தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 150

மார்ச் 26, 2023

தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த விஷம் கொண்டதாக இருந்தது; அதன் சரீரத்தில் விஷம் இருந்தது, சாத்தான் அதைப் பயன்படுத்திக் கொண்டான். சர்ப்பமே ஏவாளை பாவம் செய்ய தூண்டியது. ஏவாள் பாவம் செய்தபின் ஆதாம் பாவம் செய்தான், பின்னர் அவர்கள் இருவராலும் நன்மை தீமைகளை வேறுபடுத்தி அறிய முடிந்தது. சர்ப்பம் ஏவாளைச் சோதிக்கும் என்றும் ஏவாள் ஆதாமைச் சோதிப்பாள் என்றும் யேகோவா அறிந்திருந்தால், அவர் ஏன் அனைவரையும் ஒரு தோட்டத்திற்குள் வைத்திருந்தார்? இந்த விஷயங்களை அவரால் கணிக்க முடிந்திருந்தால், அவர் ஏன் ஒரு சர்ப்பத்தைச் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்திற்குள் வைத்தார்? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஏதேன் தோட்டம் ஏன் கொண்டிருந்தது? அவர்கள் அந்தக் கனியை புசிக்க வேண்டும் என்பதற்காகவா? யேகோவா வந்தபோது, ஆதாமோ ஏவாளோ அவரை எதிர்கொள்ளத் துணியவில்லை, அப்போதுதான், அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசித்து, சர்ப்பத்தின் தந்திரத்திற்கு இரையாகிவிட்டார்கள் என்பதை யேகோவா அறிந்தார். இறுதியில், அவர் சர்ப்பத்தைச் சபித்தார், ஆதாமையும் ஏவாளையும் கூட சபித்தார். அவர்கள் இருவரும் அந்த விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதை யேகோவா அறிந்திருக்கவில்லை. தீமை கொண்டவர்களாகவும் மற்றும் பாலியல் ரீதியாக ஒழுங்கற்ற நிலையைக் கொண்டவர்களாகவும் மனிதகுலம் சீர்கெட்டுப்போனது, அவர்கள் இருதயத்தில் அடைத்து வைத்திருந்த அனைத்தும் தீயவையாகவும், அநீதியானவையாகவும் மாறிப்போனது; அவை அனைத்தும் அசுத்தமானவை. ஆகவே மனிதகுலத்தைச் சிருஷ்டித்ததற்காக யேகோவா வருந்தினார். அதன்பிறகு, நோவாவும் அவனுடைய குமாரரும் தப்பிப்பிழைத்த ஒரு ஜலப்பிரளயத்தால் உலகை அழிக்கும் தன் கிரியையை அவர் மேற்கொண்டார். சில விஷயங்கள் உண்மையில் ஜனங்கள் நினைக்கும் அளவுக்கு மேம்பட்டதாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகவும் இருப்பதில்லை. சிலர், "பிரதான தூதன் தனக்கு துரோகமிழைப்பான் என்று தேவன் அறிந்திருந்ததால், அவர் எதற்காக அவனை சிருஷ்டித்தார்?" என்று கேட்கிறார்கள். இவை தான் உண்மைகள்: பூமி சிருஷ்டிக்கப்படும் முன், பிரதான தூதனே பரலோகத்தின் தேவதூதர்களில் மிகப் பெரியவனாக இருந்தான். பரலோகத்திலுள்ள எல்லா தேவதூதர்கள் மீதும் அவன் அதிகாரம் கொண்டிருந்தான்; இதுவே தேவன் கொடுத்த அதிகாரம். தேவனுக்கு அடுத்து, இவனே பரலோக தேவதூதர்களில் மிகப் பெரியவன். பின்னர், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்த பிறகு, பூமியில் பிரதான தூதன் தேவனுக்கு எதிராக இன்னும் பெரிய துரோகத்தை நிகழ்த்தினான். அவன் மனிதகுலத்தை நிர்வகிக்கவும் தேவனின் அதிகாரத்தை மிஞ்சவும் விரும்பியதால், அவன் தேவனுக்குத் துரோகமிழைத்தான் என்று நான் சொல்கிறேன். ஏவாளை பாவம் செய்யத் தூண்டியது பிரதான தூதனே, மேலும் அவன் அவ்வாறு செய்ததற்குக் காரணம், அவன் பூமியில் தன் ராஜ்யத்தை நிலைநாட்டவும், மனுஷர் தேவனுக்குப் புறம்பாகத் திரும்பி, அதற்குப் பதிலாகப் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்பினான் என்பதே ஆகும். தேவதூதர்கள் மற்றும் பூமியிலுள்ள ஜனங்கள் உட்பட சகலமும் தனக்குக் கீழ்படியும் என்று பிரதான தூதன் அறிந்துகொண்டான். பறவைகள் மற்றும் மிருகங்கள், விருட்சங்கள், காடுகள், மலைகள், ஆறுகள் மற்றும் மனுஷரின் பராமரிப்பில் இருக்கும் சகலமும்—அதாவது ஆதாமும், ஏவாளும்—அதேநேரத்தில் ஆதாமும் ஏவாளும் பிரதான தூதனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆகவே, பிரதானத் தூதன் தேவனின் அதிகாரத்தை மீறி தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். அதன்பிறகு, அவன் பல தேவதூதர்களை தேவனுக்கு எதிரான கலகத்திற்கு வழிநடத்தினான், பின்னர் அவர்கள் பல்வேறு வகையான அசுத்த ஆவிகளாக மாறிப்போயினர். இன்றுவரை மனிதகுலத்தின் வளர்ச்சி பிரதான தூதனின் சீர்கேட்டால் ஏற்பட்டவை, இல்லையா? பிரதான தூதன் தேவனுக்குத் துரோகமிழைத்ததாலும், மனிதகுலத்தைச் சீரழித்ததாலும்தான் மனுஷர் இன்று இந்நிலையில் இருக்கிறார்கள். ஜனங்கள் கற்பனை செய்யக்கூடிய அளவிற்குச் சுருக்கமாகவும் எளிமையாகவும் இந்தப் படிப்படியான கிரியைகள் ஒருபோதும் இருக்கவில்லை. சாத்தான் ஒரு காரணத்திற்காகத் தனது துரோகத்தை மேற்கொண்டான், ஆனாலும் இதுபோன்ற ஓர் எளிய உண்மையை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்த தேவன் எதற்காகச் சாத்தானையும் சிருஷ்டித்தார்? தேவன் சாத்தானை மிகவும் வெறுக்கிறார், மேலும் சாத்தான் அவருடைய எதிரியும் கூட, இருப்பினும் அவர் ஏன் சாத்தானைச் சிருஷ்டித்தார்? சாத்தானைச் சிருஷ்டிப்பதன் மூலம், அவர் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லையா? தேவன் உண்மையில் ஓர் எதிரியைச் சிருஷ்டிக்கவில்லை; மாறாக, அவர் ஒரு தேவதூதனைச் சிருஷ்டித்தார், பின்னர் அந்த தேவதூதன் அவருக்குத் துரோகமிழைத்தான். அவனது நிலை மிகவும் உயர்ந்ததாக வளர்ந்தது, அதன் காரணமாகவே அவன் தேவனுக்குத் துரோகமிழைக்க விரும்பினான். இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூட ஒருவர் கூறலாம், ஆனால் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வும் கூட. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு முதிர்ச்சியடைந்த பின்னரும் ஒருவன் எவ்வாறு தவிர்க்க முடியாமல் மரிக்கிறானோ, இதுவும் அதுபோலத்தான்; விஷயங்கள் இப்போது அந்த நிலைக்கு வளர்ந்திருக்கின்றன. சில அபத்தமான முட்டாள்கள், "சாத்தான் உம் எதிரி என்பதால், நீர் ஏன் அதைச் சிருஷ்டித்தீர்? பிரதான தூதன் உமக்கு துரோகமிழைப்பான் என்று உமக்குத் தெரியாதா? உம்மால் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை பார்க்க முடியவில்லையா? பிரதான தூதனின் இயல்பு உமக்குத் தெரியாதா? அவன் உமக்குத் துரோகமிழைப்பான் என்பதை நீர் தெளிவாக அறிந்திருந்ததால், நீர் ஏன் அவனை ஒரு பிரதான தூதனாக மாற்றினீர்? அவன் உமக்குத் துரோகமிழைத்தது மட்டுமல்லாமல், தன்னுடன் பல தேவதூதர்களையும் வழிநடத்தி, மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்க மனுஷரின் உலகத்திற்கு வந்திறங்கினான். ஆனாலும் இன்றுவரை, உம்மால் உமது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தை முழுமையாக்க முடியவில்லை," என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தைகள் சரியானவையா? நீ இவ்வாறாகச் சிந்திக்கும்போது, அவசியமானதை விட அதிக சிக்கலில் நீ உன்னையே சிக்க வைத்துக் கொள்வதில்லையா? இன்னும் சிலர், "சாத்தான் இன்றுவரை மனிதகுலத்தைச் சீர்கெட்டுப்போக வைக்கவில்லை என்றால், தேவன் இப்படி மனுஷகுலத்தின் இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்க மாட்டார். எனவே, தேவனின் ஞானமும், சர்வவல்லமையும் கண்ணுக்குத் தெரியாததாக இருந்திருக்கும்; அவருடைய ஞானம் எங்கே வெளிப்பட்டிருக்கும்? ஆகவே, தேவன், பின்னர் தனது சர்வவல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகச் சாத்தானுக்கான ஒரு மனித இனத்தை உருவாக்கினார்—இல்லையெனில், தேவனின் ஞானத்தை மனுஷன் எவ்வாறு கண்டுபிடிப்பான்? மனுஷன், தேவனை எதிர்க்கவில்லை அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்யவில்லை என்றால், அவருடைய செயல்கள் வெளிப்படுவது தேவையற்றதாக இருந்திருக்கும். சிருஷ்டிக்கப்பட்டவை அனைத்தும் அவரை வணங்கி அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் செய்ய வேண்டிய எந்தக் கிரியையும் இருந்திருக்காது," என்கின்றனர். இது மெய்மைக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் தேவனைப் பற்றி இழிவானது என்று எதுவுமே இல்லை, எனவே அவரால் அசுத்தத்தை உருவாக்க முடியாது. தன் எதிரியைத் தோற்கடிப்பதற்கும், தாம் படைத்த மனுஷரை இரட்சிப்பதற்கும், மேலும், தேவனை வெறுக்கும், அவருக்குத் துரோகஞ்செய்யும், அவரை எதிர்க்கும் பிசாசுகளையும் சாத்தானையும் தோற்கடிப்பதற்கும் மட்டுமே அவர் தனது கிரியைகளை இப்போது வெளிப்படுத்துகிறார். ஆதியில் பிசாசுகளும், சாத்தானும் தேவனின் ஆதிக்கத்தின் கீழ், அவருக்கே சொந்தமானவையாக இருந்தவை. தேவன் இந்தப் பிசாசுகளை தோற்கடிக்க விரும்புகிறார், அவ்வாறு செய்யும்போது, சகலத்திற்கும் தன் சர்வவல்லமையை வெளிப்படுத்துகிறார். மனுஷகுலமும், பூமியிலுள்ள சகலமும் இப்போது சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, மேலும் பொல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழும் உள்ளன. தேவன் தம் கிரியைகளைச் சகலத்திற்கும் வெளிப்படுத்த விரும்புகிறார், இதனால் ஜனங்கள் அவரை அறிந்துகொள்வார்கள், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடித்து, எதிரிகளை முற்றிலுமாக வெல்வார்கள். இந்தக் கிரியையின் முழுமையானது அவருடைய கிரியைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அவருடைய சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன, எனவே தேவன் தம்முடைய சர்வவல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், இதன் மூலம் சாத்தானைத் தோற்கடிப்பார். சாத்தான் இல்லை என்றால், அவர் தன் கிரியைகளை வெளிப்படுத்தத் தேவையில்லை. சாத்தானின் துன்புறுத்தல் இல்லாதிருந்திருந்தால், தேவன் மனிதகுலத்தைச் சிருஷ்டித்து அதனை ஏதேன் தோட்டத்தில் வாழ வழிநடத்தியிருப்பார். சாத்தானின் துரோகத்திற்கு முன்பு, தேவன் தம்முடைய எல்லாக் கிரியைகளையும் தேவதூதர்களிடமோ அல்லது பிரதான தூதனிடமோ ஏன் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை? ஆரம்பத்தில், எல்லா தேவதூதர்களும், பிரதான தூதனும் தேவனை அறிந்திருந்தால், அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் அந்த அர்த்தமற்ற கிரியைகளைச் செய்திருக்க மாட்டார். சாத்தான் மற்றும் பிசாசுகள் இருப்பதனாலேயே, மனுஷரும் தேவனை எதிர்க்கிறார்கள், மேலும் கலகத்தனமான மனநிலையால் நிரப்பப்படுகிறார்கள். ஆகவே தேவன் தம்முடைய கிரியைகளை வெளிப்படுத்த விரும்புகிறார். அவர் சாத்தானுடன் போர் செய்ய விரும்புவதால், அவனைத் தோற்கடிக்க அவர் தனது சொந்த அதிகாரத்தையும் தன் எல்லாக் கிரியைகளையும் பயன்படுத்த வேண்டும்; இவ்வாறாக, அவர் மனுஷரிடையே செய்யும் இரட்சிப்பின் கிரியை அவர்களை அவரது ஞானத்தையும் சர்வவல்லமையையும் காண அனுமதிக்கும். இன்று தேவன் செய்து வரும் கிரியை அர்த்தமுள்ளதாக இருக்கிறது, "நீர் செய்யும் கிரியை முரண்பாடானதாக இல்லையா? இந்தக் கிரியையின் தொடர்ச்சியானது உமக்குச் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு விஷயமல்லவா? நீர் சாத்தானை சிருஷ்டித்தீர், பின்னர் உமக்குத் துரோகஞ்செய்யவும், எதிர்க்கவும் அவனை அனுமதித்தீர். நீர் மனுஷரைச் சிருஷ்டித்து, பின்னர் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைத்தீர், ஆதாமையும் ஏவாளையும் சோதிக்க அனுமதித்தீர். இவற்றையெல்லாம் நீர் வேண்டுமென்றே செய்ததால், நீர் ஏன் இன்னும் மனிதகுலத்தை வெறுக்கிறீர்? நீர் ஏன் சாத்தானை வெறுக்கிறீர்? இவை அனைத்தும் உம் சொந்தச் சிருஷ்டிப்புக்கள் இல்லையா? நீர் வெறுக்குமளவிற்கு என்ன இருக்கிறது?" என்று ஒரு சில அபத்தமான ஜனங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஒருபோதும் தேவனின் கிரியை ஒப்பாகாது. அவர்கள் தேவனை நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் இருதயத்தின் ஆழத்தில், அவர்கள் தேவனைப் பற்றி குறை கூறுகிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! நீ உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை, உனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பல எண்ணங்கள் உள்ளன, மேலும் தேவன் தவறு செய்ததாகவும் கூட நீ கூறுகிறாய்—நீ எவ்வளவு அபத்தமானவன்! நீதான் சத்தியத்தைத் தவறாகக் கையாளுகிறாய்; தேவன் தவறு செய்திருக்கிறார் என்பது விஷயம் அல்ல! சிலர் மீண்டும் மீண்டும், "நீர்தான் சாத்தானைச் சிருஷ்டித்தீர், நீர்தான் சாத்தானை மனுஷரிடையே அனுப்பி, அவர்களை இவனிடம் ஒப்படைத்தீர். மனுஷர், சாத்தானிய மனநிலையைப் பெற்றதும், நீர் அவர்களை மன்னிக்கவில்லை; மாறாக, நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெறுத்தீர். முதலில் நீர் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தீர், ஆனால் இப்போது நீர் அவர்களை வெறுக்கிறீர். நீர்தான் மனிதகுலத்தை வெறுத்தீர், ஆனாலும் மனிதகுலத்தை நேசித்தவரும் நீரே. இங்கே என்ன தான் நடக்கிறது? இது ஒரு முரண்பாடு அல்லவா?" என்று புகார் கூறுகிறார்கள். நீ அதை எப்படிப் பார்த்தாலும், பரலோகத்தில் இதுதான் நடந்தது; பிரதான தூதன், தேவனுக்குத் துரோகமிழைத்த விதமும், மனிதகுலம் சீர்கெட்டுப்போனதும் இப்படித்தான், மேலும் மனுஷர் இன்றுவரை இப்படித்தான் இருந்துவருகிறார்கள். நீங்கள் அதை எப்படிப்பட்ட விதத்தில் சொல்ல நினைத்தாலும், அதுதான் முழுக் கதை. எவ்வாறாயினும், தேவன் இன்று செய்து வரும் இந்தக் கிரியையின் முழு நோக்கமும் உங்களை இரட்சிப்பதற்காகவும், சாத்தானை தோற்கடிப்பதற்காகவும்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க