பிற்சேர்க்கை 2 சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்

நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய, பக்தியுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக நமது மனதையும் சரீரத்தையும் ஒப்புக்கொடுப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். நமது மனதும் சரீரமும் தேவனுடைய கட்டளைக்காகவும், மனுக்குலத்தின் நீதியான காரணத்திற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்றால், தேவனுடைய கட்டளைக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நமது ஆத்துமாக்கள் தகுதியற்றவையாகவும், சகலத்தையும் நமக்குத் தந்தருளிய தேவனுக்கு மிகவும் தகுதியற்றவையாகவும் உணரும்.

தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே. தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார். தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார். மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன. மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும் தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன. நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனானால், எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன என்பதை நிச்சயமாக நம்புவாய். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியை தேவன் மாத்திரமே அறிவார். இந்த மனுக்குலத்தின் போக்கை தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார். மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால், ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால், மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும், மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்.

நோவா பேழையைக் கட்டிய காலத்தைத் திரும்பிப் பாருங்கள். மனுக்குலம் மிகவும் சீர்கெட்டுப்போயிருந்தது, மக்கள் தேவனுடைய ஆசீர்வாதத்திலிருந்து விலகிப் போயிருந்தார்கள், தேவனால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுடைய ஒளி இல்லாமல் இருளில் வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் இயற்கையால் கட்டுப்படுத்தப்படாதவர்களாகிப் போனார்கள் மற்றும் அருவருப்பான ஒழுக்கக்கேட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களால் இனி தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெறவே இயலாது; இவர்கள் தேவனைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதனாலும், தேவன் அவர்களுக்குத் தந்தருளிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்பதனாலும், தேவனுடைய போதனைகளை மறந்துவிட்டார்கள் என்பதனாலும், இவர்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்கவோ அல்லது தேவனுடைய குரலைக் கேட்கவோ தகுதியில்லாதவர்களாகிவிட்டார்கள். அவர்களுடைய இருதயம் தேவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. அவர்கள் அவ்வாறு விலகிப் போனதனால், அவர்கள் சகல பகுத்தறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டு ஒழுக்கக்கேடானவர்களாகி, மிகவும் தீயவர்களாகிப் போனார்கள். பின்னர் அவர்கள் மரணத்திற்கு நெருக்கமாக நடந்துவந்து, தேவனுடைய உக்கிரக் கோபத்திற்குள்ளும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளும் விழுந்துபோனார்கள். நோவா மாத்திரமே தேவனைத் தொழுதுகொண்டு, தீமையை விட்டு விலகினான். அதனால்தான் அவனால் தேவனுடைய குரலையும், அவருடைய வழிகாட்டுதல்களையும் கேட்க முடிந்தது. தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டுதல்களின்படி அவன் பேழையைக் கட்டினான். சகல விதமான ஜீவராசிகளும் பேழைக்குள் ஒன்றுகூடின. இவ்விதமாக, சகலமும் ஆயத்தமானதும், தேவன் தனது அழிவை உலகத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டார். நோவா யேகோவா தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகியதனால், நோவாவும் அவனுடைய குடும்பத்திலுள்ள மற்ற ஏழு பேரும் மாத்திரமே அழிவிலிருந்து தப்பினார்கள்.

இப்போது தற்காலத்தைப் பாருங்கள். தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகிய நோவா போன்ற நீதிமான்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும் இந்த மனுக்குலத்தின் மீது தேவன் இன்னும் கிருபையாக இருக்கிறார். இந்தக் கடைசிக் காலத்திலும் அவர்களை இன்னும் மன்னித்தருளுகிறார். தேவன் தோன்றியருள வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களை தேவன் தேடுகிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கத் திராணியுள்ளவர்களையும், அவருடைய கட்டளையை மறவாதவர்களையும், தங்களுடைய இருதயங்களையும் சரீரங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பவர்களையும் அவர் தேடுகிறார். அவருக்கு முன்பாகக் குழந்தைகளைப் போலக் கீழ்ப்படிகிறவர்களையும், அவருக்கு விரோதமாக இல்லாதவர்களையும் அவர் தேடுகிறார். எந்தவொரு அதிகாரத்திற்கோ அல்லது வல்லமைக்கோ கட்டுப்படாமல் உன்னைத் தேவனுக்கு அர்ப்பணித்தால், தேவன் உன்னை ஆதரவாகப் பார்த்து, அவருடைய ஆசீர்வாதங்களை உன் மீது பொழிந்தருளுவார். நீ உயர் பதவியில் இருந்தும், மேன்மைதாங்கிய நற்பெயர் பெற்றிருந்தும், அளப்பரிய அறிவைப் பெற்றிருந்தும், ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தும் மற்றும் பலரால் ஆதரிக்கப்படுகிறவனாக இருந்தும், இந்தக் காரியங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக வந்து அவருடைய அழைப்பையும் அவருடைய கட்டளையையும் ஏற்றுக்கொள்வதையும், தேவன் உன்னிடம் செய்யச் சொல்வதைச் செய்வதையும் தடுக்கவில்லை என்றால், நீ செய்வது எல்லாம் பூமியில் மிகவும் அர்த்தமுள்ள காரியமாகவும், மனுக்குலத்தின் மிகவும் நீதியான செயலாகவும் இருக்கும். நீ அந்தஸ்துக்காகவும், உன் சொந்த இலக்குகளுக்காகவும் தேவனுடைய அழைப்பை ஏற்க மறுத்தால், நீ செய்யும் அனைத்தும் தேவனால் சபிக்கப்படும் மற்றும் வெறுக்கப்படும். ஒருவேளை நீ ஒரு அதிபராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு போதகராக அல்லது ஒரு மூப்பராக இருந்து, உன் அலுவலகம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், உன் செயல்களில் உன் அறிவையும் திறமையையும் சார்ந்திருந்தால், நீ எப்பொழுதும் தோல்வியாகவே இருப்பாய் மற்றும் எப்பொழுதும் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து காணப்படுவாய். ஏனென்றால், நீ செய்யும் எதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை, உன் செயலை நீதியான ஒன்றாகக் கருதுவதில்லை அல்லது நீ மனுக்குலத்தின் நலனுக்காகச் செயல்படுகிறாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மனுஷனைத் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து நீக்க, மனுக்குலத்தின் அறிவையும் பெலத்தையும் பயன்படுத்தவே நீ எல்லாவற்றையும் செய்கிறாய் என்றும், அது தேவனுடைய ஆசீர்வாதங்களை மறுக்கவே செய்யப்படுகிறது என்றும் அவர் சொல்வார். நீ மனுக்குலத்தை இருளை நோக்கியும், மரணத்தை நோக்கியும், மனுஷன் தேவனையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் இழந்து கட்டுப்படாமல் வாழ்வதற்கான ஆரம்பத்தை நோக்கியும் வழிநடத்துகிறாய் என்று அவர் சொல்வார்.

மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல், மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன. மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்குப் போதுமான இடமோ, தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை. தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது. மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும், நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள், மனிதப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார் என்ற உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்விதமாக, தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப் புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும், தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையைக் குறித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள். மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும் அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை. புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். … தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். இவ்விதமாக, மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும் குறைவாகவே சந்தோஷமாகக் காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர். மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல், ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும், அதில் பிரயோஜனமில்லை. யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால், மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது. எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது. அறிவியல், அறிவு, சுதந்திரம், ஜனநாயகம், ஓய்வு, சௌகரியம் ஆகியவை மனுஷனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மாத்திரமே கொண்டுவருகின்றன. இந்தக் காரியங்கள் மூலமாகவும் கூட, மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, சமுதாயத்தின் அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான். இந்த காரியங்களால் ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் தடுக்க இயலாது. ஏனென்றால், மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான், மேலும் மனுஷனின் அறிவில்லாத தியாகங்களும் ஆராய்ச்சிகளும் மனுஷனின் எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது முன்னால் உள்ள பாதையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிகத் துயரத்திற்கு மாத்திரமே வழிவகுக்கும் மற்றும் மனுஷனை ஒரு நிலையான பயத்தில் மாத்திரமே வைத்திருக்கும். மனுஷன் அறிவியலையும் அறிவையும் பார்த்துக்கூட பயப்படுகிறான், மேலும் வெறுமை உணர்வினால் இன்னும் அதிகமாகப் பயப்படுவான். இந்த உலகில், நீ ஒரு சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலும் அல்லது மனித உரிமைகள் இல்லாத ஒரு நாட்டில் வாழ்ந்தாலும், நீ மனுக்குலத்தின் தலைவிதியிலிருந்து முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது. நீ ஆள்பவனாக இருந்தாலும் அல்லது ஆளப்படுபவனாக இருந்தாலும், மனுக்குலத்தின் தலைவிதி, மர்மங்கள் மற்றும் போய்ச்சேருமிடம் ஆகியவற்றை ஆராய்வதற்கான பிரயாசத்திலிருந்து உன்னால் முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது, மேலும் வெறுமை என்னும் குழப்பமான உணர்விலிருந்து உன்னால் தப்பித்துக்கொள்ள இயலாது. மனுக்குலம் முழுவதிற்கும் பொதுவான இதுபோன்ற நிகழ்வுகள் சமூகவியலாளர்களால் சமூக தோற்றப்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஒரு பெரிய மனுஷனும் முன்வர இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான். தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது. அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு நியாயமான சமூகம் மனுக்குலத்திற்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய இரட்சிப்பும், அவர்களுக்கு அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே, தேவைகள், ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் மனுஷனின் ஆவிக்குரிய வெறுமை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இயலும். ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பையும் கவனிப்பையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், இதுபோன்ற ஒரு நாடோ அல்லது தேசமோ வீழ்ச்சியையும், இருளையும் நோக்கிச்செல்லும் சாலையில் காலடி எடுத்து வைக்கும், மேலும் தேவனால் நிர்மூலமாக்கப்படும்.

ஒருவேளை உன் நாடு தற்போது செழிப்படைகிறது, ஆனால் உன் ஜனங்களை தேவனிடமிருந்து விலகிச் செல்ல நீ அனுமதித்தால், அது தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெருமளவில் இழந்து காணப்படும். உன் நாட்டின் நாகரிகம் பெருமளவில் நசுக்கப்படும். விரைவிலேயே ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக எழுந்து பரலோகத்தைச் சபிப்பார்கள். ஆகவே, மனுஷனுக்குத் தெரியாமலே, ஒரு நாட்டின் தலைவிதி அழிக்கப்படும். தேவனால் சபிக்கப்பட்ட அந்த நாடுகளைச் சரிக்கட்ட வல்லமை பொருந்திய நாடுகளை தேவன் எழுப்புவார். மேலும் பூமியின் மீதிருந்து அந்த நாடுகளை ஒன்றுமில்லாமல் துடைத்துப் போடுவார். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் ஆட்சியாளர்கள் தேவனைத் தொழுதுகொள்கிறார்களா, அவர்கள் தங்கள் ஜனங்களை தேவனோடு நெருங்கியிருக்கவும், அவரைத் தொழுதுகொள்ளவும் வழிநடத்துகிறார்களா என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆனாலும், இந்தக் கடைசி காலத்தில், தேவனை உண்மையாகவே தேடி தொழுதுகொள்கிறவர்கள் குறைவானவர்களாக இருப்பதால், கிறிஸ்தவம் அரச மதமாக இருக்கும் நாடுகளுக்கு தேவன் சிறப்புச் சலுகையைத் தந்தருளுகிறார். உலகின் மிகவும் நீதியான ஐக்கியத்தை உருவாக்க அவர் அந்த நாடுகளை ஒன்றிணைக்கிறார், அதே நேரத்தில் நாத்திக நாடுகளும் மெய்யான தேவனைத் தொழுதுகொள்ளாதவர்களும் நீதியுள்ள ஐக்கியத்தின் எதிரிகளாக மாறுகிறார்கள். இவ்விதமாக, தேவன் தம்முடைய கிரியையை நடப்பிக்க மனுஷர்கள் மத்தியில் வாசம் செய்வது மட்டுமின்றி, நீதியான அதிகாரத்தைக் கடைபிடிக்கக்கூடிய நாடுகளை ஆதாயப்படுத்துகிறார், அதே நேரத்தில் அவரை எதிர்க்கும் நாடுகள் மீது தண்டனைகளையும் தடைகளையும் விதிக்க அனுமதிக்கிறார். இவ்வாறு இருப்பினும், இன்னும் யாரும் தேவனைத் தொழுதுகொள்ள முன்வருவதில்லை, ஏனென்றால் மனுஷன் தேவனிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டான், மனுஷன் தேவனை நீண்ட காலமாகவே மறந்துவிட்டான். நீதியைக் கடைப்பிடிக்கும், அநீதியை எதிர்க்கும் நாடுகள் மாத்திரமே பூமியில் எஞ்சியிருக்கும். ஆனால் எந்தவொரு நாட்டின் ஆட்சியாளர்களும் தேவன் தங்கள் ஜனங்களை ஆளுகை செய்து வழிநடத்த அனுமதிக்க மாட்டார்கள், எந்தவொரு அரசியல் கட்சியும் தேவனைத் தொழுதுகொள்வதற்காக தங்கள் ஜனங்களை ஒன்று திரட்டாது என்பதனால், இது தேவனுடைய விருப்பங்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. எல்லா நாடு, தேசம், ஆளும் கட்சி ஆகியவற்றின் இருதயத்திலும், ஏன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் கூட தேவன் தனது நீதியான இடத்தை இழந்துவிட்டார். இந்த உலகில் நீதியான அதிகாரங்கள் இருந்தாலும், மனிதனுடைய இருதயத்தில் தேவனுக்கு இடமளிக்காத ஆட்சி எளிதில் அழியக்கூடியதாக இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல், அரசியல் களம் சீர்குலைந்து போகும் மற்றும் அதனால் ஒரு அடிக்கு நிலைத்து நிற்க முடியாது. மனுக்குலத்தைப் பொறுத்தவரை, தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் இருப்பது சூரியன் இல்லாமல் இருப்பது போன்றதாகும். ஆட்சியாளர்கள் தங்கள் ஜனங்களுக்காக எவ்வளவு பங்களிப்பு செய்தாலும், மனுக்குலம் எத்தனை நீதியான மாநாடுகளை ஒன்றாக நடத்தினாலும், இது எதுவுமே போக்கையோ திருப்பாது அல்லது மனுக்குலத்தின் தலைவிதியையோ மாற்றாது. ஜனங்கள் உண்டும் உடுத்தும், ஒன்றாக நிம்மதியாக வாழும் ஒரு நாடே நல்ல நாடு என்றும், நல்ல தலைமை கொண்ட நாடு என்றும் மனுஷன் நினைக்கிறான். ஆனால் தேவன் அவ்வாறு நினைக்கவில்லை. தேவனைத் தொழுதுகொள்ளாத ஒரு நாட்டை தாமே நிர்மூலமாக்கும் நாடு என்று அவர் நினைக்கிறார். மனுஷன் சிந்திக்கும் விதமும் தேவன் சிந்திக்கும் விதமும் பெரிதும் மாறுபட்டது. ஆகவே, ஒரு நாட்டின் தலைவர் தேவனைத் தொழுதுகொள்ளவில்லை என்றால், அந்த நாட்டின் தலைவிதி அழிவுகரமான ஒன்றாக இருக்கும், அந்த நாட்டிற்கு எந்தப் போக்கிடமும் இருக்காது.

தேவன் மனுஷனுடைய அரசியலில் பங்கெடுப்பதில்லை, ஆனாலும் ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியானது தேவனால் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவன் இந்த உலகத்தையும் அண்டசராசரம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறார். மனுஷனின் தலைவிதியும் தேவனுடைய திட்டமும் நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன. எந்த மனுஷனும், நாடும், தேசமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. மனுஷன் தனது தலைவிதியை அறிந்துகொள்ளப் பிரயாசப்பட்டால், அவன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும். தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களையும் தொழுதுகொள்கிறவர்களையும் செழிப்படையச் செய்வார், அதே நேரத்தில் அவரை எதிர்ப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்கள் மீது வீழ்ச்சியையும் அழிவையும் கொண்டுவருவார்.

வேதாகமத்தில் தேவன் சோதோம் மீது அழிவைக் கொண்டுவந்த காட்சியை நினைவு கூருங்கள். மேலும், லோத்தின் மனைவி எவ்வாறு உப்புத் தூணாக மாறிப்போனாள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். நினிவே ஜனங்கள் இரட்டு உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து தங்கள் பாவங்களிலிருந்து எவ்வாறு மனந்திரும்பினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும், 2,000 வருடங்களுக்கு முன்பு யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த பிறகு என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். யூதர்கள் இஸ்ரவேலில் இருந்து வெளியேற்றப்பட்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிதறி ஓடினார்கள். பலர் கொல்லப்பட்டனர், முழு யூத தேசமும் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அவர்களுடைய நாடு நிர்மூலத்தின் வேதனைக்கு உள்ளானது. அவர்கள் தேவனைச் சிலுவையில் அறைந்து கொடூரமான பாவத்தைச் செய்தார்கள், தேவனுடைய மனநிலையை எரிச்சல் மூட்டினார்கள். அவர்கள் செய்தவற்றுக்கு விலைக்கிரயம் கொடுத்தனர் மற்றும் அவர்களுடைய செயல்களின் அனைத்துப் பின்விளைவுகளையும் அனுபவித்தனர். அவர்கள் தேவனை நிந்தித்தார்கள், தேவனைப் புறக்கணித்தார்கள், எனவே தேவனால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரே தலைவிதியைப் பெற்றனர். இதுதான் அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டிற்கும் தேசத்திற்கும் கொண்டு வந்த கசப்பான பின்விளைவும் பேரழிவும் ஆகும்.

இன்று, தேவன் தனது கிரியையைச் செய்வதற்காக உலகிற்கு திரும்பியுள்ளார். பெரும் கூட்டம் காணப்படும் நாத்திகத்தின் உறுதியான கோட்டையாகத் திகழும் அவரது முதல் நிறுத்தமாகிய சீனாவே சர்வாதிகார ஆட்சியின் முன்மாதிரியாகத் திகழ்கிறது. தேவன் தனது ஞானத்தினாலும் வல்லமையினாலும் ஒரு கூட்டமான ஜனங்களை ஆதாயப்படுத்தியுள்ளார். இந்தக் காலகட்டத்தில், அவர் சீனாவின் ஆளும் கட்சியால் ஒவ்வொரு விதத்திலும் வேட்டையாடப்பட்டு, அவர் தலைசாய்க்கவும் தங்கவும் இடமில்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையிலும், தேவன் தான் செய்ய பிரயாசப்படும் கிரியையை இன்னும் தொடர்ந்து செய்கிறார்: அவர் தனது குரலில் சுவிசேஷத்தை அறிவித்துப் பரப்புகிறார். தேவனுடைய சர்வவல்லமையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. தேவனை எதிரியாகக் கருதும் நாடான சீனாவில், தேவன் தனது கிரியையை ஒருபோதும் நிறுத்தியதில்லை. மாறாக, அதிகமான ஜனங்கள் அவருடைய கிரியையையும் வார்த்தையையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் மனுக்குலத்தின் ஒவ்வொரு நபரையும் தேவன் தன்னால் முடிந்த அளவுக்கு இரட்சிக்கிறார். தேவன் அடைய வேண்டுமென்று பிரயாசப்படுகிற வழியில் எந்த நாடோ அல்லது எந்த அதிகாரமோ நிற்க முடியாது என்று நாம் நம்புகிறோம். தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்து, தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, தேவனுடைய திட்டத்திற்கு இடறலுண்டாக்கி, பலவீனப்படுத்துபவர்கள் இறுதியில் தேவனால் தண்டிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியைக்கு எதிராக நிற்பவன் நரகத்திற்கு அனுப்பப்படுவான்; தேவனுடைய கிரியையை எதிர்க்கும் எந்த நாடும் அழிக்கப்படும்; தேவனுடைய கிரியையை எதிர்க்க எழுந்த எந்தத் தேசமும் இந்தப் பூமியில் இல்லாமல் நிர்மூலமாக்கப்படும் மற்றும் ஜீவன் அறுப்புண்டு போகும். தேவனுடைய குரலைக் கேட்கவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்தவும், தேவனை மிகவும் பரிசுத்தமானவராக்கவும், மிகவும் கனத்திற்குரியவராக்கவும், மிகவும் உயர்ந்தவராக்கவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும், ஆபிரகாமின் சந்ததியினர் யேகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும், தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவவும் வேண்டுமாறு சகல தேசங்களையும், சகல நாடுகளையும், ஏன் சகல தொழில் நிறுவனங்களையும் சேர்ந்த ஜனங்களை வலியுறுத்துகிறேன்.

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காகத் தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

முந்தைய: பிற்சேர்க்கை 1 தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

அடுத்த: பிற்சேர்க்கை 3 தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக