இது, தேவன் அல்ல, சாத்தானே முழு பிரபஞ்சத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதை நிரூபிக்கும்; இதனால், “என் வல்லமையை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன்” என்ற தேவனுடைய வார்த்தைகள் என்றென்றும் வெறுமையானவையாக இருக்கும்.

தெய்வீகத்தன்மை நேரடியாக செயல்படத் தொடங்கும் நேரமே, ராஜ்யம் அதிகாரப்பூர்வமாக மனுஷனுடைய உலகத்தில் இறங்கும் நேரமாக இருக்கிறது. ஆனால் இங்கு சொல்லப்படுவது என்னவென்றால், மனுஷரிடையே இறங்குகிற ராஜ்யமானது, மனுஷரிடையே உருவெடுக்கிற ராஜ்யம் என்பதல்ல—இவ்வாறு இன்று பேசப்படுவது ராஜ்ஜியத்தின் கட்டுமானமாக இருக்கிறது, அது எப்படி உருவெடுக்கிறது என்பது அல்ல. தேவன் ஏன், “எல்லாமே அமைதியாகிவிடும்” என்று எப்போதும் கூறுகிறார்? எல்லா விஷயங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, அசைவற்று நின்றுவிட முடியுமா? பெரிய மலைகள் உண்மையிலேயே அமைதியாகிவிடுமோ? அப்படியென்றால், ஏன் ஜனங்கள் இதைப் பற்றிய உணர்வைப் பெற்றிருக்கவில்லை? தேவனுடைய வார்த்தை தவறாக இருக்க முடியுமா? அல்லது தேவன் மிகைப்படுத்துகிறாரா? தேவன் செய்யும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் மேற்கொள்ளப்படுவதால், அதை யாரும் அறிந்திருப்பதில்லை அல்லது தங்கள் சொந்தக் கண்களால் உணர முடிவதில்லை, மேலும் ஜனங்களால் செய்யக்கூடியதெல்லாம் தேவன் பேசுவதைக் கேட்பது மட்டுமே ஆகும். தேவன் மகத்துவத்துடன் செயல்படுவதால், தேவன் வரும்போது, வானத்திலும் பூமியிலும் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது போல் உள்ளது; மற்றும், இந்தத் தருணத்தை அனைவரும் பார்க்கிறார்கள் என்று தேவனுக்குத் தோன்றுகிறது. இன்று, உண்மைகள் இன்னும் வெளிப்படவில்லை. தேவனுடைய வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தின் ஒரு பகுதியிலிருந்து ஜனங்கள் கொஞ்சம் மட்டுமே கற்றிருக்கின்றனர். அவர்கள் தங்கள் கருத்துக்களால் தங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக்கொள்ளும் நேரத்தில் உண்மையான அர்த்தம் காத்திருக்கிறது; அப்போதுதான் மனுவுருவான தேவன் பூமியிலும் பரலோகத்திலும் இன்று என்ன செய்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். சீனாவில் உள்ள தேவனுடைய ஜனங்களில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷம் இருப்பது மட்டுமல்லாமல், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சுபாவமும் கூட இன்னும் அதிகமாகவும், இன்னும் தெளிவாகவும் அவர்களிடத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவன் இதைப் பற்றி நேரடியாகப் பேசுவதில்லை, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷத்தைப் பற்றி மட்டுமே கொஞ்சம் குறிப்பிடுகிறார். இவ்வாறு, அவர் மனுஷனின் வடுக்களை நேரடியாக அம்பலப்படுத்துவதில்லை, இது மனுஷனின் முன்னேற்றத்திற்கு அதிக நன்மை பயப்பதாக இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வித்துக்கள் மற்றவர்களுக்கு முன்னால் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர் என்று அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. “சிவப்பான பெரிய வலுசர்ப்பம்” என்ற வார்த்தைகள் அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது; அவர்களில் யாரும் இந்த வார்த்தைகளைப் பற்றி பேசத் தயாராக இல்லை, எனவே தேவன், “எனது கிரியையின் இந்த கட்டம் முதன்மையாக உங்கள் மீது கவனம் செலுத்துகிறது, இது சீனாவில் எனது அவதரிப்பின் முக்கியத்துவத்தின் ஓர் அம்சமாகும்” என்று மட்டுமே கூறுகிறார். இன்னும் துல்லியமாக, தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினுடைய வித்துக்களின் பழமையான பிரதிநிதிகளின் மீது ஜெயங்கொள்ள வந்திருக்கிறார், இதற்கு சீனாவில் தேவன் மனுவுருவாகியிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

“நான் நேரடியாக மனிதர்கள் மத்தியில் வரும்போது, அதேநேரத்தில் தேவதூதர்கள் மேய்ப்பர் கிரியையைத் தொடங்குகிறார்கள்.” உண்மையில், தேவதூதர்கள் எல்லா ஜனங்களிடையேயும் தங்கள் கிரியையைத் தொடங்கும்போது மட்டுமே தேவனுடைய ஆவியானவர் மனுஷனின் உலகத்திற்கு வருகிறார் என்று நேரடியாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக, தெய்வீகத்தன்மையின் கிரியை மற்றும் தேவதூதர்களின் மேய்த்தல்—இந்த இரண்டு கிரியைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்து, தேவதூதர்களின் மேய்ப்பைப் பற்றி தேவன் கொஞ்சம் பேசுகிறார். “எல்லா புத்திரர்களும் ஜனங்களும் சோதனைகளையும் மேய்ச்சலையும் பெறுவது மட்டுமல்லாமல், அனைத்து வகையான தரிசனங்களின் நிகழ்வுகளையும் தங்கள் சொந்தக் கண்களால் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறும்போது, பெரும்பாலான ஜனங்கள் “தரிசனங்கள்” என்ற வார்த்தையைப் பற்றி ஏராளமான கற்பனைகளைக் கொண்டுள்ளனர். தரிசனங்கள் ஜனங்களின் கற்பனைகளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் குறிக்கின்றன. ஆனால் கிரியையின் பொருள் நடைமுறைத் தேவனைக் குறித்த அறிவாகவே உள்ளது. தரிசனங்கள் தேவதூதர்கள் கிரியை செய்யும் வழிமுறைகளாகும். அவை தேவதூதர்கள் இருப்பதை உணரும்படி அனுமதித்து, ஜனங்களுக்கு உணர்வுகள் அல்லது கனவுகளை வழங்கலாம். ஆனால் தேவதூதர்கள் மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். தேவனுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்கள் மத்தியில் அவர்கள் பணிபுரியும் முறையானது அவர்களை நேரடியாக அறிவூட்டுவதும், பிரகாசிக்கச் செய்வதும், அதோடு கூட அவர்களை உடைத்து கையாள்வதுமாய் இருக்கிறது. அவர்கள் பிரசங்கங்களை வழங்குவது மிகவும் அரிது. இயற்கையாகவே, ஜனங்களிடையே ஐக்கியம் என்பது விதிவிலக்கான ஒன்றாக இருக்கிறது; சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் இதுதான் நடக்கிறது. தேவனுடைய வார்த்தைகளுக்குள் அனைத்து மனுஷகுலத்தின் வாழ்க்கை சூழ்நிலைகளின் வெளிப்பாடு உள் அடங்கியிருக்கிறது—இயற்கையாகவே, இது முதன்மையாக சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினுடைய வித்துக்களின் மீது குறி வைக்கப்பட்டிருக்கிறது. முழு மனிதகுலத்தின் பல்வேறு நிலைகளில், முன்மாதிரியாக பணியாற்றுவதற்கு பிரதிநிதியாக இருப்பவர்களை தேவன் தேர்ந்தெடுக்கிறார். இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களை நிர்வாணமாக உரிந்து போடுகின்றன, மேலும் அவர்களுக்கு அவமானம் தெரியவில்லை, இல்லையெனில், பிரகாசிக்கும் வெளிச்சத்திலிருந்து மறைந்துகொள்ள அவர்களுக்கு நேரமில்லாதிருக்கிறது, மேலும் அவர்களின் சொந்த யுக்தியாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். மனுஷனின் பல பழக்கவழக்கங்கள், தேவன் பண்டைய காலங்களிலிருந்து இன்று வரை வரைந்திருக்கிற மற்றும் இன்று முதல் நாளை வரை அவர் வரையும் உருவங்களின் மிகுதியாகவே இருக்கிறது. அவர் வரைந்ததெல்லாம் மனுஷனின் அசுத்தமான தன்மை: சிலர் அந்தகாரத்தில் அழுகிறார்கள், கண்களில் இருந்து இழந்து போன பார்வைக்காக வருந்துகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள், சிலர் பெரிய அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள், சிலர் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் நடக்கிறார்கள், சிலர் பரந்து விரிந்த வனாந்தரத்தில், ஒரு வில்லினுடைய அம்பின் நுணியால் திடுக்கிடப் பண்ணப்பட்ட பறவையைப் போல பயத்துடன் நடுங்கிக்கொண்டு, மலைகளில் காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடுவோம் என்ற பெரும் பயத்துடன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தேவன் தம்முடைய கரங்களில், இந்த பல அசுத்தமான பழக்கவழக்கங்கள் மனதைத் தொடும், உயிரோட்டமான காட்சிப்படமாக மாறுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமானவை, இல்லையெனில், ஜனங்களின் மயிரை சிலிர்க்க வைக்கவும் அவர்களைத் தெளிவற்றவர்களாக்கி, குழப்பமடையச் செய்யவும் போதுமானவையாக இருக்கின்றன. தேவனுடைய பார்வையில், மனுஷனில் வெளிப்படும் அனைத்தும் அசுத்தமே அல்லாமல் வேறல்ல, அது இரக்கத்தைத் தூண்டினாலும், அது இன்னும் அசுத்தமாகவே இருக்கிறது. மற்றவர்களிடம் தயவு காட்டுகிற மனப்பான்மையில் இருக்கிற மனுஷனின் பலவீனமே, மனுஷன் தேவனிடமிருந்து வேறுபடுகிற குறிப்பிட்ட இடமாக இருக்கிறது. இருப்பினும், தேவன் எப்போதும் மனுஷனுக்கு ஒரே மாதிரியாக இருக்கிறார், அதாவது அவர் எப்போதும் அதே மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார். ஜனங்கள் கற்பனை செய்வது போல அவர், தன் குழந்தைகளை எப்போதும் மனதில் வைத்திருக்கும் ஒரு அனுபவமிக்க தாயைப் போல, எப்போதும் அன்பானவராக இருப்பதில்லை. உண்மையில், தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் மீது ஜெயங்கொள்ளுவதற்கு தொடர்ந்து பல வழிகளைக் கையாள விரும்பவில்லை என்றால், அவர் மனுஷனின் வரம்புகளுக்கு உட்படுத்தப்பட அனுமதிக்கும் அத்தகைய சிறுமைப்படுதலுக்கு அடிபணிவதற்கான வழி இருந்திருக்காது. தேவனுடைய மனநிலையைப் பொருத்தவரையில், ஜனங்கள் செய்கிற மற்றும் சொல்கிற அனைத்தும் தேவனுடைய கோபத்தைத் தூண்டுகின்றன, மேலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தேவனுடைய பார்வையில், அவர்களில் ஒருவர் கூட தரமானவராக இல்லை, மேலும் அவர்கள் அனைவரும் தேவனால் அழிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். சீனாவில் தேவனுடைய கிரியைக்கான கொள்கைகள் காரணமாகவும், மேலும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சுபாவத்தின் காரணமாகவும், சீனா சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாடாகவும், மனுவுருவான தேவன் வசிக்கும் தேசமாகவும் இருக்கிறது என்ற உண்மையுடன், அவரது கோபத்தைத் தணிக்க வேண்டும் மற்றும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வித்துக்கள் அனைத்தின் மீதும் ஜெயங்கொள்ள வேண்டும் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது; அவர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வித்துக்களை எப்போதும் வெறுப்பார்—அதாவது, சிவப்பான பெரிய வலுசர்ப்பதிலிருந்து வரும் அனைத்தையும் அவர் எப்போதும் வெறுப்பார்—இது ஒருபோதும் மாறாது.

தேவனுடைய செயல்கள் பற்றி யாரும் ஒருபோதும் அறிந்திருக்கவுமில்லை, அவருடைய செயல்கள் எதனாலும் பார்க்கப்படவுமில்லை. உதாரணமாக, தேவன் சீயோனுக்குத் திரும்பியபோது, இதை அறிந்தவன் யார்? எனவே, “நான் அமைதியாக மனிதனின் மத்தியில் வருகிறேன், நான் மென்மையாகப் புறப்படுகிறேன். யாராவது என்னை எப்போதாவது பார்த்திருக்கிறார்களா?” என்ற வார்த்தைகள் ஆவிக்குரிய உலகில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் திறன் மனுஷனுக்கு உண்மையில் இல்லை என்பதைக் காட்டுகின்றன. கடந்த காலத்தில், அவர் சீயோனுக்குத் திரும்பும்போது, “சூரியன் அக்கினியாகவும், சந்திரன் பிரகாசமாகவும் இருக்கிறது” என்று தேவன் கூறினார். தேவன் சீயோனுக்குத் திரும்புவதில் ஜனங்கள் இன்னும் ஆர்வமாக இருப்பதால்—அவர்கள் இன்னும் அதை விட்டுவிடாதிருப்பதால்—தேவன் ஜனங்களின் கருத்துக்களுக்கு இணங்க “சூரியன் அக்கினியாகவும், சந்திரன் பிரகாசமாகவும் இருக்கிறது” என்ற வார்த்தைகளை நேரடியாக பேசுகிறார். இதன் விளைவாக, தேவனுடைய வார்த்தைகளால் ஜனங்களின் கருத்துக்கள் தாக்கப்படும்போது, தேவனுடைய செயல்கள் மிகவும் அற்புதமானவை என்பதை அவர்கள் காண்கிறார்கள், மேலும் அவருடைய வார்த்தைகள் ஆழமானவையாகவும், புரிந்துகொள்ள முடியாதவையாகவும் மற்றும் அனைவருக்கும் விவரிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன என்பதை அவர்கள் காண்கிறார்கள்; இதனால், அவர்கள் இந்த விஷயத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் ஏற்கனவே சீயோனுக்குத் திரும்பிவிட்டதைப் போல, தங்கள் ஆவிகளில் ஒரு சிறிய தெளிவை உணர்கிறார்கள், எனவே ஜனங்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அப்போதிருந்து, அவர்கள் ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறார்கள், மேலும் தேவன் சீயோனுக்குத் திரும்பிய பிறகு பேரழிவு ஏற்படும் என்று கவலைப்படுவதில்லை. அப்போதுதான், தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதும், தேவனுடைய வார்த்தைகளின் மீது தங்கள் கவனத்தை முழுவதுமாக செலுத்தி, வேறு எதையும் கருத்தில் கொள்ள விரும்பாமல் விட்டுவிடுவதும் ஜனங்களுக்கு எளிதாகிறது.

முந்தைய: அத்தியாயம் 10

அடுத்த: பிற்சேர்க்கை: அத்தியாயம் 2

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக