தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 356

வெளிச்சமில்லாத உலகத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதனால், உன் இருதயத்தில் ஒரு மிகப்பெரிய இரகசியம் இருக்கின்றதை உன்னால் அறிய முடியவில்லை. பொல்லாங்கனால் உன் இருதயமும் ஆவியும் பிடுங்கப்பட்டுள்ளன. உன் கண்கள் இருளடைந்திருப்பதால், வானத்தின் சூரியனையும், இரவில் மின்னும் நட்சத்திரத்தையும் உன்னால் காணமுடியவில்லை. உன் காதுகள் வஞ்சகம் நிறைந்த வார்த்தைகளினால் அடைக்கப்பட்டிருப்பதினால், யேகோவாவின் இடிமுழக்கம்போன்ற குரலையும், அவருடைய சிங்காசனத்தில் இருந்து பாயும் தண்ணீர்களின் சத்தத்தையும் உன்னால் கேட்க முடியவில்லை. சர்வவல்லவர் உனக்கு அளித்த எல்லாவற்றையும், உனக்கு உரிமையுள்ளதாய் இருக்கும் எல்லாவற்றையும் நீ இழந்துவிட்டாய். முடிவில்லாத பெருந்துன்பக் கடலுக்குள் நீ பிரவேசித்துவிட்டாய், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ளும் வலிமை இல்லாமல், தப்பிக்கும் வழி தெரியாமல், இப்போது இங்கும் அங்கும் அலைந்து துடித்துக்கொண்டிருக்கின்றாய். அந்தக் கணம் முதல் நீ பொல்லாங்கனால் வாதிக்கப்பட விதிக்கப்பட்டாய், சர்வவல்லவரின் ஆசீர்வாதங்களில் இருந்து மிகத்தொலைவான இடத்திற்கு, சர்வவல்லவர் வழங்குபவை உன்னை வந்தடைய முடியாத தூரத்திற்கு, திரும்பிவரமுடியாத சாலையில் நீ போய்விட்டாய். இப்போது இலட்சோபலட்சம் அழைப்புகளினாலும் உன் இருதயத்தையும், ஆவியையும் எழுப்பமுடியவில்லை. திசையும், வழிகாட்டியும் இல்லாத எல்லையில்லாத பகுதிக்கு உன்னை நயங்காட்டி அழைத்து வந்த பொல்லாங்கனின் கைகளில் நீ அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றாய். அன்றிலிருந்து நீ உன் களங்கமின்மையையும், தூய்மையையும் இழந்தாய், சர்வவல்லவரின் கரிசனையையும் விட்டு விலக ஆரம்பித்தாய். உன் இருதயத்தில் இருக்கும் பொல்லாங்கன் தான் இப்போது உன்னை எல்லாக் காரியங்களிலும் வழிநடத்துகின்றான். உன் வாழ்க்கையாகவே அவன் மாறிவிட்டான். இப்போது நீ அவனுக்குப் பயப்படுவதில்லை, அவனைத் தவிர்ப்பதில்லை, அவனை சந்தேகப்படுவதுமில்லை, மாறாக, நீ அவனை இப்போது உன் இருதயத்தில் தேவனாக மதிக்கின்றாய். நீ அவனை ஆராதிக்கவும் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்துவிட்டாய், உடலும், நிழலும் போல நீங்கள் வாழ்விலும், சாவிலும் பிரிக்கமுடியாதவர்களைப் போல மாறிவிட்டீர்கள். நீ எங்கிருந்து வந்தாய் என்றோ, ஏன் பிறந்தாய் என்றோ, ஏன் மரிப்பாய் என்றோ அறியாமல் இருக்கின்றாய். நீ சர்வவல்லவரை அந்நியனைப்போல் பார்க்கின்றாய். அவருடைய துவக்கம் எதுவென்றோ, அவர் உனக்குச் செய்தவைகள் என்னவென்றோ கூட உனக்குத் தெரியாது. அவரிடமிருந்து வருகின்ற எல்லாவற்றையும் நீ வெறுக்கின்றாய். நீ அதை மதிக்கவுமில்லை, அதன் மதிப்பை அறியவுமில்லை. சர்வவல்லவர் வழங்கியவற்றை நீ பெற்ற நாள் முதல் பொல்லாங்கனோடு நடக்க ஆரம்பித்தாய். நீ பொல்லாங்கனோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புயலையும், காற்றையும் சகித்துவிட்டாய், ஆனாலும் அவனோடு சேர்ந்து உன் வாழ்க்கையின் ஆதாரமான தேவனை எதிர்க்கின்றாய். மனம்திரும்புதலைக் குறித்தோ, உன் அழிவின் விளிம்பிற்கு நீ வந்துவிட்டதைக் குறித்தோ நீ இன்னும் அறியவில்லை. பொல்லாங்கன் உன்னை நயமாக இழுத்துக்கொண்டதையோ, உன்னை வாதித்ததையோ நீ அறியவில்லை, நீ உன் துவக்கங்களை மறந்துபோய்விட்டாய். இன்றுவரை உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் உன்னை வாதித்துள்ளான். உன் இருதயமும், ஆவியும் உணர்விழந்து, அழிந்துவிட்டன. இப்போதெல்லாம், நீ மனித உலகின் பாடுகளைக் குறித்து குறைகூறுவதை நிறுத்திவிட்டாய். இந்த உலகம் அநீதி நிறைந்தது என்று நீ இனி ஒருபோதும் நம்புவதில்லை. சர்வவல்லவர் என்று ஒருவர் இருக்கின்றாரா என்று கூட நீ கவலைப்படுவதில்லை. அதன் காரணம், நீ வெகுகாலத்திற்கு முன்பே பொல்லாங்கனை உன்னுடைய மெய்யானத் தகப்பனாக ஏற்றுக் கொண்டாய், இப்போது அவனில்லாமல் உன்னால் இருக்க முடியவில்லை. இதுதான் உன்னுடைய இருதயத்தில் உள்ள இரகசியம்.

பொழுது விடியும்போது, கிழக்கில் ஒரு விடிவெள்ளி மின்னுகிறது. முன் இருந்திராத இந்த நட்சத்திரம், மினுமினுக்கும் அமைதியான வானங்களை வெளிச்சமடையச் செய்து மனிதர்களின் இருதயங்களில் அணைக்கப்பட்ட வெளிச்சத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்கிறது. உன்மேலும் மற்றவர்கள்மேலும் ஒன்றுபோல வீசும் இந்த வெளிச்சத்தினால் இப்போது மனுக்குலம் தனிமையில் இருக்கவில்லை. ஆனாலும், இருண்ட இரவில் இப்போது நீ மட்டுமே அயர்ந்து உறங்குகிறாய். நீ சத்தத்தையும் கேட்கவில்லை, வெளிச்சத்தையும் காணவில்லை. உன் தகப்பன் உன்னிடம், "என் பிள்ளையே, இன்னும் நேரமாகவில்லை, இப்போது எழுந்திருக்கவேண்டாம். குளிராக இருப்பதினால் வெளியே போகாதே. உன் கண்களைப் பட்டயமும் ஈட்டியும் குத்திவிடும்," என்று சொல்வதினால் நீ புதிய வானமும், பூமியும், புதிய காலமும் துவங்கியதை அறியாமல் இருக்கின்றாய். உன் தகப்பன் உன்னை மிகவும் நேசிப்பதினாலும், அவன் உன்னைவிட மூத்தவன் என்பதினாலும், அவன் சொல்வதுதான் சரி என்று நீ விசுவாசிப்பதினாலும், உன் தகப்பனுடைய கடிந்துகொள்ளுதல்களை மட்டுமே நீ நம்புகிறாய். இந்த உலகத்தில் வெளிச்சம் உண்டு என்னும் கூற்றை அப்படிப்பட்ட எச்சரிக்கைகளும், அன்பும் உன்னை நம்ப விடாமல் செய்கின்றன. இந்த உலகத்தில் சத்தியம் இருக்கின்றதா என்று கவனிக்கக்கூட உன்னை அவை விடுவதில்லை. சர்வவல்லவர் உன்னை விடுவிப்பார் என்று நம்பவும் உனக்கு இப்போது தைரியமில்லை. நீ இப்போதுள்ள நிலைமையிலேயே திருப்தியடைந்திருப்பதினால், முன்னுரைக்கப்பட்டது போல வெளிச்சத்தின் வருகையையோ, சர்வவல்லவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதில்லை. உன்னைப் பொறுத்தவரை, அழகானவைகளை எல்லாம் புதுப்பிக்க முடியாது, அவை இருக்க முடியாது. உன் கண்களில், மனுக்குலத்தின் நாளையதினம், மனுக்குலத்தின் எதிர்காலம் மறைந்து ஒழிந்துபோகிறது. தூரப்பிரயாணத்தின் திசையையும், உன் பயணத் தோழனையும் இழந்துவிடுவாய் என்று நீ பயப்படுவதால், உன் தகப்பனுடைய வஸ்திரங்களை முழு பெலத்தோடு இறுகப் பிடித்துக்கொண்டு அவனுடைய கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாய். மனிதர்களின் பரந்து விரிந்த, தெளிவற்ற இந்த உலகம் உங்களில் அநேகரை உலகத்தின் பல்வேறு வேடங்களை அணிந்துகொள்ள தைரியம் உள்ளவர்களாக மாற்றியுள்ளது. மரணத்தைக் குறித்து பயமில்லாத பல "வீரர்களை" அது உருவாக்கியுள்ளது. அதைவிடவும் மேலாக, தாங்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணராத விறைத்தும், மரத்தும் போன ஏராளமான மனிதர்களையும் அது உருவாக்கியுள்ளது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மனுக்குலத்தின் ஒவ்வொரு மனிதனையும் சர்வவல்லவரின் கண்கள் கண்காணிக்கின்றன. துயரப்படுகிறவர்களின் கூக்குரலை அவர் கேட்கிறார், பாதிக்கப்பட்டவர்களின் வெட்கமின்மையை அவர் காண்கிறார், இரட்சிப்பென்னும் கிருபையை இழந்துபோன மனுக்குலத்தின் திகிலையும், ஆற்றாமையையும் அவர் உணர்கிறார். மனிதகுலமோ அவருடைய ஆதரவைத் தள்ளிவிட்டு, தன்னுடைய பாதையிலே நடக்கிறது, அவருடைய கண்களின் பார்வைத் தன்மேல் விழுவதைத் தவிர்க்கிறது. சத்துருவின் துணையோடு ஆழ்கடலின் கசப்பைக் கடைசி சொட்டுவரை ருசிபார்க்கவும் விரும்புகிறது. சர்வவல்லவருடைய பெருமூச்சை இப்போது மனிதகுலம் கேட்பதில்லை. சர்வவல்லவருடைய கரங்களும் இந்தப் பரிதாபமான மனுக்குலத்தைத் தழுவ விரும்பவில்லை. திரும்பத்திரும்ப அவர் மனுக்குலத்தைத் தம்பக்கம் இழுக்கின்றார், திரும்பவும் விட்டுவிடுகின்றார். இப்படியே, அவருடைய கிரியை ஒரு சுழற்சியாக நடக்கின்றது. அந்தத் தருணம் முதல், அவர் சோர்ந்து களைப்படைய ஆரம்பிக்கிறார். அப்போது அவர் தம்முடைய கரத்தின் கிரியையையும், மனிதர்களிடையே உலாவுவதையும் நிறுத்துகிறார்…. மனிதகுலம் இந்த மாற்றங்களையும், சர்வவல்லவருடைய போக்கையும், வருகையையும், அவருடைய துக்கத்தையும் சலிப்பையும் உணராமல் இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சர்வவல்லவரின் பெருமூச்சு” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 328

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 389

பேதுரு எனக்குப் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை;...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 47

பிலதெல்பியா சபையானது தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாக, முற்றிலுமாக உறுதியான வடிவம் பெற்றுள்ளது. ஆவிக்குரிய பயணத்தில் தடுமாறாத...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 163

ஏசாயா, எசேக்கியேல், மோசே, தாவீது, ஆபிரகாம் மற்றும் தானியேல் ஆகியோர் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடையே தலைவர்களாகவோ...