தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 72

ஜனவரி 29, 2023

நீ அமெரிக்கனாகவோ, ஆங்கிலேயனாகவோ, அல்லது வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், உன் சொந்தத் தேசத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும், உன் சுயத்தைக் கடந்து, தேவனின் கிரியையை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். இந்த வழியில், நீ தேவனின் அடிச்சுவடுகளில் வரம்புகளை விதிக்க மாட்டாய். ஏனென்றால், இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தேவன் தோன்றுவார் என்பது கூடாத காரியம் என்று பலர் கருதுகிறார்கள். தேவனின் கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு ஆழமானது, தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது! மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? எனவே நான் சொல்கிறேன், தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீ தேசியம் மற்றும் இனம் என்னும் கருத்துக்களை உடைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீ உன் சொந்தக் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட மாட்டாய்; இதன் மூலம் மட்டுமே தேவன் தோன்றுதலை வரவேற்க நீ தகுதி பெறுவாய். இல்லையெனில், நீ நித்திய இருளில் இருப்பாய், ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டாய்.

தேவன் முழு மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் தம்மை எந்தவொரு தேசத்தின் அல்லது மக்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதில்லை, ஆனால் அவர் எந்தவொரு வடிவத்துக்குள்ளும், தேசத்திற்குள்ளும், மக்களுக்குள்ளும் அடங்காமல், திட்டமிட்டபடி தமது கிரியையைச் செய்கிறார். ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை இந்த வடிவத்தை ஒரு வகையில் மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை தேவன் தம்மை வெளிப்படுத்தும் தேசம் மற்றும் அவர் தம்மை யார் மத்தியில் வெளிப்படுத்துகிறாரோ அந்த மக்கள் ஆகியோர், அனைவராலும் பாகுபாடு காட்டப்படுபவர்களாகவும், பூமியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவும் இருக்க நேரிடலாம். எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது. அவருடைய மகா வல்லமையினாலும், அவருடைய சத்தியத்தினாலும், அவருடைய மனநிலையினாலும், அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு ஜனக்கூட்டத்தையும், அவர் முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்கூட்டத்தையும் அவர் உண்மையிலேயே ஆதாயப்படுத்தியிருக்கிறார்—இது அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட, எல்லா விதமான சோதனைகளையும் உபத்திரவங்களையும், எல்லா விதமான துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு, அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்ற ஒரு ஜனக்கூட்டமாகும். எந்தவொரு வடிவத்திற்கும் அல்லது தேசத்திற்கும் உட்படாத தேவன் தோன்றுவதன் நோக்கம் என்னவென்றால், அவர் திட்டமிட்டபடி அவரது கிரியையைச் செய்து முடிக்க அவருக்கு உதவுவதாகும். யூதேயாவில் தேவன் மாம்சமானது போலவே இதுவும் உள்ளது: மனித இனம் முழுவதையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும் கிரியையை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆயினும் யூதர்கள் இது தேவனால் கூடாத காரியம் என்று நம்பினர், மேலும் தேவன் மாம்சமாகி, கர்த்தராகிய இயேசுவின் ரூபத்தை ஏற்பது கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய "கூடாத காரியம்" அவர்கள் தேவனைக் கண்டித்து எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது, இறுதியில் இஸ்ரவேலின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்று, பலர் இதே போன்ற தவறைச் செய்துள்ளனர். தேவனுடைய உடனடி தோற்றத்தை அவர்கள் தங்கள் முழு பலத்தோடும் பறைசாற்றுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவருடைய தோற்றத்தைக் கண்டிக்கிறார்கள்; அவர்களுடைய "கூடாத காரியம்" தேவன் தோன்றுவதை அவர்களின் கற்பனையின் எல்லைக்குள் மீண்டும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, தேவனுடைய வசனங்களைக் கேட்ட பிறகு பலர் பலத்த, கடுமையான நகைப்பினால் பரியாசம்பண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நகைப்பு யூதர்களின் ஆக்கினையிலிருந்தும், தேவ தூஷணத்திலிருந்தும் வேறுபட்டதா? சத்தியத்தின் முன்னிலையில் நீங்கள் பயபக்தியுடன் இல்லை, அதிலும் நீங்கள் ஏக்கத்தின் மனப்பான்மையைக் கொண்டிருப்பதில்லை. நீ செய்வதெல்லாம் பகுத்தறியாமல் படிப்பது மற்றும் அக்கறையற்ற மகிழ்ச்சியுடன் காத்திருப்பது மட்டுமே. இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும் உன்னால் என்ன பெற முடியும்? நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவாய் என்று நினைக்கிறாயா? தேவனுடைய வசனங்களை நீ நிதானித்து அறிய முடியாவிட்டால், தேவன் தோன்றுவதைக் காண நீ எந்த வகையில் தகுதியுடையவன்? தேவன் எங்கெல்லாம் தோன்றியிருக்கிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய தோற்றத்தைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீ அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். "கூடாத காரியம்" பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தம்மை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய சாராம்சம் ஒருபோதும் மாறாது. தேவனின் அடிச்சுவடுகள் எங்கு இருந்தாலும் அவருடைய மனநிலை மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் அடிச்சுவடுகளும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் வெளிப்படையாக இருக்கின்றன. அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த வார்த்தைகளில் தேவனின் தோன்றுதலைக் காண முடியும் என்று நம்புகிறேன், புதிய காலத்திற்கு முன்னேறிச் செல்கையில் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கி, தேவன் தோன்றுவதற்காக காத்திருப்பவர்களுக்குத் தேவன் ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் நுழைந்திடுங்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க