தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III

நம்முடைய கடந்த சில ஐக்கியங்கள் உங்கள் ஒவ்வொருவரிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போதைக்கு, தேவன் மெய்யாகவே இருக்கிறார் என்பதையும், தேவன் உண்மையில் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதையும் முடிவில் ஜனங்களால் உண்மையாகவே உணர முடிகிறது. ஜனங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்திருந்தாலும், அவர்கள் அவருடைய எண்ணங்களையும் யோசனைகளையும் இப்போது புரிந்து கொண்டது போல ஒருபோதும் புரிந்து கொண்டதோ, இப்போது அவர்கள் அனுபவிப்பதைப் போல, அவருடைய நடைமுறைச் செயல்களை அவர்கள் உண்மையில் அனுபவித்ததோ இல்லை. அது அறிவாக இருந்தாலும் அல்லது உண்மையான நடைமுறையாக இருந்தாலும், பெரும்பாலான ஜனங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு, உயர்வான புரிதலை அடைந்துள்ளனர். மேலும் அவர்கள், தங்களின் சொந்த, கடந்தகால முயற்சிகளில் இருந்த பிழையையும், அவர்களுடைய அனுபவத்தின் மேலோட்டமான தன்மையையும், அவர்களின் அனுபவத்தின் பெரும்பகுதி தேவனின் சித்தத்திற்கு ஏற்ப இல்லை என்பதையும், மேலும் மனிதனுக்கு தேவனுடைய மனநிலையைப் பற்றிய அறிவு அதிகம் இல்லை என்பதையும், அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மனிதனிடத்திலுள்ள இந்த அறிவு வெறுமனே ஒரு வகைக் கருத்து அடிப்படையிலான அறிவே ஆகும்; பகுத்தறிவின் நிலைக்கு உயர ஒருவருடைய அனுபவங்களின் மூலமான படிப்படியான ஆழமாகுதலும், பெலப்படுதலும் தேவையாய் இருக்கிறது. மனிதர்கள் உண்மையிலேயே தேவனைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் தங்கள் இருதயங்களில் விசுவாசிக்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் கூறலாம். ஆனால் அவர் உண்மையில் எவ்வகையான தேவன், அவருடைய சித்தம் என்ன, அவருடைய மனநிலை என்ன, மனிதகுலத்தின் மீதான அவருடைய உண்மையான மனப்பான்மை என்ன போன்ற குறிப்பிட்ட கேள்விகளைப் பற்றிய உண்மையான புரிதல் அவர்களுக்கு இல்லை. இது தேவன்மீது ஜனங்கள் கொண்டுள்ள விசுவாசத்தைப் பெரிதும் விட்டுக்கொடுக்கச் செய்கிறது, மேலும் அவர்களின் விசுவாசம் எப்போதும் தூய்மை அல்லது பரிபூரணமடைவதைத் தடைசெய்கிறது. நீ தேவனுடைய வார்த்தையை நேருக்கு நேர் சந்தித்தாலும், அல்லது உன் அனுபவங்களின் மூலம் தேவனை எதிர்கொண்டதாக நீ உணர்ந்தாலும், அப்போதும் நீ அவரை முழுமையாகப் புரிந்துகொள்கிறாய் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தேவனுடைய எண்ணங்களை, அல்லது அவர் எதை நேசிக்கிறார், எதை வெறுக்கிறார், அவரை கோபப்படுத்துவது எது, அவருக்கு மகிழ்ச்சியைத் தருவது எது ஆகியவற்றை நீ அறிந்திருக்கவில்லை. எனவே நீ அவரைப் பற்றின உண்மையான புரிதலைக் கொண்டிருக்கவில்லை. உன்னுடைய விசுவாசமானது உன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், உன்னுடைய தெளிவற்ற நிலை மற்றும் கற்பனையின் அடித்தளத்தின்மேல் கட்டப்பட்டுள்ளது. அது இன்னும் உண்மையான விசுவாசமாக இல்லை, மேலும் நீ இன்னும் உண்மையான விசுவாசியாக இருக்கவில்லை. இந்த வேதாகமக் கதைகளிலிருக்கும் எடுத்துக்காட்டுகளின் விளக்கங்கள் தேவனுடைய இருதயத்தையும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலும் அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார், அவர் ஏன் இந்தக் கிரியையைச் செய்தார், அதைச் செய்தபோது அவருடைய உண்மையான நோக்கம் மற்றும் அவருடைய திட்டம் என்ன, அவர் எவ்வாறு தன் யோசனைகளை நிறைவேற்றினார், மற்றும் அவர் தனது திட்டத்திற்காக எவ்வாறு ஆயத்தமாகி அவற்றை உருவாக்கினார் என்பதை அறிந்துகொள்ள மனிதர்களை அனுமதித்தன. இந்தக் கதைகளின் மூலம், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் போது அவரின் ஒவ்வொரு குறிப்பான நோக்கத்தையும் ஒவ்வொரு உண்மையான சிந்தனையையும், வெவ்வேறு நேரங்களிலும், வெவ்வேறு காலங்களிலும் மனிதர்களைப் பற்றிய அவரது மனப்பான்மை குறித்த விரிவான, பிரத்யேகமான புரிதலையும் நாம் பெறலாம். தேவன் என்ன நினைத்துக் கொண்டிருந்தார், அவருடைய மனப்பான்மை என்ன, ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் எதிர்கொண்டபோது அவர் வெளிப்படுத்திய மனநிலை ஆகியவற்றை ஜனங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், இது ஒவ்வொரு நபரும் தேவன் மெய்யாகவே இருக்கிறார் என்பதை இன்னும் ஆழமாக உணரவும், அவருடைய நடைமுறை மற்றும் நம்பகத்தன்மைகளை இன்னும் ஆழமாக உணரவும் உதவும். இந்த நிகழ்வுகளைச் சொல்வதற்கான எனது குறிக்கோள் என்னவென்றால், ஜனங்கள் வேதாகம வரலாற்றைப் புரிந்துகொள்வதற்காகவோ அல்லது அவர்கள் வேத வசனங்களிலும், அதிலுள்ளவர்களைப் பற்றியும் பரிச்சயமாகும்படி உதவி செய்வதற்காகவோ, குறிப்பாக தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்தவற்றின் பின்னணியைப் புரிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவுவதற்காகவோ அல்ல. மாறாக, அவர்கள் தேவனுடைய சித்தத்தையும், அவருடைய மனநிலையையும், அவரின் ஒவ்வொரு சிறிய பகுதியையும் புரிந்துகொள்ளவும், தேவனைப் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வமான மற்றும் மிகத் துல்லியமான புரிதலையும் அறிவையும் அவர்கள் பெறும்படி உதவுவதே ஆகும். இவ்வகையில், ஜனங்களின் இருதயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக, தேவனுக்காகத் திறக்கப்பட்டு, தேவனுடன் நெருக்கமாகி, மேலும் அவர்கள் அவரையும், அவருடைய மனநிலையையும், அவருடைய சாராம்சத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ளவும் மற்றும் உண்மையான தேவனாகிய அவரையே நன்றாக அறிந்து கொள்ளவும் முடியும்.

தேவனுடைய மனநிலை மற்றும் அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதைப் பற்றிய அறிவு, ஜனங்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தேவன் மீது அவர்கள் அதிக நம்பிக்கை வைக்கவும், உண்மையான கீழ்ப்படிதலையும், அவரிடத்திலான பயத்தையும் அடைய அவர்களுக்கு உதவும். அதன்பின், அவர்கள் ஒருபோதும் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவோ ஆராதிக்கவோ மாட்டார்கள். தேவன் மூடர்களையோ அல்லது ஒரு கூட்டத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களையோ விரும்பவில்லை, மாறாக தேவனுடைய மனநிலையைப் பற்றிய தெளிவான புரிதலும் அறிவும் உள்ளவர்களாகவும், தேவனின் சாட்சிகளாகவும் செயல்படக்கூடிய ஒரு குழுவினரை, அவருடைய அருமையான குணத்தின் காரணமாகவும், அவரிடத்தில் என்ன இருக்கிறது, அவர் யாராய் இருக்கிறார், அவருடைய நீதியான மனநிலை ஆகிய இக்காரணங்களால் ஒருபோதும் தேவனை விட்டுவிடாத ஜனங்களையே அவர் விரும்புகிறார். தேவனைப் பின்பற்றுபவர் என்ற முறையில், இன்னும் உன் இருதயத்தில் தெளிவின்மை இருந்தால், அல்லது தேவன் மெய்யாகவே இருக்கிறார் என்பது, அவரின் மனநிலை, அவரிடம் என்ன இருக்கிறது, அவர் யாராய் இருக்கிறார், மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான அவரது திட்டம் ஆகியவை குறித்துத் தெளிவின்மையும் அல்லது குழப்பமும் இருந்தால், உன் விசுவாசம் தேவனுடைய மெச்சுதலைப் பெற முடியாது. இவ்வகையான நபர் தன்னைப் பின்பற்றுவதையும், தனக்கு முன் வருவதையும் தேவன் விரும்பவில்லை. ஏனென்றால் இவ்வகையான நபர் தேவனைப் புரிந்து கொள்ளாததால், அவர்களால் தங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்க முடியவில்லை, அவர்களின் இருதயம் அவருக்கு மூடப்பட்டுள்ளது, எனவே தேவன்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசுத்தங்கள் நிறைந்ததாய் இருக்கிறது. அவர்கள் தேவனைப் பின்பற்றுகிறதைக் கண்மூடித்தனம் என்றே சொல்லக்கூடும். தேவனைப் பற்றிய உண்மையான புரிதலும் அறிவும் இருந்தால் மட்டுமே, ஜனங்கள் உண்மையான விசுவாசத்தைப் பெற்று, உண்மையான விசுவாசிகளாக இருக்க முடியும், இது அவர்களுக்குள் உண்மையான கீழ்ப்படிதலையும், தேவனுக்குப் பயப்படுதலையும் உண்டாக்குகிறது. இந்த வழியில் மட்டுமே அவர்கள் தங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்து, அவருக்காக அதைத் திறந்து கொடுக்க முடியும். தேவன் இதைத்தான் விரும்புகிறார், ஏனென்றால் அவர்கள் செய்யும் மற்றும் நினைக்கும் அனைத்தும் தேவனின் சோதனையைத் தாங்கவும், தேவனுக்காகச் சாட்சியாக விளங்கவும் முடியும். தேவனுடைய மனநிலையைக் குறித்து, அல்லது அவரிடத்தில் என்ன இருக்கிறது, அவர் யாராய் இருக்கிறார், அல்லது அவர் செய்கிற எல்லாவற்றிலும் அவருடைய சித்தம் மற்றும் அவருடைய எண்ணங்கள் ஆகியவற்றைக் குறித்து நான் உங்களிடம் தெரிவிக்கும் அனைத்தும், மற்றும் எந்தக் கண்ணோட்டத்தில், எந்தக் கோணத்தில் இருந்து நான் அதைப் பற்றி பேசினாலும், அவை அனைத்தும் நீங்கள் தேவன் மெய்யாகவே இருக்கிறார் என்பதைக் குறித்து அதிக நிச்சயத்துடன் இருக்கவும், மனுக்குலத்தின் மீதான அவருடைய அன்பைச் சரியாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், ஜனங்களுக்காக அவர் கொண்டுள்ள அக்கறை, மற்றும் மனுக்குலத்தை நிர்வகிக்கவும், இரட்சிக்கவும் அவரிடத்திலிருக்கும் உண்மையான விருப்பத்தை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் உதவி செய்வதற்காகவே ஆகும்.

உலகத்தைச் சிருஷ்டித்ததில் இருந்து தேவனின் எண்ணங்கள், யோசனைகள் மற்றும் செயல்கள் பற்றிய மீள்பார்வை

இன்றைக்கு முதலாவதாக நாம் தேவனுடைய எண்ணங்கள், யோசனைகள் மற்றும் மனுக்குலத்தை சிருஷ்டித்ததிலிருந்து அவருடைய ஒவ்வொரு அசைவையும் சுருக்கமாகக் காணலாம். உலகை உருவாக்கினது முதல் கிருபையின் காலத்தின் அதிகாரப்பூர்வ ஆரம்பம் வரை அவர் என்ன கிரியைகளைச் செய்து முடித்துள்ளார் என்பதைப் பார்ப்போம். அதன் பின்பு, தேவனுடைய எண்ணங்களிலும் யோசனைகளிலும் எவைகளெல்லாம் மனிதனுக்குத் தெரியாதவைகள் என்று நாம் கண்டறியலாம், மேலும் அங்கிருந்து தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் ஒழுங்குமுறையில் நாம் தெளிவாகி, மேலும் தேவன் தனது நிர்வாகக் கிரியை மற்றும் அதன் பிறப்பிடம் மற்றும் மேம்பாட்டுச் செயல்முறையை எந்தச் சூழலில் உருவாக்கினார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் அவர் தன் நிர்வாகக் கிரியையிலிருந்து, அதாவது அவருடைய நிர்வாகக் கிரியையின் மையம் மற்றும் நோக்கத்திலிருந்து என்ன பலன்களைப் பெற விரும்புகிறார் என்றும் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்த விஷயங்களை நாம் புரிந்து கொள்ள, மனிதர்கள் இல்லாத தொலைதூர, ஆழ்ந்த மற்றும் அமைதியான காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் …

தேவன் தனிப்பட்ட முறையில் முதல் ஜீவனுள்ள மனிதனைச் சிருஷ்டிக்கிறார்

தேவன் தமது படுக்கையிலிருந்து எழுந்தபோது, அவரிடம் இருந்த முதல் எண்ணம் இதுதான்: அவருடன் வாழ்வதற்கும், அவருடைய நிலையான தோழனாக இருப்பதற்கும் ஒரு ஜீவனுள்ள நபரை, உண்மையான, உயிருள்ள மனிதனை சிருஷ்டிக்க வேண்டும் என்பதே ஆகும்; இந்த மனிதனால் அவருக்குச் செவிகொடுக்க முடியும், அவர் அவனில் நம்பிக்கை கொண்டு அவனோடு பேச முடியும். பின்னர், முதன்முறையாக, தேவன் கை நிறைய மண்ணை எடுத்து, அதைக்கொண்டு தனது மனதில் கற்பனை செய்த உருவத்திற்கு ஏற்ப முதல் உயிருள்ள நபரை உருவாக்கினார், பின்னர் அவர் இந்த சிருஷ்டிக்கு ஆதாம் என்று பெயரிட்டார். இந்த உயிருள்ள மற்றும் சுவாசமுள்ள நபரைப் பெற்றவுடன் தேவன் எப்படி உணர்ந்தார்? முதல்முறையாக அன்பான ஒரு தோழன் கிடைத்த மகிழ்ச்சியை அவர் உணர்ந்தார். ஒரு தந்தையாக இருப்பதற்கான பொறுப்பையும் அதனுடன் வரும் அக்கறையையும் அவர் முதன்முறையாக உணர்ந்தார். இந்த உயிருள்ள மற்றும் சுவாசமுள்ள மனிதன் தேவனுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுத்தான்; அவர் முதல்முறையாக ஆறுதலாக உணர்ந்தார். அவருடைய எண்ணங்களாலோ அல்லது வார்த்தைகளாலோ கூட செய்து முடிக்காமல், தேவன் தன் சொந்தக் கைகளால் செய்த முதல் காரியம் இதுதான். இந்த வகையான ஒர் உயிருள்ள மற்றும் சுவாசிக்கும் நபர், மாம்சம் மற்றும் இரத்தத்தால் ஆன, ஓர் உடலுடன் மற்றும் வடிவத்துடன் மற்றும் தேவனுடன் பேசக்கூடிய ஒரு நபர் தேவனுக்கு முன்னால் நின்றபோது, அவர் இதற்கு முன்பு உணர்ந்திராத ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தார். தேவன் உண்மையிலேயே தனது பொறுப்பை உணர்ந்தார், இந்த ஜீவனுள்ள மனிதன் அவருடைய இருதயத்தைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், அவன் செய்த ஒவ்வொரு சிறிய அசைவிலும் அவரது இருதயத்தை இனிமையாக்கி, அசைத்தான். இந்த ஜீவனுள்ள மனிதன் தேவனுக்கு முன்னால் நின்றபோது, இதுபோன்ற அநேகரைப் பெறுவதற்கான எண்ணம் அவருக்கு முதல் தடவையாக வந்தது. இது தேவன் கொண்டிருந்த இந்த முதல் சிந்தனையுடன் தொடங்கிய நிகழ்வுகளின் தொடராகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் தேவனுக்கு முதன்முறையாக நிகழ்ந்தன, ஆனால் இந்த முதல் நிகழ்வுகளில், அவர் அந்நேரத்தில் மகிழ்ச்சி, பொறுப்பு, அக்கறை போன்ற எந்த உணர்வை உணர்ந்தபோதிலும், அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லாமல் இருந்தார். அந்தத் தருணத்திலிருந்து, தான் முன்னெப்போதும் அனுபவித்திராத, தனிமையையும், சோகத்தையும் தேவன் உண்மையிலேயே உணர்ந்தார். மனிதன் தனது அன்பையும் அக்கறையையும் அல்லது மனிதனுக்கான தன் நோக்கங்களையும் ஏற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று அவர் உணர்ந்தார், எனவே அவர் தனது இருதயத்தில் இன்னும் துக்கத்தையும் வேதனையையும் உணர்ந்தார். அவர் மனிதனுக்காக இந்த காரியங்களைச் செய்திருந்தாலும், மனிதன் அதை அறிந்திருக்கவில்லை, அவனுக்கு அது புரியவில்லை. மனிதன் ஒரு பக்கம் அவருக்கு சந்தோஷத்தை, இன்பத்தை, ஆறுதலை வருவித்திருந்தாலும், அவைகளோடு கூட முதல்முறையாக துக்கமான, தனிமையான உணர்வையும் அவருக்கு வருவித்தான். இவைதான் அந்நேரத்தில் தேவனுடைய எண்ணங்களும் உணர்வுகளுமாக இருந்தன. தேவன் இவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய இருதயத்தில் அவர் மகிழ்ச்சியிலிருந்து துக்கத்தையும், துக்கத்திலிருந்து வேதனையையும் அடைந்தார். மேலும் இந்த உணர்வுகளுடன் கவலையும் கலந்திருந்தன. அவர் செய்ய விரும்பியதெல்லாம், சீக்கிரத்தில் இந்த மனிதனை, இந்த மனுகுலத்தைத் தன் இருதயத்தில் இருந்ததை அறிந்து கொள்ளச் செய்து, தன்னுடைய நோக்கங்களை அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளச் செய்வதே ஆகும். அதன்பின், அவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக மாறி, அவருடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, அவருடைய சித்தத்தோடு ஒத்துப்போக முடியும். அவர்கள் இனிமேல் தேவன் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டு, பேசாமல் இருக்க மாட்டார்கள்; அவர்கள் இனிமேல் தேவனுடைய கிரியையில் அவருடன் எவ்வாறு இணைவது என்பதைப் பற்றி அறியாமலிருக்க மாட்டார்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இனி தேவனுடைய தேவைகளைக் குறித்து அலட்சியமாக இருக்க மாட்டார்கள். தேவன் செய்த இந்த முதல் காரியங்கள் மிகவும் அர்த்தமுள்ளவையாகும். மேலும் இவை, அவருடைய நிர்வாகத் திட்டத்திற்கான மற்றும் இன்றைய மனிதர்களுக்கான பெரிதான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

எல்லாவற்றையும், மனிதர்களையும் உருவாக்கிய பிறகு, தேவன் ஓய்ந்திருக்கவில்லை. அவர் அமைதியற்றவராகவும், அவருடைய நிர்வாகத்தை நிறைவேற்றவும், மனிதர்களிடையே தான் மிகவும் நேசித்த ஜனங்களை ஆதாயம் பண்ணவும் ஆர்வமாக இருந்தார்.

நியாயப்பிரமாண காலத்திற்கு முன்னும் பின்னும் சம்பவத்திராத ஒரு தொகுப்பு கிரியைகளை தேவன் செய்கிறார்

அடுத்து, தேவன் மனிதர்களை சிருஷ்டித்த சிறிது காலத்திலேயே, உலகம் முழுவதும் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டதை வேதத்தில் காண்கிறோம். நோவாவைக் குறித்து வெள்ளத்தைப் பற்றின பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேவனுடைய ஒரு செயலை செய்து முடிக்கும்படி, அவருடன் செயல்பட, தேவனுடைய அழைப்பைப் பெற்ற முதல் நபர் நோவா என்று கூறலாம். நிச்சயமாக, பூமியிலுள்ள ஒரு நபரை, தேவன் தனது கட்டளைப்படி ஒன்றைச் செய்ய அழைத்தது இதுவே முதல் முறையாய் இருந்தது. நோவா பேழையைக் கட்டி முடித்தவுடனே, தேவன் முதன்முறையாக பூமியை வெள்ளத்தில் மூழ்கப் பண்ணினார். தேவன் பூமியை வெள்ளத்தால் அழித்தபோது, மனிதர்களை சிருஷ்டித்த காலத்திலிருந்து அவர் அவர்களைக்குறித்து வெறுப்படைந்தது இதுவே முதல் முறையாகும்; இதுவே, இந்த மனித இனத்தை வெள்ளத்தின் மூலம் அழிக்கத்தக்க வலிமிகுந்த முடிவை எடுக்கும்படி தேவனைக் கட்டாயப்படுத்தியது. வெள்ளம் பூமியை அழித்தபின்பு, தேவன் மனிதர்களிடம் தனது முதல் உடன்படிக்கையைப் பண்ணினார். அது வெள்ளத்தால் உலகத்தை மீண்டும் ஒருபோதும் அழிக்க மாட்டார் என்பதைக் காட்டும் ஓர் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் அடையாளம் வானவில் ஆகும். இது மனிதர்களுடனான தேவனின் முதல் உடன்படிக்கையாகும், எனவே வானவில் தேவன் கொடுத்த உடன்படிக்கையின் முதல் அடையாளமாகும்; வானவில் என்பது ஓர் உண்மையான, காணப்படுகிற இயற்பொருளாகும். வானவில் இருப்பதுதான், தான் இழந்த முந்தைய மனித இனத்திற்காக, தேவனை அடிக்கடி வருத்தப்பட வைக்கிறது, மேலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறதாய் அது இருக்கிறது…. தேவன் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார். அவர் அமைதியற்றவராக இருந்தார், அவருடைய நிர்வாகத்தில் அடுத்த படியை எடுத்துவைக்க அவர் ஆர்வமாக இருந்தார். அதைத் தொடர்ந்து, இஸ்ரவேல் முழுவதிலும் தனது கிரியைக்காக முதல் தேர்வாக தேவன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார். தேவன் இத்தகைய நபரைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நபரின் மூலம் மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தனது கிரியையைச் செய்யத் தொடங்கவும், இந்த நபரின் சந்ததியினரிடையே தனது கிரியையைத் தொடரவும் தேவன் தீர்மானித்தார். தேவன் ஆபிரகாமிடம் செய்த காரியம் இதுதான் என்பதை நாம் வேதத்தில் காணலாம். பின்பு தேவன் இஸ்ரவேலை முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாக்கி, தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களான இஸ்ரவேலர் மூலமாக நியாயப்பிரமாண காலத்தைத் தொடங்கினார். மீண்டும் முதன்முறையாக, மனிதர்கள் பின்பற்ற வேண்டிய வெளிப்படையான விதிகளையும் சட்டங்களையும் தேவன் இஸ்ரவேலர்களுக்கு வழங்கினார், அவர் அவற்றை விரிவாக விளக்கினார். இதுவே தேவன் மனிதர்களுக்கு எவ்வாறு பலியிட வேண்டும், அவர்கள் எப்படி வாழ வேண்டும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது, எந்தெந்த பண்டிகைகளையும் மற்றும் நாட்களையும் ஆசரிக்க வேண்டும், செய்கிற எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த அளவிற்கு பிரத்தியேகமான, தரப்படுத்தப்பட்ட விதிகளை வழங்கின முதல் முறையாகும். மனுக்குலம் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் குறித்த விரிவான, தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும், கொள்கைகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

ஒவ்வொரு முறையும் நான் “முதல் முறையாக” என்று சொல்லும்போது, தேவன் இதற்கு முன்பு செய்திராத ஒரு கிரியையை அது குறிக்கிறது. இது முன்னர் இருந்திராத கிரியையைக் குறிக்கிறது, மேலும் தேவன் மனுக்குலத்தையும், எல்லா வகையான உயிரினங்களையும், ஜீவராசிகளையும் சிருஷ்டித்திருந்தாலும், இது அவர் இதற்கு முன்பு செய்திராத ஒரு வகைக் கிரியையாகும். இக்கிரியை முழுமையும் தேவனுடைய மனுக்குல நிர்வாகத்தை உள்ளடக்கியதாகும்; இது முழுவதும் ஜனங்களுடனும், அவருடைய இரட்சிப்பு மற்றும் அவர்களை நிர்வகிப்பதுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. ஆபிரகாமுக்குப் பிறகு, தேவன் மீண்டும் இன்னொருவனை முதன்மையாக்கினார்—நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவனாகவும், தேவனுக்கு எப்போதும் பயந்து, பொல்லாப்புக்கு விலகி, தேவனுக்கு சாட்சியாக இருந்து, சாத்தானின் சோதனைகளைத் தாங்கக்கூடியவனாகவும் இருந்த யோபுவைத் தேர்ந்தெடுத்தார். இது, சாத்தான் ஒரு நபரைச் சோதிக்கும்படி தேவன் அனுமதித்த முதல் முறையுமாகும். மேலும் இது, அவர் சாத்தானுடன் பந்தயம் கட்டிய முதல் முறையும் ஆகும். இறுதியில், சாத்தானை எதிர்கொள்ளும்போது, சாட்சியாக நிற்கவும், அவருக்காகச் சாட்சியமளிக்கவும் வல்ல ஒருவனையும், சாத்தானை முற்றிலும் வெட்கப்படுத்தக்கூடிய ஒருவனையும் அவர் முதன்முறையாகப் பெற்றார். மனுக்குலத்தை சிருஷ்டித்ததிலிருந்து, அவருக்காக சாட்சியாக வாழ முடிந்த, அவர் பெற்ற முதல் நபர் இவன்தான். தேவன் இந்த மனிதனைப் பெற்றவுடன், தன்னுடைய கிரியையின் அடுத்த அடிக்கான இடத்தையும், தான் தெரிந்தெடுக்கப்போகும் ஜனங்களையும் ஆயத்தப்படுத்தி, தனது நிர்வாகத்தைத் தொடரவும், தனது செயலில் அடுத்த கட்டத்தை நிறைவேற்றவும், இன்னும் ஆர்வமாக இருந்தார்.

இவை அனைத்தையும் பற்றி ஜக்கியம் கொண்ட பிறகு, தேவனுடைய சித்தத்தைக் குறித்து உங்களுக்கு சரியான புரிதல் இருக்கிறதா? தேவன் அவரின் மனுக்குல நிர்வாகத்தினுடைய, மனுக்குலத்தின் இரட்சிப்பினுடைய இந்த நிகழ்வை, எல்லாவற்றையும் விட முக்கியமானதாகக் கருதுகிறார். அவர் இந்தக் காரியங்களைத் தனது சிந்தையால், தன்னுடைய வார்த்தைகளால் மட்டும் செய்யாமல், நிச்சயமாக ஒரு சாதாரண மனப்பான்மையுடனும் செய்யாமல், அவை அனைத்தையும் அவர் ஒரு திட்டத்துடனும், ஒரு குறிக்கோளுடனும், தரங்களுடனும், தன் சித்தத்துடனும் செய்கிறார். மனுக்குலத்தை இரட்சிக்கும் இந்தக் கிரியை, தேவனுக்கும் மனிதனுக்குமான பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. கிரியை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தடைகள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், மனிதர்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அல்லது மனுக்குலத்தின் கலகத்தன்மை எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், இதில் எதுவுமே தேவனுக்குக் கடினமானதல்ல. தேவன் அவருடைய கடும் முயற்சியைப் பயன்படுத்தி, அவர் தாமே செய்துமுடிக்க விரும்பும் கிரியையை நிர்வகித்து, தன்னைத்தானே மும்முரமாக வைத்துக்கொள்கிறார். அவர் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தவும் செய்து, அவர் கிரியை செய்யவிருக்கும் ஜனங்கள் மீதும், அவர் செய்து முடிக்க விரும்பும் அனைத்து கிரியைகளின் மீதும் தனது ராஜரீகத்தைப் பயன்படுத்துகிறார்—இது எதுவுமே இதற்கு முன் செய்யப்படவில்லை. மனுக்குலத்தை நிர்வகிக்கும், இரட்சிக்கும் இந்தப் பெரிய திட்டத்திற்கு தேவன் இந்த முறைகளைப் பயன்படுத்துவதும், இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்துவதும் இதுவே முதல் முறை ஆகும். தேவன் இந்தக் கிரியையைச் செய்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய கடும் முயற்சியையும், தன்னிடம் இருக்கிறதையும், தான் யாராய் இருக்கிறார் என்பதையும், தன்னுடைய ஞானத்தையும் சர்வ வல்லமையையும், தன்னுடைய மனநிலையின் ஒவ்வொரு அம்சத்தையும் தயக்கமின்றி, மனுக்குலத்திற்குச் சிறிது சிறிதாகத் தெரியப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். அவர் இதற்கு முன் இவ்விஷயங்களைச் செய்யாததினால், அவர் அவைகளைத் தெரியப்படுத்தி, வெளிப்படுத்துகிறார். ஆகவே, முழு பிரபஞ்சத்திலும், தேவன் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் நோக்கம் கொண்ட ஜனங்களைத் தவிர, தேவனுடன் இப்படிப்பட்ட நெருக்கமான உறவைக் கொண்டிருந்த வேறெந்த உயிரினங்களும் அவருடன் இவ்வளவு நெருக்கமாய் இருந்ததில்லை. அவருடைய இருதயத்தில், அவர் நிர்வகிக்கவும் இரட்சிக்கவும் விரும்பும் மனுக்குலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; அவர் இந்த மனுக்குலத்தை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்வாய்க் கருதுகிறார். அவர் அவர்களுக்காக ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளபோதும்கூட, அவர்கள் தொடர்ந்து அவரை வேதனைப்படுத்தி, கீழ்ப்படியாமல் இருந்தபோதிலும், அவர் அவர்களிடத்தில் நம்பிக்கை இழக்காமல், எந்தவிதமான முறையீடும், வருத்தமும் இல்லாமல், தனது கிரியை அயராது தொடர்ந்து செய்கிறார். ஏனென்றால், சீக்கிரத்தில் ஜனங்கள் அவருடைய அழைப்பைக் கவனித்து, அவருடைய வார்த்தைகளால் தொடப்பட்டு, அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர் என்பதை உணர்ந்து, அவர் பக்கம் திரும்புவார்கள் என்பதை அவர் அறிவார் …

இன்று இவை அனைத்தையும் கேட்ட பிறகு, தேவன் செய்யும் அனைத்தும் மிகவும் சாதாரணமானவை என்று நீங்கள் நினைக்கலாம். அவருடைய வார்த்தைகளிலிருந்தும் அவருடைய கிரியையிலிருந்தும் தேவனுடைய சில நோக்கங்களை மனிதர்கள் எப்போதுமே உணர்ந்திருப்பதைப் போலத் தெரிகிறது, ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் அல்லது அறிவுக்கும் மற்றும் தேவன் என்ன சிந்திக்கிறார் என்பதற்கும் இடையே எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான், தேவன் ஏன் மனுக்குலத்தைப் படைத்தார், அவர் எதிர்பார்த்த மனுக்குலத்தைப் பெறுவதற்கான அவரது விருப்பத்தின் பின் இருந்த பின்னணியையும் பற்றி எல்லா ஜனங்களுக்கும் தெரிவிப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தில் தெளிவடைய, அதைப் புரிந்து கொள்ள இதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால், தேவனுடைய ஒவ்வொரு சிந்தனையும் யோசனையும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும், ஒவ்வொரு காலகட்டமும் அவருடைய முழு நிர்வாகக் கிரியைகளோடு பிணைக்கப்பட்டு, நெருக்கமாக இணைந்திருக்கின்றன. அதனால், நீ அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலுமுள்ள அவருடைய சிந்தனைகளையும் யோசனைகளையும் புரிந்து கொள்வது என்பது, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சமமாகும். இந்த அடித்தளத்தில்தான் தேவனைப் பற்றிய உன்னுடைய புரிதல் ஆழமடைகிறது. தேவன் உலகத்தை முதன்முதலில் சிருஷ்டித்தபோது, நான் முன்பு சொன்ன காரியங்களான, அவர் செய்த அனைத்தும், இப்போது சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பொருத்தமற்ற, வெறுமனே “தகவல்” போலத் தோன்றினாலும், உன் அனுபவங்களின் காலப்போக்கில் ஏதாவது ஒருநாள், இது ஓரிரு சாதாரண தகவல் அல்ல என்றும், அல்லது இது ஒருவித மறைபொருள் அல்ல என்றும் நீ நினைப்பாய். உன் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்போது, தேவனுக்கு உன் இருதயத்தில் ஏதேனும் ஓர் இடம் உண்டானவுடன், அல்லது நீ அவருடைய சித்தத்தை இன்னும் முழுமையாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டவுடன், நீ உண்மையிலேயே நான் இன்று பேசிக்கொண்டிருப்பதைக் குறித்த முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்துகொள்வாய். இப்போது நீங்கள் இதை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் இந்த விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வதும், அறிந்துகொள்வதும் இனியும் அவசியமானதே. தேவன் எதையாவது செய்யும்போது, அவர் தனது கிரியையைச் செய்யும்போது, அது அவருடைய யோசனைகளாலோ அல்லது சொந்தக் கைகளாலோ செய்தாலும், அவர் அதை முதன்முறையாகவோ அல்லது இறுதி முறையாகவோ செய்தாலும், முடிவில் தேவனுக்கு ஒரு திட்டம் உள்ளது, மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களும் அவருடைய எண்ணங்களும் உள்ளன. இந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனின் மனநிலையைக் குறிக்கின்றன, மேலும் அவை அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. தேவனின் மனநிலையும் மற்றும் அவரிடம் இருப்பதும், அவர் யாராய் இருக்கிறார் என்ற இவ்விரண்டும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். ஒரு நபர் தேவனுடைய மனநிலையையும், அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டவுடன், அவர் செய்வதை ஏன் செய்கிறார் என்பதையும், அவர் சொல்வதை ஏன் சொல்கிறார் என்பதையும் படிப்படியாக அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதிலிருந்து, தேவனைப் பின்பற்ற, சத்தியத்தைத் தொடர, தங்களின் மனநிலையில் மாற்றத்தைப் பெற அவர்களால் அதிக விசுவாசம் கொள்ள முடியும். அதாவது, தேவனைப் பற்றிய மனிதனின் புரிதலும், தேவன் மீதான அவனுடைய விசுவாசமும் பிரிக்க முடியாதவையாகும்.

ஜனங்கள் தேவனுடைய மனநிலையையும், அவரிடத்தில் என்ன இருக்கிறது, அவர் யாராக இருக்கிறார் ஆகியவற்றைக் குறித்த அறிவை பெற்றுக்கொண்டு, அதைப் புரிந்துகொண்டார்களானால், பின்பு அவர்கள் தேவனிடத்தில் இருந்து வரும் ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த ஜீவன் உனக்குள் உருவாக்கப்பட்டவுடன், தேவனுக்குப் பயப்படும் உன்னுடைய பயம் மிகவும் அதிகமாகும். இது மிக இயல்பாக வரும் ஓர் ஆதாயம் ஆகும். நீ தேவனுடைய மனநிலையை அல்லது சாராம்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளவோ அல்லது தெரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்றால், இக்காரியங்களைக் குறித்து நீ சிந்திக்க அல்லது கவனம் செலுத்தக்கூட விரும்பவில்லை என்றால், நீ தேவன் மீதான உன் விசுவாசத்தைத் தற்போது பின்தொடர்ந்து கொண்டிருக்கும் வழிமுறையானது ஒருபோதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற அல்லது அவருடைய மெச்சுதலைப் பெற உன்னை அனுமதிக்காது என்பதை என்னால் நிச்சயமாய் சொல்ல முடியும். அதற்கும் மேலாக, ஒருபோதும் நீ உண்மையிலேயே இரட்சிப்பை அடைய முடியாது, இவைகளே இறுதியான விளைவுகளாகும். ஜனங்கள் தேவனைப் புரிந்து கொள்ளாதபோது, அவருடைய மனநிலையை அறிந்து கொள்ளாதபோது, அவர்களுடைய இருதயங்கள் ஒருபோதும் அவருக்காக உண்மையாகத் திறக்கப்பட முடியாது. அவர்கள் தேவனைப் புரிந்துகொண்டவுடன், அவர்கள் அவருடைய இருதயத்தில் இருக்கிறதை ஆர்வத்தோடும் விசுவாசத்தோடும் புரிந்துகொள்ளவும், ருசிக்கவும் ஆரம்பிப்பார்கள். தேவனுடைய இருதயத்தில் இருப்பதை நீ புரிந்துகொண்டு, ருசிக்கும்போது உன்னுடைய இருதயம் படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக அவருக்காகத் திறக்கும். உன்னுடைய இருதயம் அவருக்காகத் திறக்கும்போது தேவனுடனான உன்னுடைய உரையாடல்கள், தேவனிடத்தில் நீ வைக்கிற கோரிக்கைகள் மற்றும் உன்னுடைய சொந்த மிதமிஞ்சிய ஆசைகள் எவ்வளவு வெட்கத்துக்குரியவையாக, வெறுக்கத்தக்கவையாக இருந்தன என்பதை நீ உணருவாய். உன்னுடைய இருதயம் உண்மையிலேயே தேவனுக்காகத் திறக்கும்போது, அவருடைய இருதயம் எத்தகைய முடிவில்லாத உலகம் என்பதை நீ காண்பாய். மேலும் நீ இதற்கு முன் அனுபவித்திராத ஒரு சாம்ராஜ்யத்திற்குள் நுழைவாய். இந்த சாம்ராஜ்யத்தில் ஏமாற்றுதல் இல்லை, வஞ்சகம் இல்லை, இருள் இல்லை, தீமை இல்லை. இங்கே நேர்மையும், விசுவாசமும், வெளிச்சமும், நேரிய நடத்தையும், நீதியும், இரக்கமும் மட்டுமே உண்டு. இது அன்பும் அக்கறையும் நிறைந்தது, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிறைந்தது, மேலும் இதன் மூலம் நீ ஜீவனுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உணருவாய். இவையே நீ உன் இருதயத்தை தேவனுக்காகத் திறக்கும்போது, அவர் உனக்கு வெளிப்படுத்துகிற காரியங்கள் ஆகும். இந்த முடிவில்லாத உலகம் தேவனுடைய ஞானமும், சர்வவல்லமையும் நிறைந்ததாகும். இது அவருடைய அன்பினாலும் அதிகாரத்தினாலும் நிறைந்ததாகும். இங்கே தேவனிடத்தில் இருக்கிற, தேவன் யாராய் இருக்கிறார் என்பதன் மற்றும் எது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், ஏன் அவர் கவலைப்படுகிறார், ஏன் சோகமாகிறார், ஏன் கோபப்படுகிறார் என்பதன் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னால் காண முடியும்…. இதுவே தங்களுடைய இருதயத்தைத் திறந்து, தேவனை உள்ளே வர அனுமதிக்கும் ஒவ்வொரு நபரும் பார்க்கக் கூடியதாகும். நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனுக்காகத் திறந்தால் மட்டுமே அவரால் அதற்குள் வர முடியும். அவர் உன்னுடைய இருதயத்திற்குள் வந்திருந்தால் மட்டுமே, உன்னால் தேவனிடத்தில் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், உனக்கான அவருடைய நோக்கங்களையும் பார்க்க முடியும். அந்த நேரத்தில், தேவனைப் பற்றின எல்லாமே மிகவும் விலைமதிப்பற்றவை என்பதையும், அவரிடம் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதும் உயர்வாய் மதிப்பதற்கு மிகவும் தகுதியானவை என்பதையும் நீ கண்டுபிடிப்பாய். அதனுடன் ஒப்பிடும்போது, உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் உள்ள பொருட்கள் மற்றும் நடந்த நிகழ்வுகள், மற்றும் உனக்கு அன்புக்குரியவர்கள், உன்னுடைய துணைவர் மற்றும் நீ விரும்புகிற விஷயங்கள் கூட குறிப்பிடப்படத் தகுதியுடையவை அல்ல. அவை மிகவும் சிறியவை, மிகவும் தாழ்ந்தவை; எந்த உலகப் பொருளும் உன்னை மறுபடியும் ஒருபோதும் கவர்ந்திழுக்க முடியாது, அல்லது எந்த உலகப் பொருளும் அதற்கான எந்த விலையையும் செலுத்தும்படி உன்னை மறுபடியும் மயக்க முடியாது என்பதை நீ உணருவாய். தேவனுடைய தாழ்மையில் நீ அவருடைய மகத்துவத்தையும், அவருடைய அதிகாரத்தையும் காண்பாய். மேலும் தேவனுடைய சில செயல்களில், முன்பு நீ அவருடைய எல்லையற்ற ஞானத்தையும், அவருடைய சகிப்புத்தன்மையையும் மிகச் சிறிய அளவில் விசுவாசித்ததையும் காண்பாய், அவருடைய பொறுமையையும், அவருடைய சகிப்புத்தன்மையையும், உன்னைக் குறித்த அவருடைய புரிதலையும் நீ காண்பாய். இது அவர் மீது ஒரு பக்தியை உனக்குள் உண்டாக்கும். அந்நாளில், மனிதகுலம் இத்தகைய இழிவான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், உன் அருகில் உள்ள ஜனங்கள், உன் வாழ்க்கையில் நடக்கின்ற காரியங்கள், நீ நேசிப்பவர்கள், உனக்கான அவர்களுடைய அன்பு, அவர்களின் பாதுகாப்பு அல்லது அக்கறை என்றழைக்கப்படும் எதுவும் சொல்லப்படக்கூட தகுதியற்றவை என்பதையும், தேவன் மட்டுமே உனக்குப் பிரியமானவர், தேவனை மட்டுமே நீ மிகவும் மதிக்கிறாய் என்பதையும் நீ உணருவாய். அந்த நாள் வரும்போது சில ஜனங்கள் இவ்வாறு சொல்வார்கள் என்று நம்புகிறேன்: தேவனுடைய அன்பு மிகவும் பெரியது, அவருடைய சாராம்சம் மிகவும் பரிசுத்தமானது, அதில் எந்த வஞ்சகமும் எந்தத் தீமையும், எந்தப் பொறாமையும், எந்தச் சண்டையும் இல்லை. ஆனால் நீதியும், நம்பகத்தன்மையும் மட்டுமே இருக்கிறது, தேவனிடத்தில் இருக்கிற எல்லாமும், அவர் யாராய் இருக்கிறார் என்பதும் மனிதர்களால் விரும்பப்படவேண்டியவையாகும். ஜனங்கள் அதை அடையும்படி கடும்முயற்சி செய்து, இதைப் பெறும்படி பேராவல் கொள்ள வேண்டும். இந்த கட்டமைப்பை அடைவதற்கு மனுக்குலத்தின் திறன் எந்த அடிப்படையில் உள்ளது? இது தேவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலும் அவருடைய சாராம்சத்தைப் பற்றிய புரிதலின் அடிப்படையிலும் கட்டப்பட்டுள்ளது. எனவே தேவனுடைய மனநிலையையும், அவரிடம் இருப்பதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வது ஒவ்வொரு நபருக்கும் வாழ்நாள் முழுவதற்கான படிப்பினை ஆகும். இது தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ளவும், தேவனை அறியவும் கடும்முயற்சி செய்யும் ஒவ்வொரு நபரும் அடையத் தொடரும் வாழ்நாள் இலக்காகும்.

தேவன் கிரியை செய்வதற்காக முதல் முறையாக மாம்சமாதல்

தேவன் செய்த எல்லா கிரியைகளையும், அவர் செய்து முடித்த முன் சம்பவிக்காத கிரியைகளின் தொடரைக் குறித்தும் நாம் இப்போது பேசினோம். இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்திற்கும், தேவனுடைய சித்தத்திற்கும் தொடர்புடையவையாகும். அவை தேவனுடைய மனநிலைக்கும் கூட, அவருடைய சாராம்சத்திற்கும் தொடர்புடையவை ஆகும். தேவனிடத்தில் இருப்பதையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் நாம் அதிகம் புரிந்துகொள்ள விரும்பினால், நம் பழைய ஏற்பாட்டுடனோ அல்லது நியாயப்பிரமாணத்தின் காலத்துடனோ நிறுத்திக்கொள்ளாமல், தொடர்ந்து, தேவன் தன்னுடைய கிரியையில் எடுத்த நடவடிக்கைகளைப் பின்பற்றித் தொடரவேண்டும். ஆகவே, தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்து, கிருபையின் காலத்தைத் தொடங்கினதால், நம்முடைய சொந்த அடிச்சுவடுகள், கிருபையும் மீட்பும் நிறைந்த காலமான கிருபையின் காலத்திற்குள் பின்தொடர்ந்து போகட்டும். இந்தக் காலத்தில் முன்னெப்போதும் செய்திராத முக்கியமான ஒன்றை தேவன் மீண்டும் செய்தார். இந்தப் புதிய காலத்தின் கிரியையானது, தேவன் மற்றும் மனுக்குலம் ஆகிய இருவருக்கும் ஒரு புதிய தொடக்கப்புள்ளியாக இருந்தது. மேலும் இந்தத் தொடக்கப்புள்ளி முன்னெப்போதும் செய்திராத, தேவனால் செய்யப்பட்ட ஒரு புதிய காரியத்தைக் கொண்டிருந்தது. இந்தப் புதிய கிரியையானது முன்னெப்போதும் செய்திராததும், மனிதர்களுடைய மற்றும் அனைத்து சிருஷ்டிகளுடைய கற்பனைத் திறன்களுக்கும் அப்பாற்பட்டதுமாக இருந்தது. முதல்முறையாக தேவன் மனிதனானார், முதன்முறையாக தேவன் ஒரு மனிதனின் அடையாளத்துடன், மனு உருவில் புதிய கிரியையைத் தொடங்கினார் என்பது இப்போது எல்லா ஜனங்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும். இந்தப் புதிய கிரியையானது தேவன் நியாயப்பிரமாண காலத்தில் தனது கிரியையை முடித்து விட்டார் என்பதையும், இனி அவர் நியாயப்பிரமாணத்தின்கீழ் எதையும் செய்யவோ, சொல்லவோ மாட்டார் என்பதையும் குறிக்கிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் வடிவத்திலும் அல்லது நியாயப்பிரமாணத்தின் கொள்கைகள் அல்லது விதிகளின்படியும் கூட அவர் எதையும் சொல்லவும் மாட்டார், செய்யவும் மாட்டார். அதாவது நியாயப்பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட அவருடைய எல்லாக் கிரியைகளும் என்றென்றும் நிறுத்தப்பட்டன, அது தொடரப்படாது, ஏனென்றால் தேவன் புதிய கிரியைகளைத் தொடங்கவும், புதிய விஷயங்களைச் செய்யவும் விரும்பினார். அவருடைய திட்டம் மீண்டும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருந்தது, எனவே தேவன் மனுக்குலத்தை அடுத்த காலத்திற்குள்ளாக வழிநடத்த வேண்டியிருந்தது.

இது மனிதர்களுக்கு சந்தோஷமான அல்லது அச்சுறுத்தும் செய்தியாக இருந்ததா என்பது ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தையும் சார்ந்திருந்தது. சிலருக்கு இது சந்தோஷமான செய்தியாக இல்லாமல் அச்சுறுத்துவதாக இருந்தது என்று சொல்லலாம், ஏனென்றால் தேவன் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்கினபோது சட்டங்களையும் விதிகளையும் பின்பற்றின, மற்றும் போதனைகளை மட்டும் பின்பற்றின, ஆனால் தேவனுக்குப் பயப்படாத ஜனங்கள், தேவனுடைய பழைய கிரியைகளைப் பயன்படுத்தி அவருடைய புதிய கிரியையை நிந்திக்க முற்பட்டனர். இந்த ஜனங்களுக்கு, இது அச்சுறுத்தும் செய்தியாயிருந்தது. ஆனால் குற்றமற்ற, வெளிப்படையான, தேவனுக்கு உண்மையாய் இருக்கும், அவருடைய மீட்பைப் பெற விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் தேவனுடைய முதல் மனுஷரூபமெடுத்தல் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாயிருந்தது. ஏனென்றால், மனிதர்கள் முதன்முதலில் உருவானதிலிருந்து, ஆவி அல்லாத ஒரு வடிவத்தில் தேவன் மனிதர்களிடையே தோன்றி வாழ்ந்தது இதுவே முதன்முறையாகும்; இம்முறை, அவர் மனிதனிடத்தில் பிறந்து, மனிதர்கள் மத்தியில் மனுஷகுமாரனாய் வாழ்ந்து, அவர்கள் நடுவில் கிரியை செய்தார். இந்த “முதல்முறை” என்பது ஜனங்களுடைய கருத்துக்களை உடைத்துப் போட்டது; எல்லா கற்பனைக்கும் அது அப்பாற்பட்டிருந்தது. மேலும், தேவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் உண்மையான பலனைப் பெற்றனர். தேவன் பழைய காலத்தை மட்டும் முடிவுக்குக் கொண்டுவராமல் அவர் தன்னுடைய பழைய கிரியை செய்யும் முறைகளையும், கிரியை செய்யும் பாணியையும் கூட முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் அதன்பிறகு தூதுவர்களிடம் தம்முடைய சித்தத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவில்லை, அதன்பிறகு மேகங்களில் மறைந்திருக்கவோ, மனிதர்களிடம் அதிகாரத்துடன் இடியின் மூலமாக தோன்றவோ, பேசவோ இல்லை. முன்பிருந்த எதையும் போலல்லாமல், மனிதர்கள் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ கடினமாக இருந்த, கற்பனை செய்து பார்த்திராத, அவர் மாம்சமாகின முறையின் மூலம், அவர் அந்தக் காலத்தின் கிரியையைத் தொடங்கும்பொருட்டு மனுஷகுமாரனானார். தேவனுடைய இந்தச் செயல் மனுக்குலத்தைத் ஆயத்தமில்லாத நிலையில் பிடித்தது. இது அவர்களைத் தடுமாறச் செய்தது, ஏனென்றால் முன்னெப்போதும் செய்யாத புதிய கிரியையைத் தேவன் மீண்டும் தொடங்கினார். இன்றைக்கு, புதிய காலத்தில் தேவன் செய்து முடித்த புதிய கிரியையைப் பார்க்கலாம், தேவனுடைய மனநிலை மற்றும் அவரிடம் உள்ளவைகள், அவர் யாராக இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இந்தப் புதிய கிரியையிலிருந்து நாம் எதைக் குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதைக் கருத்தில் கொள்ளலாம்.

வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் பின்வரும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

1. இயேசு ஓய்வுநாளில் உண்பதற்காகக் கதிர்களைக் கொய்கிறார்

மத். 12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

2. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்

மத். 12:6-8 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

இந்தப் பத்தியை முதலில் பார்ப்போம்: “அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.”

இந்தப் பத்தியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? தேவனுடைய மனநிலையோடு இதற்கு என்ன தொடர்பிருக்கிறது? இந்த உரையில், நாம் அறிகிற முதல் காரியம், அது ஓய்வுநாளாய் இருந்தது, ஆனால் கர்த்தராகிய இயேசு வெளியே சென்று, தன்னுடைய சீடர்களைப் பயிர்வயல்களின் வழியே அழைத்துச் சென்றார் என்பதாகும். இன்னும் “நம்ப முடியாதது” என்னவென்றால், அவர்கள் “கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்” என்பதே. நியாயப்பிரமாணக் காலத்தில், ஓய்வுநாளில் ஜனங்கள் சாதாரணமாக வெளியே செல்லவோ அல்லது காரியங்களில் ஈடுபடவோ முடியாது என்று யேகோவா தேவனின் நியாயப்பிரமாணம் விதித்திருந்தது, ஓய்வுநாளில் செய்யப்படக்கூடாத பல விஷயங்கள் இருந்தன. கர்த்தராகிய இயேசுவின் இந்த நடவடிக்கை நீண்டகாலமாக நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு குழப்பமாக இருந்தது, அது விமர்சனத்தையும் தூண்டிவிட்டது. அவர்களுடைய குழப்பம் மற்றும் இயேசு செய்ததைப் பற்றி அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பதைப் பொறுத்தவரையில், அதை நாம் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, கர்த்தராகிய இயேசு இதைச் செய்ய எல்லா நாட்களிலுமிருந்து ஏன் ஓய்வுநாளைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், இந்தச் செயல்பாட்டின் மூலம் அவர் நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு என்ன சொல்ல விரும்பினார் என்பதையும் நாம் முதலில் கலந்தாலோசிப்போம். இந்தப் பத்திக்கும் தேவனுடைய மனநிலைக்கும் இடையேயான தொடர்பைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

கர்த்தராகிய இயேசு வந்தபோது, தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தை விட்டு புறப்பட்டுவிட்டார் என்றும், புதிய கிரியையைத் தொடங்கி விட்டார் என்றும், இந்தப் புதிய கிரியைக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது அவசியம் இல்லை என்றும் தனது நடைமுறை செயல்பாடுகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்குச் சொன்னார். தேவன் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வருவது அவருடைய புதிய கிரியையின் ஓர் அறிகுறி தானேயொழிய, உண்மையான மற்றும் பெரிதான கிரியை இன்னும் நிகழவில்லை. கர்த்தராகிய இயேசு தம்முடைய கிரியையைத் தொடங்கினபோது, அவர் ஏற்கனவே நியாயப்பிரமாண காலத்தின் “கட்டுகளை” விட்டுவிலகி, அந்த காலத்தின் விதிமுறைகளையும் கொள்கைகளையும் கடந்து வந்திருந்தார். நியாயப்பிரமாணம் தொடர்பான சுவடு கூட அவரில் இருக்கவில்லை. அவர் அதை முற்றிலுமாக ஒதுக்கி விட்டிருந்தார், அவர் அதை முன்போல இனி ஆசரிக்கவில்லை, இனி மனிதகுலமும் அதை ஆசரிக்க வேண்டுமென்பது அவருக்கு இல்லை. ஆகவே, இங்கே கர்த்தராகிய இயேசு ஓய்வுநாளில் பயிர்களின் வழியாகச் சென்றதையும், அவர் ஓய்ந்திருக்கவில்லை என்பதையும் நீ பார்க்கிறாய். அவர் ஓய்ந்திராமல், வெளியே கிரியை செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்தச் செயலானது ஜனங்களின் கருத்துக்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, மேலும் அது, அவர் இனிமேல் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழவில்லை என்பதையும், அவர் ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளை விட்டுவிலகி, மனுக்குலத்திற்கு முன்பாகவும், அவர்கள் மத்தியிலும் கிரியை செய்யும் புதிய நடைமுறையில், புதிய சாயலில் தோன்றியிருக்கிறார் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்தது. அவருடைய இந்தச் செயலானது, நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்ததிலிருந்து வெளியேறி, ஓய்வுநாளை விட்டு விலகுவதில் இருந்து தொடங்கும் புதிய கிரியையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை ஜனங்களுக்குச் சொன்னது. தேவன் தம்முடைய புதிய கிரியையை நிறைவேற்றின போது, அவர் அதற்குப் பிறகு கடந்த காலத்தைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை, நியாயப்பிரமாண காலத்தின் விதிமுறைகளைப் பற்றி அவர் அதற்கு மேல் கவலைப்படவில்லை. முந்தைய காலத்தில் அவர் செய்த கிரியையினால் அவர் பாதிக்கப்படவில்லை, ஆனால் மாறாக, அவர் மற்ற ஒவ்வொரு நாளும் செய்ததைப் போலவே ஓய்வுநாளிலும் வேலை செய்தார், அவருடைய சீஷர்கள் ஓய்வுநாளில் பசியாய் இருந்தபோது, அவர்கள் பயிர்களைக் கொய்து சாப்பிட்டனர். தேவனுடைய பார்வையில் இவையெல்லாம் மிகவும் சாதாரணமாகவே இருந்தது. தேவனைப் பொறுத்தவரை, அவர் செய்ய விரும்பும் மிகுதியான புதிய கிரியைக்கும், அவர் சொல்ல விரும்பும் புதிய வார்த்தைகளுக்கும், ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருப்பது ஏற்புடையதே. அவர் புதியதாக ஒன்றைத் தொடங்கும்போது, அவர் தனது முந்தைய கிரியையைக் குறிப்பிடுவதுமில்லை, செய்து முடிக்கும்படி அதைத் தொடர்வதுமில்லை. ஏனென்றால் தேவனுக்கு அவருடைய கிரியையில் அவருடைய கொள்கைகள் இருக்கிறது. அவர் எப்போது மனுக்குலத்தை அவருடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறாரோ, எப்போது அவருடைய கிரியை ஒரு உயர்ந்த கட்டத்திற்குள் நுழையுமோ, அப்போது அவர் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்க விரும்புகிறார். ஜனங்கள் பழைய பழமொழிகளின்படி அல்லது விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்பட்டால் அல்லது அவற்றைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டால், அவர் அதை நினைவில் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ மாட்டார். ஏனென்றால் அவர் ஏற்கனவே புதிய கிரியைகளைக் கொண்டுவந்திருக்கிறார், மேலும் அவர் தன்னுடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் புதிய கிரியையைத் தொடங்கும்போது, முற்றிலும் புதிய சாயலில், முற்றிலும் புதிய கோணத்திலிருந்து, முற்றிலும் புதிய வழியில் ஜனங்களுக்குத் தோன்றுகிறார். இதனால் ஜனங்கள் அவருடைய மனநிலையின் வெவ்வேறு அம்சங்களையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் காணலாம். இது அவருடைய புதிய கிரியையில் அவரது குறிக்கோள்களில் ஒன்றாகும். தேவன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்வதில்லை அல்லது பலரும் பயன்படுத்தின பாதையில் நடப்பதில்லை. அவர் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், ஜனங்கள் கற்பனை செய்யும் அளவிற்குக் கட்டுப்பாடாய் இருப்பதில்லை. தேவனில், அனைத்தும் சுதந்திரமானவை, விடுவிக்கப்பட்டவை, அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, தடைகளும் இல்லை, அவர் மனுக்குலத்திற்கு அளிப்பது சுதந்திரமும் விடுதலையும் ஆகும். அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் உண்மையாகவே, மெய்யாகவே இருக்கிற தேவன். அவர் ஒரு கைப்பொம்மையோ, களிமண் உருவமோ அல்ல, ஜனங்கள் புனிதமெனப் பாதுகாக்கும், ஆராதிக்கும் விக்கிரகங்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டவர். அவர் ஜீவனுள்ளவர், உயிர்த்துடிப்பு உள்ளவர். மேலும் அவருடைய வார்த்தைகளும், கிரியையும் மனுக்குலத்திற்கு ஜீவனையும் வெளிச்சத்தையும், எல்லா சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவரும், ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய எந்தக் கிரியையிலும், எந்தக் காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஜனங்கள் என்ன சொன்னாலும், அவருடைய புதிய கிரியையை அவர்கள் எப்படிப் பார்த்தாலும் அல்லது மதிப்பிட்டாலும், அவர் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி தனது கிரியையைச் செய்து முடிப்பார். அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பொறுத்தவரை, யாருடைய கருத்துகளைப் பற்றியோ, குறைகூறுதலைப் பற்றியோ, அல்லது அவருடைய புதிய கிரியைக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பையோ தடைகளையோ பற்றிக்கூட அவர் கவலைப்பட மாட்டார். தேவன் செய்கிறதை அளவிடவோ அல்லது வரையறுக்கவோ, அவருடைய கிரியையை இழிவுபடுத்தவோ, தடுத்து நிறுத்தவோ, அல்லது நாசப்படுத்தவோ, அனைத்து சிருஷ்டிகளிலும் எந்த ஒருவராலும் மனிதனுடைய பகுத்தறிவையோ அல்லது மனிதனுடைய கற்பனையையோ, அறிவையோ அல்லது அறநெறியையோ பயன்படுத்த முடியாது. அவருடைய கிரியையிலும், அவர் செய்வதிலும் எந்தத் தடையும் இல்லை. அது எந்த ஒரு மனிதனாலும், நிகழ்வினாலும், காரியத்தினாலும், கட்டுப்படுத்தப்படவுமாட்டாது, எந்தவொரு விரோதமான வல்லமைகளாலும் தடுத்து நிறுத்தப்படவுமாட்டாது. அவருடைய புதிய கிரியையைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் ஜெயம்பெறும் ராஜா, எந்த ஒரு விரோதமான வல்லமைகளும், மனுக்குலத்தின் அனைத்து மாறுபட்ட மதக்கருத்துக்களும், மூடநம்பிக்கைகளும் அவருடைய பாதப்படியின்கீழ் நசுக்கப்படுகின்றன. அவருடைய எந்தப் புதிய கட்டக் கிரியையை அவர் செய்கிறார் என்பது முக்கியமல்ல, அது நிச்சயமாக மனுக்குலத்தின் மத்தியில் வளர்ச்சியுற்று, விரிவாக்கப்படும், மேலும் அவருடைய பெரிதான கிரியை நிறைவடையும் வரையிலும், அது நிச்சயமாக முழு பிரபஞ்சத்திலும் தடையின்றிச் செய்யப்படும். இது தேவனுடைய சர்வவல்லமையும் ஞானமும், அவருடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும். ஆகவே கர்த்தராகிய இயேசு வெளிப்படையாக வெளியே சென்று ஓய்வுநாளில் கிரியை செய்ய முடியும், ஏனென்றால் அவருடைய இருதயத்தில் மனுக்குலத்திலிருந்து தோன்றிய விதிகளோ, அறிவோ அல்லது போதனைகளோ இருக்கவில்லை. அவரிடத்தில் இருந்தது தேவனுடைய புதிய கிரியை மற்றும் தேவனுடைய வழியாகும். அவருடைய கிரியையானது மனுக்குலத்தை விடுவிப்பதற்கும், ஜனங்களை விடுதலையாக்குவதற்கும், அவர்களை வெளிச்சத்தில் இருக்க அனுமதிப்பதற்கும், வாழ்வதற்கும் வழியாயிருந்தது. இதற்கிடையில் விக்கிரகங்களை அல்லது பொய்யான தெய்வங்களை வணங்குபவர்கள் ஒவ்வொரு நாளும் சாத்தானால் கட்டப்பட்டு, எல்லா வகையான நியதிகளாலும், தடைகளினாலும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இன்று ஒரு விஷயம் தடை செய்யப்படும், நாளை இன்னொன்று தடைபடும், அவர்களுடைய வாழ்க்கையில் விடுதலை இருப்பதில்லை. அவர்கள் விலங்கிடப்பட்ட கைதிகளைப் போன்று, சொல்லப்படும் அளவிற்கு எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். “தடை” எதைக் குறிக்கிறது? அது கட்டுப்பாடுகள், கட்டுகள் மற்றும் தீமையைக் குறிக்கிறது. ஒரு நபர் விக்கிரகத்தை வணங்கியவுடனே, அவர் ஒரு பொய்யான தேவனை, ஓர் அசுத்த ஆவியை வணங்குகிறார். இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது தடை வருகிறது. நீ இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது, இன்றைக்கு நீ வெளியே போக முடியாது, நாளைக்கு நீ சமைக்கக் கூடாது, அடுத்த நாள் நீ ஒரு புது வீட்டிற்குக் குடிபோகக் கூடாது, திருமணங்களுக்கும் இறுதிச்சடங்குகளுக்கும், ஏன் குழந்தை பிறப்புக்கும் கூட சில நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது என்னவென்று அழைக்கப்படுகிறது? இதுதான் தடை; இது மனுக்குலத்தின் அடிமைத்தனம், மேலும் இது ஜனங்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் அவர்களுடைய இருதயங்களை, சரீரங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தானுடைய மற்றும் அசுத்த ஆவிகளுடைய கட்டுகளாகும். இப்படிப்பட்ட தடைகள் தேவனிடம் இருக்கின்றனவா? தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி பேசும் போது, முதலாவது நீ இதைக் குறித்து சிந்திக்க வேண்டும்: தேவனிடத்தில் எந்தத் தடைகளும் இல்லை. தேவன் தம்முடைய வார்த்தைகளிலும் கிரியையிலும் கொள்கைகளைக் கொண்டு இருக்கிறார், ஆனால் அதில் தடைகள் எதுவும் இல்லை, ஏனென்றால் தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார்.

நாம் இப்போது வேதவசனங்களிலிருந்து பின்வரும் பத்தியைப் பார்க்கலாம். “தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” (மத்.12:6-8). “தேவாலயம்” என்ற சொல் இங்கே எதைக் குறிக்கிறது? எளிமையாகச் சொல்வதானால், அது ஓர் அற்புதமான, உயரமான கட்டிடத்தைக் குறிக்கிறது, மேலும் நியாயப்பிரமாண காலத்தில் தேவனை ஆராதிக்க ஆசாரியர்களுக்கான ஓர்இடமாக அது இருந்தது. கர்த்தராகிய இயேசு “தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்,” என்று சொன்னபோது, “பெரியவர்” என்று யாரைக் குறிப்பிட்டார்? மாம்சத்தில் இருந்த கர்த்தராகிய இயேசுவையே “பெரியவர்” என்று குறிப்பிடுவது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் அவர் மட்டுமே ஆலயத்தை விட பெரியவர். அந்த வார்த்தைகள் ஜனங்களுக்கு என்ன சொன்னது? அவை ஜனங்களை ஆலயத்தை விட்டு வெளியே வரவும், தேவன் ஏற்கனவே ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டார், இனி அதில் கிரியை செய்வதில்லை, எனவே ஜனங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளை ஆலயத்திற்கு வெளியே தேட வேண்டும், அவருடைய புதிய கிரியையில் அவருடைய அடிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னது. கர்த்தராகிய இயேசு இதைச் சொன்னபோது, அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. அது என்னவென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், ஜனங்கள் தேவனைக் காட்டிலும் ஆலயத்தைப் பெரியதாகக் கருதி பார்க்க வந்தார்கள். அதாவது, ஜனங்கள் தேவனை ஆராதிக்காமல் ஆலயத்தை ஆராதித்தனர், அதனால் கர்த்தராகிய இயேசு விக்கிரகங்களை வணங்காமல், மாறாக, தேவன் மிகவும் உயர்ந்தவராய் இருப்பதினால் அவரை வணங்க வேண்டும் என்று அவர்களை எச்சரித்தார். எனவே, அவர், “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்.” என்று சொன்னார். கர்த்தராகிய இயேசுவின் பார்வையில் நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழும் பெரும்பாலான ஜனங்கள் முன்போல இனி யேகோவாவை வணங்காமல், பலியிடுவதற்கான முறைகளை மட்டுமே செய்து வந்தார்கள் என்பது தெளிவாயிருந்தது, மேலும் கர்த்தராகிய இயேசு இதை உருவாக்கப்பட்ட விக்கிரக ஆராதனை எனத் தீர்மானித்தார். இந்த விக்கிரக ஆராதனையாளர்கள் தேவனை விட தேவாலயத்தைப் பெரியதாகவும், உயர்ந்ததாகவும் பார்த்தார்கள். அவர்களுடைய இருதயங்களில் தேவாலயம் மட்டுமே இருந்தது, தேவன் இல்லை. மேலும் அவர்கள் தேவாலயத்தை இழக்க நேர்ந்தால், அவர்கள் தங்குமிடத்தையும் இழப்பார்கள். தேவாலயம் இல்லையென்றால் அவர்களால் எவ்விடத்திலும் ஆராதிக்க முடியாது, அவர்களுடைய பலிகளையும் செலுத்த முடியாது. அவர்கள் “தங்குமிடம்” என்று அழைக்கப்படுவது என்னவென்றால், அவர்கள் தேவாலயத்தில் தங்கி, தங்கள் சொந்தக் காரியங்களை நிறைவேற்றுவதற்காக, யேகோவா தேவனை ஆராதிப்பதைப் போன்ற ஒரு போலியான பாசாங்கைப் பயன்படுத்தினதுதான். அவர்களுடைய “பலியிடுதல்” என்று அழைக்கப்படுவது என்னவென்றால், தங்களுடைய ஆராதனையை தேவாலயத்தில் நடத்துகிறோம் என்ற போர்வையில் அவர்கள் தங்கள் சொந்த, வெட்கக்கேடான காரியங்களை மேற்கொண்டது தான். அந்தக் காலத்தில் இருந்த ஜனங்கள் தேவனை விட தேவாலயத்தைப் பெரியதாக பார்த்த காரணம் இதுதான். கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தைகளை ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பேசினார், ஏனென்றால் அவர்கள் ஆலயத்தை ஒரு முகப்பாகப் பயன்படுத்தி, பலிகளை ஜனங்களையும் தேவனையும் ஏமாற்றும் ஒரு உறையாகப் பயன்படுத்தினார்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் நிகழ்காலத்திற்குப் பயன்படுத்தினால், அவை இன்னும் சரியானதாகவும் மற்றும் பொருத்தமானவையாகவே இருக்கும். நியாயப்பிராமண காலத்து ஜனங்களை விட இன்றைய ஜனங்கள் தேவனுடைய வித்தியாசமான கிரியையை அனுபவித்திருந்தாலும், அவர்களுடைய சுபாவத்தின் சாராம்சம் ஒன்றே. இன்றைய கிரியையின் சூழலில், “தேவனை விட தேவாலயம் பெரியது” என்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் அதே வகையான காரியங்களை ஜனங்கள் இன்னும் செய்வார்கள். உதாரணமாக, ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதைத் தங்கள் வேலையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு சாட்சியாக இருப்பதையும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை எதிர்த்து யுத்தம் பண்ணுவதையும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கங்களாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமைகளைத் தொழிலாக பயன்படுத்தத்தக்கதாய், தங்கள் கடமைகளை மாற்றுகின்றனர், ஆனால் அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதையும், பொல்லாப்பை விட்டு விலகுவதையும் ஆசரிக்கும்படியான மதபோதகத்தின் ஒரு பகுதியே தவிர வேறொன்றுமில்லை என்று கருதுகிறார்கள்; இன்னும் பல உள்ளன. “தேவாலயம் தேவனை விடப் பெரியது” என்பதைப் போலவே இந்த நடத்தைகளும் அடிப்படையில் இருக்கின்றன அல்லவா? வித்தியாசம் என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஜனங்கள் தங்கள் தனிப்பட்ட தொழில்களைத் கட்டடமான தேவாலயத்தில் செய்துகொண்டிருந்தனர், ஆனால் இன்று, ஜனங்கள் தங்கள் தனிப்பட்டத் தொழில்களைத் தொட்டுணர முடியாத தேவாலயங்களில் செய்கின்றனர். விதிகளை மதிக்கும் நபர்கள் தேவனை விட விதிகளைப் பெரியதாகப் பார்க்கிறார்கள், அந்தஸ்தை நேசிக்கும் ஜனங்கள் தேவனை விட அந்தஸ்தைப் பெரியதாக பார்க்கிறார்கள், தங்கள் தொழிலை நேசிப்பவர்கள் தேவனை விட த் தொழிலைப் பெரியதாகப் பார்க்கிறார்கள், இன்னும் பல உள்ளன, அவர்களுடைய வெளிப்பாடுகள் அனைத்தும் இதைச் சொல்வதற்கு என்னை வழிவகுக்கின்றன: “ஜனங்கள் தேவனைத் தங்கள் வார்த்தைகளில் மிகவும் பெரியவராகப் போற்றுகிறார்கள், ஆனால் அவர்களுடைய கண்களில் ஒவ்வொரு பொருளும் தேவனை விடப் பெரியதாக இருக்கிறது.” ஏனென்றால், ஜனங்கள் தேவனைப் பின்தொடரும் பாதையில், தங்கள் சொந்தத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு அல்லது தங்கள் சொந்தத் தொழிலைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கண்டவுடன், அவர்கள் தேவனிடமிருந்து தங்களைத் தூர விலக்கி, தங்களைத் தங்கள் விருப்பத்திற்குரிய தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தேவன் அவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததையும், அவருடைய சித்தத்தையும் பொறுத்தவரையில், அந்த காரியங்கள் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஜனங்களின் நிலைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாலயத்தில் சொந்தமாகத் தொழில் நடத்தியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

அடுத்து, இந்தப் பத்தியில் உள்ள கடைசி வாக்கியத்தைப் பார்ப்போம்: “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.” இந்த வாக்கியத்திற்கு நடைமுறைப் பக்கம் ஒன்று உண்டா? உங்களால் நடைமுறைப் பக்கத்தைப் பார்க்க முடியுமா? தேவன் சொல்லும் ஒவ்வொன்றும் அவருடைய இருதயத்தில் இருந்து வருகிறபோது அவர் ஏன் இதைச் சொன்னார்? நீங்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை நீங்கள் இப்போது புரிந்து கொள்ளலாம், ஆனால் அது பேசப்பட்ட நேரத்தில் பலருக்கும் அது புரியவில்லை, ஏனென்றால் மனுக்குலம் அப்போதுதான் நியாயப்பிரமாணத்தின் காலத்திலிருந்து வெளியே வந்திருந்ததது. அவர்களைப் பொறுத்தவரை, ஓய்வுநாளை விட்டு விலகுவது என்பது செய்வதற்கு மிகவும் கடினமான காரியமாக இருந்தது, உண்மையான ஓய்வுநாள் என்றால் என்ன என்பதன் புரிதலும் அப்படியே கடினமாக இருந்தது.

“மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” என்ற வாக்கியம் ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அனைத்தும் பொருள் இயல்புடையது அல்ல என்று சொல்கிறது, மேலும் உங்களின் பொருள் தேவைகள் அனைத்தையும் தேவனால் வழங்க முடியும் என்றாலும், உங்கள் பொருள் தேவைகள் சந்திக்கப்பட்டவுடன், இந்தக் காரியங்களில் இருந்து வரும் திருப்தியானது நீங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதை மாற்றீடு செய்ய முடியுமா? தெளிவாக அது சாத்தியமில்லை! நாம் கலந்தாலோசித்த தேவனுடைய மனநிலையும், அவரிடத்தில் உள்ளவைகளும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்கிற இரண்டுமே சத்தியமாகும். அதன் மதிப்பை எந்த ஓர் இயற்பொருளோடும் அளவிட முடியாது, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் அதன் மதிப்பைப் பணத்தின் அடிப்படையிலும் அளவிட முடியாது, ஏனென்றால் அது ஓர் இயற்பொருள் அல்ல, மேலும் அது ஒவ்வொரு நபரின் இருதயத்தின் தேவைகளையும் சந்திக்கிறது. ஒவ்வொரு நபருக்கும், இந்த உணர்ந்தறிய இயலாத சத்தியங்களின் மதிப்பு நீ மதிப்பிடக்கூடிய எந்த ஒரு பொருளின் மதிப்பை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் இல்லையா? இந்த அறிக்கை நீங்கள் நீடித்து யோசிக்க வேண்டிய ஒன்றாகும். நான் கூறினவற்றின் முக்கிய குறிப்பு என்னவென்றால், தேவனிடம் உள்ளவைகளும் அவர் யாராக இருக்கிறார் என்பதும் மற்றும் தேவனைப் பற்றிய அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமான காரியங்களாகும், மேலும் அவை இயற்கை பொருட்களால் ஈடுசெய்ய முடியாது என்பதேயாகும். நான் உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன்: நீ பசியாயிருக்கும்போது, உனக்கு உணவு தேவை. இந்த உணவானது ஓரளவுக்கு நன்றாகவும், ஓரளவுக்கு திருப்தியற்றதாகவும் இருக்கலாம், ஆனால் வயிறு நிறைந்தவுடன், பசியுடன் இருப்பதான அந்த மோசமான உணர்வு அதன் பின்பு இருக்காது, அது இல்லாமல் போயிருக்கும். நீ நிம்மதியாக உட்காரலாம், உன் உடல் இளைப்பாறும். ஜனங்களுடைய பசியை உணவின் மூலம் தீர்க்க முடியும், ஆனால் நீ தேவனைப் பின்தொடரும் போது அவரைப் பற்றின புரிதல் உனக்கு இல்லை என்று உணர்ந்தால், உன் இருதயத்தில் உள்ள வெறுமையை உன்னால் எப்படித் தீர்க்க முடியும்? உணவைக் கொண்டு அதைத் தீர்க்க முடியுமா? அல்லது நீ தேவனைப் பின்பற்றுகையில் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாத போது, உன் இருதயத்தில் உள்ள அந்தப் பசியை எதைக்கொண்டு ஆற்றுவாய்? தேவன் மூலமாக பெற்ற உன்னுடைய இரட்சிப்பினுடைய அனுபவத்தின் நடைமுறையில், உன் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தொடரும்போது, அவருடைய சித்தத்தை நீ புரிந்துகொள்ளாவிட்டால் அல்லது சத்தியம் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால் நீ மிகவும் அசௌகரியமாக உணர்வாயல்லவா? உன்னுடைய இருதயத்தில் ஒரு வலுவான பசியையும் தாகத்தையும் நீ உணர்வாய் அல்லவா? இந்த உணர்வுகள் உன் இருதயத்தில் இளைப்பாறுதலாக உணர்வதைத் தடைசெய்யும் அல்லவா? அப்படியானால் உன் இருதயத்தில் உள்ள அந்தப் பசியை நீ எவ்வாறு ஆற்றுவாய், அதைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறதா? சிலர் கடைக்குச் செல்கிறார்கள், சிலர் இரகசியங்களைப் பேச தங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேடுகிறார்கள், சிலர் நீண்ட நேரம் தூங்குகிறார்கள், சிலர் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகப் படிக்கிறார்கள் அல்லது அவர்கள் கடினமாக உழைத்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற அதிகப் பிரயாசங்களைச் செலவழிக்கிறார்கள். இந்த விஷயங்கள் உன்னுடைய உண்மையான சிக்கல்களைத் தீர்க்க முடியுமா? நீங்கள் அனைவரும் இந்த வகையான வழக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்கிறீர்கள். நீ பலமற்று உணரும்போது, சத்தியத்தின் மற்றும் அவருடைய சித்தத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்ள உன்னை அனுமதிக்கும்படி தேவனிடத்திலிருந்து தெளிவைப் பெறவேண்டும் என்ற வலுவான விருப்பத்தை நீ உணரும் போது உனக்கு அதிகமாய் எது தேவைப்படுகிறது? உனக்குத் தேவைப்படுவது ஒரு முழு சாப்பாடு அல்ல, ஒரு சில அன்பான வார்த்தைகளும் அல்ல, மாம்சத்தின் நிலையற்ற ஆறுதலும் திருப்தியும் ஒருபுறமிருக்கட்டும், உனக்குத் தேவையானது என்னவென்றால், தேவன் நீ என்ன செய்ய வேண்டும் என்று உன்னிடம் நேரடியாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும், சத்தியம் என்ன என்பதை உனக்குத் தெளிவாகக் கூற வேண்டும் என்பதே. நீ இதைப் புரிந்து கொண்ட பிறகு, நீ ஒரு சிறிய புரிதலை மட்டுமே பெற்றிருந்தாலும்கூட, ஒரு நல்ல உணவைச் சாப்பிட்டதை விட அதிகத் திருப்தியை உன் இருதயத்தில் உணர்வாய் அல்லவா? உன்னுடைய இருதயம் திருப்தியடையும் போது, உன்னுடைய இருதயமும் உன்னுடைய முழுமையும் உண்மையான இளைப்பாறுதலைப் பெறுமல்லவா? இந்த மேற்கோள் மற்றும் பகுப்பாய்வின் மூலம் “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” என்ற இந்த வாக்கியத்தை உங்களுடன் நான் ஏன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? அதன் பொருள் என்னவென்றால், தேவனிடமிருந்து வருவது, அவரிடம் உள்ளவைகள், அவர் யாராக இருக்கிறார், அவரைப் பற்றிய அனைத்தும், மற்ற எந்த விஷயத்தை விடவும், அதோடுகூட, ஒரு காலத்தில் நீங்கள் நம்பியிருந்த, மிகவும் மதித்த பொருளை அல்லது நபரை விடவும் பெரியதாகும். அதாவது, ஒரு நபர் தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகளைப் பெற முடியாவிட்டால் அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் அவர்கள் இளைப்பாறுதலைப் பெற முடியாது. உங்களின் எதிர்கால அனுபவங்களில், இன்று இந்தப் பத்தியை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் ஏன் விரும்புகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இது மிகவும் முக்கியமானது. தேவன் செய்யும் அனைத்தும் சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறது. சத்தியம் என்பது ஜனங்கள் தங்கள் ஜீவிதங்களில் குறைவற்று இருக்கக்கூடாத ஒன்றும் மேலும் அது இல்லாமல் ஒருபோதும் அவர்களால் சமாளிக்க முடியாத ஒன்றுமாகும். அது மிகப்பெரிய விஷயம் என்றும் நீங்கள் சொல்லலாம். நீங்கள் அதைப் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது என்றாலும், உங்களுக்கான அதன் முக்கியத்துவம் புறக்கணிக்க முடியாததாகும்; உங்கள் இருதயத்திற்கு இளைப்பாறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அது தான்.

சத்தியத்தைப் பற்றிய உங்களுடைய புரிதல் உங்கள் சொந்த நிலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதா? நிஜ வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த ஜனங்களுடன், நிகழ்வுகளுடன், விஷயங்களுடன் எந்தச் சத்தியங்கள் தொடர்புடையவை என்பதைக் குறித்து நீங்கள் முதலாவது சிந்திக்க வேண்டும். இந்தச் சத்தியங்களில்தான் நீ தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடித்து, நீ சந்தித்ததை அவருடைய சித்தத்துடன் தொடர்புபடுத்த முடியும். நீ சந்தித்தவைகளுடன் சத்தியத்தின் எந்த அம்சங்கள் தொடர்புடையதாய் இருக்கின்றன என்பது உனக்குத் தெரியாத போது, அதற்குப் பதிலாக தேவனுடைய சித்தத்தை நேரடியாக அணுகினால், இது முடிவுகளைத் தரக்கூடாத ஒரு குருட்டுத்தனமான அணுகுமுறையாகும். நீ சத்தியத்தைத் தேடி தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், முதலில் உனக்கு என்ன மாதிரியான விஷயங்கள் நிகழ்ந்தன, சத்தியத்தின் எந்த அம்சங்கள் அதனோடு தொடர்புடையவை என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும் மற்றும் நீ அனுபவித்தவைகளுடன் தொடர்புடைய தேவனுடைய வார்த்தையில் உள்ள குறிப்பிட்ட சத்தியத்தைத் தேட வேண்டும். அதன்பின்பு நீ அந்த சத்தியத்தில் உனக்கு ஏற்ற நடைமுறைப் பாதையைத் தேடு; இவ்வழியில் நீ தேவனுடைய சித்தத்தை மறைமுகமாகப் புரிந்து கொள்ள முடியும். சத்தியத்தைத் தேடுவதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஒரு போதனையையோ இயந்திரத்தனமாக உபயோகிப்பதோ அல்லது ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுவதோ அல்ல. சத்தியம் சூத்திரமானது அல்ல, அது ஒரு சட்டமும் அல்ல. அது உயிரற்றதல்ல, அதுவே ஜீவனானது, அது ஒரு ஜீவனுள்ள விஷயம், மேலும் அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதும், மனிதன் தன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டியதுமான ஒரு கட்டளையாகும். இது நீ முடிந்தவரை அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். நீ உன் அனுபவத்தில் எந்த நிலைக்கு வந்திருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் இருந்தோ அல்லது சத்தியத்தில் இருந்தோ உன்னைப் பிரிக்க முடியாது, மேலும் தேவனுடைய மனநிலையைப் பற்றி நீ புரிந்து கொள்வதும், தேவனிடத்தில் உள்ளவைகளையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் பற்றி உனக்கு தெரிந்தவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் சத்தியத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவைகளும், அவர் யாராக இருக்கிறார் என்பதே சத்தியமாகும்; சத்தியம் என்பது தேவனுடைய மனநிலை, அவரிடம் உள்ளவைகள் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடாகும். அது அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் வலுவாக்குகிறது, மேலும் அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை உருவாக்குகிறது. அது தேவன் எதை விரும்புகிறார், எதை விரும்புவதில்லை, நீங்கள் எதைச் செய்ய அவர் விரும்புகிறார், அவர் உங்களைச் செய்ய அனுமதிக்காதது எது, எந்த ஜனங்களை அவர் வெறுக்கிறார், எந்த ஜனங்களை அவர் விரும்புகிறார் என்பதை மிக நேரடியாகக் கூறுகிறது. தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்குப் பின்னால் ஜனங்கள் அவருடைய இன்பம், கோபம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றையும், அவருடைய சாராம்சத்தையும் கூட காணலாம், இதுவே அவருடைய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவனிடத்தில் உள்ளவையும், அவர் யாராக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதோடு, அவருடைய வார்த்தையிலிருந்து அவருடைய மனநிலையை அறிந்துகொள்வதோடு கூட, நடைமுறை அனுபவத்தின் மூலம் இந்தப் புரிதலை அடைய வேண்டியதின் அவசியம் மிக முக்கியமானதாகும். தேவனை அறிந்து கொள்வதற்காக ஒரு நபர் நிஜ வாழ்க்கையில் இருந்து தன்னை நீக்கிக் கொண்டால் அவரால் அதை அடைய முடியாது. தேவனுடைய வார்த்தையிலிருந்து சில புரிதல்களைப் பெறக்கூடிய நபர்கள் இருந்தாலும், அவர்களின் புரிதலானது கோட்பாடுகள் மற்றும் வார்த்தைகளுக்கு உட்பட்டுள்ளது, மேலும் அந்தப் புரிதலில் தேவன் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதில் ஏற்றத்தாழ்வு எழுகிறது.

நாம் இப்போது பரிமாறிக்கொள்வது அனைத்தும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட கதைகளின் எல்லைக்குள் உள்ளது. இந்தக் கதைகளின் மூலமாகவும், நிகழ்ந்த இந்த விஷயங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாகவும், அவர் வெளிப்படுத்தின மன நிலையையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் இவைகள் தேவனுடைய ஒவ்வொரு அம்சத்தையும் இன்னும் பரந்த அளவிலும், இன்னும் ஆழமாகவும், இன்னும் விரிவாகவும், இன்னும் முழுமையாகவும் அறிந்து கொள்ள அவர்களை அனுமதிக்கிறது. அப்படியானால், தேவனுடைய ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்தக் கதைகள் மட்டுமே ஒரே வழியா? இல்லை, அது மட்டுமே ஒரே வழியல்ல! ஏனென்றால் தேவன் சொல்வதும், அவர் ராஜ்ஜியத்தின் காலத்தில் செய்த கிரியையுமானது அவருடைய மனநிலையை அறியவும், அதை முழுமையாக அறிந்து கொள்ளவும் ஜனங்களுக்குச் சிறந்த முறையில் உதவக்கூடும். இருப்பினும், ஜனங்கள் நன்றாக அறிந்திருக்கும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட சில உதாரணங்கள் அல்லது கதைகள் மூலமாக தேவனுடைய மனநிலையை அறிந்து கொள்வதும், அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்வதும் சற்றுச் சுலபமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் வார்த்தைகளையும் மற்றும் தேவன் இன்று வெளிப்படுத்துகிற சத்தியங்களையும் வார்த்தைக்கு வார்த்தையாக, அவரை இவ்வழியில் நீங்கள் புரிந்துகொள்வதற்காக நான் எடுத்தால், நீங்கள் அதை மிகவும் மந்தமானதாகவும் கடினமானதாகவும் உணர்வீர்கள், மேலும் சில ஜனங்கள் தேவனுடைய வார்த்தை சூத்திரமானதைப் போல உணர்வார்கள். ஆனால் தேவனுடைய மனநிலையை அறிய ஜனங்களுக்கு உதவும்படி இந்த வேதாகமக் கதைகளை நான் எடுத்துக்காட்டுகளாகச் சொன்னால், அது அவர்களுக்குச் சலிப்பாகத் தெரியாது. நீங்கள் இப்படிச் சொல்லலாம்—இந்த எடுத்துக்காட்டுகளை விளக்கும் பாதையில், தேவனுடைய இருதயத்தில் இருந்த அவருடைய உணர்வு நிலை அல்லது உள்ளுணர்வு அல்லது அவரது எண்ணங்கள் மற்றும் யோசனைகள் ஆகிய இந்த விவரங்கள் ஜனங்களுக்கு மனித மொழியில் சொல்லப்பட்டுள்ளன, மேலும் அவர்களை நன்றியுடன் இருக்க அனுமதிப்பதும், தேவனிடத்தில் உள்ளவைகளும், அவர் யாராய் இருக்கிறார் என்பதும் சூத்திரமானவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வைப்பதுமே இவை அனைத்தினுடைய குறிக்கோளாகும் என்று. இது ஒரு புராணக்கதை அல்ல, அல்லது ஜனங்கள் பார்க்கவோ தொடவோ முடியாத ஒன்றுமல்ல. இது உண்மையிலேயே இருக்கிறதும் ஜனங்கள் உணரவும், புரிந்துகொள்ளவும் கூடியதுமான ஒன்றாகும். இதுவே இறுதி இலக்காகும். இந்த காலத்தில் வாழும் ஜனங்களெல்லாம் பாக்கியவான்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்கள் தேவனுடைய முந்தைய கிரியையின் விரிவான புரிதலைப் பெறுவதற்கு வேதாகமக் கதைகளைப் பயன்படுத்தலாம்; அவர் செய்த கிரியையின் மூலம் அவருடைய மனநிலையை அவர்கள் பார்க்கலாம். அவர் வெளிப்படுத்தின இந்த மனநிலைகளின் மூலம் அவர்கள் மனுக்குலத்திற்கான தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளலாம், அவருடைய பரிசுத்தத்தின் உறுதியான வெளிப்பாடுகளையும், மனிதர்களுக்கான அவருடைய அக்கறையையும் அவர்கள் புரிந்து கொள்ளலாம், மேலும் இந்த வழியில் அவர்கள் தேவனுடைய மனநிலையைப் பற்றிய மிக விரிவான மற்றும் ஆழமான அறிவை அடைய முடியும். நீங்கள் அனைவரும் இப்போது இதை உணர முடியும் என்று நான் நம்புகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் நிறைவு செய்த கிரியையின் எல்லைக்குள், தேவனிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் மற்றொரு அம்சத்தையும் நீ காணலாம். இந்த அம்சமானது அவருடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது, மேலும் அவருடைய மனிதத்தன்மையின் காரணமாக ஜனங்கள் அதை பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடிந்தது. மாம்சத்தில் இருந்த தேவன் அவருடைய மனிதத்தன்மையில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை ஜனங்கள் மனுஷகுமாரனில் கண்டார்கள், மேலும் தேவனுடைய தெய்வீகத்தன்மை மாம்சத்தில் வெளிப்பட்டதையும் அவர்கள் கண்டார்கள். இந்த இரண்டு வகையான வெளிப்பாடுகளும் ஒரு மிக உண்மையான தேவனைக் காண ஜனங்களை அனுமதித்தன, மேலும் அவை தேவனைப் பற்றிய வித்தியாசமான கருத்தை உருவாக்க ஜனங்களை அனுமதித்தன. இருப்பினும், உலகத்தைச் சிருஷ்டித்த காலத்திற்கும் நியாயப்பிரமாண காலத்தின் முடிவிற்கும் இடையிலான காலகட்டத்தில், அதாவது கிருபையின் காலத்திற்கு முன்பு, மனிதர்களால் காணப்பட்ட, கேட்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட தேவனுடைய ஒரே அம்சங்கள் என்னவென்றால் தேவனுடைய தேவத்துவமும், பொருளில்லா உலகில் தேவன் செய்த, சொன்ன காரியங்களும், பார்க்க முடியாததும் தொட முடியாததுமான அவருடைய மெய்யான மனு உடலில் அவர் வெளிப்படுத்தின காரியங்களுமே ஆகும். பெரும்பாலும் இக்காரியங்கள் தாங்கள் அவரிடம் நெருங்க முடியாத அளவிற்குத் தேவன் தம்முடைய மகத்துவத்தில் மிக உயரமானவராய் இருக்கிறார் என்று ஜனங்களை எண்ண வைத்தன. தேவன் பொதுவாக ஜனங்களுக்குக் கொடுத்த உணர்வு என்னவென்றால், அவரைப் புரிந்துகொள்ள அவர்களின் ஆற்றலுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் ஒளிர்ந்தார் என்பதாகும், மேலும் அவருடைய ஒவ்வொரு எண்ணங்களும் யோசனைகளும் அவை எவ்வழியிலும் அடைய முடியாத அளவிற்கும், அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க முடியாத அளவிற்கும் மிகவும் இரகசியமானவையாகவும், மழுப்பலானவையாகவும் இருப்பதாகக்கூட ஜனங்கள் கருதினார்கள். ஜனங்களைப் பொறுத்தவரை, தேவனைப் பற்றிய அனைத்தும் மிகத்தொலைவில் இருந்தன, ஜனங்களால் அதைப் பார்க்க முடியாத, அதைத் தொட முடியாத அளவிற்குத் தூரமாய் இருந்தன. அவர் வானத்தில் உயரமாக இருப்பது போல் தோன்றியது, அவர் இல்லவே இல்லை என்பது போலத் தோன்றியது. ஆகவே ஜனங்களைப் பொறுத்தவரை, தேவனுடைய இருதயத்தையும் மனதையும் அல்லது அவருடைய எந்த ஒரு சிந்தனையையும் புரிந்துகொள்வது என்பது அடைய முடியாததும், அவர்களால் எட்டக்கூட முடியாதுமாய் இருந்தது. நியாயப்பிரமாண காலத்தில் தேவன் சில உறுதியானக் கிரியைகளைச் செய்திருந்தாலும், ஜனங்கள் அவரைப் புரிந்துகொள்ளவும், அவரைப் பற்றிய சிறிது உண்மையான அறிவை உணர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும்படியாய், அவர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை வெளியிடவும் மற்றும் சில குறிப்பிட்ட மனநிலைகளை வெளிப்படுத்தவும் செய்தார். ஆனாலும் முடிவில் தேவனிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதைப் பற்றிய இந்த வெளிப்பாடுகள் பொருளில்லா உலகத்தில் இருந்தே வந்தன. மேலும் ஜனங்கள் புரிந்து கொண்டதும், அவர்கள் அறிந்திருந்ததும் என்னவென்றால் அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதின் தெய்வீக அம்சத்தைப் பற்றினதே ஆகும். அவரிடத்தில் உள்ளவையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதைப் பற்றின இந்த வெளிப்பாட்டிலிருந்து, மனுக்குலம் ஓர் உறுதியான கருத்தை அடைய முடியவில்லை. தேவனைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயம் “நெருங்கக் கடினமானதும், பார்வைக்கு உள்ளேயும் வெளியேயும் தோன்றி மறையும் ஓர் ஆவிக்குரிய உடல்” என்ற எல்லைக்குள் இன்னும் சிக்கியுள்ளது. பொருள் உலகத்திற்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஓர் உருவத்தையோ ஜனங்கள் முன்பாகத் தோன்றுவதற்கு தேவன் உபயோகப்படுத்தாத காரணத்தால், அவர்களால் மனித மொழியைப் பயன்படுத்தி அவரை வரையறுக்க முடியவில்லை. ஜனங்களுடைய இருதயங்களிலும் மனங்களிலும், அவர்கள் தேவனுக்காக ஒரு தரத்தை நிலைநாட்டவும், மேலும் அவர் எவ்வளவு உயரமானவர், எவ்வளவு பெரியவர், அவர் பார்க்க எப்படி இருக்கிறார், அவருக்குச் சரியாக என்ன பிடிக்கும், அவருடைய ஆளுமை என்ன என்பதையெல்லாம் வைத்து அவரைத் தொடக்கூடியவராக, மனிதத்தன்மையுடையவராகச் செய்யவும் தங்களின் சொந்த மொழியைப் பயன்படுத்த எப்போதும் விரும்பினர். உண்மையில், ஜனங்கள் இவ்வழியில் சிந்திக்கிறார்கள் என்பதை தேவன் அவருடைய இருதயத்தில் அறிந்திருந்தார். அவர் ஜனங்களின் தேவைகளைக் குறித்து மிகவும் தெளிவாக இருந்தார், மேலும் தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் நிச்சயமாய் அறிந்திருந்தார், ஆகவே அவர் கிருபையின் காலத்தில் தனது கிரியையை வேறு வழியில் செய்து முடித்தார். இந்தப் புதிய வழியானது தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்தன்மை இரண்டும் உடையதாயிருந்தது. கர்த்தராகிய இயேசு கிரியை செய்த காலகட்டத்தில், தேவனுக்குப் பல மனித வெளிப்பாடுகள் இருந்ததை ஜனங்கள் காண முடிந்தது. உதாரணமாக, அவர் நடனமாட முடியும், திருமணங்களில் கலந்து கொள்ள முடியும், ஜனங்களுடன் ஒன்றுபட முடியும், அவர்களுடன் பேச முடியும், அவர்களுடன் கலந்துரையாட முடியும். அதோடுகூட கர்த்தராகிய இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையைக் குறிப்பிடும் ஏராளமான கிரியைகளையும் செய்துமுடித்தார், நிச்சயமாக இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனுடைய மனநிலையின் வெளிப்படுத்தலும், வெளிப்பாடும் ஆகும். இந்த நேரத்தில், ஜனங்கள் பார்க்கவும், தொடவும் கூடிய வகையில் தேவனுடைய தெய்வீகத்தன்மையானது சாதாரண மாம்சத்தில் உணரப்பட்டபோது, அவர் பார்வைக்கு உள்ளேயும் வெளியேயும் தோன்றி மறைகிறார் என்றும் அல்லது தங்களால் அவரிடம் நெருங்க முடியாது என்றும் அதற்குப் பின் அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம் அல்லது அவருடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும், அவருடைய வார்த்தைகள் மூலமாகவும், மனுஷகுமாரனுடைய கிரியையின் மூலமாகவும் அவர்கள் தேவனுடைய சித்தத்தை முழுவதும் புரிந்து கொள்ளவும் அல்லது அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்து கொள்ளவும் முயற்சி செய்யலாம். மனுவுருவான மனுஷகுமாரன் தேவனுடைய தெய்வீகத்தன்மையை தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்தி, தேவனுடைய சித்தத்தை மனுக்குலத்திற்குத் தெரிவித்தார். மேலும் தேவனுடைய சித்தம் மற்றும் மனநிலையை அவர் வெளிப்படுத்தியதின் மூலம், ஆவிக்குரிய உலகில் வாழ்கின்ற காணக்கூடாத, தொடக்கூடாத தேவனையும் அவர் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். மாம்சம் மட்டும் இரத்தத்தாலான, தொடக்கூடிய வடிவத்தில் தேவனையே ஜனங்கள் பார்த்தார்கள். ஆகவே மனவுருவான மனுஷகுமாரன், தேவனுடைய அடையாளம், தேவனுடைய நிலை, உருவம், மனநிலை மற்றும் அவரிடத்தில் உள்ளவை, அவர் யாராக இருக்கிறார் ஆகிய காரியங்களை உறுதியானதாகவும், மனிதத்தன்மையுடையதாகவும் மாற்றினார். மனுஷகுமாரனின் வெளிப்புறத் தோற்றம் தேவனுடைய உருவத்தைப் பற்றிய சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், அவருடைய சாராம்சமும் அவரிடத்தில் உள்ளவையும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதும் அவருடைய அடையாளத்தையும் மற்றும் தேவனுடைய நிகழ்நிலையையும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. வெளிப்படுத்தின விதத்தில் சொற்பமான சில வேறுபாடுகள் இருந்தன. மனுஷகுமாரன் தேவனுடைய அடையாளத்தையும், நிகழ்நிலையையும் தன்னுடைய மனிதத்தன்மையின் வடிவத்திலும் மற்றும் தன்னுடைய தெய்வீகதன்மையிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த நேரத்தில், தேவன் மாம்சத்தின் மூலம் கிரியை செய்தார், மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து பேசினார், மனுஷகுமாரனுடைய அடையாளம் மற்றும் நிகழ்நிலையுடன் மனுக்குலத்தின் முன் நின்றார். மேலும் இது உண்மையான வார்த்தைகளை, மனுக்குலத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையைச் சந்திக்கவும், அனுபவிக்கவும் ஜனங்களுக்கு வாய்ப்பளித்தது. இது, மனத்தாழ்மையின் மத்தியில் அவருக்கிருந்த தெய்வீகத்தன்மை மற்றும் அவருடைய மகத்துவத்தை ஜனங்கள் ஆழ்ந்து நோக்க அனுமதித்தது. அத்துடன் இது தேவனுடைய நம்பகத்தன்மை மற்றும் உண்மை நிலையின் ஆரம்பக் கட்ட புரிதலையும், வரையறையையும் அடையவும் அனுமதித்தது. கர்த்தராகிய இயேசுவால் செய்து முடிக்கப்பட்ட கிரியைகள், அவர் கிரியை செய்யும் வழிகள் மற்றும் அவர் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பேசினார் ஆகியவை ஆவிக்குரிய உலகத்தில் உள்ள தேவனுடைய மெய்யான மனுவுடலில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அவரைப் பற்றிய அனைத்தும் உண்மையிலேயே முன் ஒருக்காலும் மனுக்குலம் கண்டிராத தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தின, இதை மறுக்க முடியாது! அதாவது, எந்த வடிவத்தில் தேவன் தோன்றினாலும், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பேசினாலும் அல்லது எந்த உருவத்தில் மனுக்குலத்தை எதிர்கொண்டாலும், தேவன் தன்னைத் தவிர வேறு எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர் எந்த ஒரு மனிதனையோ அல்லது சீர்கேடான மனுக்குலத்தையோ பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவன்தாமே தேவன், இதை மறுக்க முடியாது.

அடுத்து, கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு சொன்ன ஓர் உவமையைப் பார்ப்போம்.

3. காணாமல் போன ஆடு பற்றிய உவமை

மத். 18:12-14 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

இந்த பத்தி ஓர் உவமை ஆகும். இது ஜனங்களுக்கு எவ்வகையான உணர்வைத் தருகிறது? இங்கே பயன்படுத்தப்பட்ட உவமையை வெளிப்படுத்தும் முறையானது மனித மொழியில் பேசும் ஒரு வழிமொழியாகும், மேலும், இது அப்படியே மனித அறிவின் எல்லைக்கு உட்பட்டுள்ளது. நியாயப்பிரமாண காலத்தில் தேவன் இதே போன்ற ஒன்றைச் சொல்லி இருந்தால், இது போன்ற வார்த்தைகள் தேவன் யார் என்பதோடு உண்மையிலேயே ஒத்துப் போகவில்லை என்று ஜனங்கள் நினைத்திருப்பார்கள், ஆனால் மனுஷகுமாரன் இந்த வார்த்தைகளைக் கிருபையின் காலத்தில் பேசினபோது, ஜனங்கள் அவற்றை ஆறுதலாகவும், கனிவாகவும், நெருக்கமாகவும் உணர்ந்தார்கள். தேவன் மாம்சமான போது, அவர் மனித உருவத்தில் தோன்றின போது, அவருடைய இருதயத்தின் குரலை வெளிப்படுத்தும்படி, அவருடைய சொந்த மனிதத்தன்மையில் இருந்து வந்த பொருத்தமான உவமையை அவர் பயன்படுத்தினார். இந்தக் குரலானது தேவனுடைய சொந்த குரலையும் அந்த காலத்தில் அவர் செய்ய விரும்பின கிரியையும் குறித்தது. கிருபையின் காலத்தில் ஜனங்களைக் குறித்து தேவன் கொண்டிருந்த மனப்பான்மையையும் அது குறித்தது. ஜனங்களைப் பற்றிய தேவனுடைய மனப்பான்மையின் கண்ணோட்டத்தில், அவர் ஒவ்வொரு நபரையும் ஓர் ஆட்டுடன் ஒப்பிட்டார். ஓர் ஆடு தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிப்பதற்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். இது அவர் மாம்சத்தில் இருந்தபோது, அந்தக் காலத்தில் மனுக்குலத்தின் நடுவில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையின் ஒரு கொள்கையைக் குறித்தது. அந்தக் கிரியையில் தன்னுடைய உறுதியையும், மனப்பான்மையையும் விவரிக்கும்படியாய் தேவன் இந்த உவமையைப் பயன்படுத்தினார். தேவன் மாம்சமானதின் பலன் இதுதான்: அவர் மனிதகுலத்தின் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மேலும் ஜனங்களுடன் பேசவும், தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தவும் அவர் மனித மொழியைப் பயன்படுத்தலாம். ஜனங்கள் புரிந்து கொள்ளப் போராடிய அவருடைய ஆழ்ந்த, தெய்வீகமான மொழியை அவர் மனிதனுக்கு மனித மொழியில், மனித வழியில் விளக்கினார் அல்லது “மொழிபெயர்த்தார்”. இது அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவும், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஜனங்களுக்கு உதவியது. அவரால் மனித கண்ணோட்டத்திலிருந்து, மனித மொழியைப் பயன்படுத்தி, அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் ஜனங்களுடன் உரையாடவும் முடிந்தது. ஜனங்கள் தேவனுடைய தயவையும், நெருக்கத்தையும் உணரும்படியாய், அவர்கள் அவருடைய இருதயத்தைப் பார்க்கும்படியாய், அவரால் மனித மொழியையும் அறிவையும் பயன்படுத்திப் பேசவும், கிரியை செய்யவும் முடிந்தது. இதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தைகளிலும் கிரியைகளிலும் ஏதேனும் தடை இருக்கிறதா? தேவன் தாமே பேச விரும்பியதைப் பற்றியும், தான் செய்ய விரும்பும் கிரியையைப் பற்றியும் அல்லது அவருடைய சொந்த சித்தத்தை வெளிப்படுத்துவதைப் பற்றியும் பேசுவதற்கு மனித அறிவையும், மொழியையும் அல்லது பேசும் முறைகளையும் பயன்படுத்த வழியே இல்லை என்ற வகையில் ஜனங்கள் பார்க்கின்றனர். ஆனால் இது தவறான சிந்தனையாகும். ஜனங்கள் தேவனுடைய உண்மைத் தன்மையையும், நேர்மையையும் உணரும்படியாய், அந்தக் காலகட்டத்தில் ஜனங்களைக் குறித்த அவருடைய மனப்பான்மையைப் பார்க்கும்படியாய் தேவன் இவ்வகையான உவமையைப் பயன்படுத்தினார். இந்த உவமையானது ஒரு கனவில் இருந்து கொண்டு, நீண்டகாலமாக நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஜனங்களை எழுப்பி விட்டது, மேலும் இது கிருபையின் காலத்தில் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த ஜனங்களுக்கு ஊக்கமளித்தது. இந்த உவமையின் பத்தியைப் படிப்பதின் மூலம், மனுக்குலத்தை இரட்சிப்பதில் தேவனுடைய நேர்மையை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் தேவனுடைய இருதயத்தில் மனுக்குலத்திற்கு வழங்கப்படும் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.

இந்தப் பத்தியின் கடைசி வாக்கியத்தை நாம் பார்க்கலாம்: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” இவை கர்த்தராகிய இயேசுவினுடைய சொந்த வார்த்தைகளா அல்லது பரலோகத்திலிருக்கிற பிதாவின் வார்த்தைகளா? மேலோட்டமாகப் பார்க்கும் போது, பேசுவது கர்த்தராகிய இயேசுவைப் போலத் தோன்றுகிறது, ஆனால் அவருடைய சித்தம் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் அவர் சொன்னார்: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” அக்காலத்து ஜனங்கள் பரலோகத்திலுள்ள பிதாவை மட்டுமே தேவன் என்று ஏற்றுக் கொண்டனர், மேலும் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பார்த்த இந்த நபரை அவரால் வெறுமனே அனுப்பப்பட்டவர் என்றும், இவரால் பரலோகத்தில் உள்ள பிதாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றும் நம்பினர். அதனால்தான் கர்த்தராகிய இயேசு இந்த உவமையின் முடிவில் இந்த வாக்கியத்தைக் கூற வேண்டியிருந்தது, இதனால் ஜனங்கள் மனுக்குலத்திற்கான தேவனுடைய சித்தத்தை உண்மையிலேயே உணரவும், அவர் சொன்னவற்றின் நம்பகத்தன்மையையும், துல்லியத்தையும் உணர முடிந்தது. இந்த வாக்கியம் சொல்வதற்கு எளிமையான காரியமாக இருந்தாலும், இது அக்கறையுடனும் அன்புடனும் பேசப்பட்டு, கர்த்தராகிய இயேசுவின் மனத்தாழ்மையையும் மறைபொருளையும் வெளிப்படுத்தியது. தேவன் மாம்சமானாரா அல்லது ஆவிக்குரிய உலகில் கிரியை செய்தாரா என்பது முக்கியமல்ல, அவர் மனித இருதயத்தை நன்கு அறிந்திருந்தார், ஜனங்களுக்கு என்ன தேவை, ஜனங்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள், எது அவர்களைக் குழப்புகிறது என்பதை நன்கு புரிந்திருந்தார், ஆகவேதான் அவர் இந்த வாக்கியத்தைக் கூறினார். இந்த வாக்கியம் மனுக்குலத்தின் மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையைக் கோடிட்டுக் காண்பிக்கிறது: ஜனங்கள் மனுஷகுமாரன் சொன்னதைச் சந்தேகித்தனர், அதாவது கர்த்தராகிய இயேசு பேசினபோது அவர் இதைச் சொல்ல வேண்டியிருந்தது: “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல,” ஜனங்கள் தன்னுடைய பிழையின்மையை நம்புவதற்கும், அவர்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த கருத்தின் அடிப்படையில்தான் அவருடைய வார்த்தைகள் பலனளிப்பதாய் இருந்தன. தேவன் ஒரு சாதாரண மனுஷகுமாரனான போது, தேவனுக்கும் மனுக்குலத்திற்கும் ஓர் அவலமான உறவு இருந்தது என்பதையும் மனுஷகுமாரனுடைய சூழ்நிலை இக்கட்டானதாக இருந்ததையும் காட்டுகிறது. அந்த நாட்களில் கர்த்தராகிய இயேசுவின் நிலை மனிதர்கள் மத்தியில் எவ்வளவு முக்கியமற்றதாக இருந்தது என்பதையும் இது காட்டுகிறது. அவர் இதைச் சொன்னபோது உண்மையில் ஜனங்களிடம் சொல்வது இதுதான்: இந்த வார்த்தைகள் என்னுடைய இருதயத்தில் இருப்பதைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் இவை உங்களுடைய இருதயங்களில் இருக்கும் தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதை நீங்கள் உறுதியுடன் நம்பலாம். மனுக்குலத்தைப் பொறுத்தவரை இது ஒரு முரணான விஷயம் அல்லவா? மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன், தமது சுயமாக இல்லாத பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவர் அவர்களுடைய சந்தேகங்களையும், நிராகரிப்பையும் மற்றும் உணர்வின்மையையும், மந்தமான தன்மையையும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. மனுஷகுமாரனுடைய கிரியையின் செயல்முறையானது மனுக்குலத்தின் நிராகரிப்பை அனுபவிப்பதும், அவருக்கு எதிராக அவர்கள் போட்டியிடுவதை அனுபவமாகப் பெறுவதும் என்று சொல்லலாம். அதற்கும் மேலாக, மனுக்குலத்தின் நம்பிக்கையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்வதற்கும், தன்னிடத்தில் இருப்பதையும், தான் யாராக இருக்கிறார் என்பதன் மூலம், தன்னுடைய சொந்தச் சாராம்சத்தின் மூலம் மனுக்குலத்தை வெல்வதற்குமான கிரியை செய்யும் செயல்முறையாய் இருந்தது. அதைவிட முக்கியமாக மனுவுருவான தேவன் சாத்தானுடன் பூமியில் போர் செய்தார்; அதைவிட, தேவன் ஒரு சாதாரண மனிதனாகத் தன்னைப் பின்பற்றுபவர்களுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், இந்தப் போராட்டத்தில் மனுஷகுமாரன் தன்னுடைய மனத்தாழ்மை, தன்னிடம் இருப்பது, தான் யாராக இருக்கிறார், தன்னுடைய அன்பு ஞானம் ஆகியவற்றைக் கொண்டு தன்னுடைய கிரியையைச் செய்து முடித்தார். அவர் விரும்பிய ஜனங்களைப் பெற்றுக் கொண்டார், அவர் தனக்குத் தகுதியான அடையாளத்தையும் அந்தஸ்தையும் பெற்று, அவருடைய சிங்காசனத்திற்குத் “திரும்பினார்”.

அடுத்து நாம் கீழ்க்காணும் வேத வசனங்களின் இரண்டு பத்திகளைப் பார்க்கலாம்:

4. ஏழெழுபது முறை மன்னிப்பது

மத். 18:21-22 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

5. தேவனுடைய அன்பு

மத். 22:37-39 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

இந்த இரண்டு பத்திகளில், ஒன்று மன்னிப்பைப் பற்றியும் மற்றொன்று அன்பைப் பற்றியும் பேசுகிறது. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் செய்ய விரும்பிய கிரியையை இந்த இரண்டு தலைப்புகளும் உண்மையில் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

தேவன் மாம்சமானபோது, அவர் தனது கிரியையின் ஒரு கட்டத்தை அவருடன் எடுத்து வந்திருந்தார், அது அந்தக் காலத்தில் அவர் வெளிப்படுத்த விரும்பிய குறிப்பிட்ட கிரியையின் பணிகளும், மனநிலையும் ஆகும். அந்தக் காலகட்டத்தில் மனுஷகுமாரன் செய்த அனைத்தும் இந்தக் காலத்தில் தேவன் செய்ய விரும்பிய கிரியையைச் சார்ந்திருந்தன. அவர் அதற்கு அதிகமாகவும் செய்யமாட்டார், அதற்குக் குறைவாகவும் செய்யமாட்டார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அவர் நிறைவேற்றின ஒவ்வொரு வகையான கிரியை அனைத்தும் இந்தக் காலத்துடன் தொடர்புடையவையாய் இருந்தன. அவர் அதை மனித மொழியில், மனித வழியிலோ அல்லது தெய்வீக மொழியின் வாயிலாகவோ வெளிப்படுத்தினார் என்பதைப் பொருட்படுத்தாமல், மேலும் எந்த வழியில் அல்லது எந்தக் கண்ணோட்டத்தில் அவர் அவ்வாறு செய்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் என்ன விரும்புகிறார், அவருடைய சித்தம் என்ன, அவர் ஜனங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் ஜனங்கள் புரிந்து கொள்ள உதவுவதே அவரின் நோக்கமாய் இருந்தது. அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் அவருடைய கிரியையைப் புரிந்து கொள்வதற்கும் அவர் பல்வேறு வழிகளையும் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் பயன்படுத்தலாம். ஆகவே, கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு மனுக்குலத்திற்குச் சொல்ல வேண்டியவைகளை வெளிப்படுத்தப் பெரும்பான்மையாக மனித மொழியைப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். இன்னும், நாம் அவரை ஒரு சாதாரண வழிகாட்டியின் கண்ணோட்டத்திலிருந்து, அவர் ஜனங்களோடு பேசுவதையும், அவர்களின் தேவைகளைச் சந்திப்பதையும், அவர்கள் வேண்டியதை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதையும் பார்க்கிறோம். கிருபையின் காலத்திற்கு முன்னர் வந்த நியாயப்பிரமாண காலத்தில் இந்தக் கிரியை முறை காணப்படவில்லை. அவர் மனுக்குலத்துடன் மிகவும் நெருக்கமானவராகவும், அதிக மனதுருக்கம் கொண்டவராகவும் ஆனார். அதேபோல வடிவத்திலும் முறையிலும் நடைமுறைப் பலன்களை அடைய முடிந்தது. ஜனங்களை ஏழெழுபது முறை மன்னிப்பதைப் பற்றிய உருவகம் இந்தக் குறிப்பை உண்மையில் தெளிவுபடுத்துகிறது. இந்த உருவகத்தில் உள்ள எண்ணிக்கையினால் அடையப்பட்ட நோக்கமானது இதைச் சொன்ன அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள ஜனங்களை அனுமதிப்பதாகும். ஜனங்கள் மற்றவர்களை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல ஏழு முறைகள் கூட அல்ல, ஆனால் ஏழெழுபது முறை மன்னிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். “ஏழெழுபது முறை” என்ற கருத்துக்குள் எவ்வகையான கருத்து உள்ளது? அது ஜனங்கள் மன்னிப்பை தங்களுடைய சொந்த பொறுப்பாகவும், தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும், தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு “வழியாகவும்” மாற்றிக் கொள்ளச் செய்வதாகும். இது ஓர் உருவகம் மட்டுமே என்றாலும் இது முக்கியமான கருத்தைக் கோடிட்டுக் காண்பிக்க உதவியது. அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், சரியான நடைமுறை வழிகளையும், நடைமுறையின் கொள்கைகளையும், தரங்களையும் கண்டறிய ஜனங்களுக்கு இது உதவியது. இந்த உருவகமானது, ஜனங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவியது, மேலும் மன்னிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நிபந்தனைகள் இல்லாமல், மற்றவர்களிடம் சகிப்புத் தன்மையுடனும், புரிந்து கொள்ளும் தன்மையுடனும், எத்தனை முறையாயினும் மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சரியான ஒரு மையக்கருத்தை அவர்களுக்குத் தந்தது. கர்த்தராகிய இயேசு இதைச் சொன்னபோது அவருடைய இருதயத்தில் என்ன இருந்தது? அவர் உண்மையில் “ஏழெழுபது முறை” என்ற எண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாரா? இல்லை, அவர் அதை நினைக்கவில்லை. தேவன் ஜனங்களை மன்னிப்பதில் எண்ணிக்கை இருக்கிறதா? இங்கே குறிப்பிடப்பட்டுள்ள “எத்தனை முறை” என்பதில் மிக ஆர்வமாக உள்ள பல ஜனங்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையில் இந்த எண்ணின் தோற்றத்தையும் பொருளையும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கர்த்தராகிய இயேசுவின் வாயிலிருந்து இந்த எண் ஏன் வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த எண்ணில் ஓர் ஆழமான அர்த்தம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இது தேவன் பயன்படுத்தின மனிதப் பேச்சின் ஓர் இலக்கம் மட்டுமே. மனுக்குலத்திற்கான கர்த்தராகிய இயேசுவின் தேவைகளுடனேயே எந்த ஓர் உட்குறிப்பும் அல்லது அர்த்தமும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தேவன் இன்னும் மாம்சமாகாத போது, அவர் சொன்னதை ஜனங்கள் அதிகம் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் அவருடைய வார்த்தைகள் முழுமையான தெய்வீகத்தன்மையிலிருந்து வெளிப்பட்டன. அவர் சொன்ன கண்ணோட்டமும், சூழலும் கண்களுக்குத் தெரியாததாய் மற்றும் மனுக்குலம் அடைய முடியாததாய் இருந்தது. அது ஜனங்கள் பார்க்கக் கூடாத ஓர் ஆவிக்குரிய உலகிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. மாம்சத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஆவிக்குரிய உலகத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஆனால் தேவன் மாம்சமான பிறகு மனிதத்தன்மையின் கண்ணோட்டத்திலிருந்து மனுக்குலத்தோடு பேசினார், மேலும் அவர் வெளியேறி, ஆவிக்குரிய உலகத்தின் எல்லையைத் தாண்டினார். அவர் தன்னுடைய தெய்வீக மனநிலையையும், சித்தத்தையும் மற்றும் மனப்பான்மையையும், மனிதர்களால் கற்பனை செய்யக்கூடிய விஷயங்கள், அவர்கள் வாழ்க்கையில் கண்ட மற்றும் சந்தித்த விஷயங்கள், மற்றும் மனிதர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகள், அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் மற்றும் அறிவால் அவர்கள் கிரகித்துக்கொள்ளக்கூடியவை மூலம் வெளிப்படுத்த முடியும். இது மனுக்குலத்தை தேவனைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள, அவருடைய நோக்கத்தையும், அவர் எதிர்பார்க்கிற தரத்தையும் அவர்களுடைய திறனின் எல்லைக்குள்ளும், அவர்களால் முடிந்த அளவிற்கும் கிரகித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதுவே மனுக்குலத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியையின் முறையும் கொள்கையும் ஆகும். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய வழிகளும், அவருடைய கொள்கைகளும் பெரும்பாலும் மனுக்குலத்தின் வாயிலாகவோ அல்லது அதன் மூலமாகவோ அடையப்பட்டிருந்தாலும், அது உண்மையிலேயே நேரடியாக தெய்வீகத்தன்மையில் கிரியை செய்வதன் மூலம் அடையமுடியாத பலன்களை அடைந்தது. மனுக்குலத்தில் தேவனுடைய கிரியை மிகவும் உறுதியானது, உண்மையானது மற்றும் இலக்குடையது, கிரியையின் முறைகள் மிகவும் நெகிழ்வானவையாக இருந்தன, மேலும் இது, வடிவத்தில் நியாயப்பிரமாண காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட கிரியைகளை விஞ்சியது.

அடுத்து கர்த்தரை நேசிப்பதைப் பற்றியும், உங்களைப் போலவே பிறரை நேசிப்பதைப் பற்றியும் பேசலாம். இது தெய்வீகத்தில் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட ஒன்றா? இல்லை, நிச்சயமாக இல்லை! இவை அனைத்தும் மனுஷகுமாரன் மனிதத்தன்மையிலிருந்து பேசப்பட்டவை ஆகும். மனிதர்கள் மட்டுமே “உன்னைப்போலவே பிறரையும் நேசி,” மற்றும் “உன் ஜீவனை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசி” என்று சொல்லமுடியும். இந்த முறையில் பேசுவது பிரத்தியேகமாக மனிதன்தான். தேவன் ஒருபோதும் இப்படி பேசியது இல்லை. குறைந்தபட்சம், தேவன் தனது தெய்வீகத்தன்மையில் இவ்வகையான மொழியைக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் மனுக்குலத்தின் மீதான அவருடைய அன்பை முறைப்படுத்த “உன்னைப் போலவே பிறரையும் நேசி” என்ற இந்தக் கோட்பாடு அவருக்கு அவசியமில்லை, ஏனென்றால் மனுக்குலத்திற்கான தேவனுடைய அன்பானது, அவரிடம் இருப்பதன் மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதன் இயல்பான வெளிப்பாடாகும். “நான் என்னை நேசிப்பதைப் போலவே மனுக்குலத்தையும் நேசிக்கிறேன்” என்று தேவன் சொல்வதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஏனென்றால், அன்பு தேவனுடைய சாராம்சத்திலும், அவரிடம் இருப்பதிலும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதிலும் இருக்கிறது. மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அன்பு, அவருடைய மனப்பான்மை மற்றும் அவர் ஜனங்களை நடத்தும் விதம் ஆகியவை அவருடைய மனநிலையின் இயல்பான வெளிப்பாடும் வெளிப்படுத்துதலும் ஆகும். அவர் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வழியில் இதைச் செய்யத் தேவையில்லை அல்லது தன்னைப் போலவே பிறரையும் நேசிப்பதை அடைய ஒரு குறிப்பிட்ட முறையையோ அல்லது அறநெறி முறையையோ வேண்டுமென்றே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இந்த வகையான சாராம்சத்தை அவர் ஏற்கனவே கொண்டிருக்கிறார். இதில் நீ எதைக் காண்கிறாய்? தேவன் மனிதத்தன்மையில் கிரியை செய்தபோது, அவருடைய பல முறைகளும், வார்த்தைகளும், சத்தியங்களும் மனித வழியில் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் அதே நேரத்தில், தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதும், அவருடைய சித்தம் ஆகியவை ஜனங்கள் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தப்பட்டன. தேவனுடைய உள்ளார்ந்த அடையாளத்தையும் அந்தஸ்தையும் குறிக்கிற அவருடைய சாராம்சத்தையும், அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டார்கள். அதாவது, மாம்சத்தில் இருந்த மனுஷகுமாரன் தேவனுடைய உள்ளான மனநிலையையும், சாராம்சத்தையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கும், முடிந்த அளவிற்கு மிகத் துல்லியமாகவும் வெளிப்படுத்தினார். மனுஷகுமாரனுடைய மனிதத்தன்மையானது, பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திலான மனிதனுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கும் தொடர்புக்கும் இடையூறாகவோ அல்லது தடையாகவோ இல்லை என்பது மட்டுமல்லாமல், உண்மையில் சிருஷ்டிப்பின் தேவனுடன் இணைவதற்கு மனுக்குலத்திற்கான ஒரே வாய்க்காலாகவும், ஒரே பாலமாகவும் அது இருந்தது. கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு செய்த கிரியையின் இயல்புக்கும் முறைகளுக்கும், தற்போதைய கிரியையின் நிலைக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக இப்போது, இந்தக் கட்டத்தில் நீங்கள் உணரவில்லையா? தற்போதைய கட்ட கிரியையும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்த அதிகமான மனித மொழியைப் பயன்படுத்துகிறது, மேலும் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்த மனுக்குலத்தின் அன்றாட வாழ்க்கை மற்றும் மனித அறிவிலிருந்து அதிகமான மொழி மற்றும் முறைகளைப் பயன்படுத்துகிறது. தேவன் மாம்சமானவுடன், அவர் மனிதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்தோ பேசினாலும், பெரும்பாலான அவருடைய மொழி மற்றும் வெளிப்படுத்தும் முறைகளானது மனித மொழி மற்றும் முறைகள் என்றும் ஊடகம் வழியாக வருகின்றன. அதாவது, தேவன் மாம்சமாகிற போது, தேவனுடைய சர்வவல்லமையையும், அவருடைய ஞானத்தையும், தேவனுடைய ஒவ்வொரு உண்மையான அம்சத்தையும் நீ அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாகும். தேவன் மாம்சமான போது, அவர் வளர்ந்த போது, மனுக்குலத்தின் சில அறிவையும், விவேகத்தையும், மொழியையும், வெளிப்படுத்தும் முறைகளையும் புரிந்து மனிதத்தன்மையில் புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும், கிரகித்துக்கொள்ளவும் வந்தார். மனுவுருவான தேவன் தாம் சிருஷ்டித்த மனிதர்களிடமிருந்து வந்தக் காரியங்களையே கொண்டிருந்தார். அவருடைய மனநிலையையும் அவருடைய தெய்வீகத்தன்மையையும் வெளிப்படுத்தும்படி, அவை மாம்சத்தில் இருந்த தேவனின் கருவிகளாக மாறின, மேலும் அவர் மனிதக் கண்ணோட்டத்திலிருந்து மற்றும் மனித மொழியைப் பயன்படுத்தி மனுக்குலத்தின் மத்தியில் கிரியை செய்தபோது, அவருடைய கிரியையை மிகப் பொருத்தமானதாகவும், உண்மையானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும் மாற்ற அவரை அனுமதித்தன. இது அவருடைய கிரியையை ஜனங்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் ஆக்கியது, இதனால் தேவன் விரும்பிய முடிவுகளை அடைந்தார். தேவன் இவ்வகையில் மாம்சத்தில் கிரியை செய்வது அவருக்கு மிகவும் நடைமுறைக்குரியதாய் இருக்கிறதல்லவா? இது தேவனுடைய ஞானமல்லவா? தேவன் மாம்சமான போது, அவர் செய்ய விரும்பின கிரியையை தேவனுடைய மாம்சமானது செய்ய முடிந்த போது, அப்போதுதான் அவர் தம்முடைய மனநிலையையும், கிரியையும் நடைமுறையில் வெளிப்படுத்த முடிந்தது, மேலும் மனுஷகுமாரனாக அவர் தம்முடைய ஊழியத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கான நேரமும் அதுவாகத்தான் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே அதன்பின் ஒரு “தலைமுறை இடைவெளி” இல்லை, அதாவது தூதுவர்கள் மூலமாகத் தொடர்பு கொள்வதாகத் தனது கிரியையை விரைவில் நிறுத்திவிட்டு, தேவன் தாமாகவே தனிப்பட்ட முறையில் எல்லா வார்த்தைகளையும், மாம்சத்தில் அவர் செய்ய விரும்பிய கிரியையும் செய்ய முடியும் என்பதேயாகும். தேவன் இரட்சிக்கும் ஜனங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தார்கள் என்றும் அவருடைய நிர்வாகக் கிரியை புதிய எல்லைக்குள் நுழைந்தது என்பதையும், மனுக்குலம் முழுவதுமே ஒரு புதிய சகாப்தத்தை எதிர்கொள்ளவிருப்பதையும் இது குறித்தது.

கர்த்தராகிய இயேசு பிறந்த போது பல சம்பவங்கள் நடந்தன என்பதை வேதாகமத்தைப் படித்த அனைவருக்கும் தெரியும். அந்த நிகழ்வுகளில் மிகப் பெரியது பிசாசுகளின் ராஜாவால் அவர் வேட்டையாடப்படுவது, இரண்டு வயதிற்கும் மற்றும் அதற்குக் குறைவான வயதிருக்கும் பட்டணத்தின் குழந்தைகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட அளவிற்கு இது மிகவும் தீவிரமான ஒரு நிகழ்வாகும். மனிதர்களிடையே மாம்சமானதின் மூலம் தேவன் பெரிய ஆபத்தை ஏற்றுக்கொண்டார் என்பது தெளிவாகிறது. மனுக்குலத்தை இரட்சிக்கும் தனது நிர்வாகத்தை நிறைவு செய்வதற்காக அவர் செலுத்திய பெரும் கிரயமும் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களிடையே தேவன் செய்த கிரியைகளுக்காக அவர் மாம்சத்தில் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையும் தெளிவாகத் தெரிகிறது. தேவனின் மாம்சம் மனிதர்களிடையே கிரியை செய்ய முடிந்தபோது அவர் எப்படி உணர்ந்தார்? ஜனங்கள் அதை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? குறைந்தபட்சம், தேவன் மகிழ்ச்சியாக இருந்தார், ஏனென்றால் அவர் தனது புதிய கிரியையை மனிதர்களிடையே செய்யத் தொடங்க முடிந்தது. கர்த்தராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்று அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற அதிகாரபூர்வமாகத் தன்னுடைய கிரியையைத் தொடங்கினபோது, தேவனுடைய இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கியது, ஏனென்றால் பல வருடக் காத்திருப்பு மற்றும் ஆயத்தத்திற்குப் பிறகு, அவர் இறுதியாக ஒரு சாதாரண மனிதனுடைய ரூபத்தில், அவருடைய புதிய கிரியையை மாம்சமும் இரத்தமும் கொண்ட, மனிதர்களால் பார்க்கவும் தொடவும் முடிந்த, மனித வடிவத்தில் தொடங்க முடிந்தது. அவரால் இறுதியாக ஒரு மனிதனின் அடையாளத்தின் மூலம் ஜனங்களுடன் நேருக்கு நேரும், இதயத்துடன் இதயமாகவும் பேச முடிந்தது. இறுதியாக மனித வழிகள் மற்றும் மனித மொழி என்னும் ஊடகம் வாயிலாக தேவன் மனுகுலத்தை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது. அவர் மனித மொழியைப் பயன்படுத்தி மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திக்கவும், அவர்களைத் தெளிவுபடுத்தவும், அவர்களுக்கு உதவவும் முடிந்தது; அவர் அவர்களுடன் ஒரே மேஜையில் சாப்பிட்டு, ஒரே இடத்தில் வாழ முடிந்தது. அவரால் மனிதர்களைப் பார்க்கவும், பொருட்களைப் பார்க்கவும், மனிதர்கள் தங்களைப் பார்த்த விதத்திலும், அவர்கள் சொந்தக் கண்கள் மூலமாகக் கூட எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. தேவனைப் பொறுத்தவரை, இது ஏற்கனவே அவர் மாம்சத்தில் செய்த கிரியையின் முதல் வெற்றியாகும். இது ஒரு பெரிய கிரியையின் சாதனை என்றும் சொல்லலாம், மேலும் நிச்சயமாக இது, தேவன் இதைக் குறித்து சந்தோஷப்பட்ட ஒரு காரியமாகும். அப்போதிலிருந்து, மனிதர்களிடையே செய்யப்பட்ட தனது கிரியையில் ஒருவகையான ஆறுதலைத் தேவன் முதன்முறையாக உணர்ந்தார். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் நடைமுறையானதாகவும் மற்றும் மிக இயல்பானதாகவும் இருந்தது, மேலும் தேவன் உணர்ந்த ஆறுதல் மிக உண்மையாக இருந்தது. மனுக்குலத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறை தேவனுடைய ஒரு புதிய கட்ட கிரியை நிறைவேறும்போதும், ஒவ்வொரு முறையும் தேவன் மனநிறைவை உணரும்போதும், அப்போது மனுக்குலம் தேவனிடம் நெருங்கி வந்து இரட்சிப்பை அடைய முடியும். தேவனைப் பொறுத்தவரை, இது அவருடைய நிர்வாகத் திட்டத்தில், முன்னோக்கிச் செல்கிற அவருடைய புதிய கிரியையின் தொடக்கமாகும். மேலும் இவை அவருடைய நோக்கங்கள் முழுமையான நிறைவேறுதலை நெருங்கும் நேரங்கள் ஆகும். மனுக்குலத்திற்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அதிர்ஷ்டமானதும் மிக நன்மையானதுமாகும்; தேவனுடைய இரட்சிப்புக்காக காத்திருக்கும் அனைவருக்கும் இது மிக முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியாகும். தேவன் ஒரு புதிய கட்ட கிரியையை நிறைவேற்றும்போது, அவருக்கு ஒரு புதிய ஆரம்பம் இருக்கும், மேலும் இந்தப் புதிய கிரியையும், புதிய ஆரம்பமும் மனுக்குலத்தினிடையே ஆரம்பிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்போது, இந்தக் கட்ட கிரியைகளின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, தேவனால் இறுதியான விளைவையும் பலனையும் ஏற்கனவே பார்க்கப்பட்டிருக்கும். மேலும் இதுதான் தேவனைத் திருப்தியாய் உணரச் செய்யும் மற்றும் நிச்சயமாக அவருடைய இருதயம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணமாக இருக்கிறது. தேவன் நம்பிக்கையாக உணர்கிறார், ஏனென்றால் அவருடைய பார்வையில் அவர் தேடும் ஜனங்களை அவர் பார்த்திருந்தார் மற்றும் தீர்மானித்திருந்தார், மேலும் ஏற்கனவே தன்னுடைய கிரியையை வெற்றிகரமாக முடித்து, தனக்குத் திருப்தியை அளிக்கக்கூடிய இந்த ஒரு ஜனக்கூட்டத்தை ஆதாயப்படுத்தி இருந்தார். இவ்வாறு அவர் தனது கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாக உணர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேவனுடைய மாம்சம் மனிதர்களிடையே புதிய கிரியையைத் தொடங்க இயலும்போது, அவர் தடையின்றி தான் செய்யவேண்டிய கிரியையை செய்யத் தொடங்குகிறார், மேலும் அனைத்தும் நிறைவேறியதாக அவர் உணரும்போது, முடிவானது ஏற்கனவே அவர் பார்வையில் உள்ளது. இதன் காரணமாக, அவர் திருப்தி அடைகிறார், அவருடைய இருதயம் மகிழ்ச்சியடைகிறது. தேவனுடைய மகிழ்ச்சி எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது? பதில் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? தேவன் அழுவாரா? தேவனால் அழ முடியுமா? தேவனால் தன் கரங்களைத் தட்ட முடியுமா? தேவனால் ஆட முடியுமா? தேவனால் பாட முடியுமா? அப்படியானால், அவர் என்ன பாடுவார்? நிச்சயமாக ஓர் அழகான, உருக்கமான, தன் இருதயத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும் ஒரு பாடலை அவரால் பாட முடியும். அதை மனுக்குலத்திற்காகவும், தனக்காகவும் மற்றும் எல்லா காரியங்களுக்காகவும் அவரால் பாட முடியும். தேவனுடைய மகிழ்ச்சி எவ்வகையிலும் வெளிப்படுத்தப்படலாம், இவை அனைத்தும் இயல்பானவையாகும், ஏனென்றால் தேவனுக்கு சந்தோஷங்களும் துக்கங்களும் உள்ளன, மேலும் அவருடைய பல்வேறு உணர்வுகளைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம். இது அவருடைய உரிமை மேலும் எதுவும் அதிக இயல்பானதாகவும் சரியானதாகவும் இருக்க முடியாது. அதைத் தவிர, ஜனங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. நீங்கள் தேவனிடத்தில் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இப்படி நடந்து கொள்ளக் கூடாது, அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி, இவ்வழியில் அவர் கொண்டிருக்கும் அவருடைய சந்தோஷத்தை அல்லது உணர்வைக் கட்டுப்படுத்தி, அவர் மீது “பட்டையை இறுக்கும் மந்திரத்தைப்”[அ] பயன்படுத்த முயற்சி செய்யக்கூடாது. தேவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, கண்ணீர் சிந்த முடியாது, அவரால் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாது என்று ஜனங்களின் இருதயத்தில் உள்ளது. இந்த இரண்டு கூடுகைகளின் போது, நாம் பரிமாறிக்கொண்டவற்றின் மூலம், இனி தேவனை இவ்வழியில் பார்க்காமல், தேவன் சிறிது சுதந்திரமும் விடுதலையும் கொண்டிருக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இது மிகவும் நல்ல விஷயம் எதிர்காலத்தில் நீங்கள் தேவன் சோகமாக இருப்பதை பற்றி கேட்கும்போது, தேவனுடைய வருத்தத்தை உண்மையாக உணர முடிந்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றிக் கேட்கும்போது, நீங்கள் உண்மையிலேயே அவருடைய மகிழ்ச்சியை உணர முடிந்தால், அதன்பின் உங்களால் குறைந்தபட்சம், எது தேவனை மகிழ்ச்சி அடையச் செய்கிறது, எது அவரை வருத்தமடையச் செய்கிறது என்பதைத் தெளிவாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். தேவன் வருத்தமாக இருப்பதால் நீங்கள் சோகமாகவும், தேவன் மகிழ்ச்சியாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் உணர முடிந்தால், அவர் உங்கள் இருதயத்தை முழுமையாக ஆதாயப்படுத்தி இருப்பார், மேலும் உங்களுக்கும் அவருக்குமிடையில் இனி எந்தத் தடுப்பும் இருக்காது. நீங்கள் இனிமேல், மனிதக் கற்பனைகள், கருத்துக்கள் மற்றும் அறிவைக்கொண்டு தேவனைக் கட்டுப்படுத்த முயற்சிக்க மாட்டீர்கள். அந்த நேரத்தில், தேவன் உங்கள் இருதயத்தில் ஜீவனுள்ளவராய், உயிர்ப்புள்ளவராய் இருப்பார். அவர் உங்கள் ஜீவனின் தேவனாகவும், உங்களைப் பற்றின எல்லாவற்றிற்கும் எஜமானராகவும் இருப்பார். உங்களுக்கு இவ்வகையான ஆசை இருக்கிறதா? உங்களால் இதை அடைய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அடுத்து, வேத வசனங்களிலிருந்து, கீழ்க்காணும் பத்திகளை நாம் வாசிக்கலாம்:

6. மலைப் பிரசங்கம்

பாக்கியமுள்ளவைகள் (மத் 5:3-12)

உப்பும் வெளிச்சமும் (மத் 5:13-16)

நியாயப்பிரமாணம் (மத் 5:17-20)

கோபம் (மத் 5:21-26)

விபச்சாரம் (மத் 5:27-30)

விவாகரத்து (மத் 5:31-32)

சத்தியம்பண்ணுதல் (மத் 5:33-37)

கண்ணுக்குக் கண் (மத் 5:38-42)

சத்துருக்களைச் சிநேகியுங்கள் (மத் 5:43-48)

தர்மஞ்செய்வதற்கான வழிமுறை (மத் 6:1-4)

ஜெபம் (மத் 6:5-8)

7. கர்த்தராகிய இயேசுவின் உவமைகள்

விதைக்கிறவனைப் பற்றிய உவமை (மத் 13:1-9)

களைகளைப் பற்றிய உவமை (மத் 13:24-30)

கடுகு விதையைப் பற்றிய உவமை (மத் 13:31-32)

புளித்த மாவைப் பற்றிய உவமை (மத் 13:33)

களைகளைப் பற்றிய உவமையின் விளக்கம் (மத் 13:36-43)

பொக்கிஷத்தைப் பற்றிய உவமை (மத் 13:44)

முத்தைப் பற்றிய உவமை (மத் 13:45-46)

வலையைப் பற்றிய உவமை (மத் 13:47-50)

8. கற்பனைகள்

மத். 22:37-39 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

முதலாவது “மலைப் பிரசங்கத்தின்” பல்வேறு பகுதிகளில் ஒவ்வொன்றையும் பார்ப்போம். இந்த வெவ்வேறு பகுதிகள் அனைத்தும் எதைப் பற்றிப் பேசுகின்றன? இந்தப் பல்வேறு பகுதிகளின் உள்ளடக்கங்கள் அனைத்தும் நியாயப்பிரமாண காலத்தின் விதிமுறைகளை விட அதிக உயர்ந்தவை, அதிக உறுதியானவை, ஜனங்களின் வாழ்க்கையோடு நெருக்கமானவை என்று உறுதியாகக் கூறலாம். நவீன சொற்களில் பேச வேண்டுமானால், இந்த விஷயங்கள் ஜனங்களின் உண்மையான நடைமுறைக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.

பின்வரும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பற்றி நாம் வாசிக்கலாம்: பாக்கியமுள்ளவைகளை நீ எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? நியாயப்பிரமாணத்தைப் பற்றி நீ என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? கோபத்தை எவ்வாறு வரையறுக்க வேண்டும்? விபச்சாரக்காரர்களை எவ்வாறு கையாள வேண்டும்? விவாகரத்தைப் பற்றி எவ்வாறு பேச வேண்டும், அதைக்குறித்து என்ன மாதிரியான விதிகள் உள்ளன? யார் விவாகரத்துப் பெற முடியும், யார் விவாகரத்துப் பெற முடியாது? சத்தியம்பண்ணுதல், கண்ணுக்கு கண் பழிவாங்குதல், சத்துருக்களை நேசித்தல், தர்மஞ்செய்கிறவர்களாய் இருத்தல் ஆகியவை பற்றிய காரியங்கள் என்ன? இன்னும் பல உள்ளன. இந்த விஷயங்கள் அனைத்தும் மனுக்குலம் தேவனில் கொண்டிருக்கும் விசுவாசம் மற்றும் அவர்கள் தேவனை பின்பற்றும் நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புடையவை ஆகும். இவற்றில் சில நடைமுறைகள் இன்றைக்கும் பொருந்துகிறவையாய் இருக்கின்றன, அவை ஜனங்களிடத்தில் தற்போது இருக்க வேண்டியதை விட மேலோட்டமாக இருப்பினும், அவை தேவன் மீதான விசுவாசத்தில் ஜனங்கள் சந்திக்கும் ஓரளவு அடிப்படை சத்தியங்களாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிரியை செய்யத் தொடங்கின காலத்திலிருந்தே, அவர் ஏற்கனவே மனிதர்களின் ஜீவ நிலை குறித்த கிரியைகளைச் செய்யத் தொடங்கியிருந்தார், ஆனால் அவருடைய கிரியையின் இந்த அம்சங்கள் நியாயப்பிரமாணம் என்னும் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்தத் தலைப்புகளைப் பற்றி பேசும் விதிகளுக்கும் வழிகளுக்கும் சத்தியத்துடன் ஏதாவது தொடர்பு இருந்ததா? நிச்சயமாக இருந்தது! முந்தைய விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் அனைத்தும், கிருபையின் காலத்தில் இருக்கும் இந்த பிரசங்கங்கள் கூட, தேவனுடைய மனநிலையோடும், அவரிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதோடும் மற்றும் சத்தியத்தோடும் கூட தொடர்புடையவை ஆகும். தேவன் எதை வெளிப்படுத்தினாலும், அவர் எந்த விதமான வெளிப்பாடை அல்லது மொழியைப் பயன்படுத்தினாலும், அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் அனைத்தின் அடித்தளம், தோற்றம் மற்றும் தொடக்கப் புள்ளி ஆகியவை அவரின் மனநிலை, அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் கோட்பாடுகளில் இருக்கும். இது முற்றிலும் உண்மையாகும். ஆகவே அவர் சொன்ன இந்த விஷயங்கள் இப்போது கொஞ்சம் ஆழமற்றவையாகத் தோன்றினாலும், அவை சத்தியமல்ல என்று நீங்கள் அப்போதும் சொல்ல முடியாது, ஏனென்றால் அவை தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும், தங்களுடைய வாழ்க்கை நிலையில் மாற்றத்தை அடைவதற்கும் கிருபையின் காலத்தில் உள்ள ஜனங்களுக்கு இன்றியமையாதவையாகும். இந்தப் பிரசங்கங்களில் ஏதேனும் ஒன்று சத்தியத்திற்கு ஏற்ப இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா? இல்லை, உன்னால் சொல்ல முடியாது! அவை ஒவ்வொன்றும் சத்தியம் தான், ஏனென்றால் அவை அனைத்தும் மனுக்குலத்திற்கான தேவனுடைய தேவைகள் ஆகும்; அவை அனைத்தும், ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டும் தேவனால் கொடுக்கப்பட்ட கொள்கைகளும் நோக்கமுமாகும், மேலும் அவை தேவனுடைய மனநிலையைக் குறிக்கிறவையாகும். இருப்பினும், அந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கையினுடைய வளர்ச்சி நிலையின் அடிப்படையில், இவை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடிந்த காரியங்களாய் இருந்தன. மனுக்குலத்தின் பாவம் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்ததால், இவைதான் கர்த்தராகிய இயேசு வழங்கக் கூடிய வார்த்தைகளாக இருந்தன, மேலும் அக்காலத்து ஜனங்களுக்கு அவர்கள் எப்படி செயல்பட வேண்டும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எந்தக் கொள்கைகள் மற்றும் நோக்கத்திற்குள்ளாக அவர்கள் காரியங்களைச் செய்யவேண்டும் மற்றும் எப்படி தேவனில் விசுவாசமாய் இருக்க வேண்டும், எப்படி அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதற்கு, இந்த வகையான நோக்கத்தில் உள்ள எளிய போதனைகளை மட்டுமே அவர் பயன்படுத்த முடிந்தது. இவை அனைத்தும் அந்தக் காலத்தின் மனுக்குலத்தின் உயர்வு நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஜனங்களுக்கு இந்தப் போதனைகளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கவில்லை, ஆகவே கர்த்தராகிய இயேசு கற்பித்தவை இந்த எல்லைக்குள் இருக்க வேண்டியிருந்தது.

அடுத்து “கர்த்தராகிய இயேசுவின் உவமைகளின்” பல்வேறு உள்ளடக்கங்களைப் பார்ப்போம்.

முதலாவது விதைக்கிறவனைப் பற்றிய உவமை. இது மிகவும் சுவாரஸ்யமான உவமை ஆகும்; விதைகளை விதைப்பது ஜனங்களின் வாழ்க்கையில் பொதுவான ஒரு நிகழ்வாகும். இரண்டாவது களைகளைப் பற்றிய உவமை. பயிர்களை நடவு செய்த எவருக்கும் மற்றும் நிச்சயமாக எல்லாப் பெரியோர்களுக்கும் “களைகள்” என்றால் என்னவென்று தெரியும். மூன்றாவது கடுகு விதை பற்றிய உவமை. கடுகு என்றால் என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அப்படித்தானே? உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் வேதாகமத்தில் பார்க்கலாம். நான்காவது உவமை புளித்த மாவைப் பற்றிய உவமை. இப்போது, புளிக்கப்பண்ணுவதற்கு புளித்த மாவு பயன்படுத்தப்படுகிறது, அது ஜனங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்று என்பதைப் பெரும்பாலான ஜனங்கள் அறிவார்கள். இன்னும், ஆறாவது உவமையான பொக்கிஷத்தைப் பற்றிய உவமை உட்பட; ஏழாவது முத்தைப் பற்றிய உவமை மற்றும் எட்டாவது வலையைப் பற்றிய உவமை ஆகிய அனைத்தும் ஜனங்களின் இயல்பான வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டு, பெறப்பட்டவையாகும். இந்த உவமைகள் எவ்வகையான காட்சியை வெளிப்படுத்துகின்றன? தேவன் ஒரு சாதாரண மனிதனாக மாறி, மனுக்குலத்துடன் வாழ்ந்து, வாழ்க்கையின் மொழியையும் மனித மொழியையும் பயன்படுத்தி, மனிதர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுடைய தேவைகளைச் சந்திப்பது போன்ற காட்சி இது. தேவன் மாம்சமாகி மனிதர்களிடையே நீண்டகாலம் வாழ்ந்த போது, ஜனங்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளை அவர் அனுபவித்து, நேரடியாகப் பார்த்த பின்பு, இந்த அனுபவங்கள் அவருடைய போதிக்கும் பொருளாக மாறியது, இதன்மூலம் அவர் தனது தெய்வீக மொழியை மனித மொழியாக உருமாற்றினார். நிச்சயமாக, அவர் வாழ்க்கையில் பார்த்த மற்றும் கேட்ட இந்த விஷயங்கள் மனுஷகுமாரனுடைய மனித அனுபவத்தை மேம்படுத்தின. ஜனங்கள் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும், சிறிதளவு தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினபோது, தேவனுடைய சித்தம் மற்றும் மனுக்குலத்திடம் அவர் எதிர்பார்க்கும் காரியங்கள் ஆகியவற்றை ஜனங்களுக்குச் சொல்ல அவர் மேலே உள்ளதைப் போன்ற உவமைகளைப் பயன்படுத்த முடிந்தது. இந்த உவமைகள் அனைத்தும் ஜனங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புடையதாய் இருந்தன. மனித வாழ்க்கையுடன் தொடர்பில்லாத ஒன்று கூட அங்கு இல்லை. கர்த்தராகிய இயேசு மனுக்குலத்துடன் வாழ்ந்தபோது, விவசாயிகள் தங்கள் வயல்களைப் பராமரிப்பதைக் கண்டார், அவருக்குக் களைகள் என்றால் என்ன என்று தெரியும், புளித்துப் போவதைப் பற்றி அவர் அறிந்திருந்தார்; மனிதர்கள் பொக்கிஷத்தை விரும்புகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார், எனவே அவர் பொக்கிஷம் மற்றும் முத்து ஆகிய இரண்டின் உருவகங்களையும் பயன்படுத்தினார். வாழ்க்கையில், அவர் மீனவர்கள் வலை வீசுவதை அடிக்கடி பார்த்தார், கர்த்தராகிய இயேசு இதையும், மனித வாழ்வுடன் தொடர்பான பிற செயல்களையும் கண்டார், மேலும் அவர் அந்த வகையான வாழ்க்கையையும் அனுபவித்தார். மற்ற சாதாரண மனிதர்களைப் போலவே, அவர் மனிதனின் அன்றாட நடைமுறைகளை அனுபவித்தார், அவர்களைப் போல ஒரு நாளைக்கு மூன்று வேளைச் சாப்பிட்டார். அவர் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைத் தாமே அனுபவித்தார், மற்றவர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தார். இவை அனைத்தையும் அவர் உற்றுக் கவனித்து தனிப்பட்ட முறையில் அனுபவித்த போது, அவர் நினைத்தது ஒரு நல்ல வாழ்க்கையை எப்படிப் பெறுவது அல்லது அவர் எப்படி சுதந்திரமாகவும், வசதியாகவும் வாழமுடியும் என்பதல்ல. அதற்குப் பதிலாக, உண்மையான மனித வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு ஜனங்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைக் கண்டார். சாத்தானுடைய ராஜ்யத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த, சாத்தானுடைய சீர்கேட்டின் கீழ் பாவ வாழ்க்கை வாழ்ந்த ஜனங்களுடைய கஷ்டங்களையும், பரிதாபங்களையும் சோகங்களையும் அவர் கண்டார். அவர் தாமே மனித வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, சீர்கேட்டுக்கு மத்தியில் வாழ்ந்த ஜனங்கள் எவ்வளவு உதவியற்றவர்களாக இருந்தார்கள் என்பதை அவர் அனுபவித்தார், மேலும் பாவத்தில் வாழ்ந்த மனிதர்களின் பரிதாபகரமான நிலைமைகளை அவர் கண்டார், அனுபவித்தார். இந்த ஜனங்கள் சாத்தானாலும், பொல்லாப்பினாலும் சித்திரவதைக்கு உட்பட்டதின் மத்தியில் எல்லா நோக்கத்தையும் இழந்திருந்தனர். கர்த்தராகிய இயேசு இந்தக் காரியங்களை கண்டபோது, அவர் தம்முடைய தெய்வீகத்தன்மையோடு அல்லது தன்னுடைய மனிதத்தன்மையோடு அவைகளைப் பார்த்தாரா? அவருடைய மனிதத்தன்மை உண்மையாகவே இருந்தது, மற்றும் அது மிகுந்த உயிர்ப்புடன் இருந்தது. இவற்றையெல்லாம் அவரால் அனுபவிக்கவும், பார்க்கவும் முடிந்தது. ஆனால் நிச்சயமாக, அவர் இந்தக் காரியங்களை அவருடைய தெய்வீகத்தன்மையான அவருடைய சாராம்சத்தில் பார்த்தார். அதாவது, கிறிஸ்து தாமே, மனிதனான கர்த்தராகிய இயேசுவே, இதைக் கண்டார், அவர் கண்ட அனைத்தும், அவர் மாம்சத்தில் வாழ்ந்த இந்த காலத்தில் அவர் ஏற்றுக்கொண்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவரை உணர வைத்தது. மாம்சத்தில் அவர் ஏற்க வேண்டிய பொறுப்பு மிகப் பெரியது என்பதை அவரே அறிந்திருந்தாலும் மற்றும் அவர் எதிர்கொள்ளப் போகிற வேதனை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தும், பாவத்தில் மனுக்குலத்தை உதவியற்றதாகக் கண்டபோது, அவர்களுடைய வாழ்க்கையின் பரிதாபமான தன்மை, நியாயப்பிரமாணத்தின் கீழ் அவர்களுடைய பலவீனமான போராட்டங்கள் ஆகியவற்றை அவர் கண்டபோது, அவர் அதிகதிகமாக துக்கப்பட்டார், மனுக்குலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க அதிகதிகமாய் கவலை கொண்டார். அவர் எந்த வகையான சிரமங்களை எதிர்கொள்வார் அல்லது எந்த வகையான வேதனையை அனுபவிப்பார் என்பதைப் பொருட்படுத்தாமல், பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மனுக்குலத்தை மீட்பதற்கு அவர் உறுதியாக தீர்மானித்தார். இந்தச் செயல்பாட்டின் போது, கர்த்தராகிய இயேசு அவர் செய்ய வேண்டிய கிரியைகளையும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டதையும் மேலும் மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினார் என்று நீங்கள் சொல்லலாம். மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது, மனுக்குலம் அதன்பின் பாவத்தில் வாழாதபடி அவர்களுக்காகப் பரிகாரம் செய்வது ஆகிய அவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கிரியையை முடிப்பதற்கு அவர் அதிக ஆர்வமுள்ளவரானார். அதேசமயம் பாவநிவாரணபலியின் காரணத்தினால் தேவனால் மனிதனுடைய பாவங்களை மன்னிக்க முடியும், இது மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான அவரது கிரியையைத் தொடர அவரை அனுமதிக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் இருதயத்தில், மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கவும், தன்னையே பலியாகக் கொடுக்கவும், அவர் தயாராக இருந்தார் என்று கூறலாம். அவர் பாவநிவாரணபலியாக செயல்படவும், சிலுவையில் அறையப்படவும் தயாராக இருந்தார், அவர் உண்மையில் இந்தக் கிரியையை முடிக்க ஆர்வத்துடன் இருந்தார். மனித வாழ்க்கையின் பரிதாபகரமான நிலைமைகளை அவர் கண்டபோது, ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி கூட தாமதமின்றி தனது கிரியையை முடிந்தவரை விரைவாக நிறைவேற்ற அவர் விரும்பினார். அத்தகைய அவசரத்தை உணர்ந்த அவர், தனது சொந்த வேதனை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைப் பற்றித் துளியும் சிந்திக்கவில்லை, அவர் எவ்வளவு அவமானங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக்கூட எந்தவிதமான பயத்தையும் அவர் கொண்டிருக்கவில்லை. அவர் தனது இருதயத்தில் ஒரே ஒரு திடநம்பிக்கையைக் கொண்டிருந்தார். அவர் தன்னை ஒப்புக்கொடுத்த பின், அவர் பாவநிவாரணபலியாக சிலுவையில் அறையப்பட்ட பின், தேவனுடைய சித்தம் நிறைவேறும், மேலும் தேவனால் புதிய கிரியையை தொடங்க முடியும் என்பதே அது. மனுக்குலத்தின் வாழ்வும், பாவத்தில் அவர்கள் இருக்கும் நிலையும் முற்றிலும் உருமாற்றப்படும். அவரது திடநம்பிக்கையும், அவர் செய்ய தீர்மானித்தவையும் மனிதனை இரட்சிக்கிறதோடு தொடர்புடையதாக இருந்தது, மேலும் அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது, அது தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகும், இதனால் தேவன் தனது கிரியையின் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்க முடியும். அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் மனதில் இருந்தது இதுதான்.

மாம்சத்தில் வாழ்கிற போது மனுவுருவான தேவன் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார்; அவர் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிகளையும் பகுத்தறிவையும் கொண்டிருந்தார். மகிழ்ச்சி என்றால் என்ன, வலி என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார், மனுக்குலம் இவ்வகையான வாழ்க்கையை வாழ்வதை அவர் கண்டபோது ஜனங்களுக்குச் சில போதனைகளை வழங்குவதோ, அவர்களுக்கு ஏதாவது கொடுப்பதோ அல்லது அவர்களுக்கு ஏதாவது போதிப்பதோ அவர்களைப் பாவத்தில் இருந்து விடுவிப்பதற்குப் போதுமானதாக இருக்காது என்பதை அவர் ஆழமாக உணர்ந்தார். அவர்களை வெறுமனே கட்டளைக்குக் கீழ்ப்படிய செய்வதும் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டெடுக்காது என்றும் அவர் மனுக்குலத்தின் பாவத்தை ஏற்றுக்கொண்டு பாவ மாம்சமத்தின் சாயலாகும்போதுதான், அவரால் மனுக்குலத்தின் விடுதலையையும் மனுக்குலத்திற்கு ஈடாக தேவனுடைய மன்னிப்பையும் பெற முடியும். ஆகவே கர்த்தராகிய இயேசு பாவத்தில் ஜனங்களுடைய வாழ்க்கையை அனுபவித்து, கண்ணாரக் கண்ட பின், பாவத்தில் போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஜனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் அவருடைய இருதயத்தில் வெளிப்பட்டது. இந்த விருப்பமே எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் சிலுவைக்குச் சென்று மனுக்குலத்தின் பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரை அதிகதிகமாக நினைக்க வைத்தது. ஜனங்களுடன் வாழ்ந்து, பாவத்திலிருக்கும் அவர்களுடைய வாழ்க்கையின் துயரத்தைக் கண்டு, கேட்டு, உணர்ந்தபின், இவை தான் அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசுவின் சிந்தனைகளாயிருந்தன. மனுவுருவான தேவன் மனுக்குலத்திற்காக இவ்வகையான சித்தத்தைக் கொண்டிருக்க முடியும், அவர் இவ்வகையான மனநிலையை தெரிவிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும் என்பது ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒன்றா? இவ்வகைச் சூழலில் வாழும் ஒரு சராசரி மனிதன் எதைப் பார்ப்பான்? அவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரு சராசரி நபர் இவை அனைத்தையும் எதிர்கொண்டால், அவர்கள் பிரச்சனைகளை ஒரு மேலான கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பார்களா? நிச்சயமாக பார்க்க மாட்டார்கள்! தேவனுடைய மனு உருவின் வெளிப்புறத் தோற்றம் ஒரு மனிதனைப் போலவே இருந்தாலும், அவர் மனித அறிவை கற்றுக்கொண்டு மனித மொழியைப் பேசுகிறார் என்றாலும், சில சமயங்களில் அவருடைய எண்ணங்களை மனுக்குலத்தின் சொந்த முறைகள் அல்லது பேசும் முறைகள் மூலம் வெளிப்படுத்தினாலும்கூட, அப்போதும் கூட அவர் மனிதர்களைப் பார்க்கும் விதமும் அவர் காரியங்களின் சாராம்சத்தை பார்க்கும் விதமும், சீர்கேடான ஜனங்கள் மனுக்குலத்தையும், காரியங்களின் சாராம்சத்தையும் பார்க்கும் விதத்தைப் போன்று நிச்சயமாக இருக்காது. அவருடைய கண்ணோட்டமும் மற்றும் அவர் நிற்கும் உயரமும் ஒரு சீர்கேடான நபரால் அடைய முடியாத ஒன்றாகும். ஏனென்றால் தேவன் சத்தியமாய் இருக்கிறார், ஏனென்றால் அவர் கொண்டிருக்கும் மாம்சமும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டுள்ளது, மேலும் அவருடைய எண்ணங்களும் அவர் தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்துகிறதும் கூட சத்தியமாயிருக்கிறது. சீர்கேடான ஜனங்களுக்கு அவர் மாம்சத்தில் வெளிப்படுத்துவது சத்தியத்தின் மற்றும் ஜீவனின் ஏற்பாடுகள் ஆகும். இந்த ஏற்பாடுகள் ஏதோ ஒரு நபருக்கானது அல்ல, மனுக்குலம் முழுவதற்குமானது. எந்த ஒரு சீர்கேடான நபரின் இருதயத்திலும் அவர்களுடன் தொடர்புடைய சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் இந்த சொற்ப ஜனங்களை மட்டுமே பராமரித்து, அக்கறை காட்டுகிறார்கள். பேரழிவின் விளிம்பில் இருக்கும்போது, அவர்கள் முதலில் தங்களுடைய சொந்த குழந்தைகள், வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோரைப் பற்றி நினைக்கிறார்கள். அதிகபட்சமாக, மிகவும் இரக்கமுள்ள ஒரு நபர் சில உறவினர்கள் அல்லது நல்ல நண்பருக்காக சில சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள், ஆனாலும் அத்தகைய இரக்கமுள்ள நபரின் எண்ணங்கள் கூட அதற்கு மேல் விரிவாகுமா? இல்லை, ஒருபோதும் ஆகாது! ஏனென்றால், மனிதர்கள் என்ன இருந்தாலும் மனிதர்கள்தான், மேலும் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு மனிதனுடைய மட்டத்தில் இருந்தும், கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும். எப்படியிருப்பினும், மனுவுருவான தேவன் சீர்கேடான மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராவார். மனுவுருவான தேவனின் மாம்சம் எவ்வளவு சாதாரணமானதாக, எவ்வளவு இயல்பானதாக, எவ்வளவு தாழ்மையுள்ளதாக இருந்தாலும் அல்லது ஜனங்கள் எப்படிப்பட்ட அவமதிப்புடன் அவரைத் தாழ்வாகப் பார்த்தாலும், மனுக்குலத்தின் மீதான அவருடைய எண்ணங்களும், மனப்பான்மையும் எந்த ஒரு மனிதனும் கொண்டிருக்க முடியாதவையும், எந்த ஒரு மனிதனும் பின்பற்ற முடியாதவையுமாகும். அவர் எப்போதும் மனுக்குலத்தை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து, சிருஷ்டிகராகத் தன்னுடைய நிலையின் உயரத்தில் இருந்து உற்று நோக்குவார். அவர் எப்போதும் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் மூலம் மனுக்குலத்தைப் பார்ப்பார். அவர் நிச்சயமாக ஒரு சராசரி மனிதனுடைய தாழ்ந்த உயரத்திலிருந்தோ அல்லது ஒரு சீர்கேடான மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்தோ மனுக்குலத்தைப் பார்க்க முடியாது. ஜனங்கள் மனுக்குலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனிதப் பார்வை, மனித அறிவு மற்றும் மனித விதிகள் மற்றும் கோட்பாடுகள் போன்ற காரியங்களை அளவு முறையாகப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். இது ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எல்லைக்குள் உள்ளது, மேலும் சீர்கேடான ஜனங்களால் அடையக்கூடிய எல்லைக்குள் உள்ளது. தேவன் மனுக்குலத்தைப் பார்க்கும்போது அவர் தெய்வீகப் பார்வையுடன் பார்க்கிறார், மேலும் அவர் தனது சாராம்சத்தையும், தன்னிடம் உள்ளவை மற்றும் தான் யாராக இருக்கிறார் என்பதையும் அளவு முறையாகப் பயன்படுத்துகிறார். இந்த எல்லையில் ஜனங்கள் பார்க்க முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் இங்கேதான் மனுவுருவான தேவனும் சீர்கேடான மனிதர்களும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு மனிதர்களுடைய மற்றும் தேவனுடைய வித்தியாசமான சாராம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த வெவ்வேறான சாராம்சங்கள் அவர்களுடைய அடையாளங்களையும், நிலைகளையும் அத்துடன் அவர்கள் எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றும் உயரத்திலிருந்தும் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன. கர்த்தராகிய இயேசுவில் தேவனுடைய வெளிப்படுத்துதலையும், வெளிப்பாட்டையும் நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு செய்ததும், சொன்னதும் அவருடைய ஊழியத்துடனும், தேவனுடைய சொந்த நிர்வாகக் கிரியையுடனும் தொடர்புடையது என்றும், மேலும் இது முழுவதும் தேவனுடைய சாராம்சத்தின் வெளிப்படுத்துதலும் வெளிப்பாடுமாகும் என்றும் நீங்கள் கூறலாம். அவர் ஒரு மனிதனின் தெளிவான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவருடைய தெய்வீக சாராம்சமும் அவருடைய தெய்வீகத்தின் வெளிப்படும் மறுக்க முடியாதவையாகும். இந்த மனிதத் தோற்றம் உண்மையிலேயே மனுக்குலத்தின் வெளிப்பாடாக இருந்ததா? அவருடைய மனித வெளிப்பாடானது அதன் சாராம்சத்தின்படி சீர்கேடான ஜனங்களின் மனித வெளிப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கர்த்தராகிய இயேசு மனுவுருவான தேவனாக இருந்தார். அவர் உண்மையிலேயே சாதாரணமான, சீர்கேடான ஜனங்களில் ஒருவராக இருந்திருந்தால், பாவத்திலிருந்த மனுக்குலத்தின் வாழ்க்கையை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து அவரால் பார்த்திருக்க முடியுமா? நிச்சயமாக முடிந்திருக்காது! இதுதான் மனுஷகுமாரனுக்கும் சாதாரண மனிதர்களுக்குமுள்ள வித்தியாசமாகும். சீர்கேடான ஜனங்கள் அனைவரும் பாவத்தில் வாழ்கிறார்கள், மேலும் யாராவது பாவத்தைப் பார்க்கும்போது, அதைப் பற்றிய எந்த குறிப்பிட்ட உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை; அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாய் இருக்கிறார்கள், சேற்றில் வாழும் ஒரு பன்றி எப்படி அசௌகரியமாகவோ அல்லது அழுக்காகவோ உணராமல், நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகத் தூங்குகிறதோ, அதைப் போலவே அவர்களும் இருக்கிறார்கள். யாராவது பன்றித் தொழுவத்தைச் சுத்தம் செய்தால், பன்றி உண்மையில் அசௌகரியமாக உணரும், அது சுத்தமாக இருக்காது. சீக்கிரமாக, முற்றிலும் சௌகரியமாக, அது மீண்டும் சேற்றில் சுற்றி உருளும், ஏனென்றால் அது ஓர் அசுத்தமான உயிரினமாகும். மனிதர்கள் பன்றிகளை அசுத்தமானதாகப் பார்க்கிறார்கள், ஆனால் நீ ஒரு பன்றியின் வசிப்பிடத்தை சுத்தம் செய்தால், அது எவ்விதத்திலும் நன்றாக உணராது, இதனால் தான் யாரும் தங்கள் வீட்டில் ஒரு பன்றியை வைப்பதில்லை. மனிதர்களும் பன்றிகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதால், மனிதர்கள் பன்றிகளைப் பார்க்கும் விதம் எப்போதுமே பன்றிகள் தாமாகவே எப்படி உணர்கின்றன என்பதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். மனுவுருவான மனுஷகுமாரன் சீர்கேடான மனிதர்களைப் போன்றவராய் இல்லாததினால் மனுவுருவான தேவன் மட்டுமே தெய்வீக கண்ணோட்டத்தில், தேவனுடைய உயரத்தில், மற்றும் மனுக்குலத்தையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் இடத்தில் நிற்க முடியும்.

தேவன் மாம்சமாகி மனிதர்களிடையே வாழும்போது அவர் அனுபவிக்கும் துன்பம் என்ன? இந்தத் துன்பம் என்றால் என்ன? யாராவது இதை உண்மையிலேயே புரிந்து கொள்கிறார்களா? தேவன் பெரிதும் துன்பப்படுகிறார் என்று சிலர் சொல்கிறார்கள், அவர் தாமே தேவனாக இருந்தாலும், ஜனங்கள் அவருடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் எப்போதும் அவரை ஒரு மனிதனைப் போலவே நடத்த முனைகிறார்கள், இது அவரை வேதனையாக, அநியாயமாக நடத்தப்பட்டதாக உணர வைக்கிறது. மேலும் அவர்கள் இந்த காரணங்களுக்காக, தேவனுடைய துன்பம் உண்மையில் பெரிதானது என்று சொல்கிறார்கள். மற்ற ஜனங்கள் தேவன் குற்றமற்றவர் மற்றும் பாவம் இல்லாதவர் என்கிறார்கள், அதைத் தவிர மனுக்குலத்தைப் போலவே அவர் பாடுபடுகிறார் என்றும், அவர் மனுக்குலத்துடன் உபத்திரவம், அவதூறு மற்றும் அவமதிப்பையும் அனுபவிக்கிறார் என்கிறார்கள். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களின் தவறானப் புரிதல்களையும், கீழ்ப்படியாமையையும் தாங்கிக் கொள்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆகவே தேவனுடைய துன்பத்தை உண்மையிலேயே அளவிட முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போது, நீங்கள் தேவனை உண்மையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது போல் தெரிகிறது. உண்மையில் நீங்கள் குறிப்பிடும் இந்த துன்பத்தை, உண்மையான துன்பமாய் தேவன் கருதுவதில்லை, ஏனென்றால் இதை விட பெரிதான துன்பம் ஒன்று இருக்கிறது. தேவனுக்கு உண்மையான துன்பம் என்றால் என்ன? தேவனுடைய மனுவுருவான மாம்சத்திற்கு உண்மையான துன்பம் என்றால் என்ன? தேவனைப் பொறுத்தவரை, மனுக்குலம் அவரைப் புரிந்து கொள்ளாததை அவர் துன்பமாகக் கருதுவதில்லை, மேலும் ஜனங்கள் தேவனைப் பற்றிய சில தவறான புரிதல்களை கொண்டிருப்பதையும், அவரைத் தேவனாகப் பார்க்காததையும் அவர் துன்பமாகக் கருதுவதில்லை. இருப்பினும், தேவன் மிகுந்த அநீதியை அனுபவித்திருக்க வேண்டும் என்றும், தேவன் மாம்சத்தில் இருந்த நேரத்தில், அவர் தன்னுடைய ஆள்தத்துவத்தை மனுக்குலத்திற்குக் காட்ட முடியாது, மேலும் அவருடைய மகத்துவத்தைக் காண ஜனங்களை அனுமதிக்க முடியாது என்றும், அற்பமான மாம்சத்தில் தேவன் தாழ்மையாய் ஒளித்துக் கொண்டிருக்கிறார், மேலும் இது அவருக்கு ஒரு பெரிய சித்தரவதையாக இருக்கும் என்றும் ஜனங்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். ஜனங்கள் புரிந்துகொள்ளக்கூடியதையும், தேவனுடைய துன்பத்தைப் பற்றி அவர்கள் காணக்கூடியதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு, தேவன் மீது எல்லா வகையான அனுதாபங்களையும் வெளிக்காட்டி, பலமுறை அவருடைய துன்பத்துக்கு ஒரு சிறிய பாராட்டையும் கூட அளிப்பார்கள். உண்மையில், அங்கே ஒரு வித்தியாசம் உள்ளது. தேவனுடைய துன்பத்தைப் பற்றி ஜனங்கள் புரிந்து கொள்வதற்கும் அவர் உண்மையிலேயே உணர்வதற்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. நான் உங்களுக்கு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன், தேவனைப் பொறுத்தவரை, அது தேவனுடைய ஆவியானவராக அல்லது தேவனுடைய மனுவுருவான மாம்சமாக இருந்தாலும் சரி, மேலே விவரிக்கப்பட்ட துன்பம் உண்மையான துன்பம் அல்ல. அப்படியானால் தேவன் உண்மையில் துன்பப்படுகிற காரியம் என்ன? தேவனுடைய துன்பத்தை மனுவுருவான தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பேசுவோம்.

தேவன் மாம்சமாகிற போது, ஒரு சராசரியான, சாதாரண மனிதனாக மாறி மனுக்குலத்தின் மத்தியில், ஜனங்களுடன் அருகருகே வாழ்கையில், அவரால் வாழ்வதற்கான ஜனங்களுடைய முறைகளையும் சட்டங்களையும் மற்றும் தத்துவங்களையும் காணவும், உணரவும் முடியாதா? வாழ்வதற்கான இந்த முறைகளும் சட்டங்களும் அவரை எவ்வாறு உணர வைக்கின்றன? அவர் தனது இருதயத்தில் வெறுப்பை உணருகிறாரா? அவர் ஏன் வெறுப்பை உணர வேண்டும்? வாழ்வதற்கான மனுக்குலத்தின் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் யாவை? அவை எதை அடிப்படையாகக் கொண்டுள்ளன? வாழ்வதற்கான வழியுடன் தொடர்புடைய வழிமுறைகள், சட்டங்கள், இன்னும் பல என இவை அனைத்தும் சாத்தானுடைய எண்ணப்போக்கு, அறிவு மற்றும் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இவ்வகையான சட்டங்களின் கீழ் வாழும் மனிதர்களுக்கு மனித நேயம் இல்லை, சத்தியம் இல்லை, அவர்கள் அனைவரும் சத்தியத்தை மீறி தேவனை விரோதிக்கிறார்கள். தேவனுடைய சாராம்சத்தை நாம் கூர்ந்து கவனித்தால் அவருடைய சாராம்சம் சாத்தானுடைய எண்ணப்போக்கு, அறிவு மற்றும் தத்துவத்திற்கு நேர் எதிரானது என்பதைக் காண்கிறோம். அவருடைய சாராம்சமானது நீதி, சத்தியம், பரிசுத்தம் மற்றும் அனைத்து நேர்மறையான விஷயங்களின் பிற யதார்த்தங்கள் ஆகியவையால் நிறைந்துள்ளது. இந்த சாராம்சத்தைக் கொண்டு, இப்படிப்பட்ட மனுக்குலத்தினிடையே வாழ்கிற தேவன் என்ன நினைக்கிறார்? அவர் தன்னுடைய இருதயத்தில் என்ன உணர்கிறார்? அது வேதனையால் நிறைந்திருக்கிறதல்லவா? அவருடைய இருதயம் வேதனையில் உள்ளது, அது எந்த ஒரு நபராலும் புரிந்துகொள்ளமுடியாத, அனுபவிக்க முடியாத வேதனையாகும். ஏனென்றால், அவர் எதிர்கொள்ளும், சந்திக்கும், கேட்கும், பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் அனைத்தும் மனுக்குலத்தின் சீர்கேடு, தீமை மற்றும் சத்தியத்திற்கு எதிரான அவர்களுடைய கலகத்தன்மையும் அவர்களுடைய எதிர்ப்பும் ஆகும். மனிதர்களிடமிருந்து வரும் அனைத்தும் அவருடைய துன்பத்துக்கான மூலகாரணமாகும். அதாவது அவருடைய சாராம்சமானது சீர்கேடான மனிதர்களைப் போன்றதல்ல என்பதால், மனிதர்களின் சீர்கேடு அவருடைய பெரிதான துன்பத்துக்கான மூலகாரணமாகிறது. தேவன் மாம்சமாகிறபோது, அவருடன் ஒரு பொதுவான மொழியைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவரை கண்டுபிடிக்க முடிகிறதா? அத்தகைய நபரை மனிதர்களிடையே காண இயலாது. தேவனுடன் தொடர்புகொள்ள முடிந்த அல்லது இந்தப் பரிமாற்றத்தைச் செய்ய முடிந்த ஒருவரையும் கண்டுபிடிக்க முடியாது, இதைக்குறித்து தேவன் எவ்வகையான உணர்வைக் கொண்டிருப்பார் என்று நீ சொல்லுவாய்? ஜனங்கள் கலந்துரையாடும், நேசிக்கும், பின்தொடரும் மற்றும் ஏக்கங்கொள்ளும் விஷயங்கள் பாவத்துடனும், தீயப்போக்குகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தேவன் இதையெல்லாம் எதிர்கொள்ளும்போது, அது அவருடைய இருதயத்தை ஆழமாய்க் காயப்படுத்துகிறதல்லவா? இவற்றையெல்லாம் எதிர்கொண்ட அவரால் இருதயத்தில் மகிழ்ச்சி கொள்ள முடியுமா? அவர் ஆறுதலைக் காண முடியுமா? அவரோடு வாழ்பவர்கள் கலகத்தன்மையாலும், தீமைகளாலும் நிறைந்த மனிதர்களாய் இருக்கும்போது, அவருடைய இருதயம் துன்பப்படாமல் இருக்குமா? இந்த துன்பம் உண்மையில் எவ்வளவு பெரியது, மேலும் அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? யார் கவனத்தில் கொள்கிறார்கள்? யாரால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது? தேவனுடைய இருதயத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களுக்கு வழியே இல்லை. அவரது துன்பம், குறிப்பாக ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும், மேலும் மனுக்குலத்தின் பற்றின்மையும், உணர்வின்மையும் தேவனுடைய துன்பத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

கிறிஸ்துவின் நெருக்கடியான நிலைக்காக அடிக்கடி அனுதாபம் காட்டும் சிலர் இருக்கிறார்கள், ஏனென்றால் வேதாகமத்தில் ஒரு வசனம் இப்படி உள்ளது: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” ஜனங்கள் இதைக் கேட்கும்போது அவர்கள் அதை மனதில் கொண்டு, இது தேவன் தாங்கிக்கொள்ளும் மிகப் பெரிய வேதனை என்றும், கிறிஸ்து தாங்கிக்கொள்ளும் மிகப் பெரிய வேதனை என்றும் நம்புகிறார்கள். இப்போது உண்மைகளின் கண்ணோட்டத்திலிருந்து அதைப் பார்க்கும்போது, அது உண்மையா? இல்லை; இந்தச் சிரமங்களை தேவன் வேதனையாக எடுத்துக்கொள்வதில்லை. அவரின் மாம்சத்தின் சிரமங்களால் அநீதிக்கு எதிராக ஒருபோதும் அவர் சத்தமிட்டதில்லை, அவர் ஒருபோதும் மனிதர்கள் தனக்கு கைம்மாறு செய்யவோ அல்லது எதையும் வெகுமதியாக அளிக்கச் செய்யவோ இல்லை. இருப்பினும், மனுக்குலம் பற்றிய அனைத்தையும் மற்றும் சீர்கேடான வாழ்க்கை மற்றும் சீர்கெட்ட மனிதர்களின் தீமையை நேரில் பார்க்கும்போதும், மனுக்குலம் சாத்தானின் பிடியில் இருப்பதையும், சாத்தானால் சிறைப்படுத்தப்பட்டு, தப்பிக்க முடியாமல் இருப்பதையும், பாவத்தில் வாழும் ஜனங்களுக்குச் சத்தியம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதையும் நேரில் பார்க்கும்போதும், அவரால் இந்த பாவங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனிதர்களைப் பற்றிய அவரது வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஆனால் அவர் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். இது தேவனின் பெரும் வேதனையாகும். தேவன் தன்னுடைய இருதயத்தின் குரலையோ அல்லது தன்னுடைய உணர்ச்சிகளையோ கூட தன் விசுவாசிகளிடையே முழுமையாக வெளிப்படுத்த முடியாது, அவரை விசுவாசிக்கிறவர்கள் எவரும் அவருடைய வேதனைகளை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வேதனையை நாளுக்கு நாள், வருடா வருடம், திரும்பத் திரும்ப தாங்கிக்கொள்ளும் அவருடைய இருதயத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது அவருடைய இருதயத்தை ஆற்றவோ கூட யாரும் முயற்சிப்பதில்லை. இவை அனைத்திலும் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? அவர் கொடுத்ததற்குப் பதிலாக, தேவன் மனிதர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் தேவனுடைய சாராம்சத்தின் காரணமாக, மனுக்குலத்தின் தீமையையும், சீர்கேட்டையும், பாவத்தையும் அவரால் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ள முடியாது, அதற்குப் பதிலாக தீவிர அருவருப்பையும், வெறுப்பையும் உணர்கிறார், இது தேவனுடைய இருதயமும் அவருடைய மாம்சமும் முடிவில்லாத வேதனையைத் தாங்க வழிவகுக்கிறது. நீங்கள் இதைப் பார்த்தீர்களா? பெரும்பாலும், உங்களில் எவராலும் இதைப் பார்க்க முடியவில்லை, ஏனென்றால் உங்களில் எவராலும் தேவனை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது. காலப்போக்கில் அதைப் படிப்படியாக நீங்களே அனுபவித்துணர வேண்டும்.

அடுத்து வேத வாக்கியங்களின் பின்வரும் பத்திகளைப் பார்ப்போம்:

9. இயேசு அற்புதங்களைச் செய்கிறார்

a. இயேசு ஐயாயிரம் பேரைப் போஷிக்கிறார்

யோவா. 6:8-13 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.

b. லாசருவின் உயிர்த்தெழுதல் தேவனை மகிமைப்படுத்துகிறது

யோவா. 11:43-44 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு செய்த அற்புதங்களில் இந்த இரண்டை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்து உள்ளோம் ஏனென்றால் நான் இங்கு பேச விரும்புவதை விளக்கிக் காட்ட அவை போதுமானவையாகும். இந்த இரண்டு அற்புதங்களும் உண்மையிலேயே பிரமிக்கச் செய்கிறதாயும், கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் செய்த அற்புதங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவையும் ஆகும்.

முதலில், முதல் பத்தியைப் பார்ப்போம்: இயேசு ஐந்தாயிரம் பேரைப் போஷிக்கிறார்.

“ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களின்” கருத்து என்ன? சாதாரணமாக, ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு எத்தனை பேரைப் போதுமான அளவு போஷிக்க முடியும்? ஒரு சராசரி நபரின் பசியின் அடிப்படையில் உங்கள் அளவீட்டை எடுத்துக் கொண்டால், இது இரண்டு பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதுவே “ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள்” குறித்த மிக அடிப்படையான கருத்தாகும். இருப்பினும் இந்தப் பத்தியில் ஐந்து அப்பங்கள் மற்றும் 2 மீன்களால் எத்தனை பேர் போஷிக்கப்பட்டார்கள்? பின்வருமாறு வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: “அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.” ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களுடன் ஒப்பிடும்போது, ஐயாயிரம் என்பது பெரிய எண்ணிக்கையா? இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பது எதைக் காட்டுகிறது? ஒரு மனித கண்ணோட்டத்திலிருந்து, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பிரித்துக் கொடுப்பது என்பது சாத்தியமற்றது, ஏனென்றால் ஜனங்களுக்கும் உணவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு மிக அதிகமாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறிய கடி மட்டுமே கொடுக்கப்பட்டாலும் கூட, அப்போதும் அது ஐயாயிரம் பேருக்குப் போதுமானதாக இருக்காது. ஆனால் இங்கே, கர்த்தராகிய இயேசு ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார், ஐயாயிரம் பேர் தங்கள் உணவை வயிறார உண்ணும்படி உறுதி செய்ததுமல்லாமல், உணவு மீதமும் இருந்தது. வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.” இந்த அற்புதம் கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தையும் அந்தஸ்தையும் காணவும், தேவனுக்கு முடியாததென்று ஒன்றும் இல்லை என்பதைக் காணவும் ஜனங்களுக்கு உதவியது, இவ்வகையில் அவர்கள் தேவனுடைய சர்வவல்லமையின் உண்மைத்தன்மையைக் கண்டார்கள். ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் போதுமானதாக இருந்தன, ஆனால் எந்த உணவும் இல்லாதிருந்தால், தேவனால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருக்க முடியுமா? நிச்சயமாக அவரால் முடிந்திருக்கும்! இது ஓர் அற்புதம் எனவே நிச்சயமாக இது புரிந்துகொள்ள முடியாதது, நம்ப முடியாதது மற்றும் இரகசியமானது என்று ஜனங்கள் நினைத்தார்கள், ஆனால் தேவனைப் பொறுத்தவரை, இதுபோன்ற ஒன்றைச் செய்வது அவருக்கு ஒரு காரியமே இல்லை. இது தேவனுக்குச் சாதாரணமான ஒன்று என்பதால் அதைப் பற்றி இப்போது ஏன் விளக்கத்திற்காகப் பேச வேண்டும்? ஏனென்றால் இந்த அற்புதத்தின் பின்னால் இருப்பது மனுக்குலத்தால் இதற்கு முன் உணரப்படாத கர்த்தராகிய இயேசுவின் சித்தமாகும்.

முதலில் இந்த ஐயாயிரம் பேர் எவ்வகையான ஜனங்கள் என்பதைப் புரிந்து கொள்வோம். அவர்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றினவர்களா? வேதத்திலிருந்து, அவர்கள் அவரைப் பின்பற்றினவர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். கர்த்தராகிய இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது! குறைந்தபட்சம், அவர்களுக்கு முன்னால் நிற்கும் நபர் கிறிஸ்து என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை, அல்லது சிலர் அவருடைய பெயர் என்னவென்று மட்டும் அறிந்திருக்கலாம், அல்லது அவர் செய்த காரியங்கள சிலவற்றைப் பற்றி அறிந்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம், கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய அவர்களின் ஆர்வம் அவரைப் பற்றிய கதைகளைக் கேட்ட போது அவர்களுக்குத் தூண்டப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்றோ, அவரைப் புரிந்துகொண்டார்கள் என்றோ உங்களால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. கர்த்தராகிய இயேசு இந்த ஐயாயிரம் ஜனங்களைக் கண்டபோது, அவர்கள் பசியுடன் இருந்தார்கள், வயிற்றை நிரப்புவது பற்றி மட்டுமே அவர்களால் சிந்திக்க முடிந்தது, ஆகவே, இந்தச் சூழலில்தான் கர்த்தராகிய இயேசு அவர்களுடைய விருப்பத்தை நிறைவாக்கினார். அவர்களுடைய விருப்பத்தை அவர் நிறைவேற்றின போது அவருடைய இருதயத்தில் என்ன இருந்தது? வயிற்றை மட்டுமே நிரப்ப விரும்பின இந்த ஜனங்களைப் பற்றின அவருடைய மனப்பான்மை என்ன? இந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசுவின் எண்ணங்களும், அவருடைய மனப்பான்மையும் தேவனுடைய தன்மை மற்றும் சாராம்சத்துடன் தொடர்புடையவையாக இருந்தது. ஒரு முழு உணவை மட்டுமே சாப்பிட விரும்பின காலியான வயிறுகளைக் கொண்ட இந்த ஐயாயிரம் பேரை எதிர்கொள்கையில், அவரிடத்தில் மிகுந்த ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இந்த ஜனங்களை எதிர்கொள்வதில், கர்த்தராகிய இயேசு அவர்கள் மேல் கிருபையை அளிக்க இந்த அற்புதத்தைப் பயன்படுத்த மட்டுமே நினைத்தார். இருப்பினும், அவர்கள் தம்மைப் பின்பற்றுபவர்களாக மாறுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் வயிற்றை நிரப்ப சாப்பிடவே விரும்பினார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே, அவர் அங்கே இருந்ததைக் கொண்டு மிகச் சிறந்ததைச் செய்தார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பயன்படுத்தி ஐயாயிரம் ஜனங்களைப் போஷித்தார். ஆச்சரியமான விஷயங்களைக் கண்டு மகிழ்ந்த, அற்புதங்களைக் காண விரும்பின இந்த ஜனங்களின் கண்களை அவர் திறந்தார், மேலும் அவர்கள் மனுவுருவான தேவன் செய்யக் கூடிய காரியங்களைத் தங்கள் சொந்தக் கண்களால் கண்டார்கள். கர்த்தராகிய இயேசு அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற தெளிவான காரியங்களைப் பயன்படுத்தின போதும், இந்த ஐயாயிரம் பேரும் ஒரு நல்ல உணவை மட்டுமே விரும்புவதாக அவர் ஏற்கனவே தன் இருதயத்தில் அறிந்திருந்தார், எனவே அவர் அவர்களுக்குப் பிரசங்கிக்கவுமில்லை அல்லது வேறேதையும் சொல்லவுமில்லை, இந்த அற்புதம் நடக்கும் போது அவர்களைப் பார்க்க மட்டுமே அனுமதித்தார். அவரை உண்மையாய்ப் பின்பற்றின சீஷர்களை நடத்தியதைப் போல அவரால் இந்த ஜனங்களை நிச்சயமாக நடத்த முடியவில்லை, ஆனால் தேவனுடைய இருதயத்தில் எல்லா உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும், அவருடைய பார்வையில் உள்ள எல்லா உயிரினங்களையும் தேவைப்படும்போது தேவனுடைய கிருபையை அனுபவிக்க அவர் அனுமதிப்பார். அவர் யார் என்பதை இந்த ஜனங்கள் அறியாமல் அல்லது அவரைப் புரிந்து கொள்ளாமல் அல்லது அவரைப் பற்றிய எந்தவிதமான உணர்வும் இல்லாமல் அல்லது அப்பங்களையும் மீன்களையும் சாப்பிட்ட பின்பும் அவரிடத்தில் நன்றி உணர்வோடு இல்லாமல் இருந்த போதும் தேவன் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர் தேவனுடைய கிருபையை அனுபவிக்க இந்த ஜனங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பைக் கொடுத்தார். தேவன் தான் செய்வதில் கொள்கை ரீதியானவர் என்றும், அவர் அவிசுவாசிகளைக் பொறுப்பாகக் கவனிப்பதோ அல்லது பாதுகாப்பதோ இல்லை என்றும் குறிப்பாக அவருடைய கிருபையை அனுபவிக்க அவர்களை அவர் அனுமதிப்பதில்லை என்றும் சில ஜனங்கள் சொல்கிறார்கள். அது உண்மையில் அப்படியா? தேவனுடைய பார்வையில், அவர் தாமாகவே சிருஷ்டித்த உயிரினங்களாக அவர்கள் இருக்கும் வரையிலும், அவர் அவர்களை நிர்வகித்து பராமரிப்பார், மேலும் பல வழிகளில் அவர் அவர்களை நடத்துவார், அவர்களுக்காகத் திட்டமிடுவார், அவர்களை ஆளுகை செய்வார். இவை அனைத்தும் அனைத்துக் காரியங்களைக் குறித்ததான தேவனுடைய எண்ணங்களும் மனப்பான்மையும் ஆகும்.

அப்பங்களையும் மீன்களையும் சாப்பிட்ட ஐயாயிரம் பேர் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்ற திட்டமிடவில்லை என்றாலும், அவர் அவர்களிடம் எவ்விதமான வற்புறுத்துகிற கோரிக்கைகளையும் வைக்கவில்லை; அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டவுடன், கர்த்தராகிய இயேசு என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் அவர்களுக்கு ஏதாவது பிரசங்கித்தாரா? இதைச் செய்த பின் அவர் எங்குச் சென்றார்? கர்த்தராகிய இயேசு அவர்களிடம் எதையும் சொன்னதாக வேதாகமம் பதிவு செய்யவில்லை, அவர் தம்முடைய அற்புதத்தைச் செய்து அமைதியாக வெளியேறினார் என்றே இருக்கிறது. எனவே அவர் இந்த ஜனங்களிடம் ஏதாகிலும் கேட்டாரா? ஏதாவது வெறுப்பு இருந்ததா? இல்லை, இவை எதுவும் இங்கே இல்லை. அவரைப் பின்தொடர முடியாத இந்த ஜனங்களிடம் அதன் பின் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை, மேலும் அந்த நேரத்தில் அவருடைய இருதயம் வேதனையில் இருந்தது. ஏனென்றால் அவர் மனுக்குலத்தின் சீரழிவைக் கண்டார், மனுக்குலம் அவரை நிராகரிப்பதை அவர் உணர்ந்தார், அவர் இந்த ஜனங்களைப் பார்த்த போது, அவர்களுடன் இருந்தபோது, அவர் மனிதனின் முட்டாள்தனத்தாலும், அறியாமையாலும் வருத்தமுற்றார், மேலும் அவருடைய இருதயம் வேதனையில் இருந்தது, அவர் விரும்பியதெல்லாம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த ஜனங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. கர்த்தர் தம்முடைய இருதயத்தில் அவர்களிடத்தில் எதையும் கேட்கவில்லை, அவர்களிடம் கவனம் செலுத்த விரும்பவில்லை, இன்னும் அதிகமாக, அவர்கள் மீது தனது சக்தியைச் செலவழிக்க விரும்பவில்லை. அவர்களால் தன்னைப் பின்பற்ற முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அவர்கள் மீதான அவருடைய மனப்பான்மை அப்போதும் மிகத் தெளிவாக இருந்தது. அவர் அவர்களை அன்பாக நடத்தவே விரும்பினார், அவர்கள் மேல் கிருபையை அளிக்க விரும்பினார், உண்மையில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரிவாக நடத்தவும், அவற்றின் தேவைகளைச் சந்திக்கவும், அவற்றைப் போஷிக்கவும் செய்வதாகிய இதுவே அவருடைய ஆளுகையின் கீழுள்ள ஒவ்வொரு உயிரினங்கள் மேலுமுள்ள தேவனுடைய மனப்பான்மையாக இருந்தது. கர்த்தராகிய இயேசு மனுவுருவான தேவன் என்ற குறிப்பிட்ட காரணத்தினால், அவர் மிக இயல்பாக தேவனுடைய சொந்தச் சாராம்சத்தை வெளிப்படுத்தினார் மற்றும் இந்த ஜனங்களைப் பரிவாக நடத்தினார். அவர் அவர்களைக் கருணையுள்ள, சகிப்புத்தன்மையுள்ள இருதயத்தோடு நடத்தினார், அத்தகைய இருதயத்தோடு அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டினார். இந்த ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அங்கே எந்த மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல், சகல சிருஷ்டிப்பின் கர்த்தர் என்ற தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு உயிரினத்தையும் அவர் நடத்தினார். அவர் வெளிப்படுத்திய அனைத்தும், விதிவிலக்கு இல்லாமல், தேவனுடைய மனநிலை, அவரிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பவையாக இருந்தன. கர்த்தராகிய இயேசு அமைதியாக இந்தக் காரியத்தைச் செய்தார், பின்னர் அமைதியாக வெளியேறினார், தேவனுடைய மனநிலையின் எந்த அம்சம் இது? இது தேவனுடைய கிருபை என்று நீங்கள் சொல்ல முடியுமா? இது தேவனுடைய தன்னலமற்ற தன்மை என்று நீங்கள் கூற முடியுமா? இது ஒரு சாதாரணமான நபரால் செய்ய முடிகிற ஒன்றா? நிச்சயமாக இல்லை! சாராம்சத்தில், கர்த்தராகிய இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு போஷித்த இந்த ஐயாயிரம் பேர் யார்? அவர்கள் அவருடன் ஒத்துப் போகும் நபர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் அனைவரும் தேவனுக்கு விரோதமானவர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் முற்றிலும் தேவனுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் அவர்களின் சாராம்சம் தேவனுக்கு முற்றிலும் விரோதமானது என்பதையும் உறுதியாகக் கூறலாம். ஆனால் தேவன் அவர்களை எப்படி நடத்தினார்? தேவன் மீது ஜனங்களுக்கு இருந்த விரோதத்தைத் தணிக்க அவர் ஒரு முறைமையைப் பயன்படுத்தினார், இந்த முறைமையானது “இரக்கம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, கர்த்தராகிய இயேசு இந்த ஜனங்களைப் பாவிகளாகக் கண்டாலும், தேவனுடைய பார்வையில் எவ்வாறாயினும் அவர்கள் அவருடைய சிருஷ்டிப்பாக இருந்தார்கள், ஆகவே, அவர் இந்தப் பாவிகளை அப்போதும் தயவோடு நடத்தினார். இது தேவனுடைய சகிப்புத்தன்மையாகும், மேலும் இந்தச் சகிப்புத்தன்மையானது தேவனுடைய சொந்த அடையாளத்தினாலும் சாராம்சத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இது தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த மனிதனாலும் முடியாத ஒன்று, தேவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

மனுக்குலத்தின் மீதான தேவனுடைய எண்ணங்களையும், அவருடைய மனப்பான்மையையும் உன்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிந்தால், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்தின் மீதான தேவனுடைய உணர்ச்சியையும், அக்கறையையும் நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளும்போது, சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் ஒவ்வொருவரின் மேலும் பாவித்த ஈடுபாட்டையும், அன்பையும் உன்னால் புரிந்துகொள்ள முடியும். இது நிகழும் போது, தேவனுடைய அன்பை விவரிக்க நீ இரண்டு சொற்களைப் பயன்படுத்துவாய். அந்த இரண்டு சொற்கள் என்ன? சிலர் “தன்னலமற்றது” என்பார்கள் சிலர் “கொடைப்பண்புள்ளது” என்பார்கள். இந்த இரண்டில் “கொடைப்பண்புள்ளது” என்பது தேவனுடைய அன்பை விவரிக்க மிகக் குறைந்தபட்சமே பொருத்தமானதாகும். இது மகத்தான அல்லது பரந்த எண்ணம் கொண்ட ஒருவரை விவரிக்க ஜனங்கள் பயன்படுத்தும் சொல்லாகும். இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன், ஏனென்றால் இது சீரற்ற முறையில், கண்மூடித்தனமாக, கொள்கையைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் தர்மத்தைக் குறிக்கிறது. இது மூடத்தனமான மற்றும் குழப்பமான ஜனங்களிடம் பரவலாகக் காணப்படுகிறதைப் போல அதிக உணர்ச்சிவசமிக்க மனப்போக்காகும். தேவனுடைய அன்பை விவரிக்க இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படும்போது, தவிர்க்க முடியாமல் அதில் ஒரு தூஷண உள்ளர்த்தம் உள்ளது. தேவனுடைய அன்பை இன்னும் பொருத்தமாக விவரிக்கும் இரண்டு வார்த்தைகள் இங்கே என்னிடம் உள்ளன. அவை யாவை? முதலாவது “அளவற்ற” என்ற வார்த்தை. இந்த வார்த்தை உணர்ச்சியை மிகவும் தூண்டக்கூடியதாய் இருக்கிறதல்லவா? இரண்டாவது “பரந்த” என்ற வார்த்தை. தேவனுடைய அன்பை விவரிக்க நான் பயன்படுத்தும் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உண்மையான அர்த்தம் உள்ளது. எழுத்தின் பிரகாரமாக, “அளவற்ற” என்பது ஒரு பொருளின் அளவு அல்லது திறனை விவரிக்கிறது, ஆனால் அந்தப் பொருள் எவ்வளவு பெரியது என்பதைப் பொருட்படுத்தாமல், அது ஜனங்கள் தொடக்கூடியதும் காணக்கூடியதுமாய் இருக்கிறது. ஏனென்றால் அது மெய்யானனதாக இருக்கிறது, அது ஒரு சுருக்கமான பொருள் அல்ல, ஆனால் ஜனங்களுக்குப் பெரிதும் துல்லியமாகவும், நடைமுறை வழியிலும் யோசனைகளை வழங்கக் கூடிய ஒன்றாகும். நீங்கள் அதை இருபரிமாண அல்லது முப்பரிமாண கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அதன் இருப்பை நீங்கள் கற்பனை செய்யத் தேவையில்லை, ஏனென்றால் அது உண்மையில் மெய்யாகவே இருக்கிற ஒன்றாகும். தேவனுடைய அன்பை விவரிக்க, “அளவற்ற,” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, அவருடைய அன்பை அளவிடுவதற்கான ஒரு முயற்சியாக உணரப்பட்டாலும், அவருடைய அன்பு அளவிட முடியாதது என்ற உணர்வையும் அது தருகிறது. தேவனுடைய அன்பை அளவிட முடியும் என்று நான் சொல்லுகிறேன், ஏனென்றால் அவருடைய அன்பு வெறுமையானதாக இல்லை, மேலும் அது ஒரு புராணக்கதையும் அல்ல. மாறாக, அது தேவனுடைய ஆளுகையின் கீழுள்ள அனைத்துக் காரியங்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒன்றாகும், எல்லா உயிரினங்களாலும் வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் அனுபவிக்கப்படும் ஒன்றாகும். ஜனங்களால் அதைப் பார்க்கவும் தொடவும் முடியாது என்றாலும், இந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக, அவர்கள் உயிரோடிருக்கையில் வெளிப்படுத்தப்படும்போது, எல்லாக் காரியங்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறது மற்றும் உயிரூட்டுகிறது. மேலும் அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் அனுபவிக்கும் தேவனுடைய அன்பை எண்ணி, சாட்சி கூறுகிறார்கள். தேவனுடைய அன்பு அளவிட முடியாதது என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் எல்லாக் காரியங்களுக்கும் கொடுக்கும், பராமரிக்கும் தேவனுடைய இரகசியத்தைப் புரிந்து கொள்வது மனிதர்களுக்குக் கடினமானதாகும், அப்படியே எல்லாக் காரியங்களுக்குமான, குறிப்பாக மனுக்குலத்திற்கான தேவனுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வதும் கடினமே. அதாவது, சிருஷ்டிகர் மனுக்குலத்திற்காகச் சிந்திய இரத்தமும் கண்ணீரும் யாருக்கும் தெரியாது. எவராலும் புரிந்து கொள்ள முடியாது, எவராலும் தன் சொந்தக் கைகளால் சிருஷ்டித்த மனுக்குலத்தின் மீது சிருஷ்டிகர் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தையோ அல்லது மதிப்பையோ புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய அன்பை அளவற்றது என விவரிப்பது, அதன் அகலத்தையும், அதன் உண்மை இருப்பையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஜனங்களுக்கு உதவுவதற்கேயாகும். “சிருஷ்டிகர்” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும், மேலும் “சிருஷ்டிப்பு” என்ற பெயரின் உண்மையான அர்த்தத்தை ஜனங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் உதவுவதற்கே ஆகும். “பரந்த” என்ற வார்த்தை பொதுவாக எதை விவரிக்கிறது? அது பொதுவாக சமுத்திரம் அல்லது பிரபஞ்சத்தை விவரிக்கப் பயன்படுகிறது, எடுத்துக்காட்டாகப்: “பரந்த பிரபஞ்சம்” அல்லது “பரந்த சமுத்திரம்”. பிரபஞ்சத்தின் விஸ்தாரமும், சந்தடியற்ற ஆழமும் மனிதப்புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகும். அது மனிதனுடைய கற்பனையைக் கவரும் ஒன்று, அவர்கள் அதை அதிகமாய் விரும்புகிறார்கள். அதனுடைய இரகசியமும், ஆழமும் பார்க்கும்படி உள்ளன, ஆனால் அடைய முடியாதவையாக இருக்கின்றன. நீ சமுத்திரத்தைப் பற்றி நினைக்கும் போது, நீ அதன் அகலத்தை நினைக்கிறாய், அது எல்லையற்றதாகத் தோன்றுகிறது, மேலும் நீ அதன் மர்மத்தையும், காரியங்களைக் கொண்டிருக்கும் பெரிதான கொள்ளளவையும் உணர முடியும். இதனால்தான் தேவனுடைய அன்பை விவரிக்கவும், அது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை உணரவும், அவருடைய அன்பின் ஆழமான அழகையும், தேவனுடைய அன்பின் வல்லமை எல்லையற்றது மற்றும் பரந்த அளவிலானது என்பதையும் உணர்ந்துகொள்ள ஜனங்களுக்கு உதவவே நான் “பரந்த” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அவருடைய அன்பின் பரிசுத்தத்தன்மையையும், அவருடைய அன்பின் மூலம் வெளிப்படும் தேவனுடைய பெருமதிப்பையும், அவமதிக்க முடியாத தன்மையையும் உணரும்படி ஜனங்களுக்கு உதவ நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தேவனுடைய அன்பை விவரிக்கப் “பரந்த” என்பது பொருத்தமான வார்த்தை என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்களா? தேவனுடைய அன்பை “அளவற்ற” மற்றும் “பரந்த” என்ற இரண்டு வார்த்தைகளைக் கொண்டு அளவிட முடியுமா? நிச்சயமாக! மனித மொழியில் இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே ஓரளவு பொருத்தமானவையாகும், மேலும் அவை தேவனுடைய அன்பை விவரிப்பதற்கு ஓரளவு நெருக்கமானவையாகும். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? தேவனுடைய அன்பை உங்களை விவரிக்கச் சொன்னால், நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்துவீர்களா? பெரும்பாலும் நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள், ஏனென்றால் தேவனுடைய அன்பைப் பற்றிய உங்கள் புரிதலும், புரிந்துகொள்ளும்தன்மையும் இருபரிமாண கண்ணோட்டத்தின் எல்லையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மேலும் முப்பரிமாண இடத்தின் உயரத்திற்கு உயரவில்லை. ஆகவே, நான் உங்களை தேவனுடைய அன்பை விவரிக்கச் சொல்லி இருந்தால், உங்களிடம் வார்த்தைகள் இல்லை என்று நீங்கள் உணர்வீர்கள் அல்லது ஒருவேளை நீங்கள் வாயடைத்துப்போய்க் கூட இருப்பீர்கள். இன்று நான் பேசிய வார்த்தைகள் உங்களுக்குப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கலாம் அல்லது நீங்கள் ஒருவேளை வெறுமனே ஒப்புக்கொள்ளாமல் போகலாம். இது தேவனுடைய அன்பைப் பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலும், புரிதலும் மேலோட்டமானது மற்றும் குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதையே காட்டுகிறது. தேவன் தன்னலமற்றவர் என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன்; “தன்னலமற்றவர்” என்ற வார்த்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தேவனுடைய அன்பைத் தன்னலமற்றது என்று மட்டுமே விவரிப்பது சாத்தியமா? இது மிகவும் குறுகிய எல்லை இல்லையா? இந்த விஷயத்தின் மூலம் நீங்கள் எதையாவது பெற்றுக் கொள்ளும்படி, இதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மேற்கூறியவை, முதல் அற்புதத்திலிருந்து தேவனுடைய மனநிலையையும், அவருடைய சாராம்சத்தையும் குறித்து நாம் கண்டவையாகும். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்கள் படித்து வருகிற ஒரு கதை என்றாலும், இது ஓர் எளிய கதைக்கருவைக் கொண்டுள்ளது, மேலும் ஓர் எளிமையான நிகழ்வைக் காண ஜனங்களை அனுமதிக்கிறது, ஆயினும் இந்த எளிய திட்டத்தில், நாம் அதிக மதிப்புமிக்கதான தேவனுடைய சாராம்சத்தையும், அவரிடம் உள்ளவையும் மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதையும் காண முடியும். அவரிடம் உள்ளவையும் மற்றும் அவர் யாராக இருக்கிறார் ஆகிய இக்காரியங்கள் தேவனையே குறிக்கின்றன, மேலும் இவை தேவனுடைய சொந்த எண்ணங்களின் வெளிப்பாடாகும். தேவன் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் போது, அது அவருடைய இருதயத்தின் குரலின் வெளிப்பாடாகும். அவரைப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், அவருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளவும், அவருடைய இருதயத்தின் குரலைக் கேட்கக்கூடியவர்களும், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற ஊக்கமாக ஒத்துழைக்கக்கூடிய ஜனங்களும் இருப்பார்கள் என்று அவர் நம்புகிறார். கர்த்தராகிய இயேசு செய்த இந்த விஷயங்கள் தேவனுடைய குரல் அற்ற வெளிப்பாடாகும்.

அடுத்து பின்வரும் பத்தியை நாம் கவனிக்கலாம்: லாசருவின் உயிர்த்தெழுதல் தேவனை மகிமைப்படுத்துகிறது.

இந்த பத்தியைப் படித்தபிறகு என்ன உணர்வுகள் உங்களுக்குத் தோன்றுகின்றன? கர்த்தராகிய இயேசு செய்த இந்த அற்புதத்தின் முக்கியத்துவம் முந்தையதை விட மிகப் பெரியதாகும், ஏனென்றால் மரித்த மனிதனைக் கல்லறையிலிருந்து திரும்பக் கொண்டு வருவதைவிட வேறெந்த அற்புதமும் இவ்வளவு பிரமிக்கச்செய்கிறதாக இல்லை. அந்தக் காலத்தில், கர்த்தராகிய இயேசு இது போன்ற ஒன்றைச் செய்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தேவன் மாம்சமானதால், ஜனங்கள் அவருடைய வெளிப்புறத் தோற்றத்தை, அவருடைய நடைமுறைப் பக்கத்தை மற்றும் முக்கியமில்லாத அம்சத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அவருடைய குணாம்சத்தையோ அல்லது அவர் கொண்டிருந்ததைப் போலவிருந்த சில சிறப்புத் திறன்களையோ சிலர் பார்த்து, புரிந்து கொண்டிருந்தாலும் கூட கர்த்தராகிய இயேசு எங்கிருந்து வந்தார், அவர் சாராம்சத்தில் அவர் உண்மையிலேயே யாராக இருந்தார், வேறு எந்த விஷயங்களை அவர் உண்மையில் செய்யக்கூடியவர் என்று ஒருவருக்கும் தெரியாதிருந்தது. இவை அனைத்தும் மனுக்குலத்திற்கு தெரியாதிருந்தது. ஆகவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கும், உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் பலரும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க விரும்பினர். தேவன் தனது சொந்த அடையாளத்தை நிரூபிக்க ஏதாவது செய்ய முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, இது செய்வதற்கு மிகச் சுலபமானதும், எளிமையாக செய்யக்கூடியதுமாய் இருந்தது. அவருடைய அடையாளத்தையும் சாராம்சத்தையும் நிரூபிக்க, அவர் எவ்விடத்திலும், எந்நேரத்திலும் எதையாகிலும் செய்ய முடியும், ஆனால் தேவன் ஒரு திட்டத்துடனும், படிப்படியாகவுமே காரியங்களைச் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் கண்மூடித்தனமாகக் காரியங்களைச் செய்யவில்லை, மாறாக, மனிதனைப் பார்க்க அனுமதிக்கும் ஒன்றைச் செய்யவும், உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒன்றைச் செய்யவும், அவர் சரியான நேரத்திற்காகவும், சரியான வாய்ப்புக்காகவும் காத்திருந்தார். இப்படி அவர் தனது அதிகாரத்தையும் அடையாளத்தையும் நிரூபித்தார். அப்படியானால், லாசருவின் உயிர்த்தெழுதல் கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை நிரூபிக்குமா? பின்வரும் வசனத்தின் பத்தியைக் கவனிப்போம்: “இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்….” கர்த்தராகிய இயேசு இதைச் செய்த போது, அவர் ஒரே ஒரு காரியத்தை மட்டுமே சொன்னார்: “லாசருவே, வெளியே வா.” பின்னர் லாசரு தனது கல்லறையில் இருந்து வெளியே வந்தான்—இது கர்த்தர் சொன்ன சில வார்த்தைகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசு ஒரு பலிபீடத்தை அமைக்கவில்லை வேறு எந்தச் செயலையும் அவர் செய்யவும் இல்லை. அவர் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே சொன்னார். இதை ஓர் அற்புதம் என்றா அல்லது கட்டளை என்றா, எப்படி அழைக்க வேண்டும்? அல்லது அது ஒருவித மந்திரமாக இருந்ததா? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இதை ஓர் அற்புதம் என்றழைக்கலாம் எனத் தோன்றுகிறது, நீங்கள் இதை ஒரு நவீனக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், நிச்சயமாக அப்போதும் அதை ஓர் அற்புதம் என்று நீங்கள் அழைக்கக்கூடும். ஆயினும், ஓர் ஆத்துமாவை மரித்தோரிலிருந்து திரும்ப அழைப்பதாகக் கருதப்படும் மந்திரம் என்று அதை நிச்சயமாகக் கருத முடியாது, மேலும் அது நிச்சயம் எவ்வகையிலும் மந்திரமாக இருக்கவில்லை. இந்த அற்புதமானது, சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் மிகச் சாதாரணமான, சிறிய அளவிலான சான்றாக இருந்தது எனச் சொல்வது சரியானதாகும். இதுவே தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும். ஒரு நபரை மரிக்கச் செய்வதற்கும், அவனுடைய ஆவி அவன் உடலை விட்டு வெளியேறி பாதாளத்திற்கோ அல்லது அது போக வேண்டிய வேறு இடத்திற்கோ போக வைப்பதற்கும் தேவனிடம் அதிகாரமுண்டு. ஒரு நபரின் மரிக்கும் நேரம், மற்றும் அவன் இறந்த பிறகு செல்லும் இடம் ஆகிய இவை தேவனால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த முடிவுகளை மனிதர்கள், நிகழ்வுகள், பொருட்கள், விண்வெளி அல்லது புவியியல் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படாதபடி, எந்த நேரத்திலும், எவ்விடத்திலும் அவரால் எடுக்க முடியும். அவர் ஒன்றைச் செய்ய விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஏனென்றால் எல்லா பொருட்களும், உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும் எல்லாக் காரியங்களும் அவருடைய வார்த்தையினாலும், அவருடைய அதிகாரத்தினாலும் பெருகி, இருந்து, அழிந்து போகின்றன. அவர் ஒன்றைச் செய்ய விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஏனென்றால் எல்லா பொருட்களும், உயிரினங்களும் அவருடைய ஆளுகையின் கீழ் உள்ளன, மேலும் எல்லாக் காரியங்களும் அவருடைய வார்த்தையினாலும், அவருடைய அதிகாரத்தினாலும் பிறந்து, வாழ்ந்து, அழிந்து போகின்றன. அவர் ஒரு மரித்த மனிதனை உயிரோடெழுப்ப முடியும், அதுவும், அவர் அதை எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் செய்ய முடியும். இது சிருஷ்டிகர் மட்டுமே கொண்டிருக்கும் அதிகாரமாகும்.

கர்த்தராகிய இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததைப் போன்ற செயல்களைச் செய்த போது, அவருடைய குறிக்கோளானது, மனிதர்களும் சாத்தானும் பார்க்கும்படி ஆதாரம் அளிப்பதாயிருந்தது, மேலும் மனுக்குலத்தைப் பற்றின அனைத்தையும் மற்றும் மனுக்குலத்தின் ஜீவன் மற்றும் மரணம் தேவனால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும், அவர் மாம்சமான போதிலும், அவர் காணக்கூடிய பொருள் உலகத்தையும், மனிதர்கள் காணக்கூடாத ஆவிக்குரிய உலகத்தையும் கூட ஆளுகைச் செய்பவராக இருந்தார் என்றும், மனிதர்களையும் சாத்தானையும் அறிந்துகொள்ளச் செய்கிறதாய் இருந்தது. மனுக்குலத்தைப் பற்றிய எல்லாம் சாத்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல என்பதை மனிதர்களும் சாத்தானும் அறியக் கூடியதாய் இருந்தது. இது தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடும், சான்றுமாகும், மேலும் இது, மனுக்குலத்தின் ஜீவனும், மரணமும் தேவனுடைய கரங்களில் உள்ளன என்ற செய்தியை எல்லாவற்றிற்கும் அனுப்ப தேவனுக்கு ஒரு வழியாகும். கர்த்தராகிய இயேசு லாசருவை உயிர்த்தெழப் பண்ணினது, சிருஷ்டிகர் மனுக்குலத்திற்குப் போதிக்கும் மற்றும் கற்பிக்கும் வழிகளில் ஒன்றாகும். இது அவர் மனுக்குலத்திற்குக் கற்பிப்பதற்கும், மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திப்பதற்கும் அவர் தனது வல்லமையையும், அதிகாரத்தையும் பயன்படுத்தின ஓர் உறுதியான செயலாகும். தான் எல்லாக் காரியங்களையும் ஆளுகைச் செய்யும் உண்மையை மனுக்குலம் அறிந்துகொள்ள அனுமதிக்கும்படி சிருஷ்டிகருக்கு, இது வார்த்தைகளைப் பயன்படுத்தாத, ஒரு வழியாய் இருந்தது. அவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை என்பதை நடைமுறைச் செயல்களின் மூலம் மனுக்குலத்திற்குச் சொல்வதற்கான ஒரு வழியாக அது அவருக்கு இருந்தது. மனுக்குலத்திற்கு அறிவுறுத்த அவர் பயன்படுத்தின இந்த அமைதி வழிமுறையானது நித்தியமானது, அழியாதது, மனித இருதயங்களுக்கு ஓர் அதிர்ச்சியையும், எப்போதும் மங்காத அறிவொளியையும் தருகிறது. லாசருவின் உயிர்த்தெழுதல் தேவனை மகிமைப்படுத்தியது, இது தேவனைப் பின்பற்றும் ஒவ்வொருவரிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வை ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும், இது புரிந்து கொள்ளுதலையும், மனுக்குலத்தின் ஜீவனையும் மரணத்தையும் தேவனால் மட்டுமே கட்டளையிட முடியும் என்ற தரிசனத்தையும் உறுதியாகப் பொருத்துகிறது. தேவனுக்கு இவ்வகையான அதிகாரம் இருந்தாலும், லாசருவின் உயிர்த்தெழுதல் மூலம் மனுக்குலத்தின் ஜீவன் மற்றும் மரணம் மீதான அவருடைய ராஜரீகத்தைப் பற்றி அவர் ஒரு செய்தியை அனுப்பின போதிலும், இது அவருடைய முதன்மையான கிரியை அல்ல. தேவன் ஒருபோதும் அர்த்தமின்றி எதையும் செய்வதில்லை, அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பெரிய மதிப்பு உண்டு, அது பொக்கிஷக் களஞ்சியத்தில் மிகப் பெரிதான ஓர் அணிகலனாய் இருக்கும். “ஒரு நபர் தன் கல்லறையிலிருந்து வெளியே வருவதைத்” தன்னுடைய கிரியையின் முதன்மையானதாகவோ அல்லது ஒரே இலக்காகவோ அல்லது காரியமாகவோ நிச்சயமாக உருவாக்க மாட்டார். தேவன் அர்த்தமில்லாத எதையும் செய்வதில்லை. தனித்துவமான நிகழ்வாக, லாசருவின் உயிர்த்தெழுதலானது, தேவனுடைய அதிகாரத்தை நிரூபிக்க, கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை நிரூபிக்கப் போதுமானதாய் இருக்கிறது. இதனால்தான் கர்த்தராகிய இயேசு இவ்வகையான அற்புதத்தை மீண்டும் செய்யவில்லை. தேவன் தனது சொந்த கொள்கைகளின்படி காரியங்களைச் செய்கிறார். மனித மொழியில், தேவன் முக்கியமான விஷயங்களால் மட்டுமே தனது மனதை நிரப்புகிறார் என்று கூறலாம். அதாவது தேவன் காரியங்களைச் செய்யும்போது, அவர் தம்முடைய கிரியையின் நோக்கத்திலிருந்து விலகுவதில்லை. இந்தக் கட்டத்தில் அவர் என்ன கிரியையைச் செய்ய வேண்டும், அவர் எதை நிறைவேற்ற வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார், மேலும் அவர் மிகச்சரியாகத் தனது திட்டத்தின்படி செயல்படுவார். ஒரு சீர்கேடான நபருக்கு அந்த மாதிரியான திறன் இருந்தால், அவன் தனது திறனை வெளிப்படுத்தும் வழிகளைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பான், இதனால் அவன் எவ்வளவு வல்லமைமிக்கவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும், எனவே அவர்கள் அவனுக்குத் தலை வணங்குவார்கள், அதனால் அவன் அவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களை விழுங்கிப் போட முடியும். இது சாத்தானிடமிருந்து வரும் தீமையாகும், இது சீர்கேடு என்று அழைக்கப்படுகிறது. தேவனுக்கு அப்படிப்பட்ட மனநிலை இல்லை, அப்படிப்பட்ட சாராம்சத்தை அவர் கொண்டிருக்கவில்லை. காரியங்களைச் செய்வதில் தன்னை மிகைப்படுத்தி காட்டுவது அவருடைய நோக்கம் அல்ல, மாறாக மனுக்குலத்திற்கு அதிக வெளிப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதேயாகும், இதனால்தான் இவ்வகையான நிகழ்வுகளின் உதாரணங்களை வேதாகமத்தில் ஜனங்கள் வெகு சிலவற்றையே காண்கிறார்கள். அதனால் கர்த்தராகிய இயேசுவின் வல்லமைகள் எல்லைக்குட்பட்டது என்றோ அல்லது இத்தகைய காரியங்களை அவர் செய்ய இயலாதவர் என்றோ அர்த்தமல்ல. மாறாக தேவன் அதைச் செய்ய விரும்பவில்லை என்றே அர்த்தம், ஏனென்றால் கர்த்தராகிய இயேசு நடப்பித்த லாசருவின் உயிர்த்தெழுதலானது, மிகவும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது, மேலும் தேவன் மாம்சமானதின் முக்கிய குறிக்கோள் அற்புதங்களைச் செய்வது அல்ல, ஜனங்களை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்வதும் அல்ல, ஆனால் மனுக்குலத்திற்கான மீட்பின் கிரியையே குறிக்கோளாகும். ஆகவே கர்த்தராகிய இயேசு செய்து முடித்த கிரியைகளில் பெரும்பாலானவை ஜனங்களுக்குக் கற்பித்தது, அவர்களுடைய தேவைகளைச் சந்தித்தது, அவர்களுக்கு உதவினதே ஆகும், மேலும் லாசருவை உயர்த்தெழச் செய்தது போன்ற நிகழ்வுகள் கர்த்தராகிய இயேசு செய்த ஊழியத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும். இன்னும், “மிகைப்படுத்திக் காட்டிக்கொள்வது” என்பது தேவனுடைய சாராம்சத்தில் ஒரு பகுதி அல்ல என்று நீங்கள் கூறலாம், ஆகவே கர்த்தராகிய இயேசு வேண்டுமென்றே அதிக அற்புதங்களை காண்பிக்காததின் மூலம் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவில்லை, இது சுற்றுச்சூழலின் வரம்புகளாலும் இல்லை, மேலும் நிச்சயமாக வல்லமையின்மையாலும் இல்லை.

கர்த்தராகிய இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தபோது, அவர் இந்தச் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தினார்: “லாசருவே, வெளியே வா.” இதைத் தவிர அவர் வேறெதுவும் பேசவில்லை. எனவே இந்த வார்த்தைகள் எதை நிரூபிக்கின்றன? மரித்த மனிதனை உயிர்ப்பெற வைப்பது உட்பட, பேசுவதன் மூலம் தேவனால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்த போது, அவர் உலகத்தை சிருஷ்டித்தபோது, அவர் அதை வார்த்தைகளினாலே சிருஷ்டித்தார்—சொல்லப்பட்ட கட்டளைகள், அதிகாரம் கொண்ட வார்த்தைகள் இவைகளின் வழியே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டன, மேலும் இப்படியே அது நிறைவேற்றப்பட்டது. கர்த்தராகிய இயேசு பேசின இந்த சில வார்த்தைகள், வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது தேவன் பேசிய வார்த்தைகளைப் போலவே இருந்தன; அப்படியே அவை தேவனுடைய அதிகாரத்தையும், சிருஷ்டிகருடைய வல்லமையையும் கொண்டிருந்தன. தேவனுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளால் எல்லாமே உருவாக்கப்பட்டு, நிலைத்து நின்றன. அதைப்போலவே, கர்த்தராகிய இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளால் லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்தான். இது அவருடைய மனுஅவதாரத்தில் நிரூபிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தேவனுடைய அதிகாரமாகும். இவ்வகை அதிகாரமும் வல்லமையும் சிருஷ்டிகருக்கும், சிருஷ்டிகர் உணரப்பட்ட மனுஷகுமாரனுக்கும் உரியதாகும். லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததன் மூலம் தேவன் மனுக்குலத்திற்குக் கற்பித்த புரிதல் இதுவாகும். இப்போது இந்த தலைப்பைப் பற்றிய நம்முடைய கலந்துரையாடலை இங்கே முடிப்போம். அடுத்து வேதத்திலிருந்து இன்னும் சிலவற்றை வாசிப்போம்.

10. இயேசுவைப் பற்றிய பரிசேயர்களின் நியாயத்தீர்ப்பு

மாற். 3:21-22 அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

11. இயேசு பரிசேயர்களைக் கடிந்து கொள்ளுதல்

மத். 12:31-32 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

மத். 23:13-15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மேலே உள்ள இரண்டு பத்திகளின் உள்ளடக்கமும் வேறுபட்டதாகும். முதல் பத்தியை முதலில் பார்ப்போம்: இயேசுவைப் பற்றிய பரிசேயரின் நியாயத்தீர்ப்பு.

வேதாகமத்தில் இயேசுவைப் பற்றிய மற்றும் அவர் செய்த காரியங்களைப் பற்றிய பரிசேயர்களின் மதிப்பீடு இதுதான்: “… அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள். … இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்” (மாற். 3:21-22). கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய வேதபாரகர் மற்றும் பரிசேயர் அளித்த நியாயத்தீர்ப்பு அவர்கள் வெறுமனே மற்றவர்களுடைய வார்த்தைகளைப் பின்பற்றின காரியம் அல்ல மேலும் அது ஆதாரமற்ற அனுமானமும் அல்ல, அது அவர்கள் பார்த்த மற்றும் அவருடைய செயல்களைக் குறித்து கேள்விப்பட்டதிலிருந்து கர்த்தராகிய இயேசுவைப் பற்றி எடுத்த முடிவாகும். அவர்களின் முடிவு நீதி என்ற பெயரால் மேம்போக்காகச் செய்யப்பட்டு, நியாயமானதைப் போல மக்களுக்குத் தோன்றினாலும், கர்த்தராகிய இயேசுவை அவர்கள் நியாயந்தீர்க்கக் கொண்டிருந்த இறுமாப்பானது, அதைக் கொண்டிருப்பதற்கு அவர்களுக்கே கடினமாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய அவர்களின் வெறுப்பின் வெறிகொண்ட ஆற்றலானது, அவர்களுடைய சொந்தக் காட்டுத்தனமான ஆசைகளையும் மற்றும் அவர்களுடைய தீய, சாத்தானிய முகங்களையும், அதேபோல, தேவனை எதிர்க்கிற அவர்களின் வன்மமுள்ள தன்மையையும் அம்பலப்படுத்தியது. கர்த்தராகிய இயேசுவைக் குறித்த நியாயத்தீர்ப்பில் அவர்கள் சொன்ன இந்த விஷயங்கள் அவர்களுடைய காட்டுத்தனமான ஆசைகள், பொறாமை, மற்றும் தேவன் மற்றும் சத்தியத்தின் மீதான அவர்களுடைய விரோதத்தின் அவலட்சணமான, வன்மமுள்ள தன்மை ஆகியவற்றால் உந்தப்பட்டன. கர்த்தராகிய இயேசுவின் செயல்களின் மூலகாரணத்தை அவர்கள் விசாரணை செய்யவில்லை, அவர் சொன்னது அல்லது செய்தவற்றின் சாராம்சத்தையும் அவர்கள் விசாரணை செய்யவில்லை. மாறாக கண்மூடித்தனமாக, வெறித்தனமான கொந்தளிக்கும் நிலையில், உள்நோக்கமுள்ள வன்மத்தினாலும், அவர் செய்ததை அவர்கள் தாக்கி, இழிவுபடுத்தினர். அவருடைய ஆவியை, அதாவது தேவனுடைய ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவரை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் அளவிற்கு அவர்கள் சென்றார்கள். இதைத்தான் அவர்கள் “அவர் மதிமயங்கியிருக்கிறார்,” “பெயெல்செபூல்,” மற்றும் “பிசாசுகளின் தலைவன்” என்று சொன்னபோது அர்த்தப்படுத்தினார்கள். அதாவது, தேவனுடைய ஆவியானவரை பெயெல்செபூல் மற்றும் பிசாசுகளின் தலைவன் என்று கூறினார்கள். மாம்சத்தை உடையாய் அணிந்திருந்த மனுவுருவான தேவனுடைய ஆவியானவரின் கிரியையை அவர்கள் பைத்தியக்காரத்தனம் என்று வகைப்படுத்தினார்கள். அவர்கள் தேவனுடைய ஆவியானவரை பெயெல்செபூல் மற்றும் பிசாசுகளின் தலைவன் என்று தூஷித்தது மட்டுமல்லாமல், தேவனுடைய கிரியையை நிந்தித்ததோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் நிந்தித்து, தூஷித்தார்கள். தேவனை எதிர்க்கும் மற்றும் தூஷிக்கும் அவர்களுடைய சாராம்சமானது முற்றிலும் சாத்தானாலும் பிசாசுகளினாலும் கொடுக்கப்பட்ட தேவனை எதிர்க்கும் மற்றும் தூஷிக்கும் சாராம்சத்தைப் போன்றதே ஆகும். அவர்கள் வெறுமனே சீர்கேடான மனிதர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் முற்றிலும் சாத்தானின் உருவமாகவே இருந்தார்கள். அவர்கள் மனுக்குலத்தினிடையே சாத்தானுக்கு ஒரு கால்வாயாகவும், மேலும் அவர்கள் சாத்தானுக்கு உடந்தையாகவும், அடிமைகளாகவும் இருந்தார்கள். அவர்களுடைய தூஷணத்தின் சாராம்சமும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் இழிவுபடுத்துவதும், அந்தஸ்துக்காக தேவனோடுள்ள அவர்களுடைய போராட்டமும், தேவனோடுள்ள அவர்களுடைய போட்டியிடுதலும், மேலும் முடிவில்லாமல் தேவனை சோதிப்பதுமே ஆகும். தேவனுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் சாராம்சமும், அவர் மீது கொண்ட விரோதமான மனப்பான்மையும், மேலும் அவர்களுடைய வார்த்தைகளும், அவர்களுடைய எண்ணங்களும் கூட தேவனுடைய ஆவியானவரை நேரடியாக தூஷித்துக் கோபப்படுத்தின. இவ்வாறு அவர்கள் சொன்னதையும் செய்ததையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு நியாயமான நியாயத்தீர்ப்பை தேவன் தீர்மானித்தார், மேலும் அவர்களின் செயல்களைப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷிக்கும் பாவமாக தேவன் தீர்மானித்தார். இந்தப் பாவமானது பின்வரும் வேதவசனங்களின் பத்தியில் உறுதியாகச் சொல்லப்பட்டதின்படி, இந்த உலகத்திலும் வரவிருக்கும் உலகத்திலும் மன்னிக்க முடியாததாகும்: “ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை,” மற்றும் “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” இன்று, தேவனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி நாம் பேசலாம்: “அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” அதாவது தேவன் எவ்வாறு இவ்வார்த்தைகளை நிறைவேற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமாக்குவோம்: “அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”

நாம் பேசின அனைத்தும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் காரியங்களைப் பற்றிய தேவனுடைய மனநிலை மற்றும் அவருடைய மனப்பான்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இயல்பாகவே மேலே உள்ள இரண்டு பத்திகளும் விதிவிலக்கானவை அல்ல. இந்த இரண்டு வசனங்களிலும் நீங்கள் எதையாவது கவனித்தீர்களா? சிலர் தங்கள் மீதுள்ள தேவனுடைய கோபத்தைக் காண்கிறதாகக் கூறுகிறார்கள். சிலர் மனுக்குலத்தின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாத தேவனுடைய மனநிலையின் பக்கத்தைத் தாங்கள் காண்பதாகவும், மேலும் தேவனைத் தூஷிக்கும் எதையாகிலும் ஜனங்கள் செய்தால், அவர்கள் அவருடைய மன்னிப்பைப் பெற மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த இரண்டு பகுதிகளிலும் தேவனுடைய கோபத்தையும், மனுக்குலத்தின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையையும் ஜனங்கள் பார்த்து, உணர்ந்தாலும், அவர்கள் இன்னும் உண்மையில் அவருடைய மனப்பான்மையைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு பத்திகளிலும், தேவனுடைய உண்மையான மனப்பான்மை மற்றும் அவரைத் தூஷித்து, அவரை கோபப்படுத்துபவர்களின் மேல் அவருடைய அணுகுமுறை ஆகியவற்றின் மறைக்கப்பட்ட குறிப்புகள் உள்ளடங்கியுள்ளன. அவருடைய மனப்பான்மையும் அணுகுமுறையும் பின்வரும் பத்தியின் உண்மையான அர்த்தத்தை விளக்கிக் காட்டுகிறது: “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” ஜனங்கள் தேவனைத் தூஷிக்கும்போது, அவரைக் கோபப்படுத்தும்போது, அவர் ஒரு தீர்ப்பை வழங்குகிறார், இந்தத் தீர்ப்பானது அவர் வழங்கிய ஒரு பலனாய் இருக்கிறது. இது வேதாகமத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: “ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” (மத். 12:31), மற்றும் “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” (மத். 23:13). ஆயினும், அந்த வேதபாரகர்களுக்கும், பரிசேயர்களுக்கும் மற்றும் இந்த விஷயங்களைச் சொன்னபின் கர்த்தராகிய இயேசுவைப் பைத்தியம் பிடித்தவர் என்று சொன்னவர்களுக்கும் கிடைத்த விளைவு என்ன என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் ஏதேனும் தண்டனையை அனுபவித்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லை, இதை உறுதியாகக் கூறலாம். இங்கே “இல்லை” என்று சொல்வது, அத்தகைய பதிவு எதுவும் இல்லை என்று சொல்வதன்று, ஆனால் உண்மையில் மனிதக்கண்களால் காணக்கூடிய எந்த விளைவும் அங்கே இல்லை என்பதே. “அது பதிவு செய்யப்படவில்லை” என்று சொல்வது, சில காரியங்களைக் கையாள்வதற்கான தேவனுடைய மனப்பான்மை மற்றும் கொள்கைகளின் சிக்கலைத் தெளிவுபடுத்துகிறது. தன்னைத் தூஷிக்கும் அல்லது எதிர்க்கும் அல்லது அவதூறாகக் கூட பேசும், வேண்டுமென்றே தாக்கி, அவதூறாகப் பேசி, சபிக்கும் ஜனங்களிடம் தேவன் காணாதவர் போல, கேளாதவர் போல இருப்பதில்லை, மாறாக அவர்களைக் குறித்த தெளிவான ஒரு மனப்பான்மை அவருக்கு உண்டு. அவர் இந்த ஜனங்களை வெறுக்கிறார், மேலும் அவர் அவர்களைத் தன்னுடைய இருதயத்தில் கண்டனம் பண்ணுகிறார். அவர்களுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார் இதனால் அவரைத் தூஷிப்பவர்களைக் குறித்து, அவருக்குத் தெளிவான மனப்பான்மை உண்டு என்பதை ஜனங்கள் அறிந்து கொள்வார்கள், மேலும் அவர்களுடைய விளைவை அவர் எவ்வாறு தீர்மானிப்பார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். இருப்பினும், இந்தக் காரியங்களைச் சொன்ன பிறகு, அந்த ஜனங்களை தேவன் எவ்வாறு கையாள்வார் என்ற உண்மையை ஜனங்கள் அரிதாகவே காண முடிந்தது, மேலும் தேவன் அவர்களுக்கு வழங்கிய முடிவு மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள கொள்கைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது, அவர்களைக் கையாள்வதற்கு தேவன் வைத்திருக்கும் குறிப்பிட்ட அணுகுமுறையையும், வழிமுறைகளையும் ஜனங்களால் பார்க்க முடியவில்லை. காரியங்களைச் செய்வதற்கான தேவனுடைய கொள்கைகளுடன் இது தொடர்புடையதாகும். சில ஜனங்களுடைய பொல்லாத நடத்தைகளைச் சமாளிக்க தேவன் உண்மைச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறார். அதாவது, அவர் அவர்களின் பாவங்களை அறிவிப்பதோ, அவர்களின் முடிவைத் தீர்மானிப்பதோ இல்லை, மாறாக, அவர்களுக்குத் தண்டனையையும், நியாயமான உரிய தண்டனையையும் அளிக்க உண்மையான நிகழ்வுகளை நேரடியாகப் பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வுகள் நிகழும்போது, ஜனங்களுடைய மாம்சம் தண்டனையை அனுபவிக்கிறது, அதாவது மனிதக் கண்களால் பார்க்கக்கூடிய தண்டனையாகும். சிலரின் பொல்லாத நடத்தைகளைக் கையாள்கையில், தேவன் அவர்களை வெறுமனே வார்த்தைகளால் சபிக்கிறார், அவருடைய கோபமும் அவர்கள் மீது கடந்து வருகிறது, ஆனால் அவர்கள் பெறும் தண்டனையானது ஜனங்கள் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆயினும்கூட, இந்த வகையான விளைவானது, தண்டிக்கப்படுதல் அல்லது கொல்லப்படுதல் போன்ற ஜனங்கள் பார்க்கக் கூடிய விளைவுகளை விட மிகத் தீவிரமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த வகை நபர்களை இரட்சிக்கக் கூடாது, இனி அவர்கள் மேல் இரக்கம் காட்டக்கூடாது அல்லது அவர்களைச் சகித்துக் கொள்ளக் கூடாது மற்றும் அவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புக்களை கொடுக்கக்கூடாது என்று தேவன் தீர்மானித்த சூழ்நிலைகளில், அவர்களைக் குறித்து அவர் கொண்ட மனப்பான்மை என்னவென்றால், அவர்களை ஒதுக்கி வைப்பதே ஆகும். இங்கே “ஒதுக்கி வைப்பது” என்பதன் அர்த்தம் என்ன? இந்தத் தொடரின் அடிப்படைப் பொருள் எதையாவது ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அதன்பின் புறக்கணித்து அதில் கவனம் செலுத்தாமல் இருப்பது என்பதாகும். ஆனால் இங்கே, தேவன் ஒருவரை ஒதுக்கி வைக்கும்போது, அதன் அர்த்தத்திற்கு இரண்டு வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன: முதலாவது விளக்கம் என்னவென்றால், அவர் அந்த நபரின் ஜீவனையும் மற்றும் அந்த நபரைக் குறித்த எல்லாவற்றையும் சாத்தான் சமாளிக்கும்படி அவனிடம் கொடுத்துவிட்டார், மேலும் தேவன் அதன்பின் பொறுப்பேற்க மாட்டார், அந்த நபரை இனி நிர்வகிக்க மாட்டார் என்பதாகும். அந்த நபர் பைத்தியமாக அல்லது முட்டாளாக இருந்தாலும் அல்லது அவர்கள் மரித்து அல்லது உயிரோடு இருந்தாலும், அல்லது அவர்கள் தண்டனைக்காக நரகத்தில் இறங்கியிருந்தாலும், இவற்றில் ஒன்றுக்கும்கூட தேவனுடன் எந்த சம்பந்தமும் இருக்காது. அதாவது, இத்தகைய சிருஷ்டிக்கு சிருஷ்டிகருடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்று அர்த்தமாகும். இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இந்த நபரைக் கொண்டு தேவன் தன் சொந்தக் கரங்களால் ஏதாவது செய்ய தீர்மானித்துள்ளார் என்பதாகும். இந்த நபரின் சேவையை அவர் பயன்படுத்துவார், அல்லது அவர் அவர்களை ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்துவார். இவ்வகையான நபர்களைக் கையாள்வதற்கான ஒரு சிறப்பான வழியை அவர் கொண்டிருப்பார், எடுத்துக்காட்டாக, பவுலிடம் செய்ததைப் போலவே, அவர்களைக் கையாளும்படி ஒரு சிறப்பான வழியைக் கொண்டிருப்பார். தேவனுடைய இருதயத்தில் இருக்கும் இந்தக் கொள்கை மற்றும் மனப்பான்மையைக் கொண்டே இவ்வகையான நபரைக் கையாள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். ஆகையால் ஜனங்கள் தேவனை எதிர்த்து, அவரை அவதூறாகப் பேசி, தூஷிக்கையில், அவருடைய மனநிலையை அவர்கள் தொந்தரவு செய்து அல்லது தேவனை அவரின் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தாண்ட செய்தால், அதன் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். மிகக் கடுமையான பின்விளைவு என்னவென்றால், தேவன் அவர்களுடைய ஜீவனையும், அவர்களைப் பற்றிய எல்லாவற்றையும் முழுவதுமாக சாத்தானிடம் ஒப்படைப்பதே. அவர்கள் நித்தியத்திற்கும் மன்னிக்கப்பட மாட்டார்கள். அதாவது இந்த நபர் சாத்தானுடைய வாய்க்கு இரையாக, அவன் கரத்தில் பொம்மையாக மாறி விட்டார், மேலும் அப்போதிலிருந்து தேவனுக்கும் அவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அர்த்தமாகும். சாத்தான் யோபுவைச் சோதித்தபோது, அது எப்படிப்பட்ட துயரம் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? யோபுவின் ஜீவனுக்குத் தீங்கு விளைவிக்க சாத்தான் அனுமதிக்கப்படாதபோதும், யோபு அதிகளவில் துன்பப்பட்டான். சாத்தானிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட, சாத்தானின் பிடியில் முழுமையாக இருக்கும், தேவனுடைய அக்கறையையும் இரக்கத்தையும் முற்றிலுமாக இழந்த, இனிமேல் சிருஷ்டிகருடைய ஆளுகையின் கீழ் இல்லாத, தேவனை ஆராதிக்கும் உரிமையும், தேவனுடைய ஆளுகையின்கீழ் உயிரினமாக இருக்கும் உரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும், சிருஷ்டிப்பின் தேவனுடனான உறவு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட ஒருவர் மீது சாத்தான் விளைவிக்கிற சேதங்கள் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகக் கடினமானதாக இருக்கிறதல்லவா? சாத்தான் யோபுவைத் துன்புறுத்துவது மனிதக் கண்களால் காணக்கூடிய ஒன்றாகும், ஆனால் தேவன் ஒரு நபரின் ஜீவனை சாத்தானிடம் ஒப்படைத்தால், அதன் விளைவுகள் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். உதாரணமாக, சிலர் மாடு அல்லது கழுதையாகத் திரும்பவும் பிறக்கலாம், சிலர் அசுத்தமான, பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிக்கப்படலாம், இன்னும் பலவும் நடக்கும். இவையே தேவனால் சாத்தானிடம் ஒப்படைக்கப்படும் சிலருடைய விளைவுகளாகும். வெளியில் இருந்து பார்க்கையில், கர்த்தராகிய இயேசுவை ஏளனம் செய்த, அவதூறாகப் பேசின, கண்டனம் பண்ணின மற்றும் தூஷித்த ஜனங்கள் எந்த விளைவுகளையும் சந்திக்கவில்லை என்பது போலத் தெரியும். ஆயினும், எல்லாவற்றையும் கையாள்வதில் தேவனுக்கு ஓர் அணுகுமுறை உள்ளது என்பதே உண்மையாகும். ஒவ்வொரு வகையான நபர்களை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதின் விளைவுகளை ஜனங்களுக்குச் சொல்ல அவர் தெளிவான மொழியைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவர் நேரடியாகப் பேசுவதில்லை, மாறாக நேரடியாகச் செயல்படுகிறார். அவர் அதைப் பற்றிப் பேசவில்லை என்பதால் எந்த விளைவும் இல்லை என்று அர்த்தமல்ல, உண்மையில் சொல்லப்போனால், இப்படிப்பட்ட நிலையில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்க வாய்ப்புண்டு. வெளியிலிருந்து பார்த்தால், சிலரிடம் தேவன் தன்னுடைய மனப்பான்மையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததைப் போலத் தெரியும், ஆனால் உண்மையில் நீண்ட காலமாக அவர்களை தேவன் கவனிக்க விரும்பவில்லை என்பதே காரியம். அவர் இனி அவர்களைப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் செய்த காரியங்கள் மற்றும் அவர்களின் நடத்தை, அவர்களுடைய சுபாவம் மற்றும் அவர்களின் சாராம்சம் காரணமாக, தேவன் தம்முடைய பார்வையில் அவர்கள் இருக்க வேண்டாம் என்றே விரும்புகிறார், அவர்களைச் சாத்தானிடம் நேரடியாக ஒப்படைக்க விரும்புகிறார், அவர்களுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தைச் சாத்தானிடம் கொடுக்கவும், சாத்தான் அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றைச் செய்ய அவனை அனுமதிக்கவும் விரும்புகிறார். தேவன் அவர்களை எந்த அளவிற்கு வெறுக்கிறார், அவர்களால் எந்த அளவிற்கு அவர் வெறுப்படைகிறார் என்பது தெளிவாகிறது. ஒரு நபர் தேவனைக் கோபப்படுத்தினால், அவர் அவர்களை மீண்டும் பார்க்கக் கூட விரும்பாத அளவிற்கு, அவர்களை முற்றிலுமாகக் கைவிடத் தயாரான அளவிற்கு, தாமாக அவர்களைக் கையாளக்கூட விரும்பாத அளவிற்குக் கோபப்படுத்தினால், மேலும் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைத்து, அவன் விரும்புவதை அவர்களிடம் செய்யவும், அவர்களைக் கட்டுப்படுத்தி, விழுங்கிப்போட்டு, அவன் விருப்பப்படி அவர்களைக் கையாளவும் அவர்களை ஒப்புக் கொடுக்கும் அளவிற்கு அவரைக் கோபப்படுத்தினால், அதன்பின் அந்த நபர் முற்றிலும் முடிந்து விட்டார் என்றே அர்த்தம். மனிதனாக இருப்பதற்கான அவர்களின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒரு சிருஷ்டியாக இருப்பதற்கான அவர்களின் உரிமை முடிவுக்கு வந்துவிட்டது. இது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா?

மேற்கூறியவை அனைத்தும் இந்த வார்த்தைகளின் முழுமையான விளக்கமாகும்: “அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” மேலும் இது, வேதாகமத்திலிருக்கும் இந்தப் பத்திகளைப் பற்றிய எளிய கருத்துரையாகச் செயல்படுகிறது. இப்போது உங்கள் அனைவருக்கும் இதைக் குறித்த ஒரு புரிதல் இருக்கும் என நம்புகிறேன்.

இப்போது வேதத்திலிருந்து பின்வரும் பத்திகளை வாசிக்கலாம்.

12. உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களிடம் இயேசு பேசின வார்த்தைகள்

யோவா. 20:26-29 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவா. 21:16-17 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவருடைய சீஷர்களிடம் சொன்ன சில காரியங்களை இந்தப் பத்திகள் விவரிக்கின்றன. முதலில், உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் கர்த்தராகிய இயேசுவில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தனவா என்று பார்ப்போம். கடந்த காலங்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசுவாக அவர் இருந்தாரா? உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசுவை விவரிக்கும் பின்வரும் வரி வேதாகமத்தில் உள்ளது: “கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” அந்த நேரத்தில், கர்த்தராகிய இயேசு அதன்பின் ஒரு மாம்ச சரீரத்தில் வசிக்கவில்லை, ஆனால் அவர் இப்போது ஓர்ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார் என்பது மிகவும் தெளிவாகிறது. ஏனென்றால் அவர் மாம்சத்தின் வரம்புகளைக் கடந்து விட்டார்; கதவு மூடப்பட்டு இருந்தாலும், அவர் அப்போதும் ஜனங்கள் நடுவில் வந்து, அவரைப் பார்க்க அவர்களை அனுமதிக்க முடிந்தது. இதுவே உயிர்த்தெழுதலுக்குப் பின்பான இயேசு கிறிஸ்துவுக்கும் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக மாம்சத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாகும். அந்தத் தருணத்தில் இருந்த ஆவிக்குரிய உடலின் தோற்றத்திற்கும், முன்பு இருந்த இயேசு கிறிஸ்துவின் தோற்றத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு ஜனங்களுக்கு அந்நியராக உணரப்பட்டார், ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு ஆவிக்குரிய சரீரமாக மாறினார், மேலும் அவருடைய முந்தைய மாம்சத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆவிக்குரிய சரீரமானது ஜனங்களுக்கு மிகவும் திகைப்பானதாகவும் குழப்பமானதாகவும் இருந்தது. இது கர்த்தராகிய இயேசுவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் அதிக இடைவெளியை உருவாக்கியது, அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு அதிகப் புதிரானவராக மாறிவிட்டார் என்று ஜனங்கள் தங்கள் இருதயங்களில் நினைத்தார்கள். ஜனங்களின் இந்த அறிவாற்றல்களும் உணர்ச்சிகளும், காணவோ தொடவோ முடியாத ஒரு தேவனை நம்பும் காலத்திற்கு அவர்களைச் சடுதியில் அழைத்துப் போயின. ஆகவே, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தபிறகு செய்த முதல் காரியம் என்னவென்றால், எல்லோரும் அவரைப் பார்க்க அனுமதித்ததும், அவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினதும், அவருடைய உயிர்த்தெழுதலின் உண்மையை உறுதிப்படுத்தினதுமே ஆகும். அதோடு கூட, இந்தச் செயலானது அவர் மாம்சத்தில் கிரியை செய்த போதும், அவர்கள் பார்க்கவும் தொடவும் முடிந்ததான கிறிஸ்துவாக அவர் இருந்த போதும், அவருக்கு இருந்த ஜனங்களுடனான உறவை மீட்டுத் தந்தது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதில் ஜனங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதும், மனுக்குலத்தை மீட்பதற்கான கர்த்தராகிய இயேசுவின் கிரியையிலும் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதும் ஆகும். மற்றொரு விளைவு என்னவென்றால், கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் ஜனங்களுக்குத் தரிசனமானார் என்றதும், மேலும் அவரைப் பார்க்கவும், தொடவும் ஜனங்களை அனுமதித்தார் என்ற உண்மையும் மனுக்குலத்தைக் கிருபையின் காலத்தில் உறுதியாகப் பிணைத்தது. மேலும் இது, கர்த்தராகிய இயேசு “மறைந்து போய் விட்டார்” அல்லது “ஒரு வார்த்தையும் சொல்லாமல் போய்விட்டார்” என்று கருதப்பட்ட அடிப்படையில், ஜனங்கள் அப்போதிலிருந்து முந்தைய நியாயப்பிரமாண காலத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்தது. இவ்வாறு கர்த்தராகிய இயேசுவின் போதனைகளையும் அவர் செய்த கிரியையையும் பின்பற்றி அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்தார். இவ்வாறு கிருபையின் காலத்தினுடைய கிரியையில் புதிய கட்டம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, அந்தத் தருணத்திலிருந்து, நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஜனங்கள் அதிகாரப்பூர்வமாக நியாயப்பிரமாணத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய சகாப்தத்திற்குள், புதிய ஆரம்பத்திற்குள் நுழைந்தனர். கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, மனுக்குலத்திற்கு தோன்றியதின் பன்முகத்தன்மையுள்ள அர்த்தங்கள் இவைதான்.

கர்த்தராகிய இயேசு அப்போது ஓர் ஆவிக்குரிய சரீரத்தில் வசித்ததால், எப்படி ஜனங்களால் அவரைத் தொடவும் பார்க்கவும் முடிந்திருக்கும்? இந்தக் கேள்வியானது மனுக்குலத்திற்காக கர்த்தராகிய இயேசு தோன்றுவதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. நாம் இப்போது வாசித்த வேதாகமத்தின் பத்திகளில் நீங்கள் எதையாவது கவனித்தீர்களா? பொதுவாக, ஆவிக்குரிய சரீரங்களைக் காணவோ தொடவோ முடியாது. மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு மேற்கொண்ட கிரியைகள் ஏற்கனவே முடிந்திருந்தன. எனவே கோட்பாட்டளவில், ஜனங்களைச் சந்திக்க அவருடைய உண்மையான உருவத்தில் அவர்கள் மத்தியில் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை, ஆனால் தோமா போன்றவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தில் தோன்றுவது, அவர் தோன்றுவதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதியாக்கியது, அதனால் அது இன்னும் ஆழமாக ஜனங்களுடைய இருதயங்களில் ஊடுருவியது. அவர் தோமாவிடம் வந்தபோது, சந்தேகிக்கும் தோமாவை, தனது கரங்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்து அவனிடம் சொன்னார்: “உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.” இந்த வார்த்தைகளும் செயல்களும் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின்னரே சொல்லவும், செய்யவும் விரும்பின விஷயங்கள் அல்ல; உண்மையில், அவை அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சொல்ல விரும்பிய, செய்ய விரும்பின விஷயங்கள் ஆகும், ஏனென்றால் தோமாவின் சந்தேகங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்திரு க்கவில்லை, ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றி வந்த காலம் முழுவதிலும் அது அவனிடத்தில் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கர்த்தராகிய இயேசு தோமா போன்ற ஜனங்களை ஏற்கனவே புரிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகையால் இதிலிருந்து நாம் என்ன பார்க்க முடிகிறது? அவர் உயிர்த்தெழுந்த பிறகும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவருடைய சாராம்சம் மாறவில்லை. இருப்பினும், இங்கே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தன்னுடைய உண்மையான உருவத்தோடு, தன்னுடைய உண்மையான மனநிலையோடு, அவர் மாம்சத்தில் இருந்த காலத்திலிருந்து மனுக்குலத்தைப் பற்றின புரிதலோடு, ஆவிக்குரிய உலகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தார், எனவே அவர் முதலில் தோமாவிடம் சென்றார், தோமாவைத் தன்னுடைய விலாவைத் தொட்டுப்பார்க்க அனுமதித்தார், இது தோமாவை உயிர்த்தெழுதலுக்குப் பிறகான அவருடைய ஆவிக்குரிய சரீரத்தைக் காண அனுமதிப்பதற்காக மட்டுமல்லாமல், தோமா தனது ஆவிக்குரிய சரீரம் இருப்பதைத் தொட்டு, உணர்ந்து, தன்னுடைய சந்தேகங்களை முற்றிலுமாக விட்டுவிடுவதற்காகவே. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர்தான் கிறிஸ்து என்பதைத் தோமா எப்போதும் சந்தேகித்தான், அவனால் நம்ப இயலவில்லை. தேவன் மீதான அவனுடைய விசுவாசமானது, தன் கண்களால் பார்க்க முடிந்த, தன் கைகளால் தொட முடிந்தவைகளின் அடிப்படையில் மட்டுமே உறுதிப்பட்டிருந்தது. இவ்வகையான நபரின் விசுவாசத்தைப் பற்றி கர்த்தராகிய இயேசுவுக்கு நல்ல புரிதல் இருந்தது. அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமே நம்பினார்கள், தேவனால் அனுப்பப்பட்டவரையோ அல்லது மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவையோ அவர்கள் சிறிதும் விசுவாசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை. கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், அவர் உண்மையிலேயே மனுவுருவான தேவன் என்பதையும் தோமா ஒப்புக்கொள்ளவும், விசுவாசிக்கவும், அவர் தோமாவை அவனுடைய கையை நீட்டி, தன்னுடைய விலாவைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பும் பின்பும் தோமா கொண்டிருந்த சந்தேகத்தில் ஏதாவது வித்தியாசம் இருந்ததா? அவன் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தான், கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரமானது, அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தரிசனமாகி, அவரது சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட அனுமதித்ததைத் தவிர, அவனுடைய சந்தேகங்களைத் தீர்க்கவும், அவன் தன் சந்தேகங்களை விட்டுவிடவும் செய்வதற்கான வேறு எந்த வழியும் ஒருவரிடத்திலும் இருக்கவில்லை. ஆகவே, கர்த்தராகிய இயேசு தோமாவை தனது விலாவைத் தொட்டு, ஆணிகளாலுண்டான காயம் இருப்பதை உண்மையில் உணர அனுமதித்த நேரத்திலிருந்தே தோமாவின் சந்தேகம் மறைந்தது, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அவன் உண்மையிலேயே அறிந்துகொண்டான், மேலும் அவன் அதை ஏற்றுக்கொண்டு கர்த்தராகிய இயேசு உண்மையான கிறிஸ்து என்றும், மனுவுருவான தேவன் என்றும் விசுவாசித்தான். அந்த நேரத்தில் தோமா அதன்பின் சந்தேகிக்கவில்லை என்றாலும், கிறிஸ்துவைச் சந்திக்கும் வாய்ப்பை அவன் என்றென்றும் இழந்திருந்தான். அவருடன் இணைந்திருக்க, அவரைப் பின்தொடர, அவரை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் அவன் என்றென்றும் இழந்திருந்தான். கிறிஸ்து அவனைப் பரிபூரணமாக்குவதற்கான வாய்ப்பை அவன் இழந்திருந்தான். கர்த்தராகிய இயேசுவின் தரிசனமும், அவருடைய வார்த்தைகளும் சந்தேகங்கள் நிறைந்தவர்களின் விசுவாசத்தைப் பற்றிய ஒரு முடிவையும், தீர்ப்பையும் அளித்தன. அவர் தனது உண்மையான வார்த்தைகளையும், செயல்களையும் சந்தேகிப்பவர்களுக்குச் சொல்லவும், பரலோக தேவனை மட்டுமே நம்பி, கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களிடம் சொல்லவும் பயன்படுத்தினார்: தேவன் அவர்களின் விசுவாசத்தையும் பாராட்டவில்லை, அவரைச் சந்தேகிக்கும்போது அவரைப் பின்தொடர்ந்ததற்காகவும் அவர்களைப் பாராட்டவில்லை. அவர்கள் தேவனையும், கிறிஸ்துவையும் முழுமையாக நம்பிய நாளே, தேவன் தம்முடைய பெரிதான கிரியையை முடித்த நாளாக இருந்திருக்க முடியும். நிச்சயமாக, அந்த நாள் அவர்களின் சந்தேகத்தின் மீது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளாகவும் இருந்திருக்கும். கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் மனப்பான்மை அவர்களின் தலைவிதியை நிர்ணயித்தது, அவர்களுடைய பிடிவாதமான சந்தேகம், அதாவது அவர்களின் விசுவாசம் அவர்களுக்கு பலனைத் தரவில்லை என்பதையும், அவர்களின் கடினத்தன்மையானது, அதாவது அவர்களுடைய நம்பிக்கைகள் வீணானவை என்பதையும் குறித்தது. பரலோக தேவன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மாயைகளால் உறுதி செய்யப்பட்டு, கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் சந்தேகமானது, உண்மையில் தேவனைப் பற்றிய அவர்களின் உண்மையான மனப்பான்மையாக இருந்தபடியால், அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட்ட போதிலும், அவர்களுடைய விசுவாசம் அப்போதும் பயனற்றதாகவே இருந்தது, அவர்களின் பலன், ஓட்டையான பாத்திரத்தில் தண்ணீர் இறைப்பதைப் போன்றது என்றே விவரிக்க முடிந்தது, அனைத்தும் வீணாய் இருந்தன. கர்த்தராகிய இயேசு தோமாவிடம் சொன்னது, ஒவ்வொருவரிடமும்கூடச் சொல்லும் அவரின் மிகத் தெளிவான விதமாகும்: உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவே முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனிதர்களிடையே கிரியை செய்த கர்த்தராகிய இயேசு ஆவார். அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும், மரண இருளின் பள்ளத்தாக்கை அனுபவித்திருந்தாலும், அவர் உயிர்த்தெழுதலை அனுபவித்திருந்தாலும், அவர் எந்த அம்சத்திலும், எந்த மாற்றத்தையும் அனுபவிக்கவில்லை. இப்போது, அவர் ஆணிகளாலுண்டான தழும்புகளை அவர் சரீரத்தில் கொண்டிருந்தாலும், அவர் உயிர்த்தெழுந்து, கல்லறையில் இருந்து வெளியேறி இருந்தாலும், அவருடைய மனநிலை, மனுக்குலத்தைப் பற்றிய அவரது புரிதல், மனுக்குலத்திற்கான அவருடைய நோக்கங்கள் சிறிதளவும் மாறவே இல்லை. மேலும், அவர் சிலுவையிலிருந்து இறங்கினார் என்றும், பாவத்தை வென்றார் என்றும், போராட்டங்களை ஜெயித்தார் என்றும், மரணத்தின் மீது ஜெயமெடுத்தார் என்றும் ஜனங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆணிகளாலுண்டான அவருடைய தழும்புகளானது, சாத்தானுக்கு எதிரான ஜெயத்தின் சரியான ஆதாரமாகும், மனுக்குலம் முழுவதையும் வெற்றிகரமாக மீட்பதற்கான பாவநிவாரணபலியாக இருந்ததின் ஆதாரமாகும். அவர் ஏற்கனவே மனுக்குலத்தின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்றும், மீட்பின் கிரியையை நிறைவேற்றி விட்டார் என்றும் ஜனங்களுக்குச் சொல்லி கொண்டிருந்தார். அவர் தம்முடைய சீஷர்களைப் பார்க்க திரும்பிச் சென்றபோது, அவர் தம்முடைய தரிசனத்தின் மூலம் இந்தச் செய்தியை அவர்களிடம் சொன்னார்: “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன், நான் இப்போதும் இருக்கிறேன்; நீங்கள் என்னைப் பார்க்கவும் தொடவும் முடியும்படியாய், இன்று உங்களுக்கு முன்பாக உண்மையிலேயே நான் நின்று கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.” கர்த்தராகிய இயேசு, தோமாவின் காரியத்தை வருங்கால ஜனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகப் பயன்படுத்த விரும்பினார்: அவர் மீது உள்ள உன் விசுவாசத்தில் கர்த்தராகிய இயேசுவை உன்னால் பார்க்கவோ, தொடவோ முடியாது என்றாலும், உன்னுடைய உண்மையான விசுவாசத்தின் காரணமாக நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய், உன்னுடைய உண்மையான விசுவாசத்தினால் உன்னால் கர்த்தராகிய இயேசுவைப் பார்க்க முடியும், மேலும் இந்த வகையான நபர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.

கர்த்தராகிய இயேசு தோமாவுக்குத் தரிசனமானபோது பேசியதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தைகள் கிருபையின் காலத்தில் உள்ள அனைவருக்கும் பெரிதும் உதவுகின்றன. தோமாவுக்கு அவர் தந்த தரிசனமும், அவனுடன் பேசின வார்த்தைகளும் பின்னர் வந்த தலைமுறையினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின; அவை நித்திய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. தேவனை விசுவாசித்தும், தேவனைச் சந்தேகிக்கிற வகையான நபரைத் தோமா பிரதிநிதித்துவப்படுத்துகிறான். அவர்கள் சந்தேகக் குணமுடையவர்கள், கபடமான இருதயங்களைக் கொண்டவர்கள், துரோகிகள், தேவன் நிறைவேற்றக் கூடிய காரியங்களை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தேவனுடைய சர்வவல்லமையையும், அவருடைய ராஜரீகத்தையும், மேலும் மனுவுருவான தேவனையும் விசுவாசிப்பதில்லை. இருப்பினும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலானது அவர்கள் கொண்டிருந்த இந்தக் குணாதிசயங்களை முற்றிலுமாய் எதிர்த்தது, மேலும் இது அவர்களின் சொந்தச் சந்தேகத்தைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் சொந்தச் சந்தேகத்தை அடையாளங்காண்பதற்கும், அவர்களின் சொந்தத் துரோகத்தை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது, இதனால் கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், உயர்த்தெழுதலையும் அவர்களை மனப்பூர்வமாக நம்பச் செய்தது. தோமாவிற்கு நடந்ததானது, தோமாவைப் போன்ற சந்தேகிக்கும் நபர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் தங்களைச் சந்தேகத்தால் நிரப்பிக் கொண்டால், அவர்கள் இருளில் மூழ்கி விடுவார்கள் என்றும் அதிகமான ஜனங்கள் தங்களைத் தாங்களே எச்சரிக்கும்படி, பிற்கால சந்ததியினருக்கு எச்சரிப்பாகவும், முன்னறிவிப்பாகவும் இருந்தது. நீ தேவனைப் பின்பற்றியும், தோமாவைப் போலவே, தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவும், ஊகிக்கவும் விரும்பி, எப்போதும் தேவனுடைய விலாவைத் தொட்டுப்பார்த்து, அவருடைய ஆணி அடையாளங்களை உணர விரும்பினால், தேவன் உன்னைக் கைவிடுவார். ஆகவே கர்த்தராகிய இயேசு ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடியதை மட்டுமே நம்பும் தோமாவைப் போல இருக்காமல், பரிசுத்தமாகவும், நேர்மையான மனிதர்களாகவும், தேவன் மீது இரகசியமாக மனதில் சந்தேகம் கொள்ளாமல், அவரை முழுமையாக விசுவாசித்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இவ்வகையான ஜனங்கள் பாக்கியவான்கள். இதுவே கர்த்தராகிய இயேசு ஜனங்களிடம் எதிர்பார்க்கும் மிகச்சிறிய காரியமாகும், மேலும் இது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

மேற்கூறியவை சந்தேகங்கள் நிறைந்தவர்களிடம் கர்த்தராகிய இயேசு கொண்டிருக்கும் மனப்பான்மையாகும். ஆகவே கர்த்தராகிய இயேசு அவரை உண்மையாக விசுவாசிக்கவும், பின்பற்றவும் முடிந்தவர்களுக்கு என்ன சொன்னார், என்ன செய்தார்? இதையே கர்த்தராகிய இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையிலான உரையாடலின் மூலம் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகிறோம்.

இந்த உரையாடலில் கர்த்தராகிய இயேசு பேதுருவிடம் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைக் கேட்டார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” இது கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, பேதுரு போன்றவர்களிடமும், கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற மற்றும் கர்த்தரை நேசிக்கப் பிரயாசப்படுபவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கும் உயர்வான தரமாகும். இந்தக் கேள்வியானது ஒரு வகையான ஆய்வு மற்றும் விசாரணையைப் போல இருந்தாலும், அதைவிட, பேதுரு போன்றவர்களிடம் எதிர்பார்க்கும் காரியமாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது. கர்த்தராகிய இயேசு இந்தக் கேள்வி கேட்கும் முறையைப் பயன்படுத்தினார், இதனால் ஜனங்கள் தங்களைப் பற்றிக் கவனமாய்ச் சிந்தித்து, தங்களைத் தாங்களே கவனித்துப் பார்ப்பார்கள் மற்றும் இவ்வாறு கேட்பார்கள்: ஜனங்களிடம் கர்த்தராகிய இயேசு எதிர்பார்க்கும் காரியங்கள் என்ன? நான் கர்த்தரை நேசிக்கிறேனா? நான் தேவனை நேசிக்கும் நபரா? நான் தேவனை எவ்வாறு நேசிக்க வேண்டும்? கர்த்தராகிய இயேசு பேதுருவிடம் இந்தக் கேள்வியை மட்டுமே கேட்டிருந்தாலும், உண்மை என்னவென்றால், அவருடைய இருதயத்தில், இந்தக் கேள்விகளைப் பேதுருவிடம் கேட்பதன் மூலம், தேவனை நேசிக்க விரும்பும் அதிகமான ஜனங்களிடம் இதே வகையான கேள்வியைக் கேட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அவர் விரும்பினார். கர்த்தராகிய இயேசுவின் சொந்த வாயிலிருந்து இந்த கேள்வியைப் பெற, இவ்வகையான நபர்களின் பிரதிநிதியாகச் செயல்படவே, பேதுரு ஆசீர்வதிக்கப்பட்டான்.

கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பின் தோமாவிடம் சொன்ன பின்வரும், “உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு,” என்ற வார்த்தைகளுடன் ஒப்பிடுகையில், அவர் பேதுருவிடம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்ட: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்ற கேள்வியானது, கர்த்தராகிய இயேசுவினுடய மனப்பான்மையின் கடுமையையும், அவர் கேள்வி கேட்கும்போது உணர்ந்த அவசரத்தையும் ஜனங்கள் முன்னிலும் திருத்தமாக உணர அனுமதிக்கிறது. வஞ்சகமான சுபாவமுடைய, சந்தேக நபரான தோமாவைப் பொறுத்தவரை, அவனைக் கையை நீட்டி, அவர் சரீரத்திலுள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட கர்த்தராகிய இயேசு அனுமதித்தார், இது கர்த்தராகிய இயேசுவை உயிர்த்தெழுந்த மனுஷகுமாரன் என்று விசுவாசிக்கவும், கர்த்தராகிய இயேசுவின் அடையாளத்தை கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளவும் அவனை வழிநடத்தியது. மேலும் கர்த்தராகிய இயேசு தோமாவைக் கடுமையாகக் கண்டிக்கவுமில்லை, அவனைப் பற்றிய எந்தத் தெளிவான நியாயத்தீர்ப்பையும் அவர் வாய்மொழியாக வெளிப்படுத்தவுமில்லையென்றாலும், அவர் தோமாவைப் புரிந்து கொண்டார் என்பதை அவன் அறிந்துகொள்ள அனுமதிக்கும்படி, அவர் நடைமுறைச் செயல்களைப் பயன்படுத்தினார், அதே நேரத்தில் அவ்வகையான நபரைக் குறித்த அவருடைய மனப்பான்மையையும், உறுதியையும் கூட வெளிப்படுத்தினார். அவ்வகை நபர்களிடம் கர்த்தராகிய இயேசு எதிர்பார்க்கும் காரியங்களும், எதிர்பார்ப்புகளும் அவர் சொன்ன காரியங்களிலிருந்து கண்டுகொள்ள முடியாது, ஏனென்றால் தோமா போன்றவர்களிடம் உண்மையான விசுவாசத்தின் ஒரு சிறு பகுதி கூட கிடையாது. அவர்களுக்கான கர்த்தராகிய இயேசுவின் தேவைகள் அதிக அளவில் இருந்தன, ஆனால் பேதுருவைப் போன்றவர்களிடம் அவர் வெளிப்படுத்திய மனப்பான்மையானது முற்றிலும் வேறுபட்டதாகும். பேதுரு தன் கையை நீட்டி ஆணிகளால் உண்டான தன் தழும்புகளைத் தொட வேண்டும் என்று அவர் கேட்கவுமில்லை, அவர் பேதுருவிடம்: “அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்று கூறவுமில்லை. அதற்குப் பதிலாக, ஒரே கேள்வியை அவர் திரும்பத் திரும்பப் பேதுருவிடம் கேட்டார். அந்த கேள்வியானது சிந்திக்கத் தூண்டுவதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது, மேலும் கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவருவரையும், தடுக்க முடியாதபடி வருத்தத்தையும் பயத்தையும் உணர வைத்தது, கர்த்தராகிய இயேசுவின் கவலையான, துயரமான மனநிலையையும் உணர வைத்தது. மேலும் அவர்கள் மிகுந்த வேதனையிலும் துன்பத்திலும் இருக்கும்போது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அக்கறையையும், அவருடைய பராமரிப்பையும் அவர்களால் அதிகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய ஊக்கமான போதனையையும் மற்றும் பரிசுத்தமான, நேர்மையான ஜனங்களிடம் எதிர்பார்க்கும் கண்டிப்பான தேவைகளையும் அவர்கள் உணர்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவின் கேள்வியானது, இந்த எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஜனங்களிடம் எதிர்பார்த்த கர்த்தருடைய எதிர்பார்ப்புகள் வெறுமனே அவரை விசுவாசித்து, பின்பற்றுவதற்காக மாத்திரம் அல்ல, மாறாக உன்னுடைய கர்த்தரையும், உன்னுடைய தேவனையும் நேசிக்கிற அன்பை அடைவதற்கே என்று ஜனங்களை உணர வைத்தது. இவ்வகையான அன்பு அக்கறையுடையதாகவும், கீழ்ப்படிகிறதாகவும் இருக்கும். தேவனுக்காக வாழ்கிறதும், தேவனுக்காக மரிக்கிறதும், தேவனுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறதும், தேவனுக்காகச் செலவழிக்கிறதும், கொடுக்கிறதும் மனிதர்கள்தான். இந்த வகையான அன்பு தேவனுக்கு ஆறுதல் அளிக்கிறது, சாட்சியை அனுபவிக்கவும், இளைப்பாறவும் அவரை அனுமதிக்கிறது. இது மனிதன் தேவனுக்குத் திருப்பிச் செலுத்தும் காரியமும், மனிதனுடைய பொறுப்பும், நன்றிக் கடனும், கடமையுமாகும், மேலும் இது ஜனங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒரு வழியாகும். இந்த மூன்று கேள்விகளும் கர்த்தராகிய இயேசு பேதுருவிடமிருந்தும், பரிபூரணமாக்கப்படப் போகிற எல்லா ஜனங்களிடமும் முன்வைக்கும் ஒரு கோரிக்கையும் மற்றும் அறிவுரையும் ஆகும். இந்த மூன்று கேள்விகள்தான், பேதுருவை அவன் வாழ்க்கையில் முடிவு வரையில் தனது பாதையைப் பின்பற்ற வழிவகுத்தது, மேலும் கர்த்தராகிய இயேசு புறப்பட்டுச் செல்கையில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளானது, தான் பரிபூரணமாக்கப்பட்ட பாதையில் தொடக்கம் பண்ண பேதுருவை வழிநடத்தியது, அவனை வழிநடத்தியது, கர்த்தருக்கான அவனுடைய அன்பினால், கர்த்தருடைய இருதயத்திற்காக அக்கறை கொள்ளவும், கர்த்தருக்குக் கீழ்ப்படியவும், கர்த்தருக்கு ஆறுதல் அளிக்கவும், இந்த அன்பினால் அவனுடைய முழு வாழ்க்கையையும், அவனுடைய முழு ஜீவிதத்தையும் அர்ப்பணிக்கவும் அவனை வழிநடத்தியது.

கிருபையின் காலத்தின் போது, தேவனுடைய பணியானது முதன்மையாக இரண்டு வகையான நபர்களுக்கானதாய் இருந்தது. முதலாவது வகையான நபரானவர், அவரை விசுவாசித்த, அவரைப் பின்பற்றின, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சிலுவையைச் சுமக்கக்கூடிய, கிருபையின் காலத்தின் வழியைப் பற்றிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ள நபராவர். இவ்வகையான நபர் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு, தேவனுடைய கிருபையை அனுபவிப்பார். இரண்டாம் வகையான நபரைப் பரிபூரணப்படுத்தக் கூடும், அவர் பேதுருவைப் போன்றவராவார். ஆகவே, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர் முதலாவது இந்த இரண்டு அர்த்தமுள்ள காரியங்களைச் செய்தார். ஒன்று தோமாவிடம் செய்யப்பட்டது, மற்றொன்று பேதுருவிடம் செய்யப்பட்டதாகும். இந்த இரண்டு காரியங்களும் எதைக் குறிக்கின்றன? மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தேவனுடைய உண்மையான நோக்கங்களை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா? அவை மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவா? தேவன் தோமாவிடம் செய்த கிரியையானது சந்தேகிப்பவர்களாக இல்லாமல், விசுவாசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஜனங்களை எச்சரிப்பதற்காகச் செய்யப்பட்டதாகும். பேதுருவிடம் அவர் செய்த கிரியையானது, பேதுருவைப் போன்று இருந்த ஜனஙகளின் விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், இவ்வகையான நபரிடம்தான் எதிர்பார்ப்பதைத் தெளிவுபடுத்தவும், அவர்கள் எந்த இலக்குகளைப் பின்தொடர வேண்டும் என்று அவர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் செய்யப்பட்டதாகும்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவசியமானவர்கள் என்று அவர் நினைத்த ஜனங்களுக்குத் தரிசனமானார், அவர்களுடன் பேசினார், ஜனங்களுக்கான நோக்கங்களையும், ஜனங்களின் எதிர்பார்ப்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தார். அதாவது, மனுவுருவான தேவனாக, அவருடைய அக்கறையும், ஜனங்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்களும் ஒருபோதும் மாறவே இல்லை. அவர் மாம்சத்தில் இருந்தபோதும், சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்திருந்த பின்பு அவர் ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தபோதும், இவை அப்படியே இருந்தன. அவர் சிலுவைக்குப் போகும் முன்பாக, அவர் இந்த சீஷர்களைக் குறித்து அக்கறை கொண்டிருந்தார், ஒவ்வொரு மனிதனின் நிலையைப் பற்றியும் அவருடைய இருதயத்தில் அவர் தெளிவாக இருந்தார், ஒவ்வொரு நபரின் குறைபாடுகளையும் அவர் புரிந்திருந்தார், நிச்சயமாக, ஒவ்வொரு நபரைக் குறித்த அவருடைய புரிந்து கொள்ளுதலானது, மரித்து உயிர்த்தெழுந்து, ஆவிக்குரிய சரீரமாக மாறின பின்பும், அவர் மாம்சத்தில் இருந்தபோது இருந்ததைப் போலவே இருந்தது. கிறிஸ்து என்கிற அவரது அடையாளத்தைக் குறித்து ஜனங்கள் முழுமையான நிச்சயத்துடன் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில், அவர் ஜனங்களிடம் கடுமையான கோரிக்கைகளை வைக்கவில்லை. இருப்பினும், அவர் உயிர்த்தெழுந்த பிறகு, அவர் அவர்களுக்குத் தரிசனமாகி, கர்த்தராகிய இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதையும், அவர் மனுவுருவான தேவன் என்பதையும் குறித்து அவர்களை முற்றிலும் நிச்சயமுடையவர்களாக்கினார். மேலும் அவர் தாம் தோன்றியது குறித்த உண்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும், மனுக்குலத்தின் வாழ்நாள் பின்தொடர்தலுக்காக உயர்ந்த தரிசனமாகவும் உள்நோக்கமாகவும் பயன்படுத்தினார். மரணத்திலிருந்தெழுந்த அவரின் உயிர்த்தெழுதலானது, அவரை பின்பற்றின அனைவரையும் பெலபடுத்தினது மட்டுமல்லாமல், மனுக்குலத்தினிடையே அவருடைய கிருபையின் காலத்துக் கிரியையை முழுமையாகச் செயல்படுத்தியது, இப்படியாக கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவினுடைய இரட்சிப்பின் நற்செய்தியானது மனுக்குலத்தினுடைய ஒவ்வொரு மூலைக்கும் படிப்படியாய்ப் பரவியது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு தோன்றியதற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருந்ததாக நீ சொல்வாயா? அந்த நேரத்தில் நீ தோமாவாகவோ அல்லது பேதுருவாகவோ இருந்திருந்தால், உன் வாழ்க்கையில் இந்த அதிக அர்த்தமுள்ள ஒரு விஷயத்தை நீ சந்தித்திருந்தால், அது உன் மேல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும்? தேவனில் விசுவாசம் கொள்ளும் உன் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் மிகப் பெரிதான தரிசனமாக இதை நீ பார்த்திருப்பாயா? நீ தேவனைப் பின்தொடர்ந்து, அவரைத் திருப்திப்படுத்தப் பாடுபட்டு, உன் வாழ்நாள் முழுவதிலும் அவரை நேசிக்க முற்படுகையில், உன்னைத் தூண்டும் சக்தியாக இதைப் பார்த்திருப்பாயா? இந்த மிகப்பெரிய தரிசனங்களைப் பரப்புவதற்கு வாழ்நாளின் பிரயாசத்தை நீ செலவு செய்திருப்பாயா? கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பைப் பரப்புவதைத் தேவனிடமிருந்து வந்த ஒரு கட்டளையாக நீ ஏற்றுக் கொண்டிருப்பாயா? நீ இதை அனுபவிக்கவில்லை என்றாலும், தோமா மற்றும் பேதுருவின் இரண்டு உதாரணங்களும், நவீன ஜனங்களுக்குத் தேவனைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள ஏற்கனவே போதுமானவையாகும். தேவன் மாம்சமான பின்பு, மனுக்குலத்தினிடையே அவர் தனிப்பட்ட முறையில் ஜீவனை அனுபவித்து மற்றும் மனித வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் அனுபவித்த பின்பு, மேலும் மனுக்குலத்தின் சீரழிவையும், அந்நேரத்தில் மனித வாழ்க்கையின் நிலைமையையும் அவர் கண்ட பின்பு, மாம்சத்தில் இருந்த தேவன் மனுக்குலமானது எவ்வளவு உதவியற்றதாகவும், துக்ககரமானதாகவும், பரிதாபகரமானதாகவும் இருக்கிறது என்பதை அதிக ஆழமாக உணர்ந்தார் என்று சொல்லலாம். மாம்சத்தில் வாழ்ந்திருக்கையில் அவர் கொண்டிருந்த மனிதத்தன்மையினாலும், அவருடைய மாம்ச உள்ளுணர்வினாலும் மனிதனுடைய நிலைமைக்கு தேவன் அதிக பச்சாதாபத்தைக் கொண்டார். இது அவரைப் பின்பற்றுபவர்களிடம் அதிக அக்கறை கொள்ள அவரை வழிநடத்தியது. இவை அநேகமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களாயிருந்தாலும், தேவனைப் பின்பற்றிய ஒவ்வொருவருக்காக அவர் மாம்சத்தில் உணர்ந்த கவலையையும், அக்கறையையும் நான் இரண்டே வார்த்தைகளான “ஆழ்ந்த அக்கறை” என்பவைகளைக் கொண்டு விவரிக்க முடியும். இந்த வார்த்தையானது மனித மொழியிலிருந்து வந்திருந்தாலும், இது மிகவும் மனிதத்தன்மையுடன் இருந்தாலும், ஆயினும் இது தேவனைப் பின்பற்றுபவர்களுக்கான தேவனுடைய உணர்ச்சிகளை உண்மையாக வெளிப்படுத்துகிறது மற்றும் விவரிக்கிறது. மனிதர்களுக்கான தேவனுடைய ஆழ்ந்த அக்கறையைப் பொறுத்தவரை, உங்கள் அனுபவங்களின் பாதையில், நீங்கள் படிப்படியாக இதை உணர்ந்து, அதனுடைய சுவையை உணர ஆரம்பிப்பீர்கள். எவ்வாறாயினும், உங்கள் சொந்த மனநிலையில் மாற்றத்தைப் பின்தொடர்வதன் அடிப்படையில், தேவனுடைய மனநிலையைப் படிப்படியாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். கர்த்தராகிய இயேசு இந்தத் தோற்றத்தை வெளிப்படுத்தியபோது, அது மனக்குலத்தில் தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையை நடைமுறைப்படுத்தவும், அவருடைய ஆவிக்குரிய சரீரத்திற்கு அல்லது நீங்கள் சொல்லலாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கு, தாண்டிப் போகவும் செய்தது. அவர் தோன்றியது ஜனங்களை மீண்டும் ஒருமுறை தேவனுடைய அக்கறையையும், பராமரிப்பையும் அனுபவிக்கவும் உணரவும் செய்தது, அதேசமயம் தேவனே ஒரு காலத்தைத் தொடங்கவும், ஒரு காலத்தைக் கட்டவிழ்க்கவும், ஒரு காலத்தை முடிக்கவும் கூடியவர் என்பதை வல்லமையாக நிரூபிக்கிறது. அவர் தோன்றியதன் மூலம் எல்லா ஜனங்களின் விசுவாசத்தையும் அவர் பெலப்படுத்தினார், மேலும் அவர் தாமே தேவன் என்ற உண்மையை உலகிற்கு நிரூபித்தார். இது அவருடைய சீஷர்களுக்கு நித்திய உறுதிப்பாட்டைக் கொடுத்தது, மேலும் அவர் தாம் தோன்றியதின் மூலம் புதிய காலத்தில் அவருடைய கிரியையின் ஒரு கட்டத்தையும் தொடங்கினார்.

13. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அப்பத்தைப் புசித்து, வேதவசனங்களை விளக்குகிறார்

லூக். 24:30-32 அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு?

14. சீஷர்கள் இயேசுவுக்குப் பொரித்த மீனைப் புசிக்கக் கொடுத்தார்கள்

லூக். 24:36-43 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து.

அடுத்து, மேலே உள்ள வேதவாக்கியங்களின் பத்திகளைப் பார்ப்போம். முதலாம் பத்தியானது, உயிர்த்தெழுந்த பிறகு கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிப்பது குறித்த ஒரு விவரத்தைத் தருகிறது மற்றும் வேதவாக்கியங்களை விவரிக்கிறது, இரண்டாம் பக்தியானது கர்த்தராகிய இயேசு பொரித்த மீனைப் புசிப்பதை விவரிக்கிறது. இந்த இரண்டு பத்திகளும் தேவனுடைய தன்மையை அறிய உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன? கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிப்பதையும், பின்னர் ஒரு பொரித்த மீனைப் புசிப்பதையும் பற்றிய இந்த விளக்கங்களிலிருந்து நீங்கள் பெறும் வரைபடத்தின் வகையை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? கர்த்தராகிய இயேசு உங்களுக்கு முன்னால் நின்று அப்பத்தைப் புசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அல்லது அவர் உங்களுடன் ஒரே மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஜனங்களுடன் மீனையும் அப்பத்தையும் புசித்துக் கொண்டிருந்தால், அந்தத் தருணத்தில் நீங்கள் எவ்விதமான உணர்வைக் கொண்டிருப்பீர்கள்? தேவன் உன்னுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்றும், உன்னுடன் நெருங்கிய உறவு கொண்டவராக நீ உணர்ந்தால், இந்த உணர்வு சரியானதாகும். இதுவே கர்த்தராகிய இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கூடியிருந்த ஜனங்களுக்கு முன்னால் அப்பத்தையும் மீனையும் புசிப்பதன் மூலம் விளைவிக்க விரும்பிய சரியான விளைவாகும். கர்த்தராகிய இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்களுடன் பேச மட்டும் செய்திருந்து, அவருடைய மாம்சத்தையும் எலும்புகளையும் அவர்கள் உணர முடியாமல், அதற்குப் பதிலாக அணுக முடியாத ஆவியானவராக அவரை உணர்ந்திருந்தால், அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க மாட்டார்களா? ஏமாற்றமாக உணர்ந்த ஜனங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்திருக்க மாட்டார்களா? தங்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையில் ஓர் இடைவெளியை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் அல்லவா? தேவனுடனான ஜனங்களுடைய உறவில் இந்த இடைவெளி எவ்வகையான எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியிருக்கும்? ஜனங்கள் நிச்சயமாக அவரிடம் நெருங்கத் துணியாதபடி பயப்பட்டிருப்பார்கள், இதனால் அவரை ஒரு மரியாதைக்குரிய தூரத்தில் வைத்திருக்கும் மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருக்கும். அப்போதிலிருந்து, அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடனான நெருங்கிய உறவைத் துண்டித்துவிட்டு, கிருபையின் காலத்திற்கு முன்பு இருந்தபடியே, பரலோகத்திலுள்ள தேவனுக்கும் ஜனங்களுக்கும் இடையிலான உறவுக்கே திரும்பி இருந்திருப்பார்கள். ஜனங்கள் தொடவோ, உணரவோ முடியாத ஆவிக்குரிய சரீரமானது தேவனுடனான அவர்களின் நெருக்கத்தை முற்றிலுமாக அழித்திருந்திருக்கும், மேலும் இது கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டதும், அவருக்கும் மனிதர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லாததுமான நெருங்கிய உறவின் இருப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்திருந்திருக்கும். ஆவிக்குரிய உடலால் ஜனங்களில் கலக்கத்தை ஏற்படுத்தின விஷயங்களாவன பயவுணர்வு, தவிர்த்தல் மற்றும் வார்த்தைகளற்ற கருத்தூன்றிய பார்வை ஆகும். அவர்கள் அவருடன் நெருங்கவோ அல்லது அவருடன் உரையாடலில் ஈடுபடவோ, அதைவிட அவரைப் பின்பற்றவோ, நம்பவோ, அவரை நோக்கிப் பார்க்கவோ கூட துணிந்திருக்க மாட்டார்கள். மனிதர்கள் தமக்காகக் கொண்டிருக்கும் இவ்வகையான உணர்வைக் காண தேவன் விரும்பவில்லை. ஜனங்கள் அவரைத் தவிர்ப்பதையோ அல்லது அவரிடமிருந்து தங்களைத் தாங்களே நீக்குவதையோ அவர் பார்க்க விரும்பவில்லை; ஜனங்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும், அவரிடம் நெருங்கி வர வேண்டும், அவருடைய குடும்பமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். உன்னுடைய சொந்தக் குடும்பம், உன்னுடைய பிள்ளைகள், உன்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ளவில்லையெனில், உன்னிடம் நெருங்கிவரத் துணியாமல் எப்பொழுதும் உன்னைத் தவிர்த்தால், நீ அவர்களுக்காக செய்த எல்லாவற்றையும் குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை உன்னால் பெற முடியாமல் போனால், அது உன்னை எவ்வாறு உணர வைக்கும்? அது வேதனையாக இருக்கும் அல்லவா? நீ மனமுடைந்து போவாய் அல்லவா? ஜனங்கள் அவரைத் தவிர்க்கும் போது தேவனும் அப்படியே தான் உணருகிறார். ஆகவே அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அப்போதும் கர்த்தராகிய இயேசு மாம்சமும் இரத்தமும் கொண்ட அவருடைய உருவத்துடன் ஜனங்களுக்குத் தரிசனமானார், அப்போதும் அவர்களுடன் புசித்துக் குடித்தார். தேவன் ஜனங்களைக் குடும்பமாக பார்க்கிறார், மேலும் மனுக்குலமும் தன்னை மிகவும் அன்புக்குரியவராகக் காண வேண்டுமென தேவன் விரும்புகிறார். இவ்வழியில் மட்டுமே தேவன் உண்மையிலேயே ஜனங்களை ஆதாயப்படுத்த முடியும், மேலும் இவ்வழியில் மட்டுமே ஜனங்கள் தேவனை உண்மையாக நேசிக்கவும், ஆராதிக்கவும் முடியும். கர்த்தராகிய இயேசு அப்பத்தைப் புசிக்கும் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு வேதவாக்கியங்களை விளக்கும் மற்றும் சீஷர்கள் அவருக்குப் பொரித்த மீனைப் புசிக்கக் கொடுக்கும் இந்த வேத வசனங்களின் இரண்டு பத்திகளைச் சுட்டிக்காட்டுவதிலுள்ள என் நோக்கத்தை இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சொன்ன மற்றும் செய்த விஷயங்களின் தொடர்களுக்குள்ளே வாஞ்சையுள்ள எண்ணம் வைக்கப்பட்டது என்று கூறலாம். இந்த விஷயங்கள் தேவன் மனுக்குலத்தின் மீது கொண்டிருந்த இரக்கமும் அன்பும் நிறைந்தவையாக இருந்தன, மேலும் அவை, அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில் மனுக்குலத்துடன் ஏற்படுத்தியிருந்த நெருக்கமான உறவிற்காக அவர் கொண்டிருந்த நேசமும், கருத்தார்ந்த அக்கறையும் நிறைந்ததாய் இருந்தன. இன்னும் அதிகமாக, அவர் மாம்சத்தில் இருந்த காலத்தில் தம்முடைய சீஷர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வாழ்ந்த வாழ்க்கைக்காக அவர் உணர்ந்த ஏக்கமும் பேராவலும் நிறைந்தவையாக இருந்தன. ஆகவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் இடைவெளியை ஜனங்கள் உணரவும் தேவன் விரும்பவில்லை, அல்லது மனிதர்கள் தேவனிடம் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. இன்னும் அதிகமாகக் கர்த்தராகிய இயேசு தன் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஜனங்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த தேவனாக இருக்கப் போவதில்லை என்றும், அவர் ஆவிக்குரிய உலகத்திற்குத் திரும்பிப்போனதால், ஜனங்கள் ஒருபோதும் காணக்கூடாத, அடையக்கூடாத பிதாவிடம் அவர் திரும்பிப்போனதால், அவர் இனி மனுக்குலத்துடன் ஒன்றாக இருக்கப் போவதில்லை என்று மனுக்குலம் நினைக்கவும் அவர் விரும்பவில்லை. தனக்கும் மனுக்குலத்திற்கும் இடையில், அந்தஸ்தில் எந்த ஒரு வித்தியாசமும் தோன்றியுள்ளதாக ஜனங்கள் நினைக்க அவர் விரும்பவில்லை. தம்மைப் பின்பற்ற விரும்பும், ஆனால் தன்னை மரியாதைக்குரிய தூரத்தில் வைத்திருக்கும் ஜனங்களை தேவன் பார்க்கும்போது அவருடைய இருதயம் வேதனை அடைகிறது, ஏனென்றால் அவர்களுடைய இருதயங்கள் அவரிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளன என்பதையும் அவர்களுடைய இருதயங்களை ஆதாயப்படுத்துவது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதையும் அது குறிக்கிறது. ஆகவே, அவர்கள் பார்க்கவோ தொடவோ முடியாத ஆவிக்குரிய உடலோடு அவர் ஜனங்களுக்குத் தரிசனமாகியிருந்தால், அது மீண்டும் மனிதனைதேவனிடமிருந்து விலக்கி இருக்கும், மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கிறிஸ்துவை ஆணவமுள்ளவராக, மனிதர்களைவிட வித்தியாசமானவராக, மேலும் மனிதர்கள் பாவம் நிறைந்தவர்களாக, அசுத்தமானவர்களாக, ஒருபோதும் தேவனிடம் நெருங்கிச் சேர முடியாதவர்களாக இருப்பதால், அவர் அதன்பின் மனிதனோடு இணைந்து புசிக்க மாட்டாத ஒருவராக மாறிவிட்டார் என்று மனுக்குலம் தவறாகப் பார்க்க வழிநடத்தியிருக்கும். மனுக்குலத்தின் இந்தத் தவறான புரிதல்களை அகற்றுவதற்காக, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்தபோது செய்த பல விஷயங்களைச் செய்தார்: “அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.” அவர் கடந்த காலங்களில் செய்ததைப் போலவே, வேதவாக்கியங்களையும் அவர்களுக்கு விளக்கினார். கர்த்தராகிய இயேசு செய்த இந்தக் காரியங்கள் அனைத்தும், அவரைப் பார்த்த ஒவ்வொரு மனிதனையும், கர்த்தர் மாறவில்லை என்றும் அவர் இன்னும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருக்கிறார் என்றும் உண்மையில் உணர வைத்தன. அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரணத்தை ருசித்திருந்தாலும், அவர் உயிர்த்தெழுந்தார், அவர் மனுக்குலத்தை விட்டுச் செல்லவில்லை. அவர் மனிதர்களிடையே இருக்கும்படியாய்த் திரும்ப வந்தார், அவரைப் பற்றிய எதுவுமே மாறவில்லை. ஜனங்கள் முன் நின்று கொண்டிருக்கும் மனுஷகுமாரன் அப்போதும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவரது நடத்தையும், ஜனங்களுடன் உரையாடும் அவருடைய முறையும் மிகப் பழக்கமானதாகவே உணரப்பட்டன. அவர் அப்போதும் அன்பான இரக்கத்தால், கிருபையால் சகிப்புத்தன்மையால் நிறைந்தவராக இருந்தார், அவர் அப்போதும் தம்மை நேசித்ததைப் போலவே மற்றவர்களை நேசித்த, மனுக்குலத்தை ஏழெழுபது முறை மன்னிக்கக் கூடிய அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். முன்பு போலவே, அவர் ஜனங்களுடன் புசித்தார், வேதவாக்கியங்களைப் பற்றி கலந்துரையாடினார், அதைவிட முக்கியமாக, முன்பு போலவே, அவர் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய், தொடவும் பார்க்கவும் கூடியவராக இருந்தார். மனுஷகுமாரன் ஜனங்கள் நெருக்கத்தை உணரவும், நிம்மதியாக உணரவும், இழந்த ஒன்றை மீண்டும் பெறுகிற மகிழ்ச்சியை உணரவும் ஜனங்களை அனுமதித்தார். மிகச் சுலபமாக அவர்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பாவங்களிலிருந்து மனுக்குலத்தை மன்னிக்கக் கூடிய மனுஷகுமாரனைச் சார்ந்து கொள்ளவும், நோக்கிப் பார்க்கவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தயக்கமின்றி ஜெபிக்க ஆரம்பித்தார்கள், அவருடைய கிருபையையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் அவரிடமிருந்து சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ளவும், அவரிடமிருந்து அக்கறையையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மேலும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் தொடங்கினார்கள்.

கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் கிரியை செய்த காலத்தில், அவருடைய சீஷர்களில் பெரும்பாலானோர், அவருடைய அடையாளத்தையும் அவர் சொன்ன விஷயங்களையும் முழுமையாகச் சரிபார்க்க முடியவில்லை. அவர் சிலுவையை நெருங்கும்போது, அவரைப் பின்பற்றுபவர்களின் மனப்பான்மையானது, கவனித்துப் பார்ப்பதாக இருந்தது. பின்னர், அவர் சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் இருந்து அவர் கல்லறைக்குள் வைக்கப்படும் நேரம் வரையிலும், அவரைக் குறித்த ஜனங்களுடைய மனப்பான்மையானது ஏமாற்றமாகவே இருந்தது. இந்தச் சமயத்தில், கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருந்த காலத்தில் சொன்ன விஷயங்களைச் சந்தேகிப்பதிலிருந்து அவற்றை முற்றிலுமாக மறுக்கும் வரையிலும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் நிலைமாற ஆரம்பித்தார்கள். பின்னர், அவர் கல்லறையிலிருந்து வெளியேறி, ஒவ்வொருக்கும் தரிசனமானபோது, அவரைத் தங்கள் சொந்தக் கண்களால் பார்த்த அல்லது அவருடைய உயிர்த்தெழுதலின் செய்தியை கேட்டவர்களில் பெரும்பாலானோர், படிப்படியாகத் தங்கள் மறுப்பின் மனப்பான்மையிலிருந்து சந்தேகம் கொள்ளும் மனநிலைக்கு மாறினர். கர்த்தராகிய இயேசு தோமாவைத் தன் விலாவில் கை வைத்துப் பார்க்க அனுமதித்த பின்பே, அவர் தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கூட்டத்திற்கு முன்பாக அப்பத்தைப் பிட்டு புசித்து, அதன்பின் அவர்களுக்கு முன்னால் பொரிக்கப்பட்ட மீனைப் புசிக்க ஆரம்பித்த பிறகே, அவர்கள் கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் இருக்கும் கிறிஸ்து என்ற உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். மாம்சம் மற்றும் இரத்தத்தினாலான இந்த ஆவிக்குரிய சரீரம் அந்த ஜனங்கள் முன்பாக நின்று, ஒவ்வொருவரையும் ஒரு கனவிலிருந்து எழுப்புவது போல் இருந்தது என்று நீங்கள் கூறலாம். அவர்களுக்கு முன்னால் நிற்கும் மனுஷகுமாரன் ஆதிகாலத்திலிருந்தே இருந்த ஒருவராவார். அவருக்கு ஒரு வடிவம், மாம்சம் மற்றும் எலும்புகள் இருந்தன, அவர் ஏற்கனவே மனுக்குலத்துடன் நீண்ட காலமாக வாழ்ந்திருந்து, புசித்திருந்தார்…. இந்த நேரத்தில், அவர் இருப்பது மிகவும் உண்மையானது என்றும், மிகவும் அற்புதமானது என்றும் ஜனங்கள் உணர்ந்தனர். அதே சமயம், அவர்கள் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து, உணர்ச்சிகளால் நிறைந்திருந்தனர். அவர் மீண்டும் தரிசனமானது, அவருடைய மனத்தாழ்மையையும், ஜனங்களுடனான அவரது நெருக்கத்தையும் தொடர்பையும் உணரவும், அவர்களைப் பற்றி அவர் எவ்வளவு நினைவாய் இருந்தார் என்பதையும் பார்க்க ஜனங்களை அனுமதித்தது. இந்தச் சிறிய மறு இணக்கமானது கர்த்தராகிய இயேசுவைக் கண்ட ஜனங்களுக்கு ஓர் ஆயுட்காலம் கடந்து விட்டதைப் போல உணர வைத்தது. அவர்களின் இழந்து போன, குழப்பமான, பயமான, பதட்டமான, ஏங்குகிற மற்றும் உணர்ச்சியற்ற இருதயங்கள் ஆறுதலடைந்தன. அவர்கள் அதன்பின் சந்தேகமாகவோ ஏமாற்றமாகவோ இருக்கவில்லை, ஏனென்றால் அப்போது நம்பிக்கையும், சார்ந்து கொள்ள ஏதோ ஒன்றும் இருக்கிறதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுக்கு முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த மனுஷகுமாரன் எல்லா நேரங்களிலும் அவர்களைக் காப்பவராக இருந்தார்; அவர் அவர்களுக்குப் பலத்த கோட்டையாகவும், நித்தியத்திற்கும் அவர்கள் புகலிடமாகவும் இருந்தார்.

கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்திருந்தாலும், அவருடைய இருதயமும், அவருடைய கிரியையும் மனுக்குலத்தை விட்டு விடவில்லை. ஜனங்களுக்குத் தோன்றுவதின் மூலம், அவர் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்களுடன் இணைசேர முடியும், அவர்களுடன் நடக்க முடியும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அவர்களோடு இருக்க முடியும் என்பதை அவர்களுக்குச் சொன்னார். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் மனுக்குலத்தின் தேவைகளைச் சந்திப்பதாகவும், அவரைப் பார்க்கவும், தொடவும் அவர்களை அனுமதிப்பதாகவும், மேலும் அவர்கள் மீண்டும் ஒருபோதும் உதவியற்றவர்களாக உணராதபடி உத்தரவாதமளிப்பதாகவும் அவர்களுக்குச் சொன்னார். தாங்கள் இந்த உலகத்தில் தனியாக வாழவில்லை என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு விரும்பினார். மனுக்குலத்திற்கு தேவனுடைய அக்கறை உண்டு; தேவன் அவர்களுடன் இருக்கிறார். அவர்கள் எப்போதும் தேவனைச் சார்ந்து கொள்ளலாம், மேலும் அவர் தம்மைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் குடும்பமாய் இருக்கிறார். சார்ந்து கொள்ள தேவன் இருக்கையில், மனுக்குலம் இனி தனிமையாகவும், உதவியற்றதாகவும் இருக்கப்போவதில்லை, மேலும் அவரைத் தங்கள் பாவநிவாரணபலியாக ஏற்றுக்கொள்பவர்கள் இனி ஒருபோதும் பாவத்தினால் கட்டுண்டிருக்க மாட்டார்கள். மனிதர்களின் பார்வையில் கர்த்தராகிய இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு செய்த கிரியையின் இந்தப் பகுதிகள் மிகச் சிறிய விஷயங்களாயிருந்தன, ஆனால் நானோ அவர் செய்த ஒவ்வொன்றையும் மிகவும் அர்த்தமுள்ளதாக, மிகவும் மதிப்புமிக்கவையாக, அதிக முக்கியத்துவமுடையதாக மற்றும் தனிச்சிறப்பு நிறைந்ததாகப் பார்க்கிறேன்.

கர்த்தராகிய இயேசுவின் மாம்சத்தில் கிரியை செய்த நேரமானது கஷ்டங்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்தபோதிலும், அவர் மாம்சம் மற்றும் இரத்தம் கொண்ட ஆவிக்குரிய சரீரத்தில் தரிசனமானதின் மூலம், அந்த காலத்திற்குரிய மனுக்குலத்தை மீட்கும் தன்னுடைய கிரியையை முழுமையாகவும் பரிபூரணமாகவும் மாம்சத்தில் நிறைவேற்றினார். அவர் மாம்சமாகிறதன் மூலம் தன்னுடைய ஊழியத்தைத் தொடங்கினார், மேலும் அவர் மனுக்குலத்திற்கு அவருடைய மாம்ச வடிவத்தில் தோன்றுவதின் மூலம் தம்முடைய ஊழியத்தை முடித்தார். அவர் கிருபையின் காலத்தை முன்னறிவித்து, கிறிஸ்து என்ற தனது அடையாளத்தின் மூலம் புதிய காலத்தைத் தொடங்கினார். கிறிஸ்து என்ற அவரது அடையாளத்தின் மூலம் அவர் கிருபையின் காலத்தில் கிரியை செய்தார், மேலும் கிருபையின் காலத்தில் தம்மைப் பின்பற்றின அனைவரையும் பெலப்படுத்தி, வழிநடத்தினார். தேவனுடைய கிரியையைப் பற்றி, அவர் தொடங்கியதை அவர் உண்மையாக நிறைவேற்றினார் என்று சொல்லலாம். அங்கே படிகளும் திட்டங்களும் உள்ளன, மேலும் அவருடைய கிரியையானது அவருடைய ஞானம், அவருடைய சர்வவல்லமை, அவருடைய அற்புதமான செயல்கள், அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தினால் நிறைந்துள்ளது. நிச்சயமாக இதனுடைய எல்லா கிரியைகளிடையே இருக்கிற முக்கிய கருத்து மனுக்குலத்திற்கான அவருடைய அக்கறையே ஆகும்; அது அவரால் எப்போதும் ஒதுக்கி வைக்க முடியாத அவரது அக்கறை உணர்வுகளால் வியாபித்துள்ளது. வேதாகமத்தின் இந்த வசனங்களில், கர்த்தராகிய இயேசு அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு செய்த ஒவ்வொரு காரியத்திலும் தேவனுடைய மாறாத நம்பிக்கையும், மனுக்குலத்திற்கான அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டன, அதேபோல் மனுக்குலத்திற்கான கருத்தார்ந்த கவனிப்பும், நேசமும் வெளிப்படுத்தப்பட்டன. இவை எதுவும் இதுவரையிலும் மாறவில்லை, இன்று வரையிலும் மாறவில்லை, உங்களால் இதைப் பார்க்க முடிகிறதா? நீங்கள் இதைப் பார்க்கும்போது உங்கள் இருதயங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே தேவனிடம் கிட்டிச் சேருகிறது அல்லவா? நீங்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்து, கர்த்தராகிய இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நீங்கள் பார்க்கும்படி உங்களுக்கு உருவமுள்ளவராகத் தரிசனமாகியிருந்திருப்பாரானால், அவர் உங்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பாரானால், அப்பத்தையும் மீனையும் புசித்து உங்களுக்கு வேத வசனங்களை விளக்கியிருந்திருப்பாரானால், உங்களிடம் பேசி இருந்திருப்பாரானால், நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்திருப்பீர்கள் அல்லவா? அல்லது குற்ற உணர்ச்சியுடன் இருந்திருப்பீர்களா? முந்தைய தவறானப் புரிதல்கள் மற்றும் தேவனைத் தவிர்த்தல், தேவனுடனான போட்டிகள் மற்றும் அவரைக் குறித்தச் சந்தேகங்கள் ஆகிய அனைத்தும் மறைந்து போயிருக்கும் அல்லவா? தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு மிக இயல்பானதாகவும், சரியானதாகவும் மாறியிருக்கும் அல்லவா?

வேதாகமத்தின் இந்த வரையறுக்கப்பட்ட அத்தியாயங்களை விளக்குவதன் மூலம் தேவனுடைய மன நிலையில் ஏதேனும் குறைபாடுகளை நீங்கள் காண்கிறீர்களா? தேவனுடைய அன்பில் ஏதேனும் கலப்படத்தை நீங்கள் காண்கிறீர்களா? தேவனுடைய சர்வவல்லமையில் அல்லது ஞானத்தில் ஏதேனும் வஞ்சகத்தையோ அல்லது தீமையையோ நீங்கள் பார்க்கிறீர்களா? நிச்சயமாக பார்க்க முடியாது! தேவன் பரிசுத்தமானவர் என்று இப்போது உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? தேவனுடைய உணர்ச்சிகளில் ஒவ்வொன்றும் அவருடைய சாராம்சம் மற்றும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடு என்று நீங்கள் உறுதியாகக் கூற முடியுமா? நீங்கள் இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு இவைகளிலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளும் புரிதலானது, உங்களுக்கு உதவும் என்றும், மனநிலையிலும் மற்றும் தேவனுக்கு பயப்படுதலிலும் நீங்கள் அடைய முயற்சிக்கும் மாற்றத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்றும் நம்புகிறேன். மேலும் அவை உங்களில் பலன் தரும் என்றும், அந்தப் பலனானது நாளுக்கு நாள் வளரும் என்றும், இதனால் இந்த முயற்சியின் செயல்பாட்டில் நீங்கள் தேவனுக்கு இன்னும் அதிக நெருக்கமாவீர்கள் என்றும் தேவன் விரும்பும் தரத்திற்கு அதிக நெருக்கமாவீர்கள் என்றும் நம்புகிறேன். சத்தியத்தைப் பின்தொடர்வதில் நீங்கள் இனி சலிப்படைய மாட்டீர்கள், மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வதையும் மற்றும் மனநிலையில் மாற்றத்தைப் பின்தொடர்வதையும் இனி தொந்தரவானதாகவோ அல்லது மிதமிஞ்சிய விஷயமாகவோ நினைக்க மாட்டீர்கள். மாறாக, தேவனுடைய உண்மையான மனநிலை மற்றும் தேவனுடைய பரிசுத்த சாராம்சத்தின் வெளிப்பாட்டினால் உந்தப்பட்டு, நீங்கள் வெளிச்சத்திற்காக ஏங்குவீர்கள், நீதிக்காக ஏங்குவீர்கள், சத்தியத்தைப் பின்தொடர, தேவசித்தத்தின் திருப்தியைப் பின்தொடர ஆசைப்படுவீர்கள், மேலும் நீங்கள் தேவனால் ஆதாயம் பண்ணப்பட்ட நபராகவும், உண்மையான நபராகவும் ஆவீர்கள்.

கிருபையின் காலத்தில் முதன்முறையாக தேவன் மனுவுருவானபோது செய்த சில காரியங்களைப் பற்றி இன்று நாம் பேசினோம். இவற்றிலிருந்து அவர் மாம்சத்தில் தெரியப்படுத்திய, வெளிப்படுத்திய மனநிலையையும், அவரிடத்தில் உள்ளவை மற்றும் அவர் யாராக இருக்கிறார் என்பதின் ஒவ்வொரு அம்சத்தையுங்கூட நாம் கண்டிருக்கிறோம். அவரிடம் உள்ள மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் அம்சங்கள் அனைத்தும் மிகவும் மனிதமயமாக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன, ஆனால் உண்மை என்னவென்றால் அவர் வெளிப்படுத்தின, தெரிவித்த அனைத்தின் சாராம்சமும் அவருடைய சொந்த மனநிலையிலிருந்து பிரிக்க முடியாததாகும். மனுவுருவான தேவனுடைய ஒவ்வொரு வழிமுறையும், ஒவ்வொரு அம்சமும் பிரிக்க முடியாத வகையில் அவருடைய சொந்தச் சாராம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே மனுவுருவின் வழியில் தேவன் மனுக்குலத்திடம் வந்தது மிக முக்கியமானதாகும். அப்படியே அவர் மாம்சத்தில் செய்த கிரியையும் முக்கியமானதாகும், ஆனால் அவர் வெளிப்படுத்திய மனநிலையும், அவர் வெளிப்படுத்திய சித்தமும் மாம்சத்தில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் சீர்கேட்டில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அதை விட முக்கியமானதாகும். இது உங்களால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாய் இருக்கிறதா? தேவனுடைய மனநிலையையும் அவரிடம் உள்ளவை மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட பிறகு, நீங்கள் தேவனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைக் குறித்து ஏதேனும் முடிவுகளை எடுத்து இருக்கிறீர்களா? இறுதியாக, இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நான் உங்களுக்கு மூன்று ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்: முதலாவது, தேவனைச் சோதிக்க வேண்டாம். தேவனைப் பற்றி நீ எவ்வளவு புரிந்து கொண்டிருந்தாலும், அவருடைய மனநிலையைப் பற்றி நீ எவ்வளவு அறிந்திருந்தாலும், அவரை நிச்சயமாகச் சோதிக்க வேண்டாம். இரண்டாவதாக, அந்தஸ்துக்காக தேவனுடன் போராட வேண்டாம். தேவன் உனக்கு எவ்வகையான அந்தஸ்தை அளிக்கிறார் என்றாலும் அல்லது எவ்வகையான கிரியையை உன்னிடம் அவர் ஒப்படைக்கிறார் என்றாலும், எவ்வகையான கடமையை நீ செய்யும்படி உன்னை உயர்த்தினாலும், நீ தேவனுக்காக எவ்வளவாக உன்னையே செலவு செய்து, அர்ப்பணித்திருந்தாலும் ஒருபோதும் அந்தஸ்துக்காக அவருடன் போராடாதே. மூன்றாவதாக, தேவனுடன் போட்டியிட வேண்டாம். உனக்கு புரிந்தாலும் அல்லது உன்னிடத்தில் தேவன் செய்வதற்கு நீ உன்னை அர்ப்பணிக்க முடிந்தாலும், அவர் உனக்காக ஏற்பாடுகள் செய்ததும், அவர் உன்னிடத்தில் கொண்டுவரும் விஷயங்களும் நிச்சயமாக தேவனுடன் போட்டியிட முடியாது. இம்மூன்று ஆலோசனைகளின்படி நீ கீழ்ப்படிய முடிந்தால், பின்பு நீ மிகவும் பாதுகாப்பாக இருப்பாய், மேலும் நீ தேவனை கோபப்படுத்த வாய்ப்பிருக்காது. இன்றைய ஐக்கியத்தை நாம் இங்கு முடித்துக்கொள்வோம்.

நவம்பர் 23, 2013

அடிக்குறிப்பு:

அ. “பட்டையை இறுக்கும் மந்திரம்” என்பது ஜர்னி டூ த வெஸ்ட் என்ற சீன நாவலில், துறவி டாங் சாங்சாங் பயன்படுத்திய ஒரு மந்திரமாகும். சன் வுகோங்கைக் கட்டுப்படுத்த அவர் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அவரின் தலையைச் சுற்றி ஓர் உலோகப் பட்டையை இறுக்கி, அவருக்குக் கடுமையான தலைவலியைக் கொடுத்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒரு நபரைப் பிணைக்கும் ஒன்றை விவரிக்க இது ஓர் உருவகமாக மாறிவிட்டது.

முந்தைய: தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II

அடுத்த: தேவனே தனித்துவமானவர் I

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக