தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 5

மார்ச் 15, 2023

மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்களுக்குள்ளும் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆனால் நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்ட கிரியைகளும் அடங்கும். உலகை சிருஷ்டிக்கும் கிரியை என்பது முழு மனுக்குலத்தையும் உருவாக்கும் கிரியையாக இருந்தது. இது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையாக இருக்கவில்லை, இதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது, மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை, ஆகையால் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தது. மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது சாத்தானால் மனுஷன் சீர்கெடுக்கப்பட்டபோதுதான் துவங்கியது, ஆகையால் மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்டபோது தான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் துவங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் விளைவாகவே மனுஷனை தேவன் நிர்வகிப்பது துவங்கியது, இது உலகை சிருஷ்டிக்கும் கிரியையிலிருந்து எழும்பவில்லை. மனுக்குலம் ஒரு சீர்கெட்ட மனநிலையைப் பெற்ற பிறகுதான் நிர்வாகக் கிரியையானது செயல்பாட்டுக்கு வந்தது. ஆகையால், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில் நான்கு கட்டங்கள் அல்லது நான்கு யுகங்களுக்குப் பதிலாக மூன்று பகுதிகளே அடங்கும். மனுக்குலத்தை தேவன் நிர்வகிப்பதைக் குறிப்பிட இதுவே சரியான வழியாகும். இறுதிக் காலம் முடிவுக்கு வரும்போது, மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். நிர்வாகக் கிரியையின் முடிவு என்றால் சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும், அப்போது முதல் மனுக்குலத்திற்கான இந்தக் கட்டம் முடிந்துவிட்டது என்றும் அர்த்தமாகும். சகல மனுஷரையும் இரட்சிக்கும் கிரியை இல்லாமல், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது இருக்காது, அல்லது மூன்று கட்ட கிரியைகளும் இருக்காது. மனுக்குலத்தின் சீர்கேடே இதற்கான சரியான காரணமாகவும் இருந்தது. மனுக்குலத்திற்கு இரட்சிப்பு அவசரமாக தேவைப்பட்டதால், யேகோவா உலகை சிருஷ்டிப்பதை முடித்துவிட்டு, நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையை ஆரம்பித்தார். அப்போதுதான் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது துவங்கியது, அதாவது அப்போதுதான் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை துவங்கியது. "மனுக்குலத்தை நிர்வகித்தல்" என்றால் பூமியில் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தின் (இன்னும் சீர்கெட்டுப்போகவிருந்த மனுக்குலம்) ஜீவிதத்தை வழிநடத்துதல் என்று அர்த்தமில்லை. மாறாக, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஒரு மனுக்குலத்தின் இரட்சிப்பு என்று அர்த்தமாகும், அதாவது இந்த சீர்கெட்ட மனுக்குலத்தை மாற்றுவது என்று அர்த்தமாகும். இதுதான் "மனுக்குலத்தை நிர்வகித்தல்" என்பதன் அர்த்தமாகும். மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையில் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது, ஆகையால் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில், உலகை சிருஷ்டிக்கும் கிரியையும் அடங்காது, மாறாக உலகின் சிருஷ்டிப்பிலிருந்து தனித்திருக்கும் மூன்று கட்ட கிரியைகள் மட்டுமே அடங்கும். மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையைப் புரிந்து கொள்ள, மூன்று கட்ட கிரியைகளைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். இரட்சிக்கப்படுவதற்கு அனைவரும் இதைத்தான் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவனுடைய சிருஷ்டிகளாகிய நீங்கள் மனுஷனானவன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும், மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணத்தையும், அத்துடன் மனுஷனுடைய இரட்சிப்பின் செயல்முறையையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய தயவைப் பெறுவதற்கான முயற்சியில் உபதேசத்தின்படி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்து, தேவன் மனுக்குலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் அல்லது மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணம் ஆகியவை பற்றிய எந்த அறிவும் இல்லையென்றால், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இதில்தான் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையைப் பற்றி பரந்த அளவில் அறியாதிருக்கும்போது, கடைப்பிடிக்கக்கூடிய அந்த சத்தியங்களை மட்டும் புரிந்துகொள்வதோடு நீ திருப்தி அடைந்துவிடக்கூடாது. அப்படி திருப்தியடைந்தால், நீ மிகவும் இறுமாப்புள்ளவனாக இருக்கிறாய். மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை, முழு உலகத்திற்கும் சுவிசேஷம் வருதல், சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை கிரியையின் மூன்று கட்டங்களாகும், இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும். உனது ஜீவிதம் தொடர்பான எளிய சத்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இந்த மாபெரும் இரகசியங்கள் மற்றும் தரிசனங்களைக் குறித்து நீ எதையும் அறியவில்லை என்றால், உன் ஜீவிதமானது பார்க்கப்படுவதற்குத் தவிர வேறொன்றுக்கும் உதவாத ஒரு குறைபாடுள்ள தயாரிப்புக்கு ஒப்பாக இல்லையா?

மனுஷன் நடைமுறையில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவனுடைய கிரியையையும், மனுஷன் என்ன அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் இரண்டாம் நிலையாக பார்ப்பானேயானால், இது அவனுக்கு சிறிதளவும் ஞானமில்லாததாகவும் முட்டாள்தனமானதாகவும் இருக்காதா? நீ தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நீ தெரிந்துகொண்டே ஆக வேண்டும்; நீ கடைப்பிடிக்க வேண்டியவற்றை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை எவ்வாறு பின்தொடர்வது என்பதை அறிந்த ஒருவனாக இருப்பாய். நீ சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான நாள் வரும்போது, தேவன் ஒரு மகத்துவமான மற்றும் நீதியுள்ள தேவன் என்றும், அவர் உன்னதமான தேவன் என்றும், எந்தவொரு மாபெரும் மனிதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒரு தேவன் என்றும், அவர் எல்லோருக்கும் மேலான தேவன் என்றும் மட்டுமே உன்னால் சொல்ல முடிந்து…, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சாராம்சத்தைக் கொண்ட வார்த்தைகளைப் பேசுவதற்கு முற்றிலுமாக தகுதியற்றவனாக இருக்கும்போது உன்னால் இந்த பொருத்தமற்ற மற்றும் மேலோட்டமான வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிந்து, தேவனை அல்லது தேவனுடைய கிரியையைப் பற்றி சொல்ல உன்னிடம் எதுவுமில்லை என்றால், மேலும், உன்னால் சத்தியத்தை விளக்கிக்கூறவோ அல்லது மனுஷனிடம் குறைபாடுள்ளதாக காணப்படுவதை வழங்கவோ முடியவில்லை என்றால், உன்னைப் போன்ற ஒருவனால் தன் கடமையை சிறப்பாகச் செய்ய முடியாது. தேவனுக்கு சாட்சி பகருவதும், ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும் எளிதான காரியம் அல்ல. முதலில் நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியத்தாலும், தரிசனங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய கிரியையின் பல்வேறு அம்சங்கள் கொண்ட தரிசனங்கள் மற்றும் சத்தியத்தைப் பற்றி நீ தெளிவாக அறிந்திருக்கும்போது, மேலும் உன் இருதயத்தில் நீ தேவனுடைய கிரியையை அறிந்துகொள்கிறாய். மேலும், நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது மனுஷனுடைய சுத்திகரிப்பாக இருந்தாலும் சரி தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், உனது அஸ்திபாரமாக மாபெரும் தரிசனத்தைக் கொண்டிருப்பதையும், கடைப்பிடிப்பதற்கான சரியான சத்தியத்தையும் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், உன்னால் தேவனை இறுதிவரை பின்பற்ற முடியும். தேவன் என்ன கிரியை செய்தாலும், அவருடைய கிரியையின் நோக்கம் மாறாது, அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது, மனுஷன் மீதான அவருடைய சித்தம் மாறாது என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அவருடைய கிரியையின் கொள்கைகள் மாறாது, மனுஷனை இரட்சிக்கும் அவருடைய நோக்கமும் மாறாது. அது மனுஷனுடைய முடிவை அல்லது மனுஷன் சென்றடையும் இடத்தை வெளிப்படுத்தும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது இறுதிக் கட்டத்தின் கிரியை அல்லது தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கிரியை இல்லையென்றால் மற்றும் அது மனுஷன் மீது கிரியை செய்யும் காலமாக இருந்தால், அவருடைய கிரியையின் மையநோக்கம் மாறாது. அவருடைய கிரியையின் மையநோக்கம் எப்போதும் மனுக்குலத்தின் இரட்சிப்பாகவே இருக்கும்; இதுதான் தேவன் மீதான உனது விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளின் நோக்கம் முழு மனுக்குலத்தின் இரட்சிப்பாக இருக்கிறது, அதாவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிப்பதாகும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குறிக்கோளையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கின்றபோதிலும், ஒவ்வொன்றும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது, ஒவ்வொன்றும் மனுக்குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப செய்யப்படும் வெவ்வேறு இரட்சிப்பின் கிரியையாக இருக்கிறது. இந்த மூன்று கட்ட கிரியைகளின் நோக்கத்தை நீ அறிந்துகொண்டதும், ஒவ்வொரு கட்ட கிரியையின் முக்கியத்துவத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீ அறிந்துகொள்வாய், மேலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வாய். உன்னால் இந்த நிலையை அடைய முடிந்தால், இந்த மாபெரும் தரிசனங்கள் எல்லாம் தேவன் மீதான உன் விசுவாசத்தின் அஸ்திபாரமாக மாறும். நீ நடைமுறைக்கான எளிய வழிகளை அல்லது ஆழ்ந்த சத்தியங்களைத் தேடுவது மட்டுமின்றி, நடைமுறையுடன் தரிசனங்களை இணைக்க வேண்டும், இதன்மூலம் கடைப்பிடிக்கக்கூடிய சத்தியங்கள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு ஆகிய இரண்டும் காணப்படும். அப்பொழுதுதான் நீ சத்தியத்தை முழுமையாகப் பின்பற்றும் ஒருவனாக இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க