தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 297

மே 14, 2023

இந்தத் திரித்துவ கருத்துக்கு ஏற்ப மூன்று கட்டக் கிரியைகளும் மதிப்பிடப்பட்டால், ஒவ்வொருவரும் செய்யும் கிரியை ஒரே மாதிரியானது அல்ல என்பதால் மூன்று தேவர்கள் இருக்க வேண்டும். உங்களில் யாராவது திரித்துவம் உண்மையில் உண்டென்று கூறினால், மூன்று ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரே தேவன் சரியாக யார் என்பதை விளக்குங்கள். பரிசுத்த பிதா என்றால் யார்? குமாரன் என்றால் யார்? பரிசுத்த ஆவியானவர் என்றால் யார்? யேகோவா தான் பரிசுத்த பிதாவா? இயேசு தான் குமாரனா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா ஆவியானவர் இல்லையா? குமாரனின் சாராம்சம் ஆவியானவர் இல்லையா? இயேசுவின் கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இல்லையா? அந்த நேரத்தில் ஆவியானவரால் செய்யப்பட்ட யேகோவாவின் கிரியை இயேசு செய்தது மாதிரியானது இல்லையா? தேவன் எத்தனை ஆவியானவர்களைக் கொண்டிருக்க முடியும்? உங்கள் விளக்கத்தின்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே என்று வைத்துக் கொண்டால், மூன்று ஆவியானவர்கள் உள்ளனர், ஆனால் மூன்று ஆவியானவர்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று தேவர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஒன்றான மெய்த்தேவன் என்று யாருமே இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகையான தேவன் எவ்வாறு இன்னும் தேவனுடைய இயல்பான சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு என்பதை நீ ஏற்றுக்கொண்டால், அவரால் எப்படி ஒரு மகனைப் பெற்று பிதாவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் உண்மையில் உன் கருத்துக்கள் அல்லவா? "ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவரும், ஒரே ஒரு தேவனும் மட்டுமே உள்ளனர்" என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரே ஒரு தேவனும், இந்த தேவனில் ஒரே ஒரு ஆள்தத்துவமும், ஒரே ஒரு தேவனுடைய ஆவியானவரும் உள்ளனர். நீ பேசும் பிதாவும் குமாரனும் இருக்கின்றார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கின்றார். மேலும், நீங்கள் நம்பும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் சாராம்சம் பரிசுத்த ஆவியின் சாராம்சமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஆவியானவராக இருக்கிறார், ஆனால் அவரால் மாம்சமாகி மனிதர்களிடையே வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கவும் முடியும். அவருடைய ஆவியானவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். அவரால் ஒரே நேரத்தில் மாம்சத்திலும் பிரபஞ்சத்திற்கு மேலேயும் இருக்க முடியும். தேவனே ஒன்றான மெய்த்தேவன் என்று எல்லா ஜனங்களும் சொல்வதனால், யாருடைய விருப்பப்படியும் பிரிக்க முடியாத ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார்! தேவன் ஒரே ஒரு ஆவியானவராகவும், ஒரே ஒரு ஆள்தத்துவமுள்ளவராகவும் இருக்கின்றார்; அவர்தான் தேவனுடைய ஆவியானவர் ஆவார். நீ சொல்வது போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் இருந்தால், அவர்கள் மூன்று தேவர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியானவர் ஒருவராகவும், குமாரன் மற்றொருவராகவும், பிதா இன்னொருவராகவும் இருக்கின்றனர். அவர்களுடைய ஆள்தத்துவங்கள் வேறுபட்டவர்கள், அவர்களுடைய சாராம்சங்கள் வேறுபட்டவை, அப்படியானால் அவர்கள் ஒவ்வொருவராலும் எப்படி ஒரே தேவனின் அங்கமாக இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் ஆவியானவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மனிதனுக்கு எளிதாகும். இது இவ்வாறு இருப்பதனால், பிதா ஆவியானவரைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் பூமிக்கு இறங்கி வரவில்லை, ஒருபோதும் மாம்சமாக மாறவில்லை. அவர் மனிதனுடைய இருதயத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார், மேலும் அவர் நிச்சயமாகவே ஒரு ஆவியானவராகவும் இருக்கிறார். அவருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான உறவு என்ன? இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவா? அல்லது பரிசுத்த ஆவியானவருக்கும் பிதாவின் ஆவியானவருக்கும் இடையிலுள்ள உறவா? ஒவ்வொரு ஆவியானவரின் சாராம்சமும் ஒன்றா? அல்லது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் கருவியா? இதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படியானால் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? இது இரண்டு ஆவியானவர்களுக்கும் இடையிலான உறவா அல்லது ஒரு மனிதனுக்கும் ஆவியானவருக்கும் இடையிலான உறவா? இவை அனைத்தும் எந்த விளக்கமும் இல்லாத காரியங்களாகும்! அவர்கள் அனைவரும் ஒரே ஆவியானவர் என்றால், மூன்று ஆள்தத்துவங்களைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் அவர்கள் ஒரே ஆவியானவரைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனித்தனியான ஆட்களாக இருந்தால், அவர்களுடைய ஆவியானவர்கள் வலிமையில் மாறுபடுவார்கள், அவர்களால் ஒரே ஒரு ஆவியானவராக இருக்க முடியாது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்து மிகவும் பொருத்தமற்றதாகும்! இது தேவனைப் பிரிக்கின்றது, ஒவ்வொருவரையும் ஒரு நிலைப்பாட்டுடனும் ஆவியானவருடனும் மூன்று நபர்களாகப் பிரிக்கின்றது. அப்படியானால் அவரால் எப்படி இன்னும் ஒரே ஆவியானவராகவும் ஒரே தேவனாகவும் இருக்க முடியும்? வானமும் பூமியும் அதிலுள்ளவை யாவும் பிதா, குமாரனால் அல்லது பரிசுத்த ஆவியானவரால் சிருஷ்டிக்கப்பட்டனவா என்று சொல்லுங்கள்? அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சிருஷ்டித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படியானால் மனுக்குலத்தை மீட்டவர் யார்? அதைச் செய்தது பரிசுத்த ஆவியானவரா, குமாரனா அல்லது பிதாவா? மனுக்குலத்தை மீட்டது குமாரன் தான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் உண்மையில் குமாரன் யார்? அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவன் இல்லையா? சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கண்ணோட்டத்தில் மாம்சமாகிய தேவன் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு பிறந்தார் என்பது உனக்குத் தெரியாதா? அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நீ என்ன சொன்னாலும், அவர் இன்னும் பரலோகத்திலுள்ள தேவனுடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவனாவார். குமாரனைக் குறித்த இந்தக் கருத்து உண்மையில் பொய்யானதாகும். எல்லாக் கிரியைகளையும் செய்பவர் ஒரே ஆவியானவர்தான். தேவன் மாத்திரமே, அதாவது, தேவனுடைய ஆவியானவரே அவருடைய கிரியையைச் செய்கிறார். தேவனுடைய ஆவியானவர் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அவர் இயேசுவில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனுடைய ஆவியானவரால்) கிரியை செய்யப்படவில்லை என்றால், அவருடைய கிரியை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? இயேசு ஜெபம் செய்கையில் பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்று பெயர் சொல்லி அழைத்தபோது, இது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்பட்டது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தை அணிந்திருந்தார் மற்றும் ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பெற்றிருந்தார். அவனுக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தாலும், அவருடைய வெளிப்புறத் தோற்றம் இன்னும் ஒரு சாதாரண மனிதனின் தோற்றமாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் "மனுஷகுமாரனாக" மாறியிருந்தார், இதைப் பற்றி இயேசு உட்பட எல்லா மனிதர்களும் பேசினார்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதால், அவர் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபராக (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனிதனின் வெளிப்புறத் தோற்றமுள்ளவராக) இருக்கிறார். ஆகையால், இயேசு பரலோகத்திலிருக்கின்ற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைத்தது, நீங்கள் முதலில் அவரைப் பிதா என்று அழைத்ததைப் போன்றதாகும். அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார். இயேசு நீங்கள் மனப்பாடம் செய்வதற்காக உங்களுக்குக் கற்பித்த கர்த்தருடைய ஜெபம் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே…." அவர் எல்லா மனிதர்களையும் பரமண்டலங்களிலிருக்கிற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அவரை பிதா என்று அழைத்ததால், உங்கள் அனைவருடனும் சமமான நிலையில் நிற்கும் ஒருவரின் கண்ணோட்டத்தில் அவ்வாறு சொன்னார். பரலோகத்திலுள்ள தேவனை நீங்கள் பிதா என்ற பெயரில் அழைத்ததால், இயேசு உங்களுடன் சமமான நிலையில் இருப்பதையும், பூமியில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனாக (அதாவது தேவனுடைய குமாரன்) இருப்பதையும் கண்டார். நீங்கள் தேவனைப் பிதா என்று அழைத்தால், நீங்கள் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் என்பதனால்தான் அல்லவா? சிலுவையில் அறையப்படுவதற்கு முன், இயேசுவின் அதிகாரம் பூமியில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனால்) ஆளுகை செய்யப்பட்ட மனுஷகுமாரனாகவும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்தார், ஏனென்றால் அவர் இன்னும் தமது கிரியையை நிறைவு செய்யவில்லை. ஆகையால், பரலோகத்திலுள்ள தேவனை அவர் பிதா என்று அழைத்தது அவருடைய மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் மட்டுமே குறிக்கிறது. ஆனாலும், அவர் தேவனை (அதாவது, பரலோகத்திலுள்ள ஆவியானவரை) இவ்வாறு அழைப்பது, அவர் பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவரின் குமாரன் என்பதை நிரூபிக்கவில்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மட்டுமே வேறுபட்டதாக இருந்ததே தவிர, அவர் வேறு நபராக இருக்கவில்லை. தனித்தனியான நபர்களாக இருக்கின்றனர் என்பது பொய்யாகும்! சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, இயேசு மாம்சத்தின் வரம்புக்கு உட்பட்ட மனுஷகுமாரனாக இருந்தார், அவர் ஆவியின் அதிகாரத்தை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை மட்டுமே அவரால் நாட முடிந்தது. இது அவர் கெத்செமனே என்னும் இடத்தில் மூன்று முறை ஜெபித்தது போலவே இருக்கிறது: "என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது." அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் யூதர்களின் ராஜாவாக இருந்தார். அவர் கிறிஸ்துவாகவும், மனுஷகுமாரனாகவும் இருந்தார், மகிமையின் சரீரத்தில் அல்ல. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து, அவர் தேவனைப் பிதா என்று அழைத்தார். இப்போது, தேவனைப் பிதா என்று அழைக்கின்ற எல்லோரையும் குமாரன் என்று உன்னால் சொல்ல முடியாது. இது அப்படி இருந்திருந்தால், கர்த்தருடைய ஜெபத்தை இயேசு உங்களுக்குக் கற்பித்தவுடனே நீங்கள் எல்லோரும் குமாரனாகியிருக்க மாட்டீர்களா? நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால், நீங்கள் பிதா என்று அழைப்பவர் யார் என்று சொல்லுங்கள்? நீங்கள் இயேசுவைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் பிதா யார்? இயேசு சென்ற பிறகு, பிதா மற்றும் குமாரனைக் குறித்த இந்தக் கருத்து இல்லாமல் போய்விட்டது. இந்தக் கருத்து இயேசு மாம்சமாகிய போது இருந்த ஆண்டுகளுக்கு மட்டுமே பொருத்தமானது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், நீங்கள் தேவனைப் பிதா என்று அழைக்கும்போது சிருஷ்டிப்பின் கர்த்தருக்கும் சிருஷ்டிக்கப்பட்டவற்றுக்கும் இடையிலான உறவு ஒன்றாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தின் இந்த கருத்து நிலைநிற்பதற்கு எந்த நேரமும் இல்லை. இது காலங்காலமாக அரிதாகவே காணப்படும் ஒரு பொய்யாகும். திரித்துவம் என்பதே கிடையாது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "திரித்துவம் என்பது உண்டா?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க