தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 71

பிப்ரவரி 4, 2023

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைத் தேடுகிறீர்களா? தேவன் தோன்றுதலுக்காக எப்படி ஏங்க வேண்டும்! தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம்! இது போன்ற ஒரு காலத்தில், இது போன்ற உலகில், தேவன் தோன்றும் நாளைக் காண நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனின் அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் தோன்ற வேண்டுமென்று காத்திருக்கும் அனைவருமே இந்த வகையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இது குறித்து யோசனை செய்திருப்பீர்கள்—ஆனால் இதன் விளைவு என்ன? தேவன் எங்கு தோன்றுகிறார்? தேவனின் அடிச்சுவடுகள் எங்கே? உங்களுக்கு பதில் கிடைத்ததா? பலர் இவ்வாறு பதிலளிப்பார்கள்: "தேவன் அவரைப் பின்பற்றுபவர்களிடையே தோன்றுகிறார், அவருடைய அடிச்சுவடுகள் நம் மத்தியில் உள்ளன; இது அவ்வளவு எளிதானது!" யார் வேண்டுமானாலும் ஒரு வழக்கமான பதிலை வழங்கலாம், ஆனால் தேவன் தோன்றுதல் அல்லது அவருடைய அடிச்சுவடுகள் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தோன்றுதல் என்பது அவர் தமது கிரியையை நேரடியாகச் செய்ய பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. அவருடைய சொந்த அடையாளத்துடனும், மனநிலையுடனும், மற்றும் இயல்பான உள்ளார்ந்த விதத்திலும் ஒரு காலத்தைத் தொடங்குவதற்கும், ஒரு காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கிரியையைச் செய்ய அவர் மனிதர்கள் மத்தியில் இறங்கி வருகிறார். இந்த வகையான தோன்றுதல் என்பது ஒரு வகை சடங்கு அல்ல. இது ஒரு அடையாளமோ, படமோ, அதிசயமோ அல்லது ஒருவிதமான பிரமாண்டமான காட்சியோ அல்ல, அதிலும், இது ஒரு வகை மதம்சார்ந்த சம்பிரதாயமும் அல்ல. இது யாராலும் தொடவும், பார்க்கவும் முடிகின்ற ஒரு நிஜமான, நிச்சயமான உண்மையாகும். இந்த வகையான தோன்றுதல் ஏதோ ஒன்று இயங்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது எந்தவொரு குறுகிய கால பொறுப்பினை நிறைவேற்றவோ நடைபெறுவது அல்ல; மாறாக, அவருடைய நிர்வாகத் திட்டத்தில் கிரியையின் ஒரு கட்டமாகும். தேவனின் தோன்றுதல் எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் அவருடைய நிர்வாகத் திட்டத்துடன் எப்போதும் கொஞ்சம் தொடர்பைக் கொண்டிருக்கும். இங்கே தோன்றுதல் என்று அழைக்கப்படுவது, தேவன் மனிதனை வழிநடத்தும், அழைத்துச் செல்லும், அறிவூட்டும் "தோன்றுதல்" வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஒவ்வொரு முறையும் தம்மை வெளிப்படுத்தும்போது தேவன் தமது மகத்தான கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்தக் கிரியை வேறு எந்த காலத்திலிருந்தும் வேறுபட்டதாகும். இது மனிதனால் கற்பனை செய்ய முடியாதது, மேலும் மனிதனால் ஒருபோதும் அனுபவிக்கப்பட்டிராதது. இது ஒரு புதிய காலத்தைத் தொடங்கி பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையாகும். மேலும், இது மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான புதிய மற்றும் மேம்பட்ட வடிவிலான கிரியையாகும்; அது மட்டுமல்ல, இது மனிதகுலத்தைப் புதிய காலத்திற்குக் கொண்டுச் செல்லும் கிரியையாகும். தேவனின் தோன்றுதல் இதைத்தான் குறிக்கிறது.

தேவன் தோன்றுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், தேவனின் அடிச்சுவடுகளை எவ்வாறு நாட வேண்டும்? இந்தக் கேள்வியை விளக்குவது கடினம் அல்ல: தேவன் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைக் காண்பீர்கள். அத்தகைய விளக்கம் புரிந்துகொள்ள எளிதானதாகத் தோன்றினாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல, ஏனென்றால் தேவன் எங்கு தோன்றுவார் என்பது பலருக்குத் தெரிவதில்லை, அதிலும் அவர் எங்கு தோன்ற விரும்புகிறார், அவர் எங்கு தோன்ற வேண்டுமென்பது தெரிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் எங்கெல்லாம் கிரியையைச் செய்கிறாரோ, அங்கே தேவன் தோன்றுகிறார் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு நம்புகிறார்கள். இல்லையெனில் ஆவிக்குரிய நபர்கள் எங்கிருந்தாலும் அங்கே தேவன் தோன்றுகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லையென்றால் உயர்ந்த புகழ் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அங்கே தோன்றுகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு, இதுபோன்ற நம்பிக்கைகள் சரியானவையா, தவறானவையா என்று பார்ப்பதைத் தள்ளிவைப்போம். அத்தகைய கேள்வியை விளக்க, நாம் முதலில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்: நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம். நாம் ஆவிக்குரிய நபர்களைத் தேடவில்லை, அதிலும் நாம் புகழ்பெற்ற நபர்களைப் பின்தொடரவில்லை; நாம் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறோம். இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய சொற்கள் ஆகியவற்றைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுகிறார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுவதில், நீங்கள் "தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்" என்கிற வார்த்தைகளை உதாசீனம் செய்திருக்கிறீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தமது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தமது சொந்த குறிக்கோள்களையும் தமது சொந்த வழிமுறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடைய மனநிலையாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துக்களுக்குள் அடக்கி வைக்கவும் கூடாது. அதற்குப் பதிலாக, நீங்கள் தேவனின் அடிச்சுவடுகளை எவ்வாறு தேட வேண்டும், நீங்கள் தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீங்கள் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் உங்களிடமே கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். மனிதன் சத்தியம் அல்ல என்பதாலும், சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க