திரித்துவம் என்பது உண்டா?

இயேசு மாம்சமாகியிருக்கிறார் என்ற உண்மை வெளிவந்த பிறகு, பரலோகத்தில் பிதா மட்டுமல்ல, குமாரனும் ஆவியானவரும் கூட இருக்கின்றனர் என்பதை மனிதன் நம்பினான். பரலோகத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்ற திரித்துவ தேவன் போன்ற ஒரு தேவன் இருக்கிறார் என்று மனிதன் கொண்டிருக்கும் வழக்கமான கருத்து இதுதான். முழு மனுக்குலமும் இந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது: தேவன் ஒரே தேவன்தான், ஆனால் மூன்று அங்கங்களை வகிக்கிறார். வழக்கமான கருத்துக்களில் ஆழமாக வேரூன்றியுள்ள எல்லோருமே அவரை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்று கருதுகின்றனர். அந்த மூன்று அங்கங்களும் ஒன்றாகி உருவாக்கிய ஒருவரே முழுமையான தேவனாக இருக்கிறார். பரிசுத்த பிதா இல்லாமல், தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். அதேபோல, குமாரனோ பரிசுத்த ஆவியோ இல்லாமல் தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். பிதாவையோ அல்லது குமாரனையோ தனியாக தேவனாகக் கருத முடியாது என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களில் நம்புகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரைச் சேர்த்து மட்டுமே தேவனாகக் கருத முடியும். இப்போது, எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களும், உங்கள் மத்தியில் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் கூட இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கை சரியானதா என்பதை யாரும் விளக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் எப்போதும் தேவனுடைய காரியங்களைப் பற்றிய குழப்பத்திலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். இவை கருத்துக்களாக இருக்கின்றபோதிலும், இவை சரியானவையா அல்லது தவறானவையா என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் மதக் கருத்துக்களால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். மதத்தைப் பற்றிய இந்த வழக்கமான கருத்துக்களை நீங்கள் மிகவும் ஆழமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். மேலும், இந்த விஷம் உங்களுக்குள் மிகவும் ஆழமாக ஊடுருவிச் சென்றுள்ளது. ஆகையால், நீங்கள் இந்த காரியத்திலும் பொல்லாங்கான ஆதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் திரித்துவ தேவன் என்பவரே கிடையாது. அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. இவை எல்லாம் மனிதனின் வழக்கமான கருத்துக்களும், மனிதனின் தவறான நம்பிக்கைகளும் ஆகும். பல நூற்றாண்டுகளாக, மனிதன் இந்தத் திரித்துவத்தை நம்பிக்கொண்டிருக்கின்றான். இது மனிதனின் மனதிலுள்ள கருத்துக்களால் உண்டாகியிருக்கின்றன. மனிதனால் பொய்யாக புனையப்பட்டிருக்கின்றன. இதை மனிதன் இதற்கு முன் பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகளில், திரித்துவத்தின் “உண்மையான அர்த்தத்தை” விளக்கிக்கூறிய பல வேதாகம விளக்கவுரையாளர்கள் உள்ளனர், ஆனால் மூன்று தனித்துவமான ஒத்த ஆட்களான திரித்துவ தேவனைப் பற்றிய விளக்கங்கள் தெளிவற்றவையாக இருந்து வருகின்றன. மேலும் ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய “கட்டமைப்பால்” குழப்பமடைந்திருக்கின்றனர். எந்த ஒரு பெரிய மனிதனாலும் ஒரு முழுமையான விளக்கத்தை வழங்க முடியவில்லை. பெரும்பாலான விளக்கங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலும் காகிதத்தில் உள்ளவற்றின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் ஒரு மனிதனுக்குக் கூட அதன் அர்த்தத்தைப் பற்றிய முழுமையான தெளிவானப் புரிதல் கிடையாது. ஏனென்றால், மனிதனின் இருதயத்தில் இடம்பிடித்துள்ள இந்தப் பெரிய திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. ஏனென்றால், தேவனுடைய உண்மையான முகத்தை இதுவரை ஒருவரும் கண்டதுமில்லை, தேவன் இருக்கும் இடத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆராய்வதற்காகவும், “தேவனுடைய வீட்டில்” எத்தனை பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் தலைமுறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறியவும் அல்லது தேவனுடைய இயல்பான கட்டமைப்பு எத்தனை அங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கவும் தேவனுடைய இருப்பிடத்திற்கு ஏறிச்செல்லுமளவிற்கு ஒருவரும் அதிர்ஷ்டசாலியும் இல்லை. முக்கியமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது என்னவென்றால் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் காலமும், அவர்கள் ஒவ்வொரு நபருடைய தோற்றங்களும், அவர்கள் எப்படிப் பிரிந்தார்கள் மற்றும் அவர்கள் எப்படி ஒன்றானார்கள் என்பவையே ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இத்தனை ஆண்டுகளில், ஒரு மனிதனால் கூட இந்தக் காரியங்களின் உண்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் எல்லோரும் வெறுமனே அனுமானம் செய்கின்றார்கள், ஏனென்றால் திரித்துவத்தின் மீது ஆர்வமுள்ள மற்றும் பக்தியுள்ள மத நம்பிக்கையுள்ளவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயத்தைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்க ஒரு மனிதன் கூடப் பரலோகத்திற்கு ஏறிச்சென்று, முழு மனுக்குலத்திற்கான ஒரு “ஆய்வு அறிக்கையுடன்” திரும்பி வரவில்லை. நிச்சயமாகவே, இதுபோன்ற கருத்துக்களை உருவாக்கியதற்காக மனிதன் மீது பழி சுமத்த முடியாது, ஏனென்றால் பிதாவாகிய யேகோவா மனிதனைச் சிருஷ்டித்த போது குமாரனாகிய இயேசு அவருடன் இருக்கவில்லையா? ஆதியில் எல்லாமே யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், அது நன்றாக இருந்திருக்கும். குற்றம் சுமத்தப்பட வேண்டுமானால், சிருஷ்டிப்பின் வேளையில் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் தமக்கு முன்பாக அழைக்காமல், தமது கிரியையை மட்டும் செய்த யேகோவா தேவனுடைய குறுகிய காலத்தின் மீதே சுமத்தப்படட்டும். அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் கிரியை செய்திருந்தால், அவர்கள் ஒருவராகியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஆதியிலிருந்து அந்தம் வரை, யேகோவா என்ற பெயர் மட்டுமே இருந்து, கிருபையின் காலத்திலிருந்த இயேசுவின் பெயர் அல்ல, அல்லது அவர் இன்னும் யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், மனுக்குலத்தினால் உண்டான இந்தப் பிரிவின் துயரத்தை தேவன் மன்னித்திருக்க மாட்டாரா? உண்மையிலேயே, இதற்கெல்லாம் யேகோவாவை குற்றஞ்சாட்ட முடியாது. குற்றம் சுமத்தப்பட வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யேகோவா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் பெயரால் தனது கிரியையைத் தொடர்ந்து செய்த மற்றும் தேவன் யார் என்று மனிதனால் சரியாக அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனிதனைக் குழப்பி வைத்திருந்த பரிசுத்த ஆவியானவர் மீது சுமத்தப்படட்டும். உருவமோ அல்லது சாயலோ அல்லது இயேசு போன்ற ஒரு பெயரோ இல்லாமல் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்திருந்தால், மனிதனால் அவரைத் தொட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ முடியாமல், இடியோசைகளை மட்டுமே கேட்டிருந்தால், இந்த வகையான கிரியை மனுக்குலத்திற்கு அதிக நன்மையை விளைவித்திருக்காதா? அப்படியானால் இப்போது என்ன செய்ய முடியும்? மனிதனுடைய கருத்துக்கள் மலை போல உயரமாகவும், கடல் போல அகலமாகவும், இன்றைய தேவனால் இனிமேல் தாங்க முடியாத அளவிற்கும் மற்றும் குழப்பமடையும் அளவிற்கும் பெருமளவில் திரண்டுள்ளன. கடந்த காலங்களில், அது யேகோவா, இயேசு, பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்கு இடையில் இருந்தபோதே, மனிதன் எவ்வாறு சமாளிப்பது என்று பெரும் குழப்பத்தில் இருந்தான், இப்போதோ தேவனுடைய அங்கமாக இருப்பதாக கூறப்படும் சர்வவல்லவரும் கூடுதலாக சேர்ந்திருக்கிறார். அவர் யார் மற்றும் திரித்துவத்தின் எந்த ஆள்தத்துவத்துடன் அவர் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாகக் கலந்துள்ளார் அல்லது மறைந்துள்ளார் என்று யாருக்குத் தெரியும்? மனிதனால் இதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? திரித்துவ தேவனைக் குறித்து மட்டுமே மனிதனுக்கு விளக்கிக்கூறவே ஒரு ஆயுட்காலம் தேவைப்பட்டது, ஆனால் இப்போதோ “நான்கு ஆள்தத்துவங்களில் ஒரு தேவன்” இருக்கிறார். இதை எவ்வாறு விளக்க முடியும்? உன்னால் அதை விளக்க முடியுமா? சகோதர சகோதரிகளே! இந்நாள் வரை நீங்கள் இத்தகைய தேவனை எப்படி விசுவாசித்திருந்தீர்கள்? நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். திரித்துவ தேவன் ஏற்கனவே தாங்கிக்கொள்வதற்குப் போதுமானவராக இருந்தார். நான்கு ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரு தேவன் மீது நீங்கள் எவ்வாறு தொடர்ந்து அசைக்க முடியாத விசுவாசத்தை வைக்க முடியும்? நீங்கள் வெளியேறுமாறு வற்புறுத்தப்படுகின்றீர்கள், ஆனாலும் நீங்கள் மறுக்கின்றீர்கள். எவ்வளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது! நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்கள்! ஒரு நபரால் உண்மையில் நான்கு தேவர்களை விசுவாசித்தும், அது குறித்து ஒன்றும் புரிந்துகொள்ளவில்லை என்றால், இது ஒரு அற்புதம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பெரிய அற்புதத்தை உங்களால் செய்ய முடியும் என்று யாருக்கும் தெரியாது! உண்மையில், இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் திரித்துவ தேவனே கிடையாது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவனுக்குப் பிதாவும் கிடையாது குமாரனும் கிடையாது, பிதாவும் குமாரனும் ஒன்றாகச் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் கிடையாது. இவை எல்லாம் உலகிலுள்ள மிகப் பெரிய பொய், உண்மையில் எதுவும் கிடையாது! ஆனாலும், இத்தகைய ஒரு தவறான கருத்து தோன்றி, முற்றிலும் அடிப்படையின்றி காணப்படவில்லை, ஏனென்றால் உங்கள் உள்ளங்கள் மிகவும் எளிமையானவை அல்ல, உங்கள் எண்ணங்கள் காரணமின்றி உதிப்பதில்லை. மாறாக, இவை மிகவும் பொருத்தமானவையாகவும் சாமர்த்தியமானவையாகவும் இருக்கின்றன. இவை எந்த சாத்தானாலும் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன. பரிதாபம் என்னவென்றால், இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறான கருத்துக்களாக இருக்கின்றன, மேலும் இவை உண்மையில் இல்லை! நீங்கள் உண்மையான சத்தியத்தைக் கண்டிருக்கவே இல்லை. நீங்கள் அனுமானங்களையும் கற்பனைகளையும் மட்டுமே செய்கிறீர்கள், அதன்பின்னர் வஞ்சகமாக மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும், புத்தியோ அல்லது பகுத்தறிவோ இல்லாத மிகவும் முட்டாள்தனமான ஜனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், இவை அனைத்தையும் ஒரு கதையாகப் புனைகின்றீர்கள், இதனால் அவர்கள் உங்கள் சிறந்த மற்றும் புகழ்பெற்ற “நிபுணத்துவமான போதனைகளை” நம்புகின்றனர். இதுதான் சத்தியமா? இதுதான் மனிதன் பெற வேண்டிய ஜீவவழியா? இது எல்லாமே முட்டாள்தனம்! ஒரு வார்த்தை கூட சரியானதல்ல! இத்தனை ஆண்டுகளில், உங்களால் தேவன் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறார், ஒரு தேவன் வெளிப்படையாக மூன்று தேவர்களாகப் பிரிக்கப்படுமளவிற்கு தலைமுறைதோறும் சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டு வருகிறார். இப்போது மனிதனால் தேவனை மீண்டும் ஒன்றாக இணைப்பது உண்மையில் கூடாத காரியமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அவரை மிகவும் சிறியவராகப் பிரித்திருக்கின்றீர்கள்! தாமதமாவதற்கு முன்பே நான் காலம் தாழ்த்தாமல் எனது கிரியையை செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறு வெட்கக்கேடான வழியில் தொடர்வீர்கள் என்று சொல்வது கடினம்! இவ்விதமாக தேவனைத் தொடர்ந்து பிரிப்பீர்களேயானால் அவரால் எப்படி இன்னும் உங்கள் தேவனாக இருக்க முடியும்? நீங்கள் இன்னும் தேவனை உணர்ந்துகொள்வீர்களா? நீங்கள் இன்னும் உங்கள் பூர்வீகங்களைக் கண்டறிவீர்களா? நான் தாமதமாக வந்திருந்தால், நீங்கள் “பிதாவையும் குமாரனையும்,” யேகோவாவையும் இயேசுவையும் இஸ்ரவேலுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, நீங்களே தேவனுடைய ஒரு அங்கமாக இருக்கிறீர்கள் என்று கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக, இப்போது கடைசி நாட்களாக இருக்கிறது. இறுதியாக, நான் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் வந்துள்ளது. நான் என் கையால் இந்தக் கட்டக் கிரியையை செய்த பிறகே, நீங்கள் தேவனைப் பிரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது நடந்திருக்காவிட்டால், நீங்கள் எழுந்து, ஆராதனைக்கான பீடங்களின் மீது உங்களுக்கு மத்தியில் எல்லா சாத்தான்களையும் வைத்திருப்பீர்கள். இது உங்கள் வஞ்சனை! இது நீங்கள் தேவனைப் பிரிக்கும் வழிமுறை! நீங்கள் இப்போதும் இவ்வாறு தொடர்ந்து செய்வீர்களா? உங்களிடம் கேட்கிறேன்: எத்தனை தேவர்கள் இருக்கின்றார்கள்? எந்த தேவன் உங்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவார்? முதல் தேவனா, இரண்டாவது தேவனா அல்லது நீங்கள் எப்போதும் ஜெபத்தை ஏறெடுக்கும் மூன்றாவது தேவனா? நீங்கள் எப்போதும் யாரை நம்புகிறீர்கள்? பிதாவையா? அல்லது குமாரனையா? அல்லது ஆவியானவரையா? நீ யாரை நம்புகிறாய் என்று சொல். ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் தேவனை நம்புவதாகச் சொன்னாலும், நீங்கள் உண்மையில் நம்புவது உங்கள் சொந்த மூளையைத்தான்! உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையில் தேவனைக் கொண்டிருக்கவில்லை! உங்கள் உள்ளங்களில் இன்னும் அத்தகைய “திரித்துவங்களே” ஏராளமாக உள்ளன! நீங்கள் சம்மதிக்கவில்லையா?

இந்தத் திரித்துவ கருத்துக்கு ஏற்ப மூன்று கட்டக் கிரியைகளும் மதிப்பிடப்பட்டால், ஒவ்வொருவரும் செய்யும் கிரியை ஒரே மாதிரியானது அல்ல என்பதால் மூன்று தேவர்கள் இருக்க வேண்டும். உங்களில் யாராவது திரித்துவம் உண்மையில் உண்டென்று கூறினால், மூன்று ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரே தேவன் சரியாக யார் என்பதை விளக்குங்கள். பரிசுத்த பிதா என்றால் யார்? குமாரன் என்றால் யார்? பரிசுத்த ஆவியானவர் என்றால் யார்? யேகோவா தான் பரிசுத்த பிதாவா? இயேசு தான் குமாரனா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா ஆவியானவர் இல்லையா? குமாரனின் சாராம்சம் ஆவியானவர் இல்லையா? இயேசுவின் கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இல்லையா? அந்த நேரத்தில் ஆவியானவரால் செய்யப்பட்ட யேகோவாவின் கிரியை இயேசு செய்தது மாதிரியானது இல்லையா? தேவன் எத்தனை ஆவியானவர்களைக் கொண்டிருக்க முடியும்? உங்கள் விளக்கத்தின்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே என்று வைத்துக் கொண்டால், மூன்று ஆவியானவர்கள் உள்ளனர், ஆனால் மூன்று ஆவியானவர்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று தேவர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஒன்றான மெய்த்தேவன் என்று யாருமே இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகையான தேவன் எவ்வாறு இன்னும் தேவனுடைய இயல்பான சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு என்பதை நீ ஏற்றுக்கொண்டால், அவரால் எப்படி ஒரு மகனைப் பெற்று பிதாவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் உண்மையில் உன் கருத்துக்கள் அல்லவா? “ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவரும், ஒரே ஒரு தேவனும் மட்டுமே உள்ளனர்” என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரே ஒரு தேவனும், இந்த தேவனில் ஒரே ஒரு ஆள்தத்துவமும், ஒரே ஒரு தேவனுடைய ஆவியானவரும் உள்ளனர். நீ பேசும் பிதாவும் குமாரனும் இருக்கின்றார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கின்றார். மேலும், நீங்கள் நம்பும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் சாராம்சம் பரிசுத்த ஆவியின் சாராம்சமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஆவியானவராக இருக்கிறார், ஆனால் அவரால் மாம்சமாகி மனிதர்களிடையே வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கவும் முடியும். அவருடைய ஆவியானவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். அவரால் ஒரே நேரத்தில் மாம்சத்திலும் பிரபஞ்சத்திற்கு மேலேயும் இருக்க முடியும். தேவனே ஒன்றான மெய்த்தேவன் என்று எல்லா ஜனங்களும் சொல்வதனால், யாருடைய விருப்பப்படியும் பிரிக்க முடியாத ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார்! தேவன் ஒரே ஒரு ஆவியானவராகவும், ஒரே ஒரு ஆள்தத்துவமுள்ளவராகவும் இருக்கின்றார்; அவர்தான் தேவனுடைய ஆவியானவர் ஆவார். நீ சொல்வது போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் இருந்தால், அவர்கள் மூன்று தேவர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியானவர் ஒருவராகவும், குமாரன் மற்றொருவராகவும், பிதா இன்னொருவராகவும் இருக்கின்றனர். அவர்களுடைய ஆள்தத்துவங்கள் வேறுபட்டவர்கள், அவர்களுடைய சாராம்சங்கள் வேறுபட்டவை, அப்படியானால் அவர்கள் ஒவ்வொருவராலும் எப்படி ஒரே தேவனின் அங்கமாக இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் ஆவியானவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மனிதனுக்கு எளிதாகும். இது இவ்வாறு இருப்பதனால், பிதா ஆவியானவரைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் பூமிக்கு இறங்கி வரவில்லை, ஒருபோதும் மாம்சமாக மாறவில்லை. அவர் மனிதனுடைய இருதயத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார், மேலும் அவர் நிச்சயமாகவே ஒரு ஆவியானவராகவும் இருக்கிறார். அவருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான உறவு என்ன? இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவா? அல்லது பரிசுத்த ஆவியானவருக்கும் பிதாவின் ஆவியானவருக்கும் இடையிலுள்ள உறவா? ஒவ்வொரு ஆவியானவரின் சாராம்சமும் ஒன்றா? அல்லது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் கருவியா? இதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படியானால் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? இது இரண்டு ஆவியானவர்களுக்கும் இடையிலான உறவா அல்லது ஒரு மனிதனுக்கும் ஆவியானவருக்கும் இடையிலான உறவா? இவை அனைத்தும் எந்த விளக்கமும் இல்லாத காரியங்களாகும்! அவர்கள் அனைவரும் ஒரே ஆவியானவர் என்றால், மூன்று ஆள்தத்துவங்களைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் அவர்கள் ஒரே ஆவியானவரைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனித்தனியான ஆட்களாக இருந்தால், அவர்களுடைய ஆவியானவர்கள் வலிமையில் மாறுபடுவார்கள், அவர்களால் ஒரே ஒரு ஆவியானவராக இருக்க முடியாது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்து மிகவும் பொருத்தமற்றதாகும்! இது தேவனைப் பிரிக்கின்றது, ஒவ்வொருவரையும் ஒரு நிலைப்பாட்டுடனும் ஆவியானவருடனும் மூன்று நபர்களாகப் பிரிக்கின்றது. அப்படியானால் அவரால் எப்படி இன்னும் ஒரே ஆவியானவராகவும் ஒரே தேவனாகவும் இருக்க முடியும்? வானமும் பூமியும் அதிலுள்ளவை யாவும் பிதா, குமாரனால் அல்லது பரிசுத்த ஆவியானவரால் சிருஷ்டிக்கப்பட்டனவா என்று சொல்லுங்கள்? அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சிருஷ்டித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படியானால் மனுக்குலத்தை மீட்டவர் யார்? அதைச் செய்தது பரிசுத்த ஆவியானவரா, குமாரனா அல்லது பிதாவா? மனுக்குலத்தை மீட்டது குமாரன் தான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் உண்மையில் குமாரன் யார்? அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவன் இல்லையா? சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கண்ணோட்டத்தில் மாம்சமாகிய தேவன் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு பிறந்தார் என்பது உனக்குத் தெரியாதா? அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நீ என்ன சொன்னாலும், அவர் இன்னும் பரலோகத்திலுள்ள தேவனுடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவனாவார். குமாரனைக் குறித்த இந்தக் கருத்து உண்மையில் பொய்யானதாகும். எல்லாக் கிரியைகளையும் செய்பவர் ஒரே ஆவியானவர்தான். தேவன் மாத்திரமே, அதாவது, தேவனுடைய ஆவியானவரே அவருடைய கிரியையைச் செய்கிறார். தேவனுடைய ஆவியானவர் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அவர் இயேசுவில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனுடைய ஆவியானவரால்) கிரியை செய்யப்படவில்லை என்றால், அவருடைய கிரியை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? இயேசு ஜெபம் செய்கையில் பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்று பெயர் சொல்லி அழைத்தபோது, இது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்பட்டது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தை அணிந்திருந்தார் மற்றும் ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பெற்றிருந்தார். அவனுக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தாலும், அவருடைய வெளிப்புறத் தோற்றம் இன்னும் ஒரு சாதாரண மனிதனின் தோற்றமாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் “மனுஷகுமாரனாக” மாறியிருந்தார், இதைப் பற்றி இயேசு உட்பட எல்லா மனிதர்களும் பேசினார்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதால், அவர் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபராக (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனிதனின் வெளிப்புறத் தோற்றமுள்ளவராக) இருக்கிறார். ஆகையால், இயேசு பரலோகத்திலிருக்கின்ற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைத்தது, நீங்கள் முதலில் அவரைப் பிதா என்று அழைத்ததைப் போன்றதாகும். அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார். இயேசு நீங்கள் மனப்பாடம் செய்வதற்காக உங்களுக்குக் கற்பித்த கர்த்தருடைய ஜெபம் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே….” அவர் எல்லா மனிதர்களையும் பரமண்டலங்களிலிருக்கிற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அவரை பிதா என்று அழைத்ததால், உங்கள் அனைவருடனும் சமமான நிலையில் நிற்கும் ஒருவரின் கண்ணோட்டத்தில் அவ்வாறு சொன்னார். பரலோகத்திலுள்ள தேவனை நீங்கள் பிதா என்ற பெயரில் அழைத்ததால், இயேசு உங்களுடன் சமமான நிலையில் இருப்பதையும், பூமியில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனாக (அதாவது தேவனுடைய குமாரன்) இருப்பதையும் கண்டார். நீங்கள் தேவனைப் பிதா என்று அழைத்தால், நீங்கள் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் என்பதனால்தான் அல்லவா? சிலுவையில் அறையப்படுவதற்கு முன், இயேசுவின் அதிகாரம் பூமியில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனால்) ஆளுகை செய்யப்பட்ட மனுஷகுமாரனாகவும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்தார், ஏனென்றால் அவர் இன்னும் தமது கிரியையை நிறைவு செய்யவில்லை. ஆகையால், பரலோகத்திலுள்ள தேவனை அவர் பிதா என்று அழைத்தது அவருடைய மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் மட்டுமே குறிக்கிறது. ஆனாலும், அவர் தேவனை (அதாவது, பரலோகத்திலுள்ள ஆவியானவரை) இவ்வாறு அழைப்பது, அவர் பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவரின் குமாரன் என்பதை நிரூபிக்கவில்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மட்டுமே வேறுபட்டதாக இருந்ததே தவிர, அவர் வேறு நபராக இருக்கவில்லை. தனித்தனியான நபர்களாக இருக்கின்றனர் என்பது பொய்யாகும்! சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, இயேசு மாம்சத்தின் வரம்புக்கு உட்பட்ட மனுஷகுமாரனாக இருந்தார், அவர் ஆவியின் அதிகாரத்தை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை மட்டுமே அவரால் நாட முடிந்தது. இது அவர் கெத்செமனே என்னும் இடத்தில் மூன்று முறை ஜெபித்தது போலவே இருக்கிறது: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் யூதர்களின் ராஜாவாக இருந்தார். அவர் கிறிஸ்துவாகவும், மனுஷகுமாரனாகவும் இருந்தார், மகிமையின் சரீரத்தில் அல்ல. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து, அவர் தேவனைப் பிதா என்று அழைத்தார். இப்போது, தேவனைப் பிதா என்று அழைக்கின்ற எல்லோரையும் குமாரன் என்று உன்னால் சொல்ல முடியாது. இது அப்படி இருந்திருந்தால், கர்த்தருடைய ஜெபத்தை இயேசு உங்களுக்குக் கற்பித்தவுடனே நீங்கள் எல்லோரும் குமாரனாகியிருக்க மாட்டீர்களா? நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால், நீங்கள் பிதா என்று அழைப்பவர் யார் என்று சொல்லுங்கள்? நீங்கள் இயேசுவைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் பிதா யார்? இயேசு சென்ற பிறகு, பிதா மற்றும் குமாரனைக் குறித்த இந்தக் கருத்து இல்லாமல் போய்விட்டது. இந்தக் கருத்து இயேசு மாம்சமாகிய போது இருந்த ஆண்டுகளுக்கு மட்டுமே பொருத்தமானது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், நீங்கள் தேவனைப் பிதா என்று அழைக்கும்போது சிருஷ்டிப்பின் கர்த்தருக்கும் சிருஷ்டிக்கப்பட்டவற்றுக்கும் இடையிலான உறவு ஒன்றாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தின் இந்த கருத்து நிலைநிற்பதற்கு எந்த நேரமும் இல்லை. இது காலங்காலமாக அரிதாகவே காணப்படும் ஒரு பொய்யாகும். திரித்துவம் என்பதே கிடையாது!

இது ஆதியாகமத்திலுள்ள தேவனுடைய வார்த்தைகளை பெரும்பாலானவர்களுக்கு நினைவூட்டலாம்: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” (ஆதியாகமம் 1:26). “நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக என்று தேவன் சொல்வதால்,” “நமது” என்பது இரண்டு அல்லது அதற்கு அதிகமானவர்களைக் குறிப்பிடுகிறது. அவர் “நமது” என்று சொன்னதால், ஒரே ஒரு தேவன் மட்டும் இல்லை. இதனால், மனிதன் தனித்தனி நபர்கள் என்ற அர்த்தத்தில் சிந்திக்க ஆரம்பித்தான். இந்த வார்த்தைகளிலிருந்து தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற கருத்து எழுந்தது. பிதாவின் சாயல் என்ன? குமாரனின் சாயல் என்ன? பரிசுத்த ஆவியின் சாயல் என்ன? இன்றைய மனுக்குலம் மூன்றில் இருந்து ஒன்றாக இணைந்த ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்குமோ? அப்படியானால் மனிதனின் சாயல் பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவியின் சாயலைப் போன்று இருக்கிறதா? தேவனுடைய ஆள்தத்துவங்களில் மனிதனின் சாயலில் இருப்பவர் யார்? மனிதனின் இந்தக் கருத்து உண்மையில் தவறானது மற்றும் முட்டாள்தனமானது! இதனால் ஒரு தேவனை பல தேவர்களாக மட்டுமே பிரிக்க முடியும். உலகத்தைச் சிருஷ்டித்ததைத் தொடர்ந்து மனுக்குலத்தைச் சிருஷ்டித்த பிறகே மோசே ஆதியாகமத்தை எழுதினான். ஆதியில் உலகம் தோன்றியபோது, மோசே இல்லை. மோசே வேதாகமத்தை எழுதியது அதற்கு வெகு காலத்திற்குப் பிறகுதான். ஆகையால், பரலோகத்திலுள்ள தேவன் பேசியது அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? தேவன் உலகை எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதற்கான ஒரு குறிப்பும் அவனிடம் இல்லை. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஒரே மெய்த்தேவன் யேகோவா மட்டுமே இஸ்ரவேலில் தமது கிரியையைச் செய்தார். காலம் மாறும்போது அவர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார், ஆனால் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு நபரைக் குறிக்கிறது என்பதை இது நிரூபிக்க முடியாது. இது இப்படி இருப்பதனால், தேவனில் எண்ணற்ற நபர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா? பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், நியாயப்பிரமாண காலத்தில் ஆரம்பிப்பதற்காக தேவனின் ஒரு கட்டக் கிரியையான யேகோவாவின் கிரியையாகும். இது தேவனுடைய கிரியையாக இருந்தது. அவர் பேசியது போலவே அது இருந்தது. அவர் கட்டளையிட்டபடியே அது நின்றது. யேகோவா எந்த நேரத்திலும் தாம் கிரியை செய்ய வந்த பிதா என்று சொல்லவும் இல்லை, மனுக்குலத்தை மீட்க வந்த குமாரன் என்றும் அவர் ஒருபோதும் தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. இயேசுவின் காலத்திற்கு வரும்போது, சகல மனுக்குலத்தையும் மீட்க தேவன் மாம்சமாகினார் என்று மட்டுமே கூறப்பட்டது, ஆனால் வந்தவர் குமாரன் என்று கூறப்படவில்லை. காலங்கள் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதாலும், தேவன் செய்யும் கிரியையே வேறுபடுவதனால், அவர் தமது கிரியையை வெவ்வேறு பகுதிகளுக்குள் செய்ய வேண்டும். இதனால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமும் வேறுபடுகிறது. யேகோவா இயேசுவின் பிதா என்று மனிதன் நம்புகிறான், ஆனால் இது உண்மையில் இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு சொன்னார்: “நாங்கள் பிதா, குமாரன் என்று ஒருபோதும் வேறுபடுத்தப்படவில்லை; நானும் பரலோகத்திலுள்ள பிதாவும் ஒருவரே. பிதா என்னிலும் நான் பிதாவிலும் இருக்கிறேன்; மனிதர் குமாரனைப் பார்க்கும்போது, அவர்கள் பரலோக பிதாவையே பார்க்கிறார்கள்.” எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, பிதாவாக இருந்தாலும், குமாரனாக இருந்தாலும், அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றார்கள், தனி நபர்களாகப் பிரிக்கப்படுவதில்லை. மனிதன் இதை விளக்க முயற்சிக்கும்போது, தனித்தனி ஆள்தத்துவங்கள் என்ற கருத்து மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருக்கு இடையிலான உறவு ஆகியவற்றினால் காரியங்கள் சிக்கலாகியுள்ளன. மனிதன் தனித்தனி ஆள்தத்துவங்களைப் பற்றி பேசும்போது, இது தேவனைப்பொருளாக்காதா? மனிதன் ஆள்தத்துவங்களை முதலாமவர், இரண்டாவது நபர் மற்றும் மூன்றாவது நபர் என்றும் வரிசைப்படுத்துகிறான். இவை அனைத்தும் மனிதனின் கற்பனைகளே தவிர, இவை அர்த்தமுள்ளவையும் அல்ல, முற்றிலும் நம்பத்தகுந்தவையும் அல்ல! நீ அவரிடம், “எத்தனை தேவர்கள் இருக்கிறார்கள்?” என்று கேட்டால், தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரித்துவமான ஒரே மெய்த்தேவனாக இருக்கிறார் என்று அவர் கூறுவார். நீ மேலும் அவரிடம், “பிதா யார்?” என்று கேட்டால், “பிதா பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவர் என்றும், அவர் அனைவருக்கும் பொறுப்பானவர், பரலோகத்தின் எஜமானர்” என்று அவர் கூறுவார். “அப்படியானால் யேகோவா ஆவியானவரா?” அவர், “ஆம்!” என்று கூறுவார். நீ அவரிடம், “குமாரன் யார்?” என்று கேட்டால், நிச்சயமாகவே, இயேசு தான் குமாரன் என்று அவர் கூறுவார். “அப்படியானால் இயேசுவின் கதை என்ன? அவர் எங்கிருந்து வந்தார்?” “இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு மரியாளிடம் பிறந்தார்” என்று கூறுவார் அப்படியானால் அவருடைய சாராம்சம் ஆவியானவர் இல்லையா? அவருடைய கிரியை பரிசுத்த ஆவியின் பிரதிநிதித்துவம் இல்லையா? யேகோவாதான் ஆவியானவர், இயேசுவின் சாராம்சமும் அவர்தான். இப்போதும் கடைசி நாட்களில், ஆவியானவர்தான் இன்னும் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியம் அதிகமில்லை என்றிருக்கும்போது, அவர்களால் எப்படி வெவ்வேறு நபர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரே ஆவியானவரின் கிரியையை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து செய்யவில்லையா? இவ்வாறு, ஆள்தத்துவங்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய கிரியையானது துல்லியமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. யேகோவா செய்த முதல் கட்டக் கிரியையில், அவர் மாம்சமாகவும் மாறவில்லை, மனிதனிடத்தில் தோன்றவும் இல்லை. ஆகையால் மனிதன் அவர் தோன்றியதை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் எவ்வளவு பெரியவராகவும், எவ்வளவு உயரமானவராகவும் இருந்தாலும், அவரே இன்னும் ஆவியானவராக இருந்தார், தேவன்தாமே மனிதனை ஆதியிலே சிருஷ்டித்தார். அதாவது, அவர்தான் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர் மேகங்களுடனே இருந்து மனிதனிடம் பேசினார், அவர் ஆவியானவராக மாத்திரமே இருந்தார், மேலும் அவருடைய தோற்றத்தை யாரும் கண்டதில்லை. கிருபையின் காலத்தில், தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் வந்து யூதேயாவில் அவதரித்தபோது, ஒரு யூதனாக மனிதன் மாம்சமான தேவனின் சாயலை முதன்முதலாகப் பார்த்தான். யேகோவாவைப் பற்றிய எதுவும் இருக்கவில்லை. ஆயினும், அவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அதாவது யேகோவாவின் ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். இயேசு இன்னும் தேவனுடைய ஆவியானவரின் சாயலாகவே பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கியதைத் தான் மனிதன் முதலில் பார்த்தான். அது இயேசுவுக்கான பிரத்யேகமான ஆவியானவர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவராக இருந்தார். அப்படியானால் இயேசுவின் ஆவியானவரைப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிரிக்க முடியுமா? குமாரனாகிய இயேசு இயேசுவாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருந்தால், அவர்களால் எப்படி ஒருவராக இருக்க முடியும்? அவ்வாறு இருந்தால் கிரியையை செய்ய முடியாமல் போயிருக்கும். இயேசுவுக்குள் இருக்கும் ஆவியானவர், பரலோகத்திலுள்ள ஆவியானவர், யேகோவாவின் ஆவியானவர் எல்லோருமே ஒருவர்தான். அவர் பரிசுத்த ஆவியானவர் என்றும், தேவனுடைய ஆவியானவர் என்றும், ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்றும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆவியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவனுடைய ஆவியானவரால் அதிகமான கிரியைகளைச் செய்ய முடியும். அவரால் உலகத்தைச் சிருஷ்டிக்கவும், பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவும் முடியும். அவரால் முழு மனுக்குலத்தையும் மீட்கவும் முடியும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொண்டு அழிக்கவும் முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன, அவருக்குப் பதிலாக தேவனுடைய ஆள்தத்துவங்களான யாராலும் செய்ய முடியாது. அவருடைய ஆவியானவரை யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லவர் என்ற பெயர்களிலும் அழைக்கலாம். கர்த்தரும், கிறிஸ்துவும் அவரே. அவரால் மனுஷகுமாரனாகவும் முடியும். அவர் வானத்திலும் பூமியிலும் வாசம்பண்ணுகிறார். அவர் பிரபஞ்சங்களுக்கு மேலேயும், திரளான ஜனங்களுக்கு நடுவேயும் வாசம்பண்ணுகிறார். வானத்திற்கும் பூமிக்கும் அவர் ஒருவரே எஜமானர்! சிருஷ்டிப்பின் காலம் முதல் இப்போது வரை, இந்த கிரியையானது தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டு வருகிறது. வானத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும் அல்லது மாம்சத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும், இவை அனைத்தும் அவருடைய சொந்த ஆவியானவராலேயே செய்யப்படுகின்றன. வானத்திலிருந்தாலும் அல்லது பூமியிலிருந்தாலும், சகல ஜீவராசிகளும் அவருடைய சர்வவல்லமையுள்ள உள்ளங்கையிலே உள்ளன. இவை எல்லாமே தேவனுடைய கிரியையாகும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவராலும் செய்ய இயலாது. வானங்களில், அவர் ஆவியானவராகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். மனிதர்களிடையே அவர் மாம்சமாகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். அவர் இலட்சக்கணக்கான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவர் இன்னும் அவராக இருக்கிறார், அவருடைய ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக சகல மனுக்குலத்திற்குமான மீட்பு அவருடைய ஆவியானவரின் நேரடி கிரியையாகும், அதேபோல் இது கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும், தேவனை சர்வவல்லவர் என்றும், ஒரே மெய்த்தேவன் என்றும், சகலத்தையும் உள்ளடக்கிய தேவன் என்றும் மட்டுமே அழைக்க முடியும். தனித்தனி ஆள்தத்துவங்களும் கிடையாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்தும் கிடையாது. வானத்திலும் பூமியிலும் ஒரே ஒரு தேவன் தான் வாசம்பண்ணுகிறார்!

தேவனுடைய நிர்வாகத் திட்டம் ஆறாயிரம் ஆண்டுகள் நீடிக்கும், இது அவருடைய கிரியையின் வேறுபாடுகளின் அடிப்படையில் மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல் காலம் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாண காலமாகும். இரண்டாவது கிருபையின் காலமாகும். மூன்றாவது கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலமாகும். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அடையாளம் குறிப்பிடப்படுகிறது. கிரியையிலுள்ள வேறுபாடே இதற்குக் காரணமாகும், அதாவது கிரியையின் தேவைகளே காரணமாகும். முதல் கட்டக் கிரியையானது நியாயப்பிரமாணத்தின் காலத்தில் இஸ்ரவேலில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியையை முடிக்கும் இரண்டாம் கட்டக் கிரியையானது யூதேயாவில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியைக்காக, இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு, ஒரே குமாரனாகப் பிறந்தார். இவை அனைத்துக்கும் கிரியையின் தேவைகளே காரணமாக இருந்தன. கடைசி நாட்களில், தேவன் தம்முடைய கிரியையை புறஜாதியினரிடத்திற்கு விரிவுபடுத்தி, அங்குள்ள ஜனங்களை ஜெயங்கொள்ள விரும்புகிறார், இதனால் அவருடைய பெயர் அவர்கள் நடுவே மகத்தானதாக இருக்கும். மனிதன் சகல சத்தியங்களையும் புரிந்துகொள்ளவும், அதற்குள் பிரவேசிக்கவும் அவனை வழிநடத்த அவர் விரும்புகிறார். இந்த கிரியைகள் அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. அவர் வெவ்வேறு நிலைப்பாடுகளிலிருந்து அவ்வாறு செய்தாலும், கிரியையின் தன்மையும் கொள்கைகளும் மாறாமலே இருக்கின்றன. அவர்கள் செய்த கிரியையின் கொள்கைகளையும் தன்மையையும் நீ கவனித்தால், அது அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்வாய். இன்னும் சிலர் கூறலாம்: “பிதா பிதாவாகவே இருக்கிறார்; குமாரன் குமாரனாகவே இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவே இருக்கிறார், இறுதியில் அவர்கள் ஒருவராவார்கள்.” அப்படியானால் நீ எவ்வாறு அவர்களை ஒன்றாக உருவாக்க வேண்டும்? பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் எவ்வாறு ஒருவராக்க முடியும்? அவர்கள் இயல்பாகவே இருவராக இருந்தால், அவர்கள் எவ்வாறு ஒன்றாக இணைந்திருந்தாலும், அவர்கள் இரண்டு அங்கங்களாக இருந்திருக்க மாட்டார்களா? அவர்களை ஒன்றாக்குவது குறித்து நீ பேசும்போது, ஒரு முழுமையானதாக்க இரண்டு தனித்தனி அங்கங்களை வெறுமனே இணைப்பதாக இருக்காதா? ஆனால் அவர்கள் முழுமையாக்கப்படுவதற்கு முன்பு இரண்டு அங்கங்கள் இல்லையா? ஒவ்வொரு ஆவியானவரிடமும் ஒரு தனிப்பட்ட சாராம்சம் உள்ளது. மேலும், இரண்டு ஆவியானவர்களையும் ஒரே ஒருவராக உருவாக்க முடியாது. ஆவியானவர் ஒரு பொருள் அல்ல, பொருள் உலகிலுள்ள எதையும் போல் இல்லாதவர். மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா ஒரு ஆவியானவராக இருக்கிறார், குமாரன் மற்றொருவராக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இன்னொருவராக இருக்கிறார், அதன்பிறகு மூன்று ஆவியானவர்களும் மூன்று டம்ளர் தண்ணீரைப் போல ஒன்றாக கலக்கப்பட்டு, ஒரே முழுமையானவராகின்றனர். அப்படியானால் மூவரும் ஒருவராக உருவாக்கப்படுவதில்லையா? இது முற்றிலும் தவறான மற்றும் முட்டாள்தனமான விளக்கமாகும்! இது தேவனைப் பிரிப்பதில்லையா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் எல்லோரையும் எப்படி ஒருவராக்க முடியும்? அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மூன்று அங்கங்கள் அல்லவா? “இயேசு என்னுடைய நேசகுமாரன் என்று தேவன் வெளிப்படையாகக் கூறவில்லையா?” என்று மற்றவர்கள் சொல்கின்றனர். இயேசு என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்பது நிச்சயமாக தேவனால் கூறப்பட்டதுதான். தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுத்தார், ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே, பரலோகத்திலுள்ள ஆவியானவராக தமது சொந்த மனுஷ அவதரிப்புக்கு சாட்சி கொடுத்தார். இயேசு அவருடைய மனுஷ அவதரிப்பாவார், பரலோகத்திலுள்ள அவருடைய குமாரன் அல்ல. உனக்குப் புரிகிறதா? “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார்,” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லையா? மனுஷ அவதரிப்பின் காரணமாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பிரிக்கப்பட்டார்கள் அல்லவா? உண்மையில், அவர்கள் இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்கிறார். காலங்களின் மாற்றத்தின் காரணமாக, கிரியையின் தேவைகள் மற்றும் அவருடைய நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களின் காரணமாக, மனிதன் அவரை அழைக்கும் பெயரும் வேறுபடுகிறது. அவர் முதல் கட்டக் கிரியையைச் செய்ய வந்தபோது, அவரை இஸ்ரவேலரின் மேய்ப்பராகிய யேகோவா என்று மட்டுமே அழைக்க முடிந்தது. இரண்டாவது கட்டத்தில், மாம்சமாகிய தேவனை, கர்த்தர் மற்றும் கிறிஸ்து என்று மட்டுமே அழைக்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில், பரலோகத்திலுள்ள ஆவியானவரே இவரே என்னுடைய நேசகுமாரன் என்று கூறினார், இவர் தேவனுடைய ஒரே குமாரன் என்று கூறவில்லை. இது உண்மையில் நடக்கவில்லை. தேவனுக்கு எப்படி ஒரே குழந்தை இருக்க முடியும்? அப்படியானால் தேவன் மனிதனாக மாறியிருக்க மாட்டாரா? அவர் மனுஷ அவதரிப்பு என்பதால், அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்டார். இதிலிருந்தே, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு வந்தது. இது உண்மையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான பிரிவின் காரணமாக ஏற்பட்டது. இயேசு மாம்சத்தின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணினார். அவர் சாதாரண மனிதனின் மாம்சத்தைத் தரித்திருந்ததால், அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் இவ்வாறு சொன்னார்: “எனது வெளிப்புறத் தோற்றம் ஒரு சிருஷ்டியினுடையதாக இருக்கிறது. இந்தப் பூமிக்கு வருவதற்காக நான் ஒரு மாம்சத்தைத் தரித்திருந்ததால், நான் இப்போது பரலோகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன்.” இந்தக் காரணத்திற்காகவே, அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனிடம் மட்டுமே ஜெபிக்க முடிந்தது. இது அவருடைய கடமையாக இருந்தது. மேலும், அதுவே மாம்சமாகிய தேவனுடைய ஆவியானவர் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவிடம் ஜெபித்ததனால், அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர் இன்னும் தேவனாகவே இருந்தார், ஏனென்றால் அவர் ஆவியானவரின் மாம்சமானவராக மட்டுமே இருந்தார், மேலும் அவருடைய சாராம்சம் இன்னும் ஆவியானவராகவே இருந்தது. அவரே தேவனாக இருந்தால், அவர் ஏன் ஜெபம் செய்தார் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். ஏனென்றால், அவர் மாம்சமாகிய தேவனாக இருந்தார், மாம்சத்திற்குள் வாழும் தேவனாக இருந்தாரே தவிர, பரலோகத்திலுள்ள ஆவியானவராக அல்ல. மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லோருமே தேவனாகவே இருக்கின்றார்கள். மூவரும் ஒருவராக உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவரை ஒரே மெய்த்தேவனாகக் கருத முடியும். இதனாலேயே, அவருடைய வல்லமை மிகவும் பெரியதாக இருக்கிறது. இதனாலேயே, அவர் ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். குமாரன் வந்து ஜெபம் செய்தபோது, அந்த ஆவியானவருக்கே அவர் ஜெபத்தை ஏறெடுத்தார். உண்மையில், அவர் ஒரு சிருஷ்டியின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். மாம்சம் முழுமையானதாக இல்லை என்பதால், அவர் முழுமையாக இல்லை, அவர் மாம்சத்திற்குள் வந்தபோது பல பெலவீனங்களைக் கொண்டிருந்தார். அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்ததால் அவர் மிகவும் கலக்கமுற்றார். அதனால்தான் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு பிதாவாகிய தேவனிடம் மூன்று முறை ஜெபம்பண்ணினார், அதேபோல் அதற்கு முன்பும் பல முறை ஜெபம்பண்ணினார். அவர் தம்முடைய சீஷர்களுடன் ஜெபம்பண்ணினார். அவர் மலை மீது தனியாக ஜெபம்பண்ணினார். அவர் மீன்பிடி படகில் ஜெபம்பண்ணினார். அவர் திரளான ஜனங்கள் மத்தியில் ஜெபம்பண்ணினார். அப்பத்தைப் பிட்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் ஏன் அவ்வாறு ஜெபம்பண்ணினார்? அவர் ஆவியானவரிடமே ஜெபம்பண்ணினார். மாம்சத்தின் கண்ணோட்டத்தில் அவர் ஆவியானவரிடமும், பரலோகத்திலுள்ள ஆவியானவரிடமும் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால், மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, இயேசு அந்தக் கட்ட கிரியையில் குமாரனானார். ஆனாலும், இந்தக் கட்டத்தில், அவர் ஜெபம்பண்ணுவதில்லை. அது ஏன்? ஏனென்றால், அவர் வெளிப்படுத்துவது வார்த்தையின் கிரியையாகும் மற்றும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பும் சிட்சிப்புமாகும். அவருக்கு ஜெபங்கள் தேவையில்லை, பேசுவதே அவருடைய ஊழியமாகும். அவர் சிலுவையில் அறையப்படுவதில்லை. மேலும், அவர் மனிதனால் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவர் தமது கிரியையை மட்டுமே செய்கிறார். இயேசு ஜெபம் பண்ணிய வேளையில், பரலோக ராஜ்யம் இறங்கி வருவதற்காகவும், பிதாவின் சித்தம் செய்யப்படுவதற்காகவும், வரவிருக்கும் கிரியைக்காகவும் பிதாவாகிய தேவனிடம் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்தில், பரலோகராஜ்யம் ஏற்கனவே இறங்கி வந்து விட்டது, அப்படியானால் அவர் இன்னும் ஜெபம் பண்ண வேண்டுமா? காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அவருடைய கிரியையாகும். மேலும் புதிய காலங்கள் இனிமேல் கிடையாது, அப்படியானால், அடுத்தக் கட்டத்திற்கு ஜெபம் பண்ண வேண்டிய அவசியமுள்ளதா? இல்லை என்று நான் நினைக்கிறேன்!

மனிதனுடைய விளக்கங்களில் பல முரண்பாடுகள் உள்ளன. மெய்யாகவே, இவை அனைத்தும் மனிதனுடைய கருத்துக்களாகும். நீங்கள் அனைவரும் மேற்கொண்டு ஆய்வு செய்யாமலேயே, அவர்கள் சொல்வது சரி என்று நம்புவீர்கள். ஒரு திரியேக தேவனைக் குறித்த இதுபோன்ற கருத்துக்கள் மனிதனுடைய கருத்துக்கள்தான் என்பதை நீங்கள் அறியவில்லையா? மனிதனுடைய எந்த அறிவும் முழுமையாகவும் பரிபூரணமாகவும் இருப்பதில்லை. அவை எப்போதும் களங்கமானவையாகவே இருக்கின்றன. மேலும், மனிதனிடம் பல கருத்துக்கள் உள்ளன. ஒரு சிருஷ்டியால் தேவனுடைய கிரியையை விளக்க முடியாது என்பதையே இது நிரூபிக்கின்றது. மனிதனுடைய மனதில் ஏராளமான காரியங்கள் உள்ளன. இவை அனைத்தும் பகுத்தறிதல் மற்றும் சிந்தனை ஆகியவற்றிலிருந்து வருகின்றன, இவை சத்தியத்துடன் முரண்படுகின்றன. உங்கள் பகுத்தறிவால் தேவனுடைய கிரியையை முழுமையாகப் பிரிக்க முடியுமா? யேகோவாவின் எல்லா கிரியைக்குள்ளும் உள்ள உள்நோக்கத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? ஒரு மனிதனாக உன்னால் அதை அறிந்துகொள்ள முடியுமா அல்லது நித்தியத்திலிருந்து நித்தியம் வரை காணக்கூடிய தேவனால் அறிந்துகொள்ள முடியுமா? வெகு காலத்திற்கு முந்தைய நித்தியத்திலிருந்து வரவிருக்கும் நித்தியம் வரை உன்னால் காண முடியுமா அல்லது அவ்வாறு செய்யக்கூடிய தேவனால் முடியுமா? நீ என்ன சொல்கிறாய்? தேவனைக் குறித்து விவரிக்க நீ எவ்விதத்தில் தகுதியுள்ளவனாக இருக்கிறாய்? உன் விளக்கம் எதன் அடிப்படையிலானது? நீ தேவனா? வானமும், பூமியும், யாவும் தேவனாலேயே சிருஷ்டிக்கப்பட்டவையாகும். இதைச் செய்தது நீ அல்ல, அப்படி இருக்கும்போது நீ ஏன் தவறான விளக்கங்களைக் கொடுக்கிறாய்? இப்போது, நீ திரித்துவ தேவனை தொடர்ந்து நம்புகிறாயா? இவ்விதமாக அது மிகவும் பாரமாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? நீ மூவரை அல்ல, ஒரே தேவனை விசுவாசிப்பது சிறந்தது. ஒளியாக இருப்பது சிறந்தது, ஏனென்றால் கர்த்தருடைய பாரம் ஒளியாக இருக்கிறது.

முந்தைய: அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

அடுத்த: ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக