தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 255

நவம்பர் 22, 2022

நீ உண்மையிலேயே நித்திய ஜீவனுக்கான வழியைப் பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டால், அதைத் தேடுவதில் நீ வாஞ்சையாக இருந்தால், முதலில் இந்தக் கேள்விக்குப் பதிலளி: தேவன் இன்று எங்கே இருக்கிறார்? "தேவன் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறார், நிச்சயமாக அவர் உன் வீட்டில் வாசம் பண்ணமாட்டார், இல்லையா?" என்று நீ ஒருவேளை பதிலளிக்கலாம். தேவன் வெளிப்படையாக எல்லாவற்றிலும் வாசம் பண்ணுகிறார் என்று நீ ஒருவேளை சொல்லலாம். அல்லது தேவன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார், அல்லது தேவன் ஆவிக்குரிய உலகில் இருக்கிறார் என்று நீ சொல்லலாம். நான் இவற்றில் எதையும் மறுக்கவில்லை, ஆனால் நான் பிரச்சனையைத் தெளிவுபடுத்த வேண்டும். தேவன் மனுஷனுடைய இருதயத்தில் வாசம் பண்ணுகிறார் என்று சொல்வது முற்றிலும் சரியல்ல, ஆனால் அது முற்றிலும் தவறும் அல்ல. ஏனென்றால், தேவனுடைய விசுவாசிகளுக்கு மத்தியில், மெய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், பொய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், தேவன் அங்கீகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் அங்கீகரிக்காதவர்களும் இருக்கிறார்கள், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், அவர் வெறுக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் பரிபூரணமாக்குகிறவர்களும் இருக்கிறார்கள், அவர் புறம்பாக்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையால், ஒரு சிலரின் இருதயங்களிலேயே தேவன் வாசம் பண்ணுகிறார் என்று நான் சொல்கிறேன், இவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனை மெய்யாகவே விசுவாசிப்பவர்களும், தேவன் அங்கீகரிப்பவர்களும், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் மற்றும் அவர் பரிபூரணமாக்குபவர்களும் ஆக இருக்கிறார்கள். அவர்கள் தான் தேவனால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனால் வழிநடத்தப்படுவதால், நித்திய ஜீவனுக்கான தேவனுடைய வழியை ஏற்கனவே கேள்விப்பட்டவர்களும் பார்த்தவர்களுமாக இருக்கிறார்கள். தேவன் மீதான விசுவாசத்தைப் பொய்யாகக் கொண்டிருக்கிறவர்களும், தேவனால் அங்கீகரிக்கப்படாதவர்களும், தேவனால் வெறுக்கப்படுபவர்களும், தேவனால் புறம்பாக்கப்படுபவர்களும் தேவனால் புறக்கணிக்கப்படுவார்கள், அவர்கள் நிச்சயமாக ஜீவனுக்கான வழியில்லாமல் இருக்கிறார்கள் மேலும் தேவன் எங்கே இருக்கிறார் என்பதை நிச்சயமாக அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, யாருடைய இருதயங்களில் தேவன் வாசம் பண்ணுகிறாரோ அவர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்குத்தான் தேவன் நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்கிறார், அவர்கள்தான் தேவனைப் பின்பற்றுகிற ஜனங்களாக இருக்கிறார்கள். தேவன் எங்கே இருக்கிறார் என்று இப்போது உனக்குத் தெரியுமா? தேவன் மனிதனின் இருதயத்திலும் மனிதனின் பக்கத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஆவிக்குரிய உலகில் மட்டுமின்றி, மனிதன் வாழும் பூமியின் மீதும் இன்னும் அதிகமாக வாசம் பண்ணுகிறார். ஆகையால் கடைசி நாட்களின் வருகை தேவனுடைய கிரியையைப் புதிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. சகலத்தின் மீதும் தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் மனிதனுடைய இருதயத்தில் முக்கிய ஆதாரமாக இருக்கிறார். மேலும், அவர் மனிதர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். இவ்விதமாக மாத்திரமே அவர் மனுக்குலத்திற்கு ஜீவனுக்கான வழியைக் கொண்டுவர இயலும், மேலும் மனிதனை ஜீவனுக்கான வழியில் கொண்டுவர இயலும். மனுஷன் ஜீவனுக்கான வழியைப் பெறுவதற்காகவும், மேலும் மனுஷன் ஜீவிப்பதற்காகவும் தேவன் பூமிக்கு வந்து, மனுஷர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். அதே நேரத்தில், தேவன் மனுஷர் மத்தியில் அவர் செய்யும் தமது நிர்வாகத்த்துடன் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு சகலத்திற்கும் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார். ஆகையால், தேவன் பரலோகத்திலும் மனுஷருடைய இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார் என்ற போதனையை மாத்திரமே நீ ஏற்றுக்கொண்டு, மனுஷர்களுக்கு மத்தியில் தேவன் வாசம் பண்ணுகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் சத்தியத்திற்கான வழியைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், போதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, மேலும் அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் ஊட்டத்தை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; வாழ்வின் ஏற்பாடுகளை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகத் தொழுதுகொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாழும்போது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய கிரியை செய்யும் முறையாகவும் இருக்கிறது. கடந்த காலங்கள் முதல் இன்றுவரை தேவன் பேசிய வார்த்தைகளின் பதிவுகளை நீ பயன்படுத்தினால், அது உன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக்குகிறது. மேலும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் நிபுணனாக உன்னை விவரிப்பதே சிறந்த வழியாகும். ஏனென்றால், தேவன் கடந்த காலங்களில் செய்த கிரியையின் அடையாளங்களை நீ எப்போதும் விசுவாசிக்கிறாய், அவர் முன்பு மனுஷர்களுக்கு மத்தியில் கிரியை செய்தபோது விடப்பட்ட தேவனுடைய நிழலை மாத்திரமே விசுவாசிக்கிறாய், மேலும் முந்தைய காலங்களில் தேவன் தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுத்த வழியை மாத்திரமே விசுவாசிக்கிறாய். இன்று தேவனுடைய கிரியையின் வழிகாட்டுதலை நீ விசுவாசிக்கவில்லை, இன்று தேவனுடைய மகிமையான முகத்தை நீ விசுவாசிக்கவில்லை, தற்போது தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் வழியை நீ விசுவாசிக்கவில்லை. ஆகையால் நீ நிச்சயமாகவே நிஜத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு பகல் கனவு காண்கிறவனாக இருக்கிறாய். இப்போது மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்க இயலாத வார்த்தைகளையே நீ பிடித்துக்கொண்டிருந்தால், நீ நம்பிக்கையற்ற ஒரு செத்துப்போன மரக்கட்டையாக இருக்கிறாய். ஏனென்றால் நீ மிகவும் பழமைவாதியாகவும், மிகவும் பிடிவாதமானவனாகவும், பகுத்தறிவுக்கு இடமளிக்காதவனாகவும் இருக்கிறாய்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க