தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 262

மார்ச் 4, 2023

நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய, பக்தியுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக நமது மனதையும் சரீரத்தையும் ஒப்புக்கொடுப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். நமது மனதும் சரீரமும் தேவனுடைய கட்டளைக்காகவும், மனுக்குலத்தின் நீதியான காரணத்திற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்றால், தேவனுடைய கட்டளைக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நமது ஆத்துமாக்கள் தகுதியற்றவையாகவும், சகலத்தையும் நமக்குத் தந்தருளிய தேவனுக்கு மிகவும் தகுதியற்றவையாகவும் உணரும்.

தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே. தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார். தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார். மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன. மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும் தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன. நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனானால், எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன என்பதை நிச்சயமாக நம்புவாய். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியை தேவன் மாத்திரமே அறிவார். இந்த மனுக்குலத்தின் போக்கை தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார். மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால், ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால், மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும், மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்.

நோவா பேழையைக் கட்டிய காலத்தைத் திரும்பிப் பாருங்கள். மனுக்குலம் மிகவும் சீர்கெட்டுப்போயிருந்தது, மக்கள் தேவனுடைய ஆசீர்வாதத்திலிருந்து விலகிப் போயிருந்தார்கள், தேவனால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுடைய ஒளி இல்லாமல் இருளில் வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் இயற்கையால் கட்டுப்படுத்தப்படாதவர்களாகிப் போனார்கள் மற்றும் அருவருப்பான ஒழுக்கக்கேட்டிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களால் இனி தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெறவே இயலாது; இவர்கள் தேவனைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதனாலும், தேவன் அவர்களுக்குத் தந்தருளிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்பதனாலும், தேவனுடைய போதனைகளை மறந்துவிட்டார்கள் என்பதனாலும், இவர்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்கவோ அல்லது தேவனுடைய குரலைக் கேட்கவோ தகுதியில்லாதவர்களாகிவிட்டார்கள். அவர்களுடைய இருதயம் தேவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. அவர்கள் அவ்வாறு விலகிப் போனதனால், அவர்கள் சகல பகுத்தறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டு ஒழுக்கக்கேடானவர்களாகி, மிகவும் தீயவர்களாகிப் போனார்கள். பின்னர் அவர்கள் மரணத்திற்கு நெருக்கமாக நடந்துவந்து, தேவனுடைய உக்கிரக் கோபத்திற்குள்ளும் ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளும் விழுந்துபோனார்கள். நோவா மாத்திரமே தேவனைத் தொழுதுகொண்டு, தீமையை விட்டு விலகினான். அதனால்தான் அவனால் தேவனுடைய குரலையும், அவருடைய வழிகாட்டுதல்களையும் கேட்க முடிந்தது. தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டுதல்களின்படி அவன் பேழையைக் கட்டினான். சகல விதமான ஜீவராசிகளும் பேழைக்குள் ஒன்றுகூடின. இவ்விதமாக, சகலமும் ஆயத்தமானதும், தேவன் தனது அழிவை உலகத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டார். நோவா யேகோவா தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகியதனால், நோவாவும் அவனுடைய குடும்பத்திலுள்ள மற்ற ஏழு பேரும் மாத்திரமே அழிவிலிருந்து தப்பினார்கள்.

இப்போது தற்காலத்தைப் பாருங்கள். தேவனை வழிபட்டு, தீமையை விட்டு விலகிய நோவா போன்ற நீதிமான்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும் இந்த மனுக்குலத்தின் மீது தேவன் இன்னும் கிருபையாக இருக்கிறார். இந்தக் கடைசிக் காலத்திலும் அவர்களை இன்னும் மன்னித்தருளுகிறார். தேவன் தோன்றியருள வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களை தேவன் தேடுகிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கத் திராணியுள்ளவர்களையும், அவருடைய கட்டளையை மறவாதவர்களையும், தங்களுடைய இருதயங்களையும் சரீரங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பவர்களையும் அவர் தேடுகிறார். அவருக்கு முன்பாகக் குழந்தைகளைப் போலக் கீழ்ப்படிகிறவர்களையும், அவருக்கு விரோதமாக இல்லாதவர்களையும் அவர் தேடுகிறார். எந்தவொரு அதிகாரத்திற்கோ அல்லது வல்லமைக்கோ கட்டுப்படாமல் உன்னைத் தேவனுக்கு அர்ப்பணித்தால், தேவன் உன்னை ஆதரவாகப் பார்த்து, அவருடைய ஆசீர்வாதங்களை உன் மீது பொழிந்தருளுவார். நீ உயர் பதவியில் இருந்தும், மேன்மைதாங்கிய நற்பெயர் பெற்றிருந்தும், அளப்பரிய அறிவைப் பெற்றிருந்தும், ஏராளமான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தும் மற்றும் பலரால் ஆதரிக்கப்படுகிறவனாக இருந்தும், இந்தக் காரியங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக வந்து அவருடைய அழைப்பையும் அவருடைய கட்டளையையும் ஏற்றுக்கொள்வதையும், தேவன் உன்னிடம் செய்யச் சொல்வதைச் செய்வதையும் தடுக்கவில்லை என்றால், நீ செய்வது எல்லாம் பூமியில் மிகவும் அர்த்தமுள்ள காரியமாகவும், மனுக்குலத்தின் மிகவும் நீதியான செயலாகவும் இருக்கும். நீ அந்தஸ்துக்காகவும், உன் சொந்த இலக்குகளுக்காகவும் தேவனுடைய அழைப்பை ஏற்க மறுத்தால், நீ செய்யும் அனைத்தும் தேவனால் சபிக்கப்படும் மற்றும் வெறுக்கப்படும். ஒருவேளை நீ ஒரு அதிபராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு போதகராக அல்லது ஒரு மூப்பராக இருந்து, உன் அலுவலகம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், உன் செயல்களில் உன் அறிவையும் திறமையையும் சார்ந்திருந்தால், நீ எப்பொழுதும் தோல்வியாகவே இருப்பாய் மற்றும் எப்பொழுதும் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து காணப்படுவாய். ஏனென்றால், நீ செய்யும் எதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை, உன் செயலை நீதியான ஒன்றாகக் கருதுவதில்லை அல்லது நீ மனுக்குலத்தின் நலனுக்காகச் செயல்படுகிறாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மனுஷனைத் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து நீக்க, மனுக்குலத்தின் அறிவையும் பெலத்தையும் பயன்படுத்தவே நீ எல்லாவற்றையும் செய்கிறாய் என்றும், அது தேவனுடைய ஆசீர்வாதங்களை மறுக்கவே செய்யப்படுகிறது என்றும் அவர் சொல்வார். நீ மனுக்குலத்தை இருளை நோக்கியும், மரணத்தை நோக்கியும், மனுஷன் தேவனையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் இழந்து கட்டுப்படாமல் வாழ்வதற்கான ஆரம்பத்தை நோக்கியும் வழிநடத்துகிறாய் என்று அவர் சொல்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க