தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 148

மார்ச் 24, 2023

பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது; அவரால் எந்த நேரத்திலும் தனது கிரியையைத் திட்டமிட முடியும், எந்த நேரத்திலும் அதைச் செயல்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியானவரின் பணி மெய்மையானது என்றும், அது எப்போதும் புதியது என்றும், ஒருபோதும் பழையது அல்ல என்றும், எப்போதும் மிக உயர்ந்த அளவிற்கு புதியது என்றும் நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்? உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவருடைய கிரியை முன்பே திட்டமிடப்படவில்லை; நடந்தது அதுவல்ல! கிரியையின் ஒவ்வொரு படியும் அந்தந்த நேரத்திற்கு அதன் சரியான முடிவை அடைகிறது, மேலும் அந்தப் படிகள் ஒன்றோடொன்று தலையிடுவதும் இல்லை. அநேக நேரங்களில், நீ மனதில் வைத்திருக்கக்கூடிய திட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் சமீபத்திய கிரியைகளுக்கு ஒப்பாகாது. அவரது கிரியை மனுஷனின் பகுத்தறிவு போன்று எளிமையானதும் அல்ல, மனுஷக் கற்பனையைப் போன்று சிக்கலானதும் அல்ல—இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜனங்களுக்கு அவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதை உள்ளடக்கியது. அவரை விட மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை, மேலும் சரியாக இந்தக் காரணத்திற்காகவே ஜனங்களின் யதார்த்தமான தேவைகளுக்கும், அவருடைய கிரியைகளுக்கும் வேறேதும் பொருந்துவதில்லை. எனவே, மனுஷனின் கண்ணோட்டத்தில், அவருடைய கிரியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இப்போது உங்களிடையே கிரியை செய்கையில், நீங்கள் இருக்கும் நிலைகளை அவர் கவனித்துக் கொண்டே கிரியை செய்யும்போதும் மற்றும் பேசும் போதும்—ஒவ்வொரு விதமான நிலையையும் எதிர்கொண்டு பேச அவரிடம் சரியான வார்த்தைகள் உள்ளன—ஜனங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுகிறார். அவருடைய கிரியையின் முதல் படியை எடுத்துக் கொள்ளுங்கள்: சிட்சிக்கும் நேரம். அதன் பிறகு, ஜனங்கள் எல்லா விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர், மேலும் சில வழிகளில் கலகத்தனமாகவும் நடந்து கொண்டனர்; சில எதிர்மறை நிலைகளைப் போலவே பல்வேறு நேர்மறை நிலைகளும் தோன்றின. அவர்கள் தங்களையே வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் எதிர்மறையான நிலைகளையும், மிகவும் இழிவான வரம்பையும் அடைந்தனர். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தேவன் தம்முடைய கிரியையை நடத்தியுள்ளார், இதனால் அவருடைய கிரியை மூலம் மிகச் சிறந்த முடிவை அடைய அவர்களைக் கைப்பற்றுகிறார். அதாவது, எந்த நேரத்திலும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஜனங்களிடையே நிலையான கிரியையைச் செய்கிறார்; ஜனங்களின் உண்மையான நிலைகளுக்கு ஏற்ப அவர் தனது கிரியையின் ஒவ்வொரு படியையும் செயல்படுத்துகிறார். சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் அவருடைய கைகளில் உள்ளன; அவர் அவர்களை எப்படி அறியாமல் போவார்? ஜனங்களின் நிலைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எங்கும் செய்யப்பட வேண்டிய அடுத்தக் கட்ட கிரியைகளை தேவன் செய்கிறார். எந்த வகையிலும் இந்தக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை; அது மனுஷனின் கருத்து! அவர் தனது கிரியையின் முடிவுகளை அவதானித்துக் கொண்டே கிரியை செய்கிறார், மேலும் அவருடைய கிரியை தொடர்ந்து ஆழமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு முறையும், அவருடைய கிரியையின் முடிவுகளை அவதானித்தபின், அவர் தனது கிரியையின் அடுத்தப் படியை செயல்படுத்துகிறார். அவர் படிப்படியாக மாறுவதற்கும் காலப்போக்கில் தனது புதிய படைப்பை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சகலத்தையும் பயன்படுத்துகிறார். இந்த விதமான கிரியையால் ஜனங்களுக்கான தேவைகளை வழங்க முடியும், ஏனென்றால் தேவன் ஜனங்களை நன்கு அறிவார். இப்படியாகவே அவர் தனது கிரியையைப் பரலோகத்திலிருந்து செயல்படுத்துகிறார். அதேபோல், தேவனின் மனுஷ அவதாரமும் அவருடைய கிரியையை அதே வழியில் செய்கிறது, உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்து ஜனங்களிடையே கிரியை செய்கிறது. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய சிருஷ்டிப்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை, கவனமாக முன்பே திட்டமிடப்படவும் இல்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், மனுஷகுலம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை யெகோவா கண்டார், அதனால் அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வாயைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிந்தபின், கிருபையின் யுகத்தில் மனுஷகுலத்தை மீட்பதற்கான தனது கிரியையைச் செய்வார் என்று யெகோவா முன்னறிவித்தார். இது யெகோவாவின் திட்டமாகும், ஆனால் அந்த நேரத்தில் அவர் அவதானித்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது; ஆதாமைச் சிருஷ்டித்த உடனேயே அவர் நிச்சயமாக அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏசாயா வெறுமனே ஒரு தீர்க்கதரிசனத்திற்கு குரல் கொடுத்தார், ஆனால் யெகோவா நியாயப்பிரமாண யுகத்தில் இந்தக் கிரியைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை; மாறாக, கிருபையின் யுகத்தின் ஆரம்பத்தில் அவர் அதைச் செயல்படுத்தினார்; யோசேப்பின் கனவில் தூதர் தோன்றி, தேவன் மாம்சமாகுவார் என்ற செய்தியை அவருக்குத் தெளிவூட்டினார், அப்போதுதான் அவருடைய மனுஷ அவதாரக் கிரியை தொடங்கியது. ஜனங்கள் கற்பனை செய்தபடி, உலகத்தைச் சிருஷ்டித்த உடனேயே மனுஷ அவதாரம் எடுப்பதற்கு தேவன் தயாராக இருக்கவில்லை; மனுஷகுலம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் சாத்தானுக்கு எதிரான அவரது போரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க