தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 73

மே 16, 2023

தேவன் மெளனமாக இருக்கிறார், நம்மிடம் ஒருபோதும் தோன்றியதில்லை, ஆனாலும் அவருடைய கிரியை ஒருபோதும் ஓய்ந்துவிடவில்லை. அவர் பூமி முழுவதையும் கண்ணோக்கிப் பார்த்து, சகலத்தையும் கட்டளையிடுகிறார், மனுஷனுடைய எல்லா வார்த்தைகளையும் செயல்களையும் பார்க்கிறார். அவர் தனது மேலாண்மையை அளவிடப்பட்ட படிகளுடனும், அவருடைய திட்டத்தின்படியும், மெளனமாகவும், அளப்பரிய பாதிப்பின்றி நடத்துகிறார், அவருடைய அடிச்சுவடுகள் ஒவ்வொன்றாக முன்னேறி, மனுக்குலத்துடன் எப்பொழுதும் நெருக்கமாக இருக்கின்றன. மேலும் அவரது நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவருடைய சிங்காசனம் நம் மத்தியில் உடனடியாக இறங்குகிறது. என்ன ஒரு மாட்சிமையான காட்சி, என்ன ஓர் ஆரவாரமான மற்றும் ஆர்ப்பரிப்பான காட்சி! ஒரு புறாவைப் போலவும், கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும், ஆவியானவர் நமது மத்தியில் வருகிறார். அவர் ஞானமாயிருக்கிறார், அவர் நீதியாகவும் மாட்சிமையாகவும் இருக்கிறார், அவர் நமது மத்தியில் இரகசியமாக வருகிறார், அதிகாரம் செலுத்துகிறார், அன்பும் கிருபையும் நிறைந்தவராக இருக்கிறார். அவருடைய வருகையை ஒருவரும் அறியார், அவருடைய வருகையை ஒருவரும் வரவேற்கவில்லை, மேலும் என்னவென்றால், அவர் செய்யவிருக்கும் அனைத்தையும் ஒருவரும் அறியார். மனிதனின் வாழ்க்கை முன்பைப் போலவே செல்கிறது, அவனுடைய இருதயத்தில் மாறுபாடில்லை, நாட்கள் வழக்கம் போல் செல்கின்றன. பிற மனுஷர்களுக்கு மத்தியில் ஒரு மனுஷன் வாசம்பண்ணுவது போலவும், எளிய விசுவாசிகளில் ஒருவரைப் போலவும், ஒரு சாதாரண விசுவாசியைப் போலவும் தேவன் நமக்கு மத்தியில் வாசம்பண்ணுகிறார். அவர் தமது சொந்த நோக்கங்களையும், தமது சொந்த குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்; மேலும் என்னவென்றால், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்காத தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார். அவருடைய தெய்வீகத்தன்மை இருப்பதை யாரும் கண்டதில்லை, அவருடைய சாராம்சத்திற்கும் மனிதனுடைய சாராம்சத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவரும் புரிந்துகொண்டதில்லை. நாம் அவருடன் சேர்ந்து கட்டுப்படுத்தப்படாமலும் பயப்படாமலும் ஜீவிக்கிறோம், ஏனென்றால் நமது பார்வையில் அவர் ஓர் அற்பமான விசுவாசியாகவே இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் அவர் உற்றுநோக்கிப் பார்க்கிறார், நம்முடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் அனைத்தும் அவருக்கு முன்பாக வெளியரங்கமாக வைக்கப்பட்டுள்ளன. அவருடைய இருப்பின் மீது ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை, அவருடைய செயல்பாடு குறித்து ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவில்லை, மேலும் என்னவென்றால், அவருடைய அடையாளம் குறித்து யாருக்கும் லேசான சந்தேகமும் இல்லை. அவருக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல, நமது நோக்கங்களை மட்டுமே நிறைவேற்றுகிறோம்…

ஒருவேளை, பரிசுத்த ஆவியானவர் அவர் "மூலமாக" ஒரு பத்தி வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் என்றால், அது மிகவும் எதிர்பாராததாக உணர்ந்தாலும், நாம் அதை தேவனிடமிருந்து வரும் ஒரு வார்த்தையாக உணர்ந்து, உடனடியாக அதை தேவனிடமிருந்து ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், இந்த வார்த்தைகளை யார் வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருவதனால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை மறுக்கக்கூடாது. அடுத்த வார்த்தை என் மூலமாகவோ அல்லது உன் மூலமாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ வரலாம். அது யாராக இருந்தாலும், எல்லாம் தேவனுடைய கிருபையாகும். ஆனாலும், அது யாராக இருந்தாலும், நாம் இந்த நபரை தொழுதுகொள்ள இயலாது, என்னவாக இருந்தாலும், இந்த நபர் தேவனாக இருக்க இயலாது, இதுபோன்ற எந்தவொரு சாதாரண மனிதனையும் எக்காரணம் கொண்டும் நமது தேவனாக தேர்ந்தெடுக்க மாட்டோம். நமது தேவன் மிகவும் பெரியவர், கனத்திற்குரியவர்; இதுபோன்றதொரு அற்ப நபர் எப்படி அவருடைய இடத்தில் நிற்க முடியும்? மேலும் என்னவென்றால், தேவன் வந்து நம்மை மீண்டும் பரலோகராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நாம் காத்திருக்கிறோம், ஆகையால் மிகவும் அற்பமான ஒருவர் இதுபோன்றதொரு முக்கியமான மற்றும் கடினமான பணியை எவ்வாறு செய்ய இயலும்? கர்த்தர் மறுபடியும் வந்தால், எல்லா ஜனங்களும் பார்க்கும் வண்ணமாக அவர் வெண் மேகத்தின் மீது இருக்க வேண்டும். அது எவ்வளவு மகிமையுள்ளதாக இருக்கும்! சாதாரண ஜனங்கள் மத்தியில் அவர் தம்மை இரகசியமாக ஒளித்துக்கொள்வது எப்படிச் சாத்தியமாகும்?

ஆனாலும், இந்தச் சாதாரண மனிதர்தான் ஜனங்கள் மத்தியில் மறைந்திருந்து, நம்மை இரட்சிக்கும் புதிய கிரியையை நடப்பிக்கிறார். அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை, அவர் ஏன் வந்தார் என்றும் அவர் நம்மிடம் சொல்வதில்லை, ஆனால் அவருடைய திட்டத்தின் படி அளவிடப்பட்ட படிகளைக் கொண்டு தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார். அவருடைய வார்த்தைகளும் சொற்களும் அடிக்கடி வெளிப்படுகின்றன. ஆறுதல் செய்தல், அறிவுரை வழங்குதல், நினைவூட்டுதல் மற்றும் எச்சரித்தல் முதல் கண்டித்தல் மற்றும் சிட்சித்தல் வரை; மென்மையான மற்றும் கனிவான ஒரு தொனி முதல் மிகவும் கடுமையான மற்றும் கம்பீரமான வார்த்தைகள் வரை என இவை அனைத்தும் மனிதன் மீது இரக்கத்தைப் பொழிகின்றன, அவனுக்குள் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. அவர் கூறும் அனைத்தும் நமக்குள் மறைந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன; அவருடைய வார்த்தைகள் நமது இருதயங்களைக் குத்துகின்றன, நம்முடைய ஆவிகளைக் குத்துகின்றன, நம்மைத் தாங்கமுடியாத அவமானத்தால் நிரப்புகின்றன, நம்மை எங்கே மறைத்துக்கொள்வது என்று தெரிவதில்லை. இந்த மனிதரின் இருதயத்திலுள்ள தேவன் மெய்யாகவே நம்மில் அன்புகூர்கிறாரா மற்றும் அவர் சரியாக என்ன செய்கிறார் என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கிறோம். ஒருவேளை நாம் இந்தப் பாடுகளைச் சகித்த பிறகே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? வரப்போகும் முடிவைப் பற்றியும் எதிர்காலத் தலைவிதியைப் பற்றியும் நமது மனதில் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆயினும், முன்பு போலவே, நமது மத்தியில் கிரியையைச் செய்வதற்கு தேவன் ஏற்கெனவே மாம்ச ரூபமெடுத்தார் என்று நம்மில் யாரும் நம்புவதில்லை. அவர் இவ்வளவு நீண்ட காலமாக நம்முடனே இருந்தபோதிலும், அவர் ஏற்கெனவே நம்முடன் பல வார்த்தைகளை முகமுகமாகப் பேசியிருந்தபோதிலும், இதுபோன்றதொரு சாதாரண மனிதனை நமது எதிர்காலத்தின் தேவனாக ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை, இன்னும் சொல்லப்போனால் நமது எதிர்காலம் மற்றும் நமது தலைவிதியின் கட்டுப்பாட்டை இந்த அற்பமான நபரிடம் ஒப்படைக்கவும் நாம் தயாராக இல்லை. நாம் அவரிடமிருந்து ஜீவ தண்ணீரை அளவில்லாமல் பெற்று அனுபவிக்கிறோம், அவர் மூலமாக நாம் தேவனை முகமுகமாகப் பார்த்து ஜீவிக்கிறோம். ஆனால், நாம் பரலோகத்திலுள்ள கர்த்தராகிய இயேசுவின் கிருபைக்கு மாத்திரமே நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறோம், மேலும் தெய்வீகத்தன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தச் சாதாரண மனிதனின் உணர்வுகளுக்கு நாம் ஒருபொழுதும் செவிசாய்த்ததில்லை. ஆயினும், முன்பு போலவே, மனுக்குலம் தன்னைப் புறக்கணிப்பதை அறியாதவர் போலவும், மனுஷனின் குழந்தைத்தனத்தையும் அறியாமையையும் நித்தியமாக மன்னிப்பதைப் போலவும், தம் மீது மனிதனுக்கு உண்டான பயபக்தியற்ற மனப்பான்மையை சதாகாலங்களிலும் சகித்துக்கொள்வது போலவும் அவர் மாம்சத்தில் மறைந்திருந்து தமது கிரியையை மனத்தாழ்மையுடன் நடப்பித்து தமது உள்ளார்ந்த இருதயத்தை வெளிப்படுத்துகிறார்.

நமக்குத் தெரியாமலே, இந்த அற்பமான மனிதர் தேவனுடைய கிரியைக்கு நம்மை படிப்படியாக வழிநடத்திச் சென்றிருக்கிறார். நாம் எண்ணற்ற உபத்திரவங்களுக்கு ஆளாகிறோம், எண்ணற்ற ஆக்கினைத்தீர்ப்புகளைச் சுமக்கிறோம், மரணத்தால் சோதிக்கப்படுகிறோம். நாம் தேவனுடைய நீதியான மற்றும் மாட்சிமையான மனநிலையைப் பற்றி அறிந்துகொள்கிறோம். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம். தேவனுடைய மாபெரும் வல்லமையையும் ஞானத்தையும் பாராட்டுகிறோம். தேவனுடைய அழகைக் காண்கிறோம், மேலும் மனிதனை இரட்சிப்பதற்கான தேவனுடைய ஆவல்மிக்க வாஞ்சையையும் காண்கிறோம். இந்த சாதாரண மனிதனின் வார்த்தைகளில், தேவனுடைய மனநிலையையும் இயல்பையும் அறிந்துகொள்கிறோம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்கிறோம், மனிதனுடைய சுபாவத்தையும் சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறோம், இரட்சிப்புக்கும் பரிபூரணமாவதற்குமான வழியைக் கண்டடைகிறோம். அவருடைய வார்த்தைகள் நம்மை "மரிக்கச்" செய்கின்றன, மேலும் அவை நம்மை "மறுபடியும் பிறக்கச்" செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு ஆறுதலளிக்கின்றன, ஆனாலும் அவை நம்மை குற்ற உணர்ச்சியினாலும், கடன்பட்ட உணர்வினாலும் நம்மை நொறுங்கிப்போகச் செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு அக்களிப்பையும் சமாதானத்தையும் தந்தருளுகின்றன, ஆனால் முடிவில்லா வேதனையையும் தருகின்றன. சில நேரங்களில் நாம் அவருடைய கரங்களில் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படுகிற ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய கண்ணின் மணியைப் போன்றவர்களாக இருக்கிறோம், மேலும் அவருடைய இதமான அன்பை அனுபவிக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய எதிரியைப் போல இருக்கிறோம், மேலும் அவருடைய பார்வையின் கீழ் அவருடைய கோபாக்கினையால் சாம்பலாகிவிடுகிறோம். நாம் அவரால் இரட்சிக்கப்பட்ட மனித இனம், நாம் அவருடைய கண்களில் புழுக்களைப் போல இருக்கிறோம். நாம் காணாமற்போன ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். இரவும் பகலும், அவர் நம்மை இடைவிடாமல் தேடுகிறார். அவர் நம்மீது இரக்கமுள்ளவராகவே இருக்கிறார், அவர் நம்மை வெறுக்கிறார், அவர் நம்மை உயர்த்துகிறார், அவர் நமக்கு ஆறுதலளிக்கிறார், நமக்குப் புத்திசொல்கிறார், அவர் நமக்கு வழிகாட்டுகிறார், அவர் நமக்கு அறிவூட்டுகிறார், அவர் நம்மை சிட்சிக்கிறார், சீர்படுத்துகிறார், அவர் நம்மைச் சபிக்கவும் செய்கிறார். இரவும் பகலும், அவர் நம்மைப் பற்றி கவலைப்படுவதிலிருந்து ஒருபொழுதும் ஓய்வதில்லை, மேலும் இரவும் பகலும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார், நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறார், அவர் ஒருபொழுதும் நம்மைக் கைவிடுவதில்லை, ஆனால் நமக்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், மேலும் நமக்காக எந்தவொரு விலைக்கிரயத்தையும் கொடுக்கிறார். இச்சிறிய மற்றும் சாதாரண மாம்ச உடலின் வார்த்தைகளுக்குள், நாம் தேவனை முழுமையாக அனுபவித்திருக்கிறோம் மற்றும் தேவன் நம்மீது சுமத்திய தலைவிதியைக் காண்கிறோம். இவ்வாறு இருப்பினும், வீணானது இன்னும் நமது இருதயங்களுக்குள் குழப்பத்தை கிளறிவிடுகிறது, மேலும் இதுபோன்ற ஒருவரை நமது தேவனாக தீவிரமாக ஏற்றுக்கொள்ள நாம் இன்னும் மனதில்லாதவர்களாகவே இருக்கிறோம். நாம் மிகவும் அதிகமாக அனுபவிப்பதற்காக அவர் நமக்கு மிகவும் அதிகமான மன்னாவைத் தந்தருளியபோதிலும், இது எதுவுமே நமது இருதயத்தில் கர்த்தருக்கு இடமளிக்க இயலவில்லை. இந்த மனிதருடைய விசேஷித்த அடையாளத்தையும் நிலையையும் மிகவும் தயக்கத்துடன் மாத்திரமே கனப்படுத்துகிறோம். அவர் தேவன் என்பதை ஒப்புக்கொள்ளுமாறு அவர் நம்மிடம் கேட்டுக்கொள்ள வாய் திறக்காத வரை, நாம் அவரை சீக்கிரமே வரப்போகிற தேவனாகவும், நீண்ட காலமாகவே நமது மத்தியில் கிரியையை நடப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்வதற்கு நாம் ஒருபொழுதும் முன்வர மாட்டோம்.

தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தியும், அதே நேரத்தில் அவருடைய இருதயத்தில் பேசியும் தமது வார்த்தைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவருடைய வார்த்தைகள் ஜீவ வல்லமையைத் தாங்கியுள்ளன, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன, சத்தியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவருடைய வார்த்தைகளால் நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம், அவர் பேசும் தொனியிலும் விதத்திலும் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம், மேலும் நம்மை அறியாமலேயே இந்தச் சாதாரண மனிதனுடைய ஆழ்மன உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம். அவர் நமது சார்பாகக் கிரியையைச் செய்வதற்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், நம் நிமித்தமாக அவர் தூக்கத்தையும் பசியையும் தொலைக்கிறார், நமக்காக அழுகிறார், நமக்காகப் பெருமூச்சு விடுகிறார், நமக்காக நோயினால் அவதிப்படுகிறார், நமது முடிவுக்காகவும் இரட்சிப்பிற்காகவும் அவமானத்தை அனுபவிக்கிறார். நமது உணர்ச்சியற்ற நிலையும் கலகக் குணமும் அவருடைய இருதயத்திலிருந்து கண்ணீரையும் இரத்தத்தையும் வரவழைக்கிறது. இவ்வாறு இருப்பதும் எந்தவொரு சாதாரண மனுஷனுக்கும் சொந்தமானவராக இல்லாதிருப்பதும், எந்தவொரு கேடான மனுஷனாலும் பெற்றிருக்கவோ அல்லது அடையவோ இயலாததாக இருக்கிறது. எந்தவொரு சாதாரண மனுஷனிடமும் இல்லாத சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அவர் காட்டுகிறார், மேலும் அவருடைய அன்பானது எந்தவொரு சிருஷ்டியிடத்திலும் காணப்படாத ஒன்றாகும். அவரைத் தவிர வேறு யாராலும் நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவோ அல்லது நமது சுபாவத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் புரிந்துகொள்ளவோ அல்லது மனுக்குலத்தின் கலகக் குணத்தையும் சீர்கேட்டையும் நியாயந்தீர்க்கவோ அல்லது நம்மிடம் பேசவோ, பரலோக தேவனின் சார்பாக இதுபோல நமது மத்தியில் கிரியை செய்யவோ முடியாது. அவரைத் தவிர வேறு யாரிடமும் தேவனுடைய அதிகாரமும், ஞானமும் மற்றும் மேன்மையும் கிடையாது; தேவனுடைய மனநிலையும் மற்றும் தேவனிடம் இருப்பதும், தேவன் யார் என்பதும் அவருக்குள் அவர்களுடைய பரிபூரணத்தில் உண்டாகின்றன. அவரைத் தவிர வேறு யாரும் நமக்கு வழியைக் காட்டவும் வெளிச்சத்தைக் கொண்டுவரவும் இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரை தேவன் வெளிப்படுத்தாத மறைபொருட்களை வெளிப்படுத்த இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், நம்முடைய சொந்த, கேடான மனநிலையிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயலாது. அவர் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தேவனுடைய மிகவும் ஆழமான இருதயத்தையும், தேவனுடைய அறிவுரைகளையும், சகல மனுஷர்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு புதிய யுகத்தையும், ஒரு புதிய சகாப்தத்தையும் ஆரம்பித்துள்ளார், மேலும் ஒரு புதிய வானத்தையும் பூமியையும் புதிய கிரியையையும் ஆரம்பித்துள்ளார். மேலும், அவர் நாம் தெளிவில்லாமல் வாழ்ந்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாகவும், நமது முழு சரீரமும் இரட்சிப்பின் பாதையை முற்றிலும் தெளிவாகக் காண்பதற்கு உதவியதன் மூலமாகவும் அவர் நமக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளார். அவர் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நமது இருதயங்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார். அந்தத் தருணம் முதல், நமது மனங்கள் உணர்வுள்ளதாகிவிட்டன, நமது ஆவிகள் புத்துயிர் பெற்றது போலத் தோன்றுகின்றன: நமது மத்தியில் வாசம்பண்ணும், நீண்ட காலமாக நம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்தச் சாதாரண, அற்பமான மனிதர் நமது எண்ணங்களிலும் நடையிலும் அல்லது கனவிலும் எப்பொழுதும் வீற்றிருப்பவரும் மற்றும் இரவும் பகலும் நாம் ஏங்கித்தவிக்கக் கூடியவரும் கர்த்தராகிய இயேசுதானல்லவா? அவரேதான் அது! உண்மையில் அவரேதான் அது! அவரே நமது தேவன்! அவரே நமது, சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்! நாம் மீண்டும் ஜீவிக்கவும், ஒளியைக் காணவும் நமக்கு உதவியிருக்கிறார், மேலும் நமது இருதயங்கள் அலைந்து திரிவதைத் தடுத்தாட்கொண்டுள்ளார். நாம் தேவனுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளோம், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் திரும்பியுள்ளோம், நாம் அவரை முகமுகமாக பார்க்கிறோம், நாம் அவருடைய முகத்தைக் கண்டிருக்கிறோம், நமக்கு முன்னால் உள்ள பாதையையும் பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில், நம்முடைய இருதயங்கள் அவரால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்படுகின்றன; அவர் யார் என்று நாம் இனிமேலும் சந்தேகப்படுவதில்லை, அவருடைய கிரியையையும் அவருடைய வார்த்தையையும் இனிமேலும் எதிர்ப்பதில்லை, மேலும் அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நமது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதையும், அவரால் பரிபூரணமாக்கப்படுவதையும், அவருடைய கிருபையைத் திருப்பிச் செலுத்துவதையும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைத் திருப்பிச் செலுத்துவதையும், அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதையும், அவருடைய கிரியைக்கு ஒத்துழைக்கவும், அவர் நம்மிடம் ஒப்படைத்ததைச் செய்து முடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதையும் தவிர நாம் வேறு எதையும் செய்யப் பிரயாசப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பிற்சேர்க்கை 4: தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க