00:00 00:00

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைத் தேடுகிறீர்களா? தேவன் தோன்றுதலுக்காக எப்படி ஏங்க வேண்டும்! தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம்! இது போன்ற ஒரு காலத்தில், இது போன்ற உலகில், தேவன் தோன்றும் நாளைக் காண நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனின் அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் தோன்ற வேண்டுமென்று காத்திருக்கும் அனைவருமே இந்த வகையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இது குறித்து யோசனை செய்திருப்பீர்கள்—ஆனால் இதன் விளைவு என்ன? தேவன் எங்கு தோன்றுகிறார்? தேவனின் அடிச்சுவடுகள் எங்கே? உங்களுக்கு பதில் கிடைத்ததா? பலர் இவ்வாறு பதிலளிப்பார்கள்: “தேவன் அவரைப் பின்பற்றுபவர்களிடையே தோன்றுகிறார், அவருடைய அடிச்சுவடுகள் நம் மத்தியில் உள்ளன; இது அவ்வளவு எளிதானது!” யார் வேண்டுமானாலும் ஒரு வழக்கமான பதிலை வழங்கலாம், ஆனால் தேவன் தோன்றுதல் அல்லது அவருடைய அடிச்சுவடுகள் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தோன்றுதல் என்பது அவர் தமது கிரியையை நேரடியாகச் செய்ய பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. அவருடைய சொந்த அடையாளத்துடனும், மனநிலையுடனும், மற்றும் இயல்பான உள்ளார்ந்த விதத்திலும் ஒரு காலத்தைத் தொடங்குவதற்கும், ஒரு காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கிரியையைச் செய்ய அவர் மனிதர்கள் மத்தியில் இறங்கி வருகிறார். இந்த வகையான தோன்றுதல் என்பது ஒரு வகை சடங்கு அல்ல. இது ஒரு அடையாளமோ, படமோ, அதிசயமோ அல்லது ஒருவிதமான பிரமாண்டமான காட்சியோ அல்ல, அதிலும், இது ஒரு வகை மதம்சார்ந்த சம்பிரதாயமும் அல்ல. இது யாராலும் தொடவும், பார்க்கவும் முடிகின்ற ஒரு நிஜமான, நிச்சயமான உண்மையாகும். இந்த வகையான தோன்றுதல் ஏதோ ஒன்று இயங்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது எந்தவொரு குறுகிய கால பொறுப்பினை நிறைவேற்றவோ நடைபெறுவது அல்ல; மாறாக, அவருடைய நிர்வாகத் திட்டத்தில் கிரியையின் ஒரு கட்டமாகும். தேவனின் தோன்றுதல் எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் அவருடைய நிர்வாகத் திட்டத்துடன் எப்போதும் கொஞ்சம் தொடர்பைக் கொண்டிருக்கும். இங்கே தோன்றுதல் என்று அழைக்கப்படுவது, தேவன் மனிதனை வழிநடத்தும், அழைத்துச் செல்லும், அறிவூட்டும் “தோன்றுதல்” வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஒவ்வொரு முறையும் தம்மை வெளிப்படுத்தும்போது தேவன் தமது மகத்தான கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்தக் கிரியை வேறு எந்த காலத்திலிருந்தும் வேறுபட்டதாகும். இது மனிதனால் கற்பனை செய்ய முடியாதது, மேலும் மனிதனால் ஒருபோதும் அனுபவிக்கப்பட்டிராதது. இது ஒரு புதிய காலத்தைத் தொடங்கி பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையாகும். மேலும், இது மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான புதிய மற்றும் மேம்பட்ட வடிவிலான கிரியையாகும்; அது மட்டுமல்ல, இது மனிதகுலத்தைப் புதிய காலத்திற்குக் கொண்டுச் செல்லும் கிரியையாகும். தேவனின் தோன்றுதல் இதைத்தான் குறிக்கிறது.

தேவன் தோன்றுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், தேவனின் அடிச்சுவடுகளை எவ்வாறு நாட வேண்டும்? இந்தக் கேள்வியை விளக்குவது கடினம் அல்ல: தேவன் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைக் காண்பீர்கள். அத்தகைய விளக்கம் புரிந்துகொள்ள எளிதானதாகத் தோன்றினாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல, ஏனென்றால் தேவன் எங்கு தோன்றுவார் என்பது பலருக்குத் தெரிவதில்லை, அதிலும் அவர் எங்கு தோன்ற விரும்புகிறார், அவர் எங்கு தோன்ற வேண்டுமென்பது தெரிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் எங்கெல்லாம் கிரியையைச் செய்கிறாரோ, அங்கே தேவன் தோன்றுகிறார் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு நம்புகிறார்கள். இல்லையெனில் ஆவிக்குரிய நபர்கள் எங்கிருந்தாலும் அங்கே தேவன் தோன்றுகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லையென்றால் உயர்ந்த புகழ் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அங்கே தோன்றுகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு, இதுபோன்ற நம்பிக்கைகள் சரியானவையா, தவறானவையா என்று பார்ப்பதைத் தள்ளிவைப்போம். அத்தகைய கேள்வியை விளக்க, நாம் முதலில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்: நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம். நாம் ஆவிக்குரிய நபர்களைத் தேடவில்லை, அதிலும் நாம் புகழ்பெற்ற நபர்களைப் பின்தொடரவில்லை; நாம் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறோம். இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய சொற்கள் ஆகியவற்றைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுகிறார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுவதில், நீங்கள் “தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்” என்கிற வார்த்தைகளை உதாசீனம் செய்திருக்கிறீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தமது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தமது சொந்த குறிக்கோள்களையும் தமது சொந்த வழிமுறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடைய மனநிலையாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துக்களுக்குள் அடக்கி வைக்கவும் கூடாது. அதற்குப் பதிலாக, நீங்கள் தேவனின் அடிச்சுவடுகளை எவ்வாறு தேட வேண்டும், நீங்கள் தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீங்கள் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் உங்களிடமே கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். மனிதன் சத்தியம் அல்ல என்பதாலும், சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

நீ அமெரிக்கனாகவோ, ஆங்கிலேயனாகவோ, அல்லது வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், உன் சொந்தத் தேசத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும், உன் சுயத்தைக் கடந்து, தேவனின் கிரியையை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். இந்த வழியில், நீ தேவனின் அடிச்சுவடுகளில் வரம்புகளை விதிக்க மாட்டாய். ஏனென்றால், இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தேவன் தோன்றுவார் என்பது கூடாத காரியம் என்று பலர் கருதுகிறார்கள். தேவனின் கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு ஆழமானது, தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது! மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? எனவே நான் சொல்கிறேன், தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீ தேசியம் மற்றும் இனம் என்னும் கருத்துக்களை உடைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீ உன் சொந்தக் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட மாட்டாய்; இதன் மூலம் மட்டுமே தேவன் தோன்றுதலை வரவேற்க நீ தகுதி பெறுவாய். இல்லையெனில், நீ நித்திய இருளில் இருப்பாய், ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டாய்.

தேவன் முழு மனிதஇனத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் தம்மை எந்தவொரு தேசத்தின் அல்லது மக்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதில்லை, ஆனால் அவர் எந்தவொரு வடிவத்துக்குள்ளும், தேசத்திற்குள்ளும், மக்களுக்குள்ளும் அடங்காமல், திட்டமிட்டபடி தமது கிரியையைச் செய்கிறார். ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை இந்த வடிவத்தை ஒரு வகையில் மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை தேவன் தம்மை வெளிப்படுத்தும் தேசம் மற்றும் அவர் தம்மை யார் மத்தியில் வெளிப்படுத்துகிறாரோ அந்த மக்கள் ஆகியோர், அனைவராலும் பாகுபாடு காட்டப்படுபவர்களாகவும், பூமியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவும் இருக்க நேரிடலாம். எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது. அவருடைய மகா வல்லமையினாலும், அவருடைய சத்தியத்தினாலும், அவருடைய மனநிலையினாலும், அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு ஜனக்கூட்டத்தையும், அவர் முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்கூட்டத்தையும் அவர் உண்மையிலேயே ஆதாயப்படுத்தியிருக்கிறார்—இது அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட, எல்லா விதமான சோதனைகளையும் உபத்திரவங்களையும், எல்லா விதமான துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு, அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்ற ஒரு ஜனக்கூட்டமாகும். எந்தவொரு வடிவத்திற்கும் அல்லது தேசத்திற்கும் உட்படாத தேவன் தோன்றுவதன் நோக்கம் என்னவென்றால், அவர் திட்டமிட்டபடி அவரது கிரியையைச் செய்து முடிக்க அவருக்கு உதவுவதாகும். யூதேயாவில் தேவன் மாம்சமானது போலவே இதுவும் உள்ளது: மனித இனம் முழுவதையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும் கிரியையை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆயினும் யூதர்கள் இது தேவனால் கூடாத காரியம் என்று நம்பினர், மேலும் தேவன் மாம்சமாகி, கர்த்தராகிய இயேசுவின் ரூபத்தை ஏற்பது கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய “கூடாத காரியம்” அவர்கள் தேவனைக் கண்டித்து எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது, இறுதியில் இஸ்ரவேலின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்று, பலர் இதே போன்ற தவறைச் செய்துள்ளனர். தேவனுடைய உடனடி தோற்றத்தை அவர்கள் தங்கள் முழு பலத்தோடும் பறைசாற்றுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவருடைய தோற்றத்தைக் கண்டிக்கிறார்கள்; அவர்களுடைய “கூடாத காரியம்” தேவன் தோன்றுவதை அவர்களின் கற்பனையின் எல்லைக்குள் மீண்டும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, தேவனுடைய வசனங்களைக் கேட்ட பிறகு பலர் பலத்த, கடுமையான நகைப்பினால் பரியாசம்பண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நகைப்பு யூதர்களின் ஆக்கினையிலிருந்தும், தேவ தூஷணத்திலிருந்தும் வேறுபட்டதா? சத்தியத்தின் முன்னிலையில் நீங்கள் பயபக்தியுடன் இல்லை, அதிலும் நீங்கள் ஏக்கத்தின் மனப்பான்மையைக் கொண்டிருப்பதில்லை. நீ செய்வதெல்லாம் பகுத்தறியாமல் படிப்பது மற்றும் அக்கறையற்ற மகிழ்ச்சியுடன் காத்திருப்பது மட்டுமே. இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும் உன்னால் என்ன பெற முடியும்? நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவாய் என்று நினைக்கிறாயா? தேவனுடைய வசனங்களை நீ நிதானித்து அறிய முடியாவிட்டால், தேவன் தோன்றுவதைக் காண நீ எந்த வகையில் தகுதியுடையவன்? தேவன் எங்கெல்லாம் தோன்றியிருக்கிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய தோற்றத்தைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீ அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். “கூடாத காரியம்” பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தம்மை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய சாராம்சம் ஒருபோதும் மாறாது. தேவனின் அடிச்சுவடுகள் எங்கு இருந்தாலும் அவருடைய மனநிலை மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் அடிச்சுவடுகளும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் வெளிப்படையாக இருக்கின்றன. அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த வார்த்தைகளில் தேவனின் தோன்றுதலைக் காண முடியும் என்று நம்புகிறேன், புதிய காலத்திற்கு முன்னேறிச் செல்கையில் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கி, தேவன் தோன்றுவதற்காக காத்திருப்பவர்களுக்குத் தேவன் ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் நுழைந்திடுங்கள்!

மேலும் படிக்க