00:00 00:00

நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாயா? நீ இயேசுவோடு வாழ விரும்புகிறாயா? இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறாயா? அப்படியானால், இயேசுவின் வருகையை நீ எவ்வாறு வரவேற்பாய்? நீ முற்றிலும் ஆயத்தமாக இருக்கிறாயா? இயேசுவின் வருகையை நீ எந்த விதத்தில் வரவேற்பாய்? இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா: இயேசு திரும்பி வரும்போது, நீ மெய்யாகவே அவரை அறிந்துகொள்வாயா? அவர் சொல்லும் அனைத்தையும் நீங்கள் மெய்யாகவே புரிந்துகொள்வீர்களா? அவர் செய்யும் எல்லாக் கிரியைகளையும் நிபந்தனையின்றி, உண்மையாக ஏற்றுக்கொள்வீர்களா? வேதாகமத்தைப் படித்த அனைவருக்கும் இயேசுவின் வருகையைக் குறித்து தெரியும். மேலும் வேதாகமத்தைப் படித்த அனைவரும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அனைவரும் அந்தத் தருணத்தின் வருகையின் மீது நோக்கமாய் இருக்கிறீர்கள். உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது. மெய்யாகவே உங்கள் விசுவாசம் பொறாமைப்படத்தக்கது. ஆனால் ஒரு பெரிய தவறு செய்துள்ளதை நீங்கள் உணருகிறீர்களா? இயேசு எந்த விதத்தில் திரும்பி வருவார்? இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது திரும்பி வருவார் என்று நீங்கள் நம்புகிறீர்கள், ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன்: இந்த வெண்மேகம் எதைக் குறிக்கிறது? இயேசுவைப் பின்பற்றும் ஜனங்கள் பலர் அவர் மீண்டும் வருவார் என காத்திருக்கும்போது, இவர்களுள் எந்த ஜனத்திற்கு மத்தியில் அவர் இறங்குவார்? இயேசு இறங்கவிருக்கும் ஜனங்களுள் முதலாவதாக நீங்கள் இருந்தால், இது முற்றிலும் நியாயமற்றது என மற்றவர்கள் பார்க்க மாட்டார்களா? நீங்கள் இயேசுவிடம் மிகுந்த விசுவாசத்துடனும் உண்மையுடனும் இருப்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் எப்போதாவது இயேசுவை சந்தித்திருக்கிறீர்களா? அவருடைய மனநிலை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்போதாவது அவருடன் ஜீவித்திருக்கிறீர்களா? மெய்யாகவே அவரைப் பற்றி நீங்கள் எவ்வளவு புரிந்துகொண்டுள்ளீர்கள்? இந்த வார்த்தைகள் சிலரை, ஒரு மோசமான இக்கட்டான நிலையில் வைப்பதாகக் கூறுவார்கள். “நான் வேதாகமத்தை முழுவதுமாக பல முறை படித்திருக்கிறேன். நான் எப்படி இயேசுவைப் புரிந்து கொள்ளாதிருப்பேன்?” என்று அவர்கள் கூறுவார்கள். இயேசுவின் மனநிலையைப் பொருட்படுத்தாமல், “அவர் உடுத்த விரும்பிய வஸ்திரத்தின் நிறம் கூட எனக்குத் தெரியும். நான் அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்று நீ கூறும்போது, நீ என்னைச் சிறுமைப்படுத்தவில்லையா?” என்பார்கள். இந்தப் பிரச்சனைகள் குறித்து நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். அமைதியாக இருந்து, பின்வரும் கேள்விகளைப் பற்றி ஐக்கியம் கொள்வது நல்லது: முதலாவதாக, யதார்த்தம் என்றால் என்ன என்றும், கோட்பாடு என்றால் என்ன என்றும் உனக்குத் தெரியுமா? இரண்டாவதாக, கருத்துக்கள் என்றால் என்ன என்றும், சத்தியம் என்றால் என்ன என்றும் உனக்குத் தெரியுமா? மூன்றாவதாக, கற்பனை செய்யப்படுவது என்ன என்றும், மெய்யானது என்ன என்றும் உனக்குத் தெரியுமா?

சிலர் தாங்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளவில்லை என்ற உண்மையை மறுக்கிறார்கள். இன்னும் நீங்கள் அவரை சிறிதும் புரிந்து கொள்ளவில்லை என்றும், இயேசுவின் ஒரு வார்த்தையைக் கூட புரிந்து கொள்ளவில்லை என்றும் நான் சொல்கிறேன். ஏனென்றால், உங்களில் ஒவ்வொருவரும் வேதாகமத்தில் உள்ள விவரங்களின்படியும், மற்றவர்கள் சொன்னவற்றின்படியும் அவரைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் இயேசுவை ஒருபோதும் பார்த்ததில்லை, அவருடன் ஜீவித்ததுமில்லை, அவருடன் ஒரு குறுகிய காலத்திற்கு கூட நீங்கள் ஐக்கியம் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது, இயேசுவைப் பற்றிய உங்கள் புரிதல் வேறு எதுவும் அல்லாமல், கோட்பாட்டளவிலானது அல்லவா? இது யதார்தத்துக்கு மாறானது அல்லவா? ஒருவேளை சிலர் இயேசுவின் உருவப்படத்தைப் பார்த்திருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் இயேசுவின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். சிலர் இயேசுவின் வஸ்திரங்களைத் தொட்டிருக்கலாம். இயேசுவால் புசிக்கப்பட்ட ஆகாரத்தை நீ தனிப்பட்ட முறையில் ருசித்திருந்தாலும், அவரைப் பற்றிய உன் புரிதல் இன்னும் கோட்பாட்டளவிலானது மட்டுமே, நடைமுறைக்குரியது அல்ல. எது எப்படியிருந்தாலும், நீங்கள் ஒருபோதும் இயேசுவைப் பார்த்ததில்லை, ஒருபோதும் அவருடன் மாம்ச ரூபத்தில் இணைந்திருந்ததில்லை. ஆகவே, இயேசுவைப் பற்றிய உங்கள் புரிதல் எப்போதுமே வெற்றுக் கோட்பாடாக மட்டுமே இருக்கும், யதார்த்தம் இருக்காது. ஒருவேளை என் வார்த்தைகள் உனக்குச் சிறிது ஆர்வத்தை மட்டுமே கொடுக்கலாம், ஆனால் நான் இதை உன்னிடம் கேட்கிறேன்: உனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரின் பல படைப்புகளை நீ படித்திருந்தாலும், அவருடன் நேரத்தை செலவிடாமல் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமா? அவரது ஆளுமை எத்தகையது என்று உனக்குத் தெரியுமா? அவர் எந்த வகையான வாழ்வை வாழ்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது உணர்ச்சி நிலை குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா? நீ ரசிக்கின்ற ஒரு மனிதரைக் கூட உன்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத போது, இயேசு கிறிஸ்துவை உன்னால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இயேசுவைப் பற்றி நீ புரிந்துகொண்ட அனைத்தும் கற்பனையானவை, கருத்துக்கள் நிறைந்தவை, மேலும் அவை எந்த சத்தியத்தையும் யதார்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை. அது மாம்சமாகவும், நாற்றம் நிறைந்ததாகவும் உள்ளது. இயேசுவின் வருகையை வரவேற்க இதைப் போன்ற ஒரு புரிதல் எவ்வாறு உங்களைத் தகுதிப்படுத்தும்? கற்பனைகள் மற்றும் மாம்சத்தின் கருத்துக்களால் நிறைந்துள்ளவர்களை இயேசு ஏற்றுக்கொள்ளமாட்டார். இயேசுவைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவருடைய விசுவாசிகளாக எவ்வாறு இருக்க முடியும்?

பரிசேயர்கள் இயேசுவை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், ஆனாலும் ஜீவியத்தின் சத்தியத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவ வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்களால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று எப்படி கூறுகிறீர்கள்? அவர்களால் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் விதத்தை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை மட்டும் பற்றிப்பிடித்துக்கொண்ட தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் அகந்தையுள்ளவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உன் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், உன் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீ மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீ கிறிஸ்து அல்ல. இந்த விசுவாசம் போலியானது மற்றும் கேலிக்குரியது அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகாலப் பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீ எதிர்க்க மாட்டாய் என்று மெய்யாகவே உன்னால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பின்பற்ற இயலுமா? நீ கிறிஸ்துவை எதிர்ப்பாயா என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறாய் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்க்கவும், இயேசுவை நிராகரிக்கவும், அவரை அவதூறு செய்யவும் கூடியவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்யக்கூடியவர்களாவர். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்கக்கூடியவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதைக் குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களைப் பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணமாகவும், பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு வழங்கும் வார்த்தைகளின் அழிவாகவும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுவதுமாக இருக்கும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக உணர மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை உங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளாமல், வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையைக் கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும் ஜனங்கள், நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை தூஷிப்பார்கள், மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள், மேலும், பரலோகம் என்னும் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறீர்கள், ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்திருப்பதில்லை, மேலும், இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மைக்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்புக் கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்குப் பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் அகந்தையுள்ள சுபாவத்தையா?

உங்கள் விசுவாசம் வார்த்தையில் மட்டுமே உள்ளது, அறிவு சார்ந்த மற்றும் கருத்தியல் சார்ந்த அறிவு மட்டுமே உங்களிடம் உள்ளது, உங்கள் கிரியைகள் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே உள்ளன, எனவே உங்கள் விசுவாசம் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இன்று கூட, நீங்கள் இன்னும் சத்தியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் செவி மடுக்கவில்லை. தேவன் என்றால் யாரென்று உங்களுக்குத் தெரிவதில்லை, கிறிஸ்து என்றால் யாரென்று உங்களுக்குத் தெரிவதில்லை, யேகோவாவை எவ்வாறு வணங்குவது என்று உங்களுக்குத் தெரிவதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவதில்லை, மேலும் தேவனுடைய கிரியையையும் மனிதனுடைய ஏமாற்று வேலையையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்றும் உங்களுக்குத் தெரிவதில்லை. உன் சொந்த எண்ணங்களுடன் இணங்காத, தேவன் வெளிப்படுத்திய எந்த சத்திய வார்த்தையையும் நிந்திக்க மட்டுமே உனக்குத் தெரியும். உனது தாழ்மை எங்கே? உனது கீழ்ப்படிதல் எங்கே? உனது விசுவாசம் எங்கே? சத்தியத்தைத் தேடுவதற்கான உனது வாஞ்சை எங்கே? தேவன் மீதுள்ள உனது பயபக்தி எங்கே? அடையாளங்கள் நிமித்தமாக தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். “ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து” என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசு திரும்பி வருவது ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, அகந்தையுள்ள நபராக நீங்கள் இருக்கக்கூடாது, மாறாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்திற்காக ஏங்குகிற மற்றும் அதைத் தேடுகிற ஒருவராக இருக்க வேண்டும்; இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். தேவன் மீதான விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம்; மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவை விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களைச் சபிக்கவோ கண்டிக்கவோ தகுதி பெறவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உனது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீ நம்பினால், பின்னர் இந்த வார்த்தைகளின் 10,000வது வார்த்தையில் நீ தொடர்ந்து தேட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உன்னை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் இன்னும் உனக்கு அறிவுறுத்துகிறேன். தேவனிடம் இத்தகைய அற்ப பயபக்தியை உனது இருதயம் கொண்டிருப்பதால், நீ மாபெரும் வெளிச்சத்தைப் பெறுவாய். இந்த வார்த்தைகளை நீ கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், அவை ஜீவனா இல்லையா என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளைக் கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள், “இது பரிசுத்த ஆவியானவரின் கொஞ்ச வெளிச்சமே அன்றி வேறொன்றுமில்லை” அல்லது “இவர் ஜனங்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து” என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்! தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீ புரிந்துகொள்கிறாய், மேலும், நீ மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டுமென நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது, மேலும் நீங்கள் வஞ்சகத்திற்குப் பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தூஷணம் செய்யும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீ இன்னும் நம்பினால், நீ இறுதியில் தண்டிக்கப்படுவாய் மற்றும் நீ ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பாய். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீ தகுதியற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நீ தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவன் அல்லவா? அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாகக் கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் வாழ்வின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

மேலும் படிக்க