தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 70

அக்டோபர் 20, 2022

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த ஜனங்களின் மத்தியில், ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நேரில் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் ஏங்குகிறான். இரட்சகர் திரும்பி வந்து மீண்டும் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் மனிதன் ஏங்குகிறான். அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களிடமிருந்து பிரிந்த இரட்சகராகிய இயேசு திரும்பி வருவதற்கும், யூதர்களிடையே அவர் செய்த மீட்பின் கிரியையை மீண்டும் செய்வதற்கும், மனிதனிடம் இரக்கமுள்ளவராகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறான். மனிதனுடைய பாவங்களை மன்னித்து, மனிதனுடைய பாவங்களைச் சுமந்து, மனிதனுடைய எல்லா மீறுதல்களையும் தாங்கி, மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். மனிதன் எதற்காக ஏங்குகிறான் என்றால், இரட்சகராகிய இயேசு முன்பு போலவே இருக்க வேண்டும் என்று, அதாவது இரட்சகர் அன்பானவராக, கனிவானவராக, மரியாதைக்குரியவராக, மனிதனிடம் ஒருபோதும் கோபப்படாதவராக, மனிதனை ஒருபோதும் நிந்திக்காதவராக, ஆனால் மனிதனுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்பவராக, முன்பு போலவே, மனிதனுக்காகச் சிலுவையில் மரிப்பவராக இருக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். இயேசு புறப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்றிய சீஷர்களும், அவருடைய நாமத்தில் இரட்சிக்கப்பட்ட எல்லா பரிசுத்தவான்களும், அவருக்காக மிகுதியாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். கிருபையின் யுகத்தில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இரட்சிக்கப்பட்ட அனைவருமே, இரட்சகராகிய இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி, எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும் அந்த மகிழ்ச்சியான கடைசி நாட்களுக்காக, ஏங்குகிறார்கள். இன்று, இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரின் ஒருமித்த விருப்பமும் இதுதான். இட்சகராகிய இயேசுவின் இரட்சிப்பை அறிந்திருக்கும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தாம் திடீரென வந்து நிறைவேற்றுவேன் என்று சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்: "நான் புறப்பட்டபடியே திரும்பி வருவேன்." சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார் என்று மனிதன் விசுவாசிக்கிறான். இதைப் போலவே, இயேசு மீண்டும் ஒரு வெண்மேகத்தின் மீது (இந்த மேகமானது இயேசு பரலோகத்திற்குத் திரும்பியபோது ஏறிச்சென்ற அதே மேகத்தைக் குறிக்கிறது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்களின் மத்தியில் அதே உருவத்துடனும் யூத வஸ்திரங்களுடனும் இறங்கி வருவார். அவர் மனிதனுக்குத் தோன்றியபின், அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுப்பார், மேலும் அவர்களுக்காக ஜீவத்தண்ணீரைப் பாயச்செய்வார் மற்றும் மனிதர்களிடையே கிருபையும் அன்பும் நிறைந்த ஒருவராக, தெளிவானவராக மற்றும் உண்மையானவராக ஜீவிப்பார். இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் ஜனங்கள் நம்புகின்றனர். ஆயினும், இரட்சகராகிய இயேசு இதைச் செய்யவில்லை. மனிதன் எண்ணியதற்கு நேர்மாறாக அவர் செய்தார். அவர் திரும்பி வர வேண்டுமென ஏங்கியவர்களிடையே அவர் வரவில்லை. வெண்மேகத்தின் மீது வரும் போது எல்லா ஜனங்களுக்கும் அவர் காட்சியளிக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார், ஆனால் மனிதன் இதை அறியாமல் அறிவில்லாதிருக்கிறான். ஒரு "வெண்மேகத்தின்" மீது (அந்த மேகமானது அவரது ஆவியாகிய மேகம், அவருடைய வார்த்தைகள், அவருடைய முழு மனநிலை மற்றும் அவருடைய எல்லாம்) அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதையும், கடைசி நாட்களில் தாம் உருவாக்கும் ஒரு ஜெயங்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இப்போது அவர் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாமலேயே, அவருக்காக அவன் காரணமில்லாமல் காத்திருக்கிறான். மனிதனுக்கு இது தெரியாது: பரிசுத்த இரட்சகராகிய இயேசு மனிதனிடம் நேசத்துடனும் அன்புடனும் இருந்தபோதிலும், அசுத்தமான மற்றும் தூய்மையற்ற ஆவிகள் வசிக்கும் அந்த "தேவாலயங்களில்" அவர் எவ்வாறு கிரியை செய்ய முடியும்? மனிதன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், பாவிகளுடைய மாம்சத்தை புசிப்பவர்களுடனும், இரத்தத்தைக் குடிப்பவர்களுடனும், அவர்களுடைய வஸ்திரங்களை உடுத்துபவர்களுடனும், தேவனை விசுவாசித்தப் பின்னரும் அவரை அறியாதவர்களுடனும், அவரைத் தொடர்ந்து சுரண்டுபவர்களுடனும் அவர் எவ்வாறு இருக்க முடியும்? இரட்சகராகிய இயேசு அன்பு நிறைந்தவர் என்பதையும், இரக்கத்தால் நிரம்பி வழிகிறார் என்பதையும், மீட்பால் நிரப்பப்பட்ட பாவநிவாரண பலி என்பதையும் மட்டுமே மனிதன் அறிந்திருக்கிறான். இருப்பினும், அவர் தான் தேவன் என்பதையும், அவர் நீதியுடனும், மாட்சிமையுடனும், கோபத்துடனும், நியாயத்தீர்ப்புடனும், அதிகாரம் உடையவராகவும், கண்ணியமானவராகவும் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாதிருக்கிறான். ஆகையால், மீட்பர் திரும்பி வர வேண்டுமென மனிதன் ஆவலுடன் ஏங்கினாலும், அவர்களுடைய ஜெபங்கள் "பரலோகத்தையே" அசைத்தாலும், இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்தும் அவரை அறியாத மனிதருக்கு அவர் காட்சியளிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க