தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்

இந்த உலகில் நீ அழுதுகொண்டே பிறந்த கணம் முதல் நீ உனது கடமையை நிறைவேற்றத் தொடங்குகிறாய். தேவனுடைய திட்டத்திற்காகவும், அவருடைய முன்குறித்தலுக்காகவும், உனது கடைமையைச் செய்கிறாய் மற்றும் உன்னுடைய ஜீவிதப் பயணத்தை நீ தொடங்குகின்றாய். உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், ஒருவராலும் பரலோகத்தின் திட்டங்களிலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. ஒருவராலும் தங்கள் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளுகிறவராகிய தேவன் மட்டுமே இத்தகைய கிரியையைச் செய்ய வல்லவராயிருக்கிறார். மனிதன் தோன்றிய நாள் முதல், தேவன் எப்பொழுதும் இவ்வாறு கிரியை செய்து, பிரபஞ்சத்தை நிர்வகித்து, எல்லாவற்றிற்குமான மாற்ற விதிகளையும் அவற்றின் இயக்கத்தின் பாதையையும் கட்டளையிட்டு வருகிறார். எல்லாவற்றையும் போலவே, மனிதன் அமைதியாகவும் அறியாமலும் தேவனிடமிருந்து வரும் மதுரத்தாலும், மழையாலும் மற்றும் பனித்துளியாலும் போஷிக்கப்படுகிறான்; எல்லாவற்றையும் போலவே தேவனுடைய கரத்திலுள்ள திட்டத்தின்படி அவனை அறியாமலேயே ஜீவிக்கிறான். மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்.

இரவு அமைதியாக நெருங்கும்போது, மனிதன் அதை அறியாதிருக்கிறான், ஏனெனில், இரவு எப்படி நெருங்குகிறது, எங்கிருந்து வருகிறது என்பதை மனிதனுடைய இருதயத்தால் அறிந்துகொள்ள முடியாது. இரவு அமைதியாக மறையும்போது, மனிதன் பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறான். ஆனால் வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்பதையும், அது இரவின் இருளை எவ்வாறு விரட்டியது என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். பகல் மற்றும் இரவின் இந்த தொடர்ச்சியான மாற்றங்கள் மனிதனை ஒரு காலக் கட்டத்திலிருந்து இன்னொரு காலக் கட்டத்திற்கு, ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து அடுத்த வரலாற்றுச் சூழலுக்கு அழைத்துச் செல்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவனுடைய கிரியை மற்றும் ஒவ்வொரு காலத்துக்குமான அவருடைய திட்டம் மேற்கொள்ளப்படுவதை இந்த மாற்றங்கள் உறுதி செய்கின்றன. இந்தக் காலகட்டங்களில் மனிதன் தேவனோடு சேர்ந்து நடந்து வந்திருக்கிறான், ஆனாலும் தேவன் எல்லா பொருட்களின் மற்றும் உயிரினங்களின் தலைவிதியை ஆளுகிறார் என்பதையும், எல்லாவற்றையும் தேவன் எவ்வாறு திட்டமிடுகிறார், வழிநடத்துகிறார் என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். இது மனிதனை ஆதிகாலம் முதல் இன்று வரை தவிர்த்திருக்கிறது. ஏனெனில், தேவனுடைய செயல்கள் மறைக்கப்பட்டிருப்பதாலோ அல்லது அவருடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததாலோ அல்ல, மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனிடமிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், தேவனைப் பின்தொடர்ந்தபோதும் சாத்தானுக்கு ஊழியம் செய்வதிலேயே மனிதன் இருக்கின்றான்—அதை இன்னும் அறியாமல் இருக்கின்றான். தேவனுடைய அடிச்சுவடுகளையும் தோற்றத்தையும் ஒருவரும் தீவிரமாக நாடுவதில்லை; மேலும், தேவனுடைய பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கவும் ஒருவரும் தயாராக இல்லை. மாறாக, இந்த உலகத்திற்கும் துன்மார்க்கமான மனிதகுலம் பின்பற்றும் வாழ்க்கை விதிகளுக்கும் ஏற்ப, பொல்லாங்கனான சாத்தானின் சீர்கேட்டைச் சார்ந்திருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில், மனிதனுடைய இருதயமும் ஆவியும் சாத்தானுக்கு காணிக்கையாகவும் உணவுப்பொருளாகவும் மாறிவிட்டன. மேலும், மனித இருதயமும் ஆவியும் சாத்தான் வசிக்கக்கூடிய இடமாகவும் அதன் பொருத்தமான விளையாட்டு மைதானமாகவும் மாறிவிட்டன. இவ்வாறாக, மனிதன் அறியாமலேயே மனிதனாக இருப்பதற்கான நியமங்களையும் மனித இருப்புக்கான மதிப்பு மற்றும் அதன் பொருளைப் பற்றிய தனது புரிதலையும் இழக்கிறான். படிப்படியாக, மனிதனுடைய இருதயத்திலிருந்து தேவனுடைய பிராமணங்களும், தேவனுக்கும் மனிதனுக்குமான உடன்படிக்கையும் மங்கிவிடுகிறது மற்றும் அவன் தேவனைத் தேடுவதையும் தேவனிடம் கவனம் செலுத்துவதையும் நிறுத்துகிறான். காலப்போக்கில், தேவன் ஏன் தன்னை சிருஷ்டித்தார் என்று மனிதன் புரிந்துகொள்வதே இல்லை, தேவனுடைய வாயின் வார்த்தைகளையும் தேவனிடமிருந்து வரும் எதையும் மனிதன் புரிந்துகொள்வதில்லை. அதன் பின், தேவனுடைய விதிகளையும் ஆணைகளையும் மனிதன் எதிர்க்கத் தொடங்குகிறான். அதனால் அவனுடைய இருதயமும் ஆவியும் அழிந்து போகின்றன. தேவன் தாம் முதலில் சிருஷ்டித்த மனிதனை இழக்கிறார். மனிதன் தான் ஆதியில் கொண்டிருந்த வேரை இழக்கிறான். இதுவே மனித இனத்தின் துக்கமாயிருக்கிறது. உண்மையில், ஆதிகாலம் முதல் இப்போது வரை, தேவன் மனிதகுலத்திற்கு ஒரு சோக நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். அதில் கதாநாயகனும் மனிதனே பாதிக்கப்பட்டவனும் மனிதனே. எனினும், இந்த சோக நாடகத்தின் இயக்குனர் யார் என்று ஒருவராலும் கூற இயலாது.

இந்தப் பரந்த உலகில், மீண்டும் மீண்டும் பெருங்கடல்கள் நிலங்களுக்குள் பாய்கின்றன. நிலங்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சர்வத்தையும் ஆளுகிறவராகிய அவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்யவோ ஆயத்தங்களைச் செய்யவோ வலிமைமிக்க ஒருவரும் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியுள்ள சென்றுசேருமிடத்திற்கு வழிநடத்தக்கூடிய மற்றும் பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேடுகிற அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாரும் சிந்தித்ததில்லை. இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணர்வதில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடுவதில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் பராமரிப்பையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் ஆகும். தேவனுடைய திட்டம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களும் அறிவுரைகளும் திருப்பி செலுத்தப்படவில்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னெப்போதும் நிழ்ந்திராததாகும். அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. ஏனென்றால் தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே சிருஷ்டிப்பதும் ஒரு முறை மட்டுமே இரட்சிப்பதும் ஆகும். இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார். மனித ஜீவிதத்தின் தோற்றம் மற்றும் தொடர்ச்சியை ஆளும் இரகசியங்களை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இவை அனைத்தையும் புரிந்துகொண்ட ஒரே ஒருவரான தேவன், தம்மிடமிருந்து எல்லாவற்றையும் பெற்ற பின்னரும் நன்றியற்று காணப்படும் மனிதன் அவருக்குக் கொடுக்கும் காயங்களையும் அடிகளையும் மௌனமாக சகித்துக்கொள்கிறார். ஜீவிதம் தரும் அனைத்தையும் மனிதன் நிச்சயமாகவே அனுபவிக்கிறான். அதைப் போலவே, இது தேவன் மனிதனால் காட்டிக் கொடுக்கப்படுகிறார், மனிதனால் மறக்கப்படுகிறார் மற்றும் மனிதனால் பலவந்தம் பண்ணப்படுகிறார் என்பதன் விளைவாகும். தேவனுடைய திட்டம் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததா? தேவனுடைய கரத்திலிருந்து வந்த சிருஷ்டியான மனிதன் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவனா? தேவனுடைய திட்டம் நிச்சயமாகவே முக்கியத்துவம் வாய்ந்தது தான்; எனினும், அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜீவன் அவருடைய திட்டத்துக்காகவே உள்ளது. எனவே, மனித இனத்தின் மீதான வெறுப்பால் தேவன் தமது திட்டத்தை வீணடிக்க முடியாது. அவருடைய திட்டத்திற்காகவும் தாம் கொடுத்த சுவாசத்திற்காகவும் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார். இது மனிதனுடைய மாம்சத்திற்காக அல்ல, அவனுடைய ஜீவனுக்காகவே ஆகும். மனிதனுடைய மாம்சத்தையல்ல, தாம் சுவாசமாக ஊதிய ஜீவனை திரும்பப் பெறுவதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார். இது அவருடைய திட்டமாகும்.

இந்த உலகத்திற்கு வருகின்ற அனைவரும் வாழ்க்கையையும் மரணத்தையும் கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியைக் கடந்து சென்றிருக்கிறார்கள். உயிரோடிருப்பவர்கள் விரைவில் மரித்துபோவார்கள். மரித்தவர்கள் விரைவில் உயிர்த்தெழுவார்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவன் ஏற்பாடு செய்துள்ள வாழ்க்கைமுறை ஆகும். எனினும், இந்தப் போக்கையும் இந்த சுழற்சியையும் மனிதன் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதே தேவன் விரும்பும் சத்தியமாகும். தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவன் வரம்பற்றது, பொருள், நேரம், இடம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட முடியாதது. தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஜீவனின் இரகசியமும், ஜீவனானது அவரிடமிருந்து வந்தது என்பதற்கான சான்றும் இதுவே. ஜீவனானது தேவனிடமிருந்து வந்தது என்பதைப் பலர் விசுவாசிக்கவில்லை என்றாலும், அவர் இருப்பதை அவர்கள் நம்பினாலும் அல்லது மறுத்தாலும், தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் மனிதன் தவிர்க்க இயலாமல் அனுபவிக்கிறான். ஒரு நாள் திடீரென்று மனம்மாறி, உலகில் உள்ள அனைத்தையும் மீட்டெடுக்கவும், தேவன் தாம் கொடுத்த ஜீவனைத் திரும்பப் பெறவும் விரும்பினால், ஒன்றும் மீந்திராது. தேவன் தம்முடைய ஜீவனைக்கொண்டு உயிருள்ள ஜீவன்களுக்கும் உயிரற்ற பொருட்களுக்கும் அனைத்தையும் வழங்குகிறார். தம் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அனைத்தையும் நன்கு ஒழுங்குபடுத்துகிறார். இது யாராலும் சிந்தித்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத உண்மையாகும். இந்தப் புரிந்துகொள்ள முடியாத உண்மைகள் தேவனுடைய ஜீவ வல்லமையின் வெளிப்பாடாகவும் சான்றாகவும் இருக்கின்றன. இப்போது உனக்கு ஒரு இரகசியத்தை நான் சொல்கிறேன்: தேவனுடைய ஜீவனின் மகத்துவத்தையும் அவரது ஜீவனின் வல்லமையையும் எந்த சிருஷ்டிக்கும் புரிந்துகொள்ள முடியாததாகும். கடந்த காலத்தைப் போலவே இது இப்போது உள்ளது, வரவிருக்கும் காலத்திலும் அப்படியே இருக்கும். நான் சொல்லும் இரண்டாவது இரகசியம் இதுதான்: சிருஷ்க்கப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் வடிவமும் உருவமும் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அவர்களுடைய ஜீவனின் ஆதாரமானது தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது. எப்படிப்பட்ட ஜீவனாக நீ இருந்தாலும் தேவன் நிர்ணயித்த ஜீவிதப் பாதைக்கு எதிராக உன்னால் திரும்ப முடியாது. எப்படியாயினும், மனிதன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய பராமரிப்பும், பாதுகாப்பும், ஏற்பாடும் இல்லாமல், மனிதன் எவ்வளவு விடாமுயற்சியுடன் செயல்பட்டாலும் கடினமாகப் போராடினாலும் அவன் பெற வேண்டிய அனைத்தையும் பெற முடியாது. தேவனிடமிருந்து ஜீவன் வழங்கப்படாமல், வாழ்க்கையினை வாழ்வதில் உள்ள மதிப்பையும் அர்த்தத்தையும் மனிதன் இழக்கிறான். தனது ஜீவனின் மதிப்பை அற்பமாக வீணடிக்கும் மனிதனை, இவ்வளவு கவலையற்றவனாக இருக்க தேவனால் எப்படி அனுமதிக்க முடியும்? நான் முன்பு கூறியது போல: தேவன் உன்னுடைய ஜீவனின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. தேவன் கொடுத்த அனைத்தையும் மனிதன் மதிக்கத் தவறினால், முன்பு தாம் கொடுத்ததை தேவன் திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், அவர் கொடுத்த அனைத்திற்குமான விலையை மனிதனை இரண்டு மடங்காக திரும்பச் செலுத்த வைப்பார்.

மே 26, 2003

முந்தைய: உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

அடுத்த: சர்வவல்லவரின் பெருமூச்சு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக