தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 595

பிப்ரவரி 9, 2023

தேவனுடைய கிரியையின் நிறைவேறுதலை மட்டுமல்லாமல் மனுக்குலத்தின் வளர்ச்சியின் முடிவையும் அனைத்து விஷயங்களின் முடிவும் நெருங்கிவருவது சுட்டிக்காட்டுகிறது. சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டிருப்பார்கள், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியார் தங்கள் பரவலை நிறைவுசெய்து விட்டிருப்பார்கள் என்பது இதற்கு அர்த்தமாகும். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட இத்தகைய மனுக்குலத்தால் தொடர்ந்து வளர்ச்சிபெறுவது என்பது சாத்தியமற்றது என்பதும் அதன் அர்த்தமாகும். ஆதியில் ஆதாமும் ஏவாளும் சீர்கெடுக்கப்படவில்லை, ஆனால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டனர். தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் வரும்போது, ஏதேன் தோட்டத்தில் இருந்து துரத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும்—அவர்களின் சந்ததியாரும் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவார்கள். எதிர்கால மனுக்குலமும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரையே கொண்டிருப்பார்கள், ஆனால் அந்த மனிதர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் இரட்சிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பார்கள். இந்த மனுக்குலம் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டதாகவும், மேலும் அது பரிசுத்தமானதாகவும் இருக்கும். இந்த ஜனங்கள் ஆதியில் இருந்த மனித இனம் போல் இருக்க மாட்டார்கள்; ஆதியில் இருந்த ஆதாம் ஏவாளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையான மனுக்குலம் என்று கூட இதைக் கூறலாம். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவரிலும் இருந்து இந்த ஜனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள், மேலும் தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் கடிந்துகொள்ளுதலின் போது இறுதியாக உறுதியாக நின்றவர்களே இவர்கள்; சீர்கெட்ட மனுக்குலத்தின் மத்தியில் அவர்கள் மீந்திருக்கும் கடைசி குழுவாக இருப்பார்கள். இந்த ஜனங்கள் மட்டுமே தேவனோடு சேர்ந்து இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல் அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் புறம்பாக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாகத் தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்தைய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்குப் பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், அவர் மனிதர்களை இரட்சிக்கும் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதலே அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. மாறாக, அவரது கிரியை முழுமையாக முடிந்த பிறகு மட்டுமே இந்தப் பணி செய்யப்படும். நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது. தேவன் துன்மார்க்கரை அழிக்காமல், ஆனால் அதற்குப் பதிலாக அவர்களை மீந்திருக்க அனுமதித்தால், பின் ஒவ்வொரு மனிதரும் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாமல் போவார்கள், மேலும் தேவனால் முழு மனுக்குலத்தையும் ஒரு சிறந்த ராஜ்யத்துக்குள் கொண்டுவர முடியாமல் போகும். இத்தகைய கிரியை நிறைவடையாது. அவரது கிரியை முடிவடைந்த உடன், முழு மனுக்குலமும் முற்றிலும் பரிசுத்தமாக இருக்கும்; இந்த வழியில் மட்டுமே தேவனால் சமாதானத்துடன் இளைப்பாறுதலில் வாழ முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க