நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை

இஸ்ரவேலர்களுக்காக யேகோவா நடத்திய கிரியை தேவனின் தோற்றத்துக்கான பூமிக்குரிய இடத்தை மனிதகுலத்தின் மத்தியில் உருவாக்கியது. இதுவே அவர் இருக்கும் பரிசுத்தத் தலமாகவும் இருந்தது. அவர் தமது கிரியைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்காக மட்டுமே வரையறுத்துக்கொண்டார். முதலில், அவர் இஸ்ரவேலுக்கு வெளியில் கிரியை நடத்தவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தமது கிரியையின் செயற்பரப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமானது என அவர் கண்ட மக்களைத் தெரிந்தெடுத்தார். இஸ்ரவேல்தான் தேவன் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கிய இடம். மேலும் அந்த இடத்தின் தூசியில் இருந்து யெகோவா மனிதனை உண்டாக்கினார். இந்த இடமே உலகில் அவருடைய கிரியைகளுக்கான அடித்தளம் ஆயிற்று. நோவாவின் சந்ததிகள் மட்டுமல்லாமல் ஆதாமின் சந்ததிகளுமான இஸ்ரவேலர்களே, உலகில் யெகோவாவின் கிரியைக்கான மானிட அஸ்திபாரமாக இருந்தனர்.

இந்தக் கால கட்டத்தில், இஸ்ரவேலில் யெகோவா நடத்திய கிரியையின் முக்கியத்துவம், நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் முழு உலகத்திலும் அவருடைய கிரியையைத் தொடங்குவதற்கானதாகவே இருந்தன. அவை, இஸ்ரவேலை மையமாகக் கொண்டு, படிப்படியாக புறஜாதியார் தேசங்களுக்குள் பரவின. ஒரு மாதிரியை உருவாக்க பிரபஞ்சம் முழுவதிலும் அவர் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கிரியை செய்கிறார். அதற்காக உலகங்கள் எங்கும் உள்ள மக்கள் தமது சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை அதை விரிவாக்குகிறார். ஆதி இஸ்ரவேலர்கள் நோவாவின் சந்ததியார் ஆவர். இந்த மக்கள் யெகோவாவின் ஜீவசுவாசத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் போதுமான அளவுக்குப் பேணுவதைப் புரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் யெகோவோ எப்படிப்பட்ட தேவனாய் இருக்கிறார் என்றோ, அல்லது மனிதனுக்கான அவருடைய சித்தத்தையோ, அதைவிட மேலாக எல்லாவற்றையும் உருவாக்கிய கர்த்தரை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. கீழ்ப்படிய வேண்டிய[அ] நியமங்கள் மற்றும் பிரமாணங்கள் இருக்கின்றனவா என்பது பற்றிய, சிருஷ்டிகருக்கு சிருஷ்டிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய கடமைகள் போன்றவற்றைப் பற்றிய விஷயங்கள் எதையும் ஆதாமின் சந்ததியார் அறிந்திருக்கவில்லை. கணவன் வியர்வை சிந்தி உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் மற்றும் மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் மேலும் யேகோவா படைத்த மனித குலத்தை நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பவையே அவர்கள் அறிந்தவை எல்லாம். வேறு வகையாகக் கூறுவது என்றால், யேகோவா ஜீவசுவாசத்தையும் அவரது ஜீவனையும் மட்டுமே பெற்றிருந்த இத்தகைய மக்கள், தேவனின் பிரமாணத்தை எவ்வாறு பின்பற்றுவது அல்லது எல்லாவற்றையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தரை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மிகக் குறைவாகவே புரிந்துகொண்டார்கள். ஆகவே, அவர்களின் இருதயத்தில் நேர்மையற்றவையும் வஞ்சகமும் ஒன்றும் இல்லை என்றாலும், பொறாமையும் பூசல்களும் அவர்களிடையே அரிதாகவே எழுந்தபோதிலும், சிருஷ்டி அனைத்துக்கும் கர்த்தரான யேகோவாவைப் பற்றிய அறிவோ அல்லது புரிதலோ அவர்களுக்கு இல்லை. மனிதனின் இந்த மூதாதையர்கள் யேகோவாவின் பொருட்களை உண்பதற்கும், யேகோவாவின் பொருட்களை அனுபவித்து மகிழ்வதற்கும் மட்டுமே அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யேகோவாவை வணங்க அறிந்திருக்கவில்லை; தாங்கள் முழங்கால் மடக்கி தொழுதுகொள்ள வேண்டியவர் யேகோவா மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியாது. ஆக அவர்களை அவருடைய சிருஷ்டிகள் என்று எவ்வாறு அழைக்கமுடியும்? இது இவ்வாறு இருந்தால், “யேகோவாவே எல்லா சிருஷ்டிகளுக்கும் கர்த்தரானவர்” மற்றும் “அவரை வெளிப்படுத்தவும், அவரை மகிமைப்படுத்தவும் மேலும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் மனிதனைப் படைத்தார்” என்ற வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டவைகள் என்று ஆகிவிடும் அல்லவா? யேகோவாவின் மேல் பக்தி அற்ற மக்கள் அவருடைய மகிமைக்கு எவ்வாறு சாட்சியாக விளங்க முடியும்? எவ்வாறு அவர்கள் அவருடைய மகிமையின் வெளிப்பாடாக மாறமுடியும்? “நான் மனிதனை என்னுடைய சாயலில் சிருஷ்டித்தேன்” என்ற யேகோவாவின் வார்த்தைகள் பொல்லாங்கனான சாத்தானின் கைகளில் ஒரு ஆயுதமாக மாறிவிடக் கூடுமல்லவா? யேகோவாவின் மனித சிருஷ்டிப்பை கீழ்மைப்படுத்தும் ஓர் அடையாளமாக இந்த வார்த்தைகள் மாற்றிவிடும் அல்லவா? கிரியையின் இந்தக் கட்டத்தை நிறைவுசெய்வதற்காக, மனித குலத்தைச் சிருஷ்டித்த பின், ஆதாமில் இருந்து நோவா வரை யேகோவா அவர்களுக்கு அறிவுறுத்தவோ அல்லது வழிகாட்டவோவில்லை. மாறாக, உலகத்தை வெள்ளம் அழிக்கும் வரை, நோவாவின் மற்றும் ஆதாமின் சந்ததியாரான இஸ்ரவேலரை அவர் முறையாக வழிநடத்தத் தொடங்கவில்லை. இஸ்ரவேல் தேசம் எங்கும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது அவரது கிரியையும் வார்த்தைகளும் இஸ்ரவேலில் அவர்களுக்கு வழிகாட்டுதலை அளித்தன. இதன் மூலம், யேகோவா, தம்மிடம் இருந்து ஜீவனைப் பெற்று தூசியில் இருந்து சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக எழுவதற்காக மனிதனுக்குள் ஜீவசுவாசத்தை ஊத வல்லவர் என்பது மட்டுமல்லாமல், அவரால் மனித குலத்தை அழித்தொழிக்கவும், மனிதகுலத்தைச் சபிக்கவும், மற்றும் தமது கோலால் மனிதகுலத்தை ஆளுகை செய்யவும் முடியும் என்பதை மனிதகுலத்திற்குக் காட்டுகிறார். ஆக, மனிதனின் வாழ்க்கையை உலகில் வழிநடத்தவும், இரவும் பகலும் நாட்களின் நேரங்களின் படி மனிதகுலத்தின் மத்தியில் பேசவும் கிரியை செய்யவும் யேகோவாவால் முடியும் என்பதையும் அவர்கள் கண்டார்கள். அவரால் எடுக்கப்பட்ட தூசியில் இருந்து மனிதன் வந்தான் என்றும் மனிதன் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்றும் அவரது சிருஷ்டிகள் அறிந்துகொள்ளவே அவர் கிரியை செய்தார். இது மட்டுமல்லாமல், ஏனைய மக்களும் தேசங்களும் (உண்மையில் இவர்களும் இஸ்ரவேலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இஸ்ரவேலில் இருந்து பிரிந்து சென்றவர்கள், இருப்பினும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரே) இஸ்ரவேலில் இருந்து யேகோவாவின் சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்டு அதன்மூலம் பிரபஞ்சத்தில் உள்ள சிருஷ்டிக்கப்பட்ட யாவரும் யேகோவாவை வணங்கி அவரை உயர்ந்தவர் என்று போற்றுவதற்காகவே அவர் முதன்முதலில் இஸ்ரவேலில் கிரியைகளை நடப்பித்தார். யேகோவா தம் கிரியையை இஸ்ரவேலில் தொடங்காமல், மாறாக, மனிதகுலத்தைப் படைத்து, உலகில் அவர்கள் ஒரு கவலையற்ற வாழ்க்கையை வாழ அனுமதித்திருந்தால், அந்த நிலையில், மனிதனின் உடல் இயல்பின் காரணமாக (இயல்பு என்றால் மனிதன் அவனால் பார்க்க முடியாத விஷயங்களை ஒருபோதும் அறியமுடியாத நிலை, அதாவது யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அதைவிட அவர் அப்படி ஏன் செய்தார் என்பதையும் அவனால் அறிய முடியாது), யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அல்லது அவரே எல்லா சிருஷ்டிப்புக்கும் கர்த்தர் என்பதையும் அவன் ஒருபோதும் அறிய மாட்டான். யேகோவா மனிதனைப் படைத்து உலகில் வைத்து, மனிதகுலத்தின் மத்தியில் இருந்து ஒரு கால கட்டத்திற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்காமல் தமது கரங்களில் இருந்த தூசியை அப்படியே தட்டிவிட்டு சென்றிருந்தால், மனிதகுலம் ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப் போயிருக்கும்; அவரது சிருஷ்டிப்பான வானமும் பூமியும் எண்ணற்ற பொருட்களும், மனிதகுலம் யாவும், ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப்போனதோடு சாத்தானால் மிதித்து நசுக்கப்பட்டுப் போயிருக்கும். இவ்விதம், “உலகத்தில், அதாவது, தமது சிருஷ்டிப்பின் மத்தியில், நிற்க ஒரு பரிசுத்தமான இடம் வேண்டும்” என்ற யேகோவாவின் விருப்பம் சிதைந்து போயிருக்கும். ஆகவே, மனிதகுலத்தைச் சிருஷ்டித்தப் பின்னர், அவர்களின் நடுவில் இருந்து வாழ்க்கையில் அவர்களை வழிகாட்டவும், அவர்களின் நடுவில் இருந்து அவர்களோடு பேசவும் அவரால் முடிந்தது—இவை எல்லாம் அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் அவருடைய திட்டங்களை அடைவதற்குமாகவே. அவர் இஸ்ரவேலில் செய்த கிரியையானது எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு முன்னர் அவர் வகுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே. ஆகவே அவர் முதலில் இஸ்ரவேலர்களின் மத்தியில் செய்த கிரியையும், எல்லாவற்றையும் அவர் சிருஷ்டித்ததும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. ஆனால் அவை அவரது நிர்வாகம், அவரது கிரியை, மற்றும் அவரது மகிமைக்காகவும் மனிதகுலத்தை அவர் படைத்ததின் அர்த்தத்தை ஆழப்படுத்துவதுமாகிய இரண்டிற்குமாகும். நோவாவிற்குப் பின்னர் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகத்தில் மனிதகுலத்தின் வாழ்வை வழிநடத்தினார். இக்காலத்தில் அவர் மனிதகுலத்திற்கு, சிருஷ்டிகர்த்தராகிய யேகோவாவை எவ்வாறு வணங்குவது, எவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவது, மேலும் எவ்வாறு தொடர்ந்து வாழ்வது, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, யேகோவாவுக்கு எவ்வாறு ஒரு சாட்சியாக செயலாற்றுவது, அவருக்குக் கீழ்ப்படிவது மற்றும் அவரை வணங்குவது மட்டுமல்லாமல் தாவீதும் அவனது ஆசாரியர்களும் செய்தது போல அவரை இசையோடு துதிப்பதற்கும்கூட அவர் கற்பித்தார்.

யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் வரை, ஏறக்குறைய மனிதகுலம் அனைத்தும் சீர்கேட்டுக்குள் விழுந்து, அவர்கள் ஒழுக்கமின்மை மற்றும் உலக அசுத்தங்களின் ஆழத்தை அடைந்திருந்தார்கள். அதனால் அவர்கள் இருதயங்களில் யேகோவா முற்றிலுமாக இல்லை, மேலும் அவரது வழிகளில் அவர்கள் நடக்கவில்லை. யேகோவா ஆற்றப்போகும் கிரியையை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை; காரணகாரிய அறிவு அவர்களுக்குக் குறைவுபட்டது, அறிவும்கூட குறைவாகவே இருந்தது, மேலும், சுவாசிக்கும் இயந்திரங்கள் போல, அவர்கள் மனிதன், தேவன், உலகம், வாழ்க்கை மற்றும் அது போன்றவற்றைப் பற்றி அறியாமை கொண்டவர்களாக இருந்தார்கள். உலகில், சர்ப்பத்தைப் போல பல தீய கவர்ச்சிகளில் மூழ்கி இருந்தார்கள். யேகோவாவுக்கு எதிரான பல விஷயங்களைக் கூறினார்கள். ஆனால் அவர்கள் அறியாமையில் மூழ்கி இருந்ததால், யேகோவா அவர்களைச் சிட்சிக்கவோ தண்டித்துத் திருத்தவோவில்லை. வெள்ளத்துக்குப் பின்னர்தான், நோவாவின் 601 வது வயதில், யேகோவா முறையாக நோவாவுக்கு முன் தோன்றி அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் வழிகாட்டி, நோவாவுடனும் அவனது சந்ததியாருடனும் வெள்ளத்துக்குத் தப்பிப்பிழைத்த பறவைகளையும், மிருகங்களையும், மொத்தம் 2,500 ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாணத்தின் காலத்தின் முடிவு வரை வழிநடத்தினார். அவர் இஸ்ரவேலில் மொத்தம் 2,000 ஆண்டுகள் கிரியை நடத்தினார், அதாவது முறையாகக் கிரியை செய்தார். மேலும் அதே நேரத்தில் இஸ்ரவேலிலும் அதற்கு வெளியிலும் 500 ஆண்டுகளாகக் கிரியை செய்தார். மொத்தம் இவை 2,500 ஆண்டுகள் ஆகும். இந்தக் காலகட்டத்தில், யேகோவாவைச் சேவிக்க, அவர்கள் ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்றும், ஆசாரியருக்கு உரிய உடைகளைத் தரிக்க வேண்டும் என்றும், அதிகாலையில் வெறுங்காலுடன் ஆலயத்துக்குள் நடக்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்களின் காலணிகள் ஆலயத்தைக் கெடுக்கும் மேலும் ஆலயத்தின் உச்சியில் இருந்து கீழே அக்கினி அனுப்பப்பட்டு அது அவர்களை எரித்துக் கொன்றுவிடும் என்றும் அவர் இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றி யேகோவாவின் திட்டங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். ஆலயத்தில் அவர்கள் யேகோவாவினிடத்தில் ஜெபித்தனர், மற்றும் யேகோவாவின் வெளிப்பாட்டைப் பெற்றபின், அதாவது யேகோவா பேசிய பின்னர், அவர்கள் திரளான மக்களை வழிநடத்தி, அவர்கள் தங்கள் தேவனான யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்ட வேண்டும் என்று போதித்தனர். அவர்கள் ஓர் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டவேண்டும் என்றும் மேலும் யேகோவாவினால் குறிக்கப்பட்ட காலத்தில், அதாவது பஸ்காவின் போது, தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தங்கள் இருதயங்களில் யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்டுவதற்காகவும், அவர்கள் இளங்கன்றுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் யேகோவாவைச் சேவிப்பதற்கு பலியாகப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் யேகோவா அவர்களிடம் கூறினார். இந்தப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவது யேகோவாவிடம் அவர்கள் வைத்த விசுவாசத்திற்கான அளவுகோல் ஆயிற்று. அவரது சிருஷ்டிப்பின் ஏழாம் நாளை யேகோவா அவர்களுக்கான ஓய்வுநாளாகப் பரிசுத்தப்படுத்தினார். ஓய்வுநாளுக்கு அடுத்த நாளை, அவர் முதல் நாள் ஆக்கி, அதை யேகோவாவை ஆராதிக்கவும், அவருக்குப் பலிகளைச் செலுத்தவும், அவரைப் போற்றிப் பாடுவதற்குமான ஒரு நாள் ஆக்கினார். இந்த நாளில், யேகோவா ஆசாரியர்கள் யாவரையும் ஒன்றாக அழைத்து, மக்கள் புசிப்பதற்காக பலிபீடத்தில் பலிகளைப் பங்கிடுமாறும் அதனால் யேகோவாவின் பலிபீடத்தில் மக்கள் பலிகளை அனுபவித்து மகிழுமாறும் செய்தார். அவரோடு ஒரு பங்கை பகிர்ந்து கொண்டதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும் (இது யேகோவா இஸ்ரவேலர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை) யேகோவா கூறினார். இதனால்தான், இன்றுவரை, இஸ்ரவேலர்கள் யேகோவா தங்கள் தேவன் மட்டுமே என்றும், புறஜாதியாரின் தேவன் இல்லை என்றும் இன்னும் கூறிவருகின்றனர்.

நியாயப்பிரமாணத்தின் காலத்தில், மோசேயை எகிப்தில் இருந்து பின்தொடர்ந்துவந்த இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலமாக யேகோவா பல கட்டளைகளை அளித்தார். யேகோவாவால் இஸ்ரவேலர்களுக்கு இந்தக் கட்டளைகள் அளிக்கப்பட்டன, மற்றும் இதில் எகிப்தியர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை; இவை இஸ்ரவேலர்களைக் கட்டுப்படுத்துவதற்கானவை, மேலும் அவர் இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தி தமது நோக்கப்படி அவர்கள் நடப்பதற்கு வலியுறுத்தினார். அவர்கள் ஓய்வுநாளை ஆசரித்தாலும், அவர்கள் தங்கள் பெற்றோரை மதித்தாலும், அவர்கள் விக்கிரகங்களை வணங்கினாலும், இது போன்றவைகளில் எல்லாம், அவர்கள் பாவிகளா அல்லது நீதிமான்களா என்பதை நியாயம்தீர்க்கும் கொள்கைகள் இவைகளாகவே இருந்தன. அவர்கள் மத்தியில், யேகோவாவின் அக்கினியால் பட்சிக்கப்பட்ட சிலர் இருந்தனர், சிலர் கல்லெறியப்பட்டுக் கொலையுண்டனர், மேலும் சிலர் யேகோவாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர் மற்றும் இது அவர்கள் இந்தக் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார்களா இல்லையா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுநாளை ஆசரிக்காதவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஓய்வுநாளை ஆசரிக்காத ஆசாரியர்கள் யேகோவாவின் அக்கினியால் அழிக்கப்பட்டனர். தங்கள் பெற்றோர்களை மதிக்காதவர்கள் கூட கல்லெறிந்து கொல்லப்பட்டனர். இவை எல்லாம் யேகோவாவால் கட்டளையிடப்பட்டவை. யேகோவா தமது கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களை எதற்காக ஏற்படுத்தினார் என்றால், அவர் மக்களை அவர்களது வாழ்க்கையில் வழிநடத்திச் செல்லும் போது, அவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்யாமல் அவருக்குச் செவிகொடுத்து, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே. அவர் தமது எதிர்கால கிரியைகளுக்கு அடித்தளம் அமைக்கச் சிறந்தது எனப் புதிதாகப் பிறந்த மனித குலத்தை இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஆகவே யேகோவா செய்த கிரியைகளின் அடிப்படையில் இந்தக் காலம் நியாயப்பிரமாணத்தின் காலம் என்று அழைக்கப்பட்டது. யேகோவா பல வார்த்தைகளைக் கூறி, பெரும் கிரியைகளை நடத்தியபோதிலும், அவர் அறியாமையில் கிடந்த இந்த மக்களுக்கு மனிதர்களாக இருப்பது எவ்வாறு, எவ்வாறு வாழ்வது, எவ்வாறு யேகோவாவின் வழியில் நடப்பது என்றெல்லாம் போதித்து அவர்களை நேர்மறையாக வழிநடத்த மட்டுமே செய்தார். பெரும்பாலும், அவர் ஆற்றிய கிரியைகள் மக்களைத் தமது வழிகளைப் பின்பற்றி தம் நியமங்களைக் கடைபிடிக்க வைப்பதற்காகவே. உலக அசுத்தங்களுக்கு ஆழமாக ஆட்படாதவர்கள் மத்தியில் இந்தக் கிரியைகள் நடப்பிக்கப்பட்டன; அவர்களது மனநிலையை அல்லது வாழ்க்கை முன்னேற்றத்தை மாற்றியமைக்கும் அளவுக்கு அது விரிவானதாக இல்லை. நியாயப்பிரமாணங்களைப் பயன்படுத்தி மக்களைத் தடுத்து கட்டுப்படுத்துவதிலேயே அவர் அக்கறை கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு யேகோவா ஆலயத்தில் இருக்கும் ஒரு தேவன் மட்டுமே, வானத்தில் இருக்கும் ஒரு தேவன். அவர் ஒரு மேக ஸ்தம்பம், ஓர் அக்கினி ஸ்தம்பம். இன்று அவரது பிரமாணங்கள் மற்றும் கட்டளைகள்—என்று மக்கள் அறிந்துள்ளவற்றை, அவற்றை விதிகள் என்றுகூட ஒருவர் கூறலாம்—கீழ்ப்படிவது ஒன்றுதான் யேகோவா அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தது எல்லாம். ஏனெனில் யேகோவா அவர்களை உருமாற்ற எண்ணவில்லை, ஆனால் மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிக பொருட்களை அவர்களுக்கு அளித்ததும் தம்முடைய வாயாலேயே அவர்களுக்கு அறிவுறுத்தியதுமே அவர் செய்தவை. ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள் தங்களிடம் வைத்திருக்க வேண்டிய ஒன்றும் அவர்களிடம் இல்லை. ஆகவே, மக்கள் உலகில் தங்கள் வாழ்க்கைக்காக வைத்திருக்க வேண்டியவற்றை யேகோவா அவர்களுக்கு அளித்தார். இவ்வாறு தங்கள் முன்னோர்களான ஆதாமும் ஏவாளும் வைத்திருந்ததைவிட அதிகமாக மக்கள் வைத்திருக்குமாறு யேகோவா அளித்தார். ஏனெனில் யேகோவா ஆரம்பத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்ததைவிட அவர் இவர்களுக்கு அளித்தது மிதமிஞ்சியதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரவேலில் யேகோவா ஆற்றிய கிரியை மனிதகுலத்தை வழிநடத்துவதற்கும் மனிதகுலம் தனது சிருஷ்டிகரை அறிந்துகொள்ளுவதற்காகவும் மட்டுமே. அவர் அவர்களை அடக்கியாளவில்லை அல்லது அவர்களை உருமாற்றம் செய்யவில்லை, ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட மட்டுமே செய்தார். இதுவே நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவாவின் கிரியைகளின் தொகுப்பாகும். இதுவே பின்னணி, உண்மைக் கதை, இஸ்ரவேல் தேசம் முழுவதிலும் அவர் ஆற்றிய கிரியையின் சாராம்சம், மற்றும் அவரது ஆறாயிரம் ஆண்டு கிரியையின் ஆரம்பம்—மனிதகுலத்தை யேகோவாவின் கரங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க. இதில் இருந்து அவரது ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டத்தின் இன்னும் அதிகமான கிரியைகள் பிறந்தன.

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “கீழ்ப்படிய வேண்டிய” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

அடுத்த: மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக