தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 418

நவம்பர் 12, 2020

ஜெபத்தைப் பற்றிய மிகவும் அடிப்படையான அறிவு:

1. மனதிற்கு வருவதெல்லாவற்றையும் கண்மூடித்தனமாகச் சொல்லாதீர்கள். உங்கள் இருதயத்தில் நீங்கள் ஒரு பாரம் கொண்டிருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஜெபிக்கும்பொழுது, நீங்கள் ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

2. ஜெபம் தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தைகளின் மீது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. ஜெபிக்கும் பொழுது, நீங்கள் பழைய பிரச்சனைகளுக்குப் புதிய உருவம் கொடுக்கக் கூடாது. உங்கள் ஜெபம் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஜெபிக்கும்பொழுது, உங்கள் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தேவனிடம் எடுத்துக்கூறுங்கள்.

4. குழு ஜெபம் ஒரு மையத்தைக் கொண்டதாக, முக்கியமாக, பரிசுத்த ஆவியின் தற்போதைய கிரியையை மையப்படுத்தி அமைய வேண்டும்.

5. பரிந்துரை ஜெபத்தை எல்லா மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்வதைக் காண்பிக்கும் ஒரு வழியாகும்.

ஜெபத்தைக் குறித்த அறிவு மற்றும் ஜெபத்தின் முக்கியத்துவம் குறித்த புரிந்துகொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டே ஒரு தனிமனிதனின் ஜெப வாழ்க்கை அமைகின்றது. அனுதின வாழ்க்கையில், உங்கள் குறைபாடுகளுக்காக அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். வாழ்வில் உங்கள் மனநிலையில் மாற்றத்தின் பலனைக் காண ஜெபியுங்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த உங்கள் அறிவின் அடிப்படையில் ஜெபியுங்கள். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான ஜெப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவனின் செயலை அறிந்து கொள்ள நாடி ஜெபிக்கவேண்டும். உங்கள் சொந்த சூழ்நிலைகளைத் தேவனுக்கு முன்பாக அப்படியே வைத்து, நீங்கள் ஜெபிக்கிற வழியைக் குறித்து கவலைப்படாமல் உண்மையாய் இருங்கள். உண்மையான புரிந்து கொள்ளுதலை அடைவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுவதே முக்கிய அம்சமாகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைய முற்படும் ஒருவர் பல வெவ்வேறான வழிகளில் ஜெபிக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அமைதியான ஜெபம், தேவனுடைய வார்த்தைகளின் மீது ஆழ்ந்த தியானம், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறுதல் ஆகிய இவை சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைவதற்கான குறிக்கோளுடன் கூடிய செயலுக்கான உதாரணங்களாகும். இது தேவனுக்கு முன்பாக ஒருவனின் நிலையை மேலும் வளரச் செய்து ஒருபோதும் இல்லாத அளவிற்கு அவனை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்துகின்றது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தையைப் புசித்து, பருகுவது அல்லது அமைதியாக ஜெபிப்பது அல்லது சத்தமாக அறிவிப்பது ஆகிய இவை அனைத்துமே, நீ தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கிரியையையும் மற்றும் அவர் உன்னில் செய்து முடிக்க விரும்புகிறவற்றையும் தெளிவாகப் பார்க்க உனக்கு உதவுகின்றன. மிக முக்கியமாக, நீ செய்கிற இவை அனைத்தும், தேவன் உன்னிடம் எதிர்பார்க்கிற தரத்தை அடையவும், உன் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் உதவுகின்றது. தேவன் மனிதனிடம் வைக்கிற மிகக் குறைந்த கோரிக்கை என்னவென்றால், அவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக திறந்துவைக்க வேண்டும் என்பதாகும். மனிதன் தன் உண்மையான இதயத்தைத் தேவனுக்குக் கொடுத்து, தன் இதயத்தில் உள்ளவற்றை உண்மையாய் எடுத்துக் கூறினால், தேவன் அவனில் கிரியை செய்ய ஆவலாய் இருக்கிறார். தேவன் விரும்புவதெல்லாம் மனிதனின் திருக்குள்ள இருதயம் அல்ல, மாறாகச் சுத்தமும் நேர்மையான இருதயத்தை விரும்புகிறார். மனிதன் தன் இருதயத்திலிருந்து தேவனிடம் பேசாதிருந்தால், தேவனும் அவனுடைய இருதயத்தை அசைக்காமலும் அவனில் கிரியை செய்யாமலும் இருப்பார். ஆகையால், உங்கள் உள்ளத்திலிருந்து தேவனுடன் பேசுதல் உங்கள் குறைபாடுகள் அல்லது கலகத்தனமான மனநிலையைப் பற்றிக் கூறுதல் மற்றும் அவருக்கு முன்பாக உங்களை முழுமையாகத் திறந்து வைத்தல் போன்றவை ஜெபத்தில் மிக முக்கியமான விஷயமாகும். அப்பொழுது மட்டுமே தேவன் உன் ஜெபத்தில் ஆர்வம் உள்ளவராய் இருப்பார். இல்லையெனில் அவர் தன் முகத்தை உன்னிடமிருந்து மறைப்பார். உன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக அமைதியாக காத்துக்கொள்வது மற்றும் அது தேவனை விட்டு விலகாமல் இருக்கச் செய்வதே ஜெபத்தின் குறைந்தபட்ச தகுதி ஆகும். ஒருவேளை இந்தக் கட்டத்தில் புதிய அல்லது உயர்ந்த நுண்ணறிவை நீ பெறவில்லை; எனினும் நீ முன்னிருந்த நிலையைப் பாதுகாத்துப் பராமரிக்க ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ பின்னோக்கி செல்லக்கூடாது. இதுவே மிகக் குறைந்தபட்சம் அடைய வேண்டிய உன் இலக்கு ஆகும். இந்த நிலையைக் கூட நீ அடையத் தவறினால் உன் ஆவிக்குரிய வாழ்க்கை சரியான பாதையில் இல்லை என்பதை அது நிரூபிக்கின்றது. இதன் விளைவாக நீ ஆதியில் கொண்டிருந்த தரிசனத்தை பற்றிக்கொண்டு இருக்க முடியாது, தேவன் மீதான விசுவாசத்தை இழந்து உன் மன உறுதி படிப்படியாக சிதறடிக்கப்பட்டுப் போகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ நுழைந்து இருக்கிறாயா இல்லையா என்பதற்கான அறிகுறி என்னவென்றால்: உன் ஜெபங்கள் சரியான பாதையில் இருக்கின்றனவா என காண்பதாகும். எல்லா ஜனங்களும் இந்த யதார்த்தத்துக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அனைவரும் ஜெபத்தில் தங்களைத் தாங்களே உணர்வுப்பூர்வமாகப் பயிற்றுவித்துக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். செயலற்ற முறையில் காத்திருக்காமல், பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து அசைக்கப்படும்படி முயற்சிக்க வேண்டும். அப்பொழுது மட்டும்தான் அவர்கள் உண்மையாகவே தேவனைத் தேடுகிறவர்களாகக் காணப்படுவார்கள்.

நீங்கள் ஜெபிக்கத் துவங்கும்பொழுது, ஒரேயடியாக எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்று அதிகக் கற்பனை செய்யாதீர்கள் உன் வாயைத் திறந்தவுடனே பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுதல் அல்லது அறிவொளியும் வெளிச்சமும் பெறுதல் அல்லது தேவன் உன்மீது கிருபையை பொழிந்தருளுவார் என்று எதிர்பார்த்தல் போன்ற அதிகப்படியான கோரிக்கைகளை நீ வைக்க முடியாது. அது அப்படி நடைபெறாது. தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. தேவன் ஜனங்களின் ஜெபத்திற்கு அவருடைய சொந்த நேரத்தில் பதிலளிக்கிறார். மேலும், சில சமயங்களில் அவருக்கு முன்பாக நீ உண்மையாய் இருக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பதற்கு உன் விசுவாசத்தை சோதிக்கிறார். நீ ஜெபிக்கும்பொழுது உனக்கு விசுவாசம் விடாமுயற்சி மற்றும் மன உறுதி இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்களைப் பயிற்றுவிக்கத் துவங்கும்பொழுது, பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுவதைப் பெற முடியாததால் சோர்ந்து போய் விடுகிறார்கள். இது செயல்படாது! நீ விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் அசைக்கப்படுவதற்கான உணர்வில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தேடுவதிலும் ஆராய்ந்து அறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீ பயிற்சி செய்யும் வழி சரியானதாக இல்லாமலும் காணப்படும். மேலும் சில சமயங்களில் உன் சொந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனுக்கு முன்பாக நிலைநிற்க முடியாது. ஆகவேதான், தேவ ஆவியால் உன்னை அசைக்க முடிவதில்லை. சிலவேளைகளில், தேவன் நீ உண்மை உள்ளவனா இல்லையா என்பதைக் காண்கின்றார். சுருக்கமாகக் கூறுவதென்றால், பயிற்சியில் நீ மிகுந்த விலைக்கிரயம் செலுத்த வேண்டும். உன் பயிற்சியில் நீ திசை மாற்றம் அடைவதாக உணர்ந்தால் ஜெபம் செய்யும் வழியை மாற்றி அமைக்கலாம். உத்தம இருதயத்துடன் அவரைத்தேடி அவரை அடைய ஏங்கும்பொழுது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னை இந்த உண்மைக்குள் நிச்சயமாகக் கொண்டு வருவார். சில சமயங்களில், நீ உத்தம இருதயத்துடன் ஜெபித்தும், குறிப்பாக நீ அசைக்கப்பட்டதாக உணர்வதில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் நீ விசுவாசத்தைச் சார்ந்திருந்து, தேவன் உன் ஜெபங்களைக் கவனிக்கிறார் என்று நம்ப வேண்டும். உன் ஜெபங்களில் விடாமுயற்சி வேண்டும்.

ஒரு நேர்மையான நபராக இருந்து, இருதயத்தில் உள்ள வஞ்சகத்திலிருந்து விடுபடத் தேவனிடம் ஜெபித்து, எல்லா நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் உன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள். தேவ ஆவியினால் அசைக்கப்பட்டு இருப்பாயாக. அப்பொழுது உன் மனநிலை படிப்படியாக மாறும். உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஜெப வாழ்க்கையாகும். அது பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கையாகும். பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டு இருக்கிற செயல்முறை என்பது மனிதனின் மனநிலையில் உண்டான மாற்றத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படாத வாழ்க்கை ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை அல்ல; மாறாக, அது ஒரு மதச் சடங்கு நிறைந்த ஒரு வாழ்க்கையாக மட்டுமே இருக்கும். அவ்வப்போது பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியினால் அறிவொளியையும், வெளிச்சத்தையும் அடைந்தவர்கள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறார்கள். மனிதனின் மனநிலை அவன் ஜெபிக்கும்பொழுது தொடர்ந்து மாறுகிறது. எவ்வளவுக்கு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் அவனை அசைக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் கிரியை செய்பவனாகவும், கீழ்ப்படிகிறவனாகவும் மாறுகிறான். ஆகவே, இப்படி அவன் இருதயம் படிப்படியாகச் சுத்தப்படுத்தப்பட்டு, அவன் மனநிலை படிப்படியாக மாறுகிறது. இதுவே உண்மையான ஜெபத்தின் பலன் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க