தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 144

டிசம்பர் 19, 2022

இன்று, உங்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனால் நிறைவேற்றப்பட்ட "வார்த்தை மாம்சமாகிறது" என்பதுதான் முக்கியமாக கடைசி நாட்களில் உண்மையாக இருக்கிறது. பூமியில் அவர் செய்த உண்மையான கிரியையின் மூலம், மனிதன் அவரை அறிந்து கொள்ளவும் அவருடன் ஈடுபடவும், மற்றும் அவருடைய உண்மையான செயல்களைக் காணவும் செய்கிறார். அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதையும், அவ்வாறு செய்ய முடியாத காலங்களும் உள்ளன என்பதை அவர் மனிதனைத் தெளிவாகக் காணும்படிச் செய்கிறார்; இது யுகத்தைப் பொறுத்தது. இதிலிருந்து, அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க தேவன் இயலாதவர் அல்ல என்பதை நீ கண்டுகொள்ளலாம், மாறாக செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்பவும், யுகத்திற்கு ஏற்பவும் அவர் செயல்படும் முறையை மாற்றுகிறார். தற்போதைய கிரியையின் கட்டத்தில், அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவில்லை; இயேசுவின் யுகத்தில் அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார், ஏனென்றால் அந்த யுகத்தில் அவருடைய கிரியை வேறுபட்டதாய் இருந்தது. தேவன் இன்று அந்தக் கிரியையைச் செய்யவில்லை, அவரால் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க இயலாது என்று சிலர் நம்புகிறார்கள், இல்லையென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்காவிட்டால், அவர் தேவன் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறானதல்லவா? தேவனால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடியும், ஆனால் அவர் வேறு யுகத்தில் கிரியை செய்கிறார், எனவே அவர் அத்தகைய கிரியையைச் செய்வதில்லை. ஏனென்றால் இது ஒரு வேறுபட்ட யுகம், இது தேவனுடைய கிரியையின் வேறுபட்ட கட்டமாக இருப்பதால், தேவனால் தெளிவுபடுத்தப்பட்ட செயல்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. தேவன் மீதான மனிதனின் நம்பிக்கை என்பது அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மீதான நம்பிக்கை அல்ல, அற்புதங்கள் மீதான நம்பிக்கையும் அல்ல, மாறாக புதிய யுகத்தில் அவருடைய உண்மையான கிரியையின் மீதான நம்பிக்கையாகும். தேவன் செயல்படும் முறையின் மூலம் மனிதன் தேவனை அறிந்துகொள்கிறான், இந்த அறிவு மனிதனில் தேவன் மீது விசுவாசத்தை ஏற்படுத்துகிறது, அதாவது தேவனுடைய கிரியை மற்றும் செயல்களில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்ட கிரியையில், தேவன் முக்கியமாகப் பேசுகிறார். அடையாளங்களையும் அதிசயங்களையும் காண காத்திருக்க வேண்டாம்; நீ எதையும் காண மாட்டாய்! ஏனென்றால், நீ கிருபையின் யுகத்தில் பிறக்கவில்லை. நீ கிருபையின் யுகத்தில் இருந்திருந்தால், நீ அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டிருக்கலாம், ஆனால் நீ கடைசி நாட்களில் பிறந்திருக்கிறாய், எனவே நீ தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் மட்டுமே காண முடியும். கடைசி நாட்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயேசுவைக் காண எதிர்பார்க்க வேண்டாம். எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபடாத மாம்சத்தில் வந்த நடைமுறை தேவனை மட்டுமே நீ காண முடியும். ஒவ்வொரு யுகத்திலும், தேவன் வெவ்வேறு செயல்களைச் செய்கிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவர் தேவனுடைய செயல்களின் தெளிவான பகுதியை உருவாக்குகிறார், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் உள்ள கிரியையானது தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியையும், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியையும் குறிக்கிறது. அவர் செய்யும் செயல்கள் அவர் கிரியை செய்யும் யுகத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றன, ஆனால் அவை அனைத்தும் மனிதனுக்கு தேவனைப் பற்றிய ஆழமான அறிவைக் கொடுக்கின்றன, தேவன் மீதுள்ள விசுவாசம் உண்மையானது, மேலும் அது நடைமுறைக்கேற்றதாகும். தேவனுடைய எல்லா செயல்கள் நிமித்தமும் மனிதன் தேவனை விசுவாசிக்கிறான், ஏனென்றால் தேவன் மிகவும் அதிசயமானவர், மிகப் பெரியவர், ஏனென்றால் அவர் சர்வவல்லமையுள்ளவர், ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாதவர். தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்யக்கூடியவராகவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் கூடியவராக இருப்பதினால் நீ அவரை விசுவாசிக்கிறாய் என்றால், உன் பார்வை தவறானது, மேலும் சில ஜனங்கள் உன்னிடம், "அசுத்த ஆவிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூடுமல்லவா?" என்று கூறுவார்கள். இது தேவனுடைய உருவத்தைச் சாத்தானின் உருவத்துடன் குழப்பமடையச் செய்யவில்லையா? இன்று, தேவன் மீது மனிதன் விசுவாசம் வைப்பது அவருடைய பல கிரியைகளாலும், அவர் செய்யும் பெரும் காரியங்களாலும், அவர் பேசும் பல வழிகளாலும்தான். மனிதனை ஜெயங்கொண்டு அவனைப் பரிபூரணமாக்க தேவன் தமது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதன் தேவனுடைய பல செயல்கள் நிமித்தம் அவரை விசுவாசிக்கிறான், அவரால் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க முடிகிறது என்பதால் அல்ல; ஜனங்கள் தேவனுடைய செயல்களைக் காண்பதால் மட்டுமே அவரை அறிந்து கொள்கிறார்கள். தேவனுடைய உண்மையான செயல்கள், அவர் எவ்வாறு செயல்படுகிறார், அவர் என்னவிதமான ஞானமான முறைகளைப் பயன்படுத்துகிறார், எப்படி பேசுகிறார், மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—அதாவது அவர் எதை விரும்புகிறார், அவர் எதை வெறுக்கிறார், மற்றும் மனிதனின் மீது அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்கிறதான இந்த அம்சங்களை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே—தேவனுடைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். தேவனுடைய விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீ நேர்மறையான மற்றும் எதிர்மறையானவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியும், மேலும் தேவனைப் பற்றிய உன் அறிவின் மூலம் உன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நீ தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவை அடைய வேண்டும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய உன்னுடைய பார்வைகளை நேராக வைக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க