தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்

தேவன் தம் முதல் மனுஷ அவதரிப்பின்போது பூமியில் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தார், அந்த ஆண்டுகளில் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே அவர் தமது ஊழியத்தைச் செய்தார். கிரியை செய்த காலத்திலும், தமது கிரியையைத் தொடங்குவதற்கு முன்பும், அவர் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார்; அவர் தமது இயல்பான மனிதத்தன்மையில் முப்பத்து மூன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். அவற்றில் கடைசி மூன்றரை ஆண்டுகளில், அவர் தம்மை மாம்சத்தில் வந்த தேவனாக வெளிப்படுத்தினார். தம்முடைய ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் சாதாரண நிலையில், இயல்பான மனிதத்தன்மையுடன் தோன்றினார், அவருடைய தெய்வீகத்தன்மையின் எந்த அடையாளத்தையும் அவர் காண்பிக்கவில்லை, அவர் தமது ஊழியத்தை முறையாகச் செய்யத் தொடங்கிய பின்னர்தான் அவருடைய தெய்வீகத்தன்மையானது வெளிப்படுத்தப்பட்டது. முதல் இருபத்தொன்பது ஆண்டுகளில் அவர் வாழ்ந்த வாழ்வும் அவரது கிரியையும் அவர் ஒரு மெய்யான மனிதர், ஒரு மனுஷகுமாரன் மற்றும் மாம்ச சரீரம் உடையவர் என்பதை விளங்கப்பண்ணின, ஏனெனில் அவருடைய ஊழியம் இருபத்தொன்பது வயதிற்குப் பிறகுதான் உற்சாகமாய்த் தொடங்கியது. “மனுஷரூபமெடுத்தல்” என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார். மனுஷரூபமெடுத்து வந்த அவருடைய வாழ்க்கை மற்றும் கிரியையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வாழும் வாழ்க்கை. அவர் சாதாரண மனிதத் தேவைகள் நிறைந்த (உணவு, உடை, உறக்கம், உறைவிடம்), சாதாரண மனித பலவீனங்கள் மற்றும் சாதாரண மனித உணர்ச்சிகளுடன் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில், முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், மனித வாழ்க்கையின் சாதாரண ஒழுக்கங்களையும் விதிகளையும் கடைபிடிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முதல் கட்டத்தில் அவர் தெய்வீகத்தன்மையற்ற, எல்லாச் சாதாரண மனித நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறவராய் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார். இரண்டாவது கட்டம், அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின் அவர் வாழும் வாழ்க்கையாகும். அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையில், தெய்வீகத்தின் வெளிப்புற அடையாளத்தைக் காண்பிக்காமல் ஒரு சாதாரண மனிதத் தோற்றத்தில் வாழ்கிறார். ஆயினும் அவர் தம்முடைய ஊழியத்திற்காகவே முற்றிலும் வாழ்கிறார், இந்தச் சமயத்தில் முற்றிலும் அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டமானது, அவரது இயல்பான மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டின் வாழ்க்கையாக இருக்கும்போது, அது அவருடைய ஊழியத்தை அவரது இயல்பான மனிதத்தன்மையில் செய்ய வேண்டியதிருந்தது. அவரது வாழ்வின் முதல் கட்டத்தில், அவர் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்வதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய மனிதத்தன்மையினால் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையை முழுமையாக இன்னும் பராமரிக்க முடியவில்லை, அது இன்னும் முதிர்ச்சியடையவில்லை; அவருடைய மனிதத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னரே, அவர் தமது ஊழியத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்று அவர் செய்து முடிக்கவேண்டிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்கவும் முடியும். அவர் மாம்சமாக இருக்கிற நிலையில், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்பதால், அவருடைய வாழ்க்கையின் முதல் கட்டமானது சாதாரண மனிதத்தன்மையுடையதாகும்—இரண்டாவது கட்டத்தில், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் வல்லது என்பதால், தேவன் மாம்சத்தில் அவதரித்த வாழ்க்கையானது அவருடைய ஊழியத்தின் போது மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கொண்ட ஒன்றாகும். மனித அவதரிப்பாக மாம்சத்தில் வந்த தேவன் தாம் பிறந்த தருணத்திலிருந்து, தமது ஊழியத்தை ஊக்கத்துடனே ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்திருந்தால், பிறகு அவருக்கு எந்தவிதமான சரீரம் சார்ந்த சாராம்சமும் இருந்திருக்காது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மனித உடலின் சாராம்சத்தின் பொருட்டு உள்ளதாய் இருக்கிறது; மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது, மனிதத்தன்மை இல்லாத ஒருவர் மனிதர் அல்ல. இந்த வகையில், தேவனுடைய மாம்சத்தின் மனிதத்தன்மை என்பது மனுஷரூபத்திலான தேவனுடைய மாம்சத்தின் ஓர் உள்ளார்ந்த குணமாகும். “தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர், மனிதரல்ல” என்று சொல்வது தேவதூஷணமாகும், ஏனென்றால் இந்த அறிக்கையானது வெறுமனே இல்லாததாயிருக்கிறது, மேலும் மாம்சமாகியதன் கொள்கையை மீறுகிறதாய் இருக்கிறது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய பிறகும், அவர் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனிதத்தன்மையின் வெளிப்புறமான தோற்றத்தில் தெய்வீகத்தன்மையுடன் வாழ்கிறார்; அந்த நேரத்தில், அவருடைய தெய்வீகத்தன்மையைச் சாதாரண மாம்சத்தில் செய்கிறதான கிரியைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கு அவருடைய மனிதத்தன்மையானது உதவுகிறது. ஆகவே, கிரியையின் காரணகர்த்தா அவருடைய மனிதத்தன்மையில் வசிக்கும் தெய்வீகத்தன்மையாகும். அவருடைய மனிதத்தன்மை அல்ல, அவருடைய தெய்வீகத்தன்மையே செயல்பாட்டில் இருக்கிறது, ஆனாலும் இந்தத் தெய்வீகத்தன்மையானது அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமாக அவருடைய கிரியையானது அவருடைய மனிதத்தன்மையினால் அல்ல, அவருடைய முழுமையான தெய்வீகத்தன்மையினாலேயே செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கிரியையைச் செய்வது அவருடைய மாம்சமாகும். அவர் ஒரு மனிதனாகவும் மற்றும் தேவனாகவும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வாழும் ஒரு தேவனாக மாறுகிறார், மனித வெளிப்புறத் தோற்றத்தில் மற்றும் மனித சாராம்சம் கொண்டவராக ஆனால் அதேவேளையில் தேவனின் சாராம்சம் உடையவராகவும் இருக்கிறார். அவர் தேவனுடைய சாராம்சம் கொண்ட ஒரு மனிதர் என்பதால், அவர் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் மேலானவராகவும், தேவனுடைய கிரியையைச் செய்யக்கூடிய எந்த மனிதனுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். எனவே, அவரைப் போன்ற புறம்பான ஒரு மனிதத் தோற்றமுள்ள அனைவரிலும், மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும், அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்—மற்றவர்கள் அனைவரும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மை இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றும் இல்லை, அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் வேறுபட்டவராக இருக்கிறார்: அவருடைய மாம்சத்தில் அவருக்கு மனிதத்தன்மை மட்டுமல்ல, மிக முக்கியமாக தெய்வீகத்தன்மையும் உள்ளது. அவருடைய மனிதத்தன்மையை அவருடைய மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்திலும் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்துகொள்வது கடினமானதாகும். ஏனென்றால், அவருடைய தெய்வீகத்தன்மையானது அவருக்கு மனிதத்தன்மை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் ஜனங்கள் கற்பனை செய்வது போல இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இதனை ஜனங்கள் காண்பது என்பது மிகவும் கடினமாகும். இன்றும் கூட, மாம்சமாகிய தேவனுடைய உண்மையான சாராம்சத்தை ஆராய்ந்து புரிந்துகொள்வதில் ஜனங்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளது. நான் அதைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகும், உங்களில் பெரும்பாலானோருக்கு இது இன்னமும் ஒரு இரகசியமாகவே இருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். உண்மையில், இந்தப் பிரச்சினையானது மிகவும் எளிதானதாகும்: தேவன் மாம்சமாக மாறுவதால், அவருடைய சாராம்சமானது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது தேவன் என்று, அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.

பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கை மாம்சத்தின் ஒரு இயல்பான வாழ்க்கையாகும். அவர் தமது மாம்சத்தின் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய வார்த்தையைப் பேசுவதற்கும், அல்லது பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும், இதுபோன்ற அசாதாரணமான காரியங்களைச் செய்வதற்குமான அவருடைய அதிகாரத்தை அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கும் நாள்வரையிலும் பெரும்பாலான நிலையில் வெளிப்படுத்தவில்லை. இருபத்தொன்பது வயதிற்கு முன்னர், அதாவது அவர் ஊழியம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு சாதாரண மாம்ச சரீரத்தில் இருந்தார் என்பதற்கு அவரது வாழ்க்கை போதுமான சான்றாகும். இதன் காரணமாகவும், அவர் இன்னும் அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்காததினாலும், ஜனங்கள் அவரிடத்தில் தெய்வீகத்தன்மையிலான எதையும் காணவில்லை, ஒரு சாதாரண மனிதர் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் காணவில்லை—அதனால்தான் ஒரு சாதாரண மனிதர் என்னும் நிலையில் அந்த நேரத்தில் சிலர் அவரை யோசேப்பின் குமாரன் என்று நம்பினார்கள். அவர் ஒரு சாதாரண மனிதனின் குமாரன் என்றுதான் மக்கள் நினைத்தார்கள், அவர் மாம்சமாகிய தேவன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு வழி இல்லாதிருந்தது; அவருடைய ஊழியத்தைச் செய்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தபோதும் கூட, அவரை யோசேப்பின் குமாரன் என்றே பெரும்பாலான ஜனங்கள் கூறினார்கள், ஏனென்றால் அவர் வெளிப்புறத் தோற்றத்தில் சாதாரண மனிதத்தன்மையில் மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவாக இருந்தார். முதலில் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவும், தேவன் முற்றிலுமாய் மாம்சத்தில் வந்துவிட்டார் என்பதையும், அவர் முற்றிலும் சாதாரண மனிதராகிவிட்டார் என்பதையும் நிரூபிப்பதற்காகவே அவரது சாதாரண மனிதத்தன்மை மற்றும் அவரது கிரியை ஆகிய இரண்டும் இருந்தன. அவரது இயல்பான மனிதத்தன்மையானது அவர் தமது கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதற்கான சான்றாகும்; ஏனென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்து, பிணியாளிகளைக் குணப்படுத்தி, சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் பிசாசுகளைத் துரத்தி அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதை நிரூபித்தார். அவர் அற்புதங்களைச் செய்ய முடிந்ததற்கான காரணம், அவருடைய மாம்சம் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருந்தது, மாம்சமானது தேவனுடைய ஆவியானவரை தரித்திருந்தது. தேவனுடைய ஆவியினாலே அவர் இந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தார், அதற்காக அவர் ஒரு மாம்சமல்ல என்று அர்த்தமல்ல. பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் அவருடைய ஊழியத்தில் அவர் செய்ய வேண்டிய கிரியையாக இருந்தது, அது அவருடைய மனிதத்தன்மையில் மறைந்திருக்கும் அவருடைய தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடாக இருந்தது, மேலும் அவர் எந்த அடையாளங்களைக் காண்பித்தாலும் அல்லது அவர் எவ்வாறு தமது அதிகாரத்தை விளங்கப்பண்ணினாலும், அவர் இன்னும் இயல்பான மனிதத்தன்மையிலேயே வாழ்ந்தார் மற்றும் இன்னும் ஒரு சாதாரண மாம்சமுடையவராகவே இருந்தார். அவர் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த நேரம் வரையிலும், அவர் சாதாரண மாம்சத்திற்குள் வசித்தார். கிருபை அளித்தல், பிணியாளிகளைக் குணப்படுத்துவது, மற்றும் பிசாசுகளைத் துரத்துவது யாவும் அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இருந்தன, அவை அனைத்தும் அவருடைய சாதாரண மாம்சத்தில் அவர் செய்த கிரியைகளாகும். சிலுவைக்குச் செல்வதற்கு முன்பு, செய்வது எதுவாக இருந்தாலும் அவர் ஒருபோதும் தமது இயல்பான மனித மாம்சத்திலிருந்து விலகவில்லை. அவர் தேவனாக இருந்து தேவனுடைய சொந்த கிரியையைச் செய்தார், ஆனாலும் அவர் மாம்சமாகிய தேவனாக இருந்ததால், அவர் போஜனம் பண்ணினார், வஸ்திரம் தரித்தார், சாதாரண மனித தேவைகளைக் கொண்டிருந்தார், சாதாரண மனிதனின் அறிவும் மற்றும் ஒரு சாதாரண மனித மனமும் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதற்கான சான்றாகும், இது மனுஷரூபமான தேவனுடைய மாம்சமானது இயல்பான மனிதத்தன்மையுடன் கூடிய மாம்சம் என்பதை நிரூபித்தது, மேலும் இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது. தேவனுடைய முதல் மனுஷரூபமெடுத்தலின் கிரியையை முடிப்பதும், முதல் மனுஷரூபமெடுத்தல் செய்ய வேண்டிய ஊழியத்தை நிறைவேற்றுவதும் அவரது வேலையாயிருந்தது. மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு சாதாரண, இயல்பான மனிதர் தேவன் மட்டுமே செய்யக்கூடிய கிரியையைச் செய்கிறார்; அதாவது, தேவன் தம்முடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை மனிதத்தன்மையில் செய்கிறார், அதன் மூலம் சாத்தானையும் வெற்றி கொள்கிறார். மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். தேவன் தமது முதல் வருகையின் போது, இருபத்தொன்பது வயதிற்கு முன்பு இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால்—அவர் பிறந்தவுடனே அற்புதங்களைச் செய்யக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பேசக் கற்றுக்கொண்டவுடனே பரலோகப் பாஷையையும் பேசக்கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பூமியில் முதன்முதலில் காலடி வைத்த தருணத்திலே அவர் எல்லா உலக விஷயங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால்—அத்தகைய நபரை ஒரு சாதாரண மனிதர் என்று அழைத்திருக்க முடியாது, அத்தகைய மாம்சத்தை மனித மாம்சம் என்று அழைத்திருக்கவும் முடியாது. கிறிஸ்துவின் நிலை இதுவாக இருந்திருந்தால், தேவன் மாம்சமாகியதன் அர்த்தமும் சாராம்சமும் இழக்கப்பட்டுப் போயிருக்கும். அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பது அவர் மாம்சத்தில் அவதரித்த தேவன் என்பதை நிரூபிக்கிறது; அவர் ஒரு சாதாரண மனித வளர்ச்சி செயல்முறைக்கு உட்படுகிறார் என்னும் காரியம் அவர் ஒரு சாதாரண மாம்சமுள்ளவர் என்பதை மேலும் நிரூபிக்கிறது; மேலும், அவர் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவியானவர், மாம்சமாக மாறினார் என்பதற்கு அவருடைய கிரியை போதுமான சான்றாக இருக்கிறது. தேவன் தமது கிரியையினுடைய தேவைகள் நிமித்தம் மாம்சமாகிறார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் கட்ட கிரியையானது மாம்சத்தில் செய்யப்பட வேண்டும், அது சாதாரண மனிதத்தன்மையில் செய்யப்பட வேண்டும். இது “வார்த்தை மாம்சமாகிறது” என்பதற்கும், “வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்பதற்கும் முன்நிபந்தனையாகும், இதுதான் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள மெய்யான உள்ளடக்கமாகும். இயேசு தமது வாழ்நாள் முழுவதும் அற்புதங்களைச் செய்தார் என்றும், பூமியில் அவர் செய்த கிரியை முடியும் வரையிலும் அவர் மனிதத்தன்மையின் எந்த அடையாளத்தையும் காண்பிக்கவில்லை என்றும், அவருக்குச் சாதாரண மனிதத் தேவைகள் அல்லது பலவீனங்கள் அல்லது மனித உணர்ச்சிகளே இல்லை என்றும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அவருக்கு தேவையாயிருக்கவில்லை என்றும் ஜனங்கள் நம்பலாம். அவர்கள் அவரை ஒரு அசாதாரணமான இயற்கைக்கு அப்பாற்பட்ட மனதைக் கொண்டிருக்கிறவராகவும் மனிதரிலிருந்து மிகவும் அகன்ற ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருப்பவராகவும் கற்பனை செய்கிறார்கள். அவர் தேவன் என்பதால், அவர் சாதாரண மனிதர்களைப் போலவே சிந்திக்கவோ வாழவோ கூடாது என்றும், ஒரு சாதாரண மனிதர், ஒரு நேர்மையான மனிதர் மட்டுமே சாதாரண மனித எண்ணங்களைச் சிந்தித்து ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவை அனைத்தும் மனித கருத்துக்கள் மற்றும் மனித எண்ணங்களாகும், மேலும் இந்த கருத்துக்கள் யாவும் தேவனுடைய கிரியையின் மெய்யான நோக்கங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. சாதாரண மனித சிந்தனையானது சாதாரண மனித காரணத்தையும் சாதாரண மனிதத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது; சாதாரண மனிதத்தன்மை மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகளை நிலைநிறுத்துகிறது; மற்றும் மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகள் மாம்சத்தின் இயல்பான வாழ்க்கையை முழுவதுமாக செயல்படுத்துகின்றன. அத்தகைய மாம்சத்தில் கிரியை செய்வதன் மூலம் மட்டுமே தேவன் தாம் மாம்சமாகியதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். மாம்சமாகிய தேவன் மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தார், ஆனால் சாதாரண மனித எண்ணங்களை நினைக்கவில்லை என்றால், இந்த மாம்சமானது மனிதனின் அறிவைக்கொண்டிருக்காது, அதைவிட மெய்யான மனிதத்தன்மையையும் கொண்டிருக்காது. இது போன்ற ஒரு மாம்சம், மனிதத்தன்மை இல்லாமல், மனுஷரூபமெடுத்த தேவன் செய்ய வேண்டிய ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஒரு சாதாரண மனம் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிலைநிறுத்துகிறது; ஒரு இயல்பான மனம் இல்லாமல், ஒருவர் மனிதராக இருக்க மாட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண எண்ணங்களை நினைக்காத ஒரு நபர் மனநோயாளியாவார், மனிதத்தன்மையே இல்லாமல் தெய்வீகத்தன்மை மட்டுமே கொண்ட ஒரு கிறிஸ்துவை மாம்சமாகிய தேவன் என்று சொல்ல முடியாது. அப்படியானால், மாம்சமாகிய தேவன் எப்படி சாதாரண மனிதத்தன்மை இல்லாமல் இருப்பார்? கிறிஸ்துவிற்கு மனிதத்தன்மை இல்லை என்று சொல்வது தேவதூஷணம் அல்லவா? சாதாரண மனிதர்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் ஒரு சாதாரண மனித மனதின் செயல்பாட்டை நம்பியே உள்ளன. அது இல்லாமல், மனிதர்கள் பிறழக்கூடியவர்களாக நடந்துகொள்வார்கள்; கருப்பு மற்றும் வெள்ளை, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கூட அவர்களால் சொல்ல முடியாது; மேலும் அவர்களுக்கு மனித நெறிமுறைகள் மற்றும் தார்மீகக் கொள்கைகள் எதுவும் இருக்காது. இதேபோல், மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போல சிந்திக்கவில்லை என்றால், அவர் ஒரு உண்மையான மாம்சமாக அதாவது ஒரு சாதாரண மாம்சமாக இருந்திருக்க மாட்டார். இத்தகைய சிந்திக்கும் திறனற்ற மாம்சத்தால் தெய்வீகத்தன்மையின் கிரியையை எடுத்துக்கொண்டிருக்க முடிந்திருக்காது. சாதாரண மாம்சத்தின் செயல்களில் அவரால் பொதுவாக ஈடுபட முடிந்திருக்காது, பூமியில் மனிதர்களுடன் சேர்ந்து வாழ முடிந்திருக்காது. எனவே, தேவனுடைய மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம், தேவன் மாம்சத்திற்குள் வருவதன் சாராம்சம் இழக்கப்பட்டிருந்திருக்கும். மாம்சத்தில் இயல்பான தெய்வீகத்தன்மையின் கிரியையை பராமரிக்கவே மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மை உள்ளது; அவரது இயல்பான மனித சிந்தனையானது அவரது இயல்பான மனிதத்தன்மையையும் அவரது இயல்பான அனைத்துச் சரீரச் செயல்பாடுகளையும் நிலைநிறுத்துகிறது. மாம்சத்தில் தேவனுடைய எல்லாக் கிரியைகளையும் நிலைநிறுத்துவதற்காகவே அவருடைய இயல்பான மனிதத்தன்மையானது இருக்கிறது என்று ஒருவர் கூறலாம். இந்த மாம்சம் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனால் மாம்சத்தில் கிரியை செய்ய முடிந்திருக்காது, மேலும் மாம்சத்தில் அவர் செய்ய வேண்டியதை ஒருபோதும் நிறைவேற்ற முடிந்திருக்காது. மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருந்தாலும், அவருடைய செயல் மனித சிந்தனையால் கலப்படம் செய்யப்படவில்லை; அவர் தமது கிரியையை சாதாரண மனித சிந்தனையின் சிந்தனையினால் அல்லாமல், மனிதத்தன்மை மனதுடன் கொண்டிருப்பதற்கான முன்னிபந்தனையின் கீழ், மனிதத்தன்மையின் ஒரு சாதாரண மனதுடன் மேற்கொள்கிறார். அவருடைய மாம்சத்தின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிரியை தருக்கத்தினாலோ அல்லது சிந்தனையினாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய செயல் அவருடைய மாம்சத்தின் மனதினால் சிந்திக்கப்படவில்லை, ஆனால் அவருடைய மனிதத்தன்மையில் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையின் நேரடி வெளிப்பாடாகும். அவருடைய செயல்கள் அனைத்தும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியமாகும், அவற்றில் எதுவுமே அவருடைய மூளையில் தோன்றவில்லை. உதாரணமாக, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, மற்றும் சிலுவையில் அறையப்படுவது அவருடைய மனித மனதில் தோன்றியவைகள் அல்ல, மனித மனதுள்ள எந்தவொரு மனிதனும் அவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது. அதேபோல், இன்றைய வெற்றியின் கிரியையானது மாம்சமாகிய தேவனால் செய்யப்பட வேண்டிய ஒரு ஊழியமாகும், ஆனால் அது ஒரு மனித சித்தத்தின்படியான கிரியை அல்ல, அது அவருடைய தெய்வீகத்தன்மை செய்ய வேண்டிய கிரியையாகும், அது எந்த மாம்ச மனிதனும் செய்ய முடியாத கிரியையாக இருக்கிறது. ஆகவே மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்க வேண்டும், சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர் மனிதத்தன்மையில் தனது கிரியையை சாதாரண மனதுடன் செய்ய வேண்டும். இது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் சாராம்சமாகும், அதாவது மாம்சமாகிய தேவனின் சாராம்சமாகும்.

இயேசு கிரியையைச் செய்வதற்கு முன்பு, அவர் தமது இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவர் தேவன் என்று ஒருவராலும் சொல்ல முடியவில்லை, அவர் மாம்சமாகிய தேவன் என்பதை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை; ஜனங்கள் அவரை முற்றிலும் ஒரு சாதாரண மனிதராக அறிந்தார்கள். தேவன் மாம்சமாகினார் என்பதற்கும், கிருபையின் காலம் என்பது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் காலமாகும், ஆவியானவருடைய கிரியையின் காலம் அல்ல என்பதற்கும் அவரது முற்றிலும் சாதாரண, இயல்பான மனிதத்தன்மை சான்றாகும். மாம்சமாகிய தேவனுடைய காலத்தில் அவருடைய மாம்சமானது ஆவியின் எல்லா கிரியைகளையும் செய்தது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் முழுமையாக உணரப்பட்டார் என்பதற்கான சான்றாகும். சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். “உணரப்படுவது” என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும். அவருடைய முதல் மனுஷரூபமெடுத்தலின் போது, பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் தேவனுக்கு அவசியமாக இருந்தது, ஏனென்றால் மீட்பதே அவருடைய கிரியையாக இருந்தது. முழு மனித இனத்தையும் மீட்பதற்கு, அவர் இரக்கமுள்ளவராகவும் மன்னிப்பவராகவும் இருக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் செய்த கிரியை, பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் ஆகும், இது மனிதனை பாவத்திலிருந்தும் அசுத்தத்திலிருந்தும் இரட்சிப்பதற்கான முன்னோடியாயின. இது கிருபையின் காலம் என்பதால், பிணியாளிகளைக் குணப்படுத்துவது அவருக்கு அவசியமாக இருந்தது, இதன் மூலம் அந்த காலத்தில் கிருபையின் பிரதிநிதிகளாக இருந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார்—ஏனென்றால் கிருபையின் காலமானது கிருபையை வழங்குவதை மையமாகக் கொண்டிருந்தது, சமாதானம், சந்தோஷம், மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், அனைத்தும் இயேசுவில் ஜனங்கள் வைத்த விசுவாசத்தின் அடையாளங்களும். அதாவது, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, கிருபையை அளிப்பது ஆகியவை கிருபையின் காலத்தில் இயேசுவினுடைய மாம்சத்தின் இயல்பான திறன்களாக இருந்தன, அவை மாம்சத்தில் ஆவியானவர் உணர்ந்த கிரியையாகும். ஆனால் அவர் அத்தகைய கிரியையைச் செய்யும்போது, அவர் மாம்சத்தில் வாழ்ந்து வந்தார், மாம்சத்தை விட்டு வெளியேறவில்லை. அவர் என்னவிதமான குணப்படுத்தும் செயல்களைச் செய்தாலும், அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையையேக் கொண்டிருந்தார், இன்னும் ஒரு சாதாரண மனித வாழ்க்கையையே வாழ்ந்தார். மாம்சமாகிய தேவனுடைய காலத்தில் மாம்சம் ஆவியின் எல்லாக் கிரியைகளையும் செய்ததாக நான் சொல்லக் காரணம், அவர் என்ன கிரியை செய்தாலும், அவர் அதை மாம்சத்தில் செய்தார். ஆனால் அவருடைய கிரியையின் காரணமாக, ஜனங்கள் அவருடைய மாம்சத்தை ஒரு முழுமையான சரீரத்தின் சாராம்சமாகக் கருதவில்லை, ஏனென்றால் இந்த மாம்சம் அதிசயங்களைச் செய்யக்கூடும், மேலும் சில விசேஷித்த தருணங்களில் மாம்சத்தை மீறிய காரியங்களையும் செய்ய முடியும். நிச்சயமாக, இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் தமது ஊழியத்தைத் தொடங்கியபின் நிகழ்ந்தன, அதாவது அவர் நாற்பது நாட்கள் சோதிக்கப்பட்டார் அல்லது மறுரூப மலையில் மறுரூபமானார். எனவே இயேசுவுடன், தேவன் மாம்சமாகியதன் அர்த்தம் பூர்த்தி செய்யப்படவில்லை, ஆனால் ஓரளவுக்கு மட்டுமே நிறைவேறியது. அவருடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் மாம்சத்தில் வாழ்ந்த வாழ்க்கை எல்லா வகையிலும் முற்றிலும் இயல்பானதாக இருந்தது. அவர் கிரியையைத் தொடங்கிய பிறகு, அவர் தனது மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தார். அவருடைய செயல் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடாக இருந்ததால், அது மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகளை மிஞ்சியதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சமானது, மாம்சம் மற்றும் இரத்தமுமுள்ள மனிதர்களிடமிருந்து வேறுபட்டது ஆகும். நிச்சயமாக, அவருடைய அன்றாட வாழ்க்கையில், அவருக்கு உணவு, உடை, உறக்கம் மற்றும் உறைவிடம் தேவையாயிருந்தது, அவருக்கு எல்லா சாதாரண தேவைகளும் தேவைப்பட்டது, மற்றும் ஒரு சாதாரண மனிதனின் உணர்வு மற்றும் சிந்தனையைப் போலவே இருந்தது. அவர் செய்த கிரியையானது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பதைத் தவிர, ஜனங்கள் அவரை ஒரு சாதாரண மனிதராகவே வைத்திருந்தார்கள். உண்மையில், அவர் என்ன செய்தாலும், அவர் ஒரு சாதாரண மற்றும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்ந்தார், மேலும் அவர் அந்த கிரியையைச் செய்யும்போது, அவருடைய உணர்வு குறிப்பாக இயல்பானதாகவே இருந்தது, வேறு எந்த சாதாரண மனிதனின் எண்ணங்களையும் விட அவருடைய எண்ணங்கள் குறிப்பாக தெளிவானவையாக இருந்தன. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு அத்தகைய சிந்தனையும் உணர்வும் இருப்பது அவசியமாக இருந்தது, ஏனெனில் தெய்வீகத்தன்மையின் கிரியை ஒரு மாம்சத்தால், அதாவது அதன் உணர்வு மிகவும் இயல்பானதாகவும் மற்றும் அதன் எண்ணங்கள் மிகவும் தெளிவானவையாகவும் இருக்கும் மாம்சத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது—இந்த வழியில் மட்டுமே அவருடைய மாம்சம் தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்த முடிந்தது. இயேசு பூமியில் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில், அவர் தமது இயல்பான மனிதத்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டார், ஆனால் அவருடைய மூன்றரை ஆண்டு ஊழியத்தின் போது அவர் செய்த கிரியையின் காரணமாக, அவர் தமது இயல்பை மிகவும் மீறியவர் என்று மக்கள் நினைத்தார்கள், மேலும் அவர் முன்பை விட இயற்கைக்கு அப்பாற்பட்டவர் என்றும் மனித இயல்பிலிருந்து அகன்றவர் என்றும் நினைத்தார்கள். உண்மையில், இயேசு தமது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் தொடங்கியதற்குப் பின்னும் இயேசுவின் சாதாரண மனிதத்தன்மை மாறாமல் இருந்தது; அவருடைய மனிதத்தன்மை முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது, ஆனால் அவர் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் தொடங்கியதற்குப் பின்னும் இருந்த வித்தியாசத்தின் காரணமாக, அவருடைய மாம்சத்தைப் பற்றிய இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் வெளிவந்தன. ஜனங்கள் என்ன நினைத்தாலும், மாம்சமாகிய தேவன் தமது மெய்யான, சாதாரண மனிதத்தன்மையை முழு நேரத்திலும் தக்க வைத்துக் கொண்டார், ஏனென்றால் தேவன் மனுஷரூபமெடுத்ததிலிருந்து, அவர் மாம்சத்தில் வாழ்ந்தார், அந்த மாம்சம் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மையை அழித்துவிட முடியாது, ஏனென்றால் மனிதத்தன்மையானது மாம்சத்தின் அடிப்படை சாராம்சமாகும். இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு, அவருடைய மாம்சம் முற்றிலும் இயல்பாகவே இருந்தது, எல்லா சாதாரண மனித செயல்களிலும் ஈடுபட்டது; அவர் குறைவான அளவேனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் தோன்றவில்லை, எந்த அற்புதமான அடையாளங்களையும் காண்பிக்கவில்லை. அந்த நேரத்தில், அவர் வெறுமனே தேவனை தொழுதுகொண்ட ஒரு பொதுவான மனிதராக இருந்தார், அவருடைய நாட்டம் மிகவும் நேர்மையானதாகவும் யாரையும் விடவும் கபடமற்றதாகவும் இருந்தது. அவருடைய முற்றிலும் இயல்பான மனிதத்தன்மையானது இப்படித்தான் வெளிப்பட்டது. ஏனென்றால், அவருடைய ஊழியத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் எந்த கிரியையும் செய்யவில்லை, அவருடைய அடையாளத்தை யாரும் அறிந்திருக்கவில்லை, அவருடைய மாம்சம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது என்று யாராலும் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர் ஒரு அதிசயத்தைக் கூடச் செய்யவில்லை, சிறிதளவேனும் கூட தேவனுடைய சொந்த கிரியையைச் செய்யவில்லை. இருப்பினும், அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின், அவர் சாதாரண மனிதத்தன்மையின் வெளிப்புறத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டார், இன்னும் சாதாரண மனித காரணத்தோடு வாழ்ந்தார், ஆனால் அவர் தேவன் மட்டுமே செய்யக்கூடிய கிரியையைச் செய்யத் தொடங்கியதால், கிறிஸ்துவின் ஊழியத்தை ஏற்றுக்கொண்டு, மனிதர்களால் செய்ய இயலாத, மாம்சம் மற்றும் இரத்தமுள்ள மனிதர்களால் கூடாத செயல்களை, ஒரு மாம்சத்தில் செய்ததால், ஜனங்கள் அவருக்கு சாதாரண மனிதத்தன்மை இல்லை என்றும் முற்றிலும் சாதாரண மாம்சம் அல்ல, ஆனால் முழுமையற்ற மாம்சம் என்றும் கருதினார்கள். அவர் செய்த கிரியையின் நிமித்தமாக, சாதாரண மனிதத்தன்மை இல்லாத மாம்சத்தில் அவர் ஒரு தேவன் என்று மக்கள் சொன்னார்கள். தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை ஜனங்கள் புரிந்து கொள்ளாததால், அவர்களுடைய அத்தகைய புரிதல் தவறானதாக இருந்தது. மாம்சத்தில் தேவன் வெளிப்படுத்திய கிரியையானது தெய்வீகத்தன்மையின் கிரியையாகும், இது சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட ஒரு மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து ஜனங்களின் இந்தத் தவறான புரிதல் எழுந்தது. தேவன் மாம்சத்தை உடுத்தியிருந்தார், அவர் மாம்சத்திற்குள் வசித்தார், அவருடைய மனிதத்தன்மையில் அவர் செய்த கிரியை அவருடைய மனிதத்தன்மையின் இயல்பை மறைத்தது. இந்தக் காரணத்திற்காக, தேவனுக்கு மனிதத்தன்மை இல்லை, ஆனால் தெய்வீகத்தன்மை மட்டுமே இருக்கிறது என்று ஜனங்கள் நம்பினார்கள்.

தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல் கட்டத்தை மட்டுமே அவர் செய்து முடித்தார். ஆகவே, மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதற்காக, தேவன் மீண்டும் மாம்சத்திற்கு திரும்பியுள்ளார், மாம்சத்தின் இயல்பான தன்மையிலும் யதார்த்தத்திலும் வசித்து வருகிறார், அதாவது தேவனுடைய வார்த்தையை முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரண மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவர் மாம்சத்தில் செய்து முடிக்காமல் விட்டுப்போன கிரியையை முடிக்கிறார். முக்கியமாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தைப் போன்றதுதான், ஆனால் அது இன்னும் உண்மையானது மற்றும் முதலில் இருந்ததை விட சாதாரணமானது. இதன் விளைவாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது கடந்து செல்லும் துன்பமானது முதல் மாம்சம் கடந்து சென்ற துன்பத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் இந்த துன்பம் மாம்சத்தில் அவர் செய்த ஊழியத்தின் விளைவாகும், இது சீர்கெட்ட மனிதனின் துன்பத்தைப் போலல்லாததாகும். இது அவருடைய மாம்சத்தின் இயல்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து உருவாகிறது. அவர் தம்முடைய ஊழியத்தை முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான மாம்சத்தில் செய்வதால், மாம்சமானது பெரும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இந்த மாம்சம் எவ்வளவு அதிகமாக சாதாரணமானதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவருடைய ஊழியத்தின் செயல்பாட்டில் அவர் அதிகம் வேதனையை அடைவார். தேவனுடைய கிரியையானது மிகவும் பொதுவான மாம்சத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. ஏனென்றால், அவருடைய மாம்சம் இயல்பானது, மேலும் மனிதனை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும், அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மாம்சத்தை விட மிகப் பெரிய அளவில் பாடுபடுகிறார்—மேலும் இந்த பாடுகள் யாவும் அவருடைய மாம்சத்தின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையிலிருந்து உருவாகின்றன. இரண்டு மனுஷரூபமான மாம்சங்களும் தங்கள் ஊழியங்களைச் செய்யும்போது ஏற்பட்ட பாடுகளிலிருந்து, மாம்சமாகியதன் சாராம்சத்தை ஒருவர் கண்டுகொள்ளலாம். மாம்சம் எந்த அளவிற்கு சாதாரணமானதாக இருக்கிறதோ, கிரியையைச் செய்யும்போது அவர் அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களைச் சகிக்க வேண்டும்; கிரியையை மேற்கொள்ளும் மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஜனங்களின் கருத்துக்கள் மற்றும் அதிக ஆபத்துகள் அவருக்கு ஏற்படக்கூடும். இன்னும், மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையானதோ, மேலும் சாதாரண மனிதனின் தேவைகளையும் முழுமையான உணர்வையும் மாம்சம் எந்த அளவிற்கு கொண்டிருக்கிறதோ, மாம்சத்தில் தேவனுடைய கிரியையை அவர் மேற்கொள்வதில் அவ்வளவு அளவிற்கு அதிக திறன் உள்ளவராக இருக்கிறார். இயேசுவின் மாம்சந்தான் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மாம்சத்தை அவர் பாவநிவாரணப்பலியாக ஒப்புக்கொடுத்தார்; சாதாரண மனிதத்தன்மையுடன் கூடிய ஒரு மாம்சத்தின் மூலம்தான் அவர் சாத்தானைத் தோற்கடித்து மனிதனை முழுமையாக சிலுவையிலிருந்து இரட்சித்தார். தேவன் தமது இரண்டாவது மனுஷரூபமெடுத்தலில் ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்து சாத்தானைத் தோற்கடிப்பது ஒரு முழுமையான மாம்சமாக இருக்கிறது. முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான ஒரு மாம்சம் மட்டுமே ஜெயங்கொள்ளுதலின் கிரியையை முழுவதுமாக செய்ய முடியும் மற்றும் வல்லமையான சாட்சியத்தை அளிக்க முடியும். அதாவது, மனிதனை இரட்சிப்பது மாம்சத்தில் தேவனுடைய யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மை மூலம் திறம்படச் செய்யப்படுகிறது, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அல்ல. இந்த மாம்சமாகிய தேவனுடைய ஊழியம் என்னவென்றால் பேசுவதும், அதன் மூலம் மனிதனை ஆட்கொண்டு பரிபூரணமாக்குவதும் ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சத்தில் உணரப்பட்ட ஆவியானவரின் கிரியை, அதாவது மாம்சத்தின் கடமை என்னவென்றால் பேசுவதும் அதன் மூலம் ஜெயங்கொள்வதும், வெளிப்படுத்துவதும், பரிபூரணமாக்குவதும், மனிதனை முற்றிலுமாக புறம்பாக்குவதும் ஆகும். எனவே, ஜெயங்கொள்ளுதலின் கிரியையில் தான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேற்றப்படும். மீட்பின் ஆரம்ப கிரியையானது மாம்சமாகியதன் கிரியையின் ஆரம்பம் மட்டுமே; ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்யும் மாம்சமானது மாம்சமாகியதன் முழு கிரியையையும் நிறைவு செய்யும். பாலினத்தில், ஒருவர் ஆண் மற்றவர் பெண், எனவே தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை பூர்த்திசெய்து, தேவனைப் பற்றிய மனிதனின் கருத்துக்களை அகற்றுவார்: தேவன் ஆணும் பெண்ணுமாக மாறமுடியும், முக்கியமாக, மாம்சத்தில் மனுஷரூபமாக வந்த தேவன் பாலினமற்றவர். அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் உருவாக்கினார், அவரைப் பொறுத்தவரை பாலினத்தில் பிரிவு இல்லை. கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதில்லை, இதனால் கிரியை அதன் முடிவுகளை வார்த்தைகளின் மூலம் அடையும். இதற்குக் காரணம், இந்த காலத்தில் மாம்சமாகிய தேவனுடைய கிரியை என்னவென்றால் பிணியாளிகளைக் குணப்படுத்துவதும் பிசாசுகளைத் துரத்துவதும் அல்ல, ஆனால் பேசுவதன் மூலம் மனிதனை ஆட்கொள்வதே ஆகும், அதாவது தேவனுடைய இந்த மனுஷரூபமெடுத்த மாம்சத்தால் சொந்த பூர்வீக திறன் என்று கூறுவது வார்த்தைகளை பேசுவதற்கும் மனிதனை ஆட்கொள்வதற்குமே ஆகும், பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும் பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல. சாதாரண மனிதத்தன்மையில் அவர் செய்யும் கிரியை அற்புதங்களைச் செய்வதல்ல, பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல, ஆனால் பேசுவதற்காகும், எனவே இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தை விட மிகவும் சாதாரணமானதாக ஜனங்களுக்குத் தோன்றுகிறது. தேவன் மாம்சமாகியது பொய் அல்ல என்பதை ஜனங்கள் காண்கிறார்கள்; ஆனால் இந்த மாம்சமாகிய தேவன் மாம்சமாகிய இயேசுவிலிருந்து வேறுபட்டவர், அவர்கள் இருவரும் மாம்சமாகிய தேவனாக இருந்தாலும், அவர்கள் இருவரும் முற்றிலும் ஒன்றல்ல. இயேசு இயல்பான மனிதத்தன்மையையும் சாதாரண மனிதத்தன்மையையும் கொண்டிருந்தார், ஆனால் அவரைப் பல அடையாளங்களும் அதிசயங்களும் தொடர்ந்திருந்தன. இந்த மாம்சமாகிய தேவனில், மனித கண்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பதில்லை, பிணியாளிகளை குணப்படுத்துவதோ, பிசாசுகளைத் துரத்துவதோ, கடல்மேல் நடப்பதோ, நாற்பது நாட்கள் உபவாசம் இருப்பதோ இல்லை…. இயேசு செய்த அதே கிரியையை அவர் செய்வதில்லை, ஏனெனில், முக்கியமாக, அவருடைய மாம்சம் இயேசுவிலிருந்து வேறுபட்டது என்பதற்காக அல்ல, ஆனால் பிணியாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளைத் துரத்துவது அவருடைய ஊழியமல்ல. அவர் தமது சொந்தக் கிரியையை பாழ்படுத்துவதில்லை, மேலும் தமது சொந்த கிரியைக்கு அவரே இடையூறு செய்வதில்லை. அவர் தமது உண்மையான வார்த்தைகளின் மூலம் மனிதனை ஆட்கொள்வதால், அவர் அவனை அற்புதங்களால் அடக்க வேண்டிய அவசியமில்லை, எனவே இந்தக் கட்டம் மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதே ஆகும். இன்று நீ காணும் மாம்சமாகிய தேவன் முற்றிலும் ஒரு மாம்சமாவார், அவரில் இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் மற்றவர்களைப் போலவே நோய்வாய்ப்படுகிறார், மற்றவர்களைப் போலவே உணவும் உடைகளும் தேவைப்படுகின்றன; அவர் முற்றிலும் ஒரு மாம்சமாவார். இந்த காலத்தில், மாம்சமாகிய தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியிருந்தால், அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தியிருந்தால், பிசாசுகளைத் துரத்தியிருந்தால், அல்லது ஒரே வார்த்தையால் கொல்ல முடிந்திருந்தால், ஜெயங்கொள்ளுதலின் கிரியை எவ்வாறு மேற்கொண்டிருக்க முடியும்? புறஜாதி தேசங்களிடையே இந்தக் கிரியையானது எவ்வாறு பரவக்கூடும்? பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் கிருபையினுடைய காலத்தின் கிரியை, இது மீட்பின் கிரியையின் முதல் படியாகும், இப்போது தேவன் மனிதனை சிலுவையிலிருந்து இரட்சித்திருந்தால், அவர் இனி அந்த கிரியையைச் செய்வதில்லை. கடைசி நாட்களில், இயேசுவைப் போலவே ஒரு “தேவன்” தோன்றியிருந்தால், அதாவது பிணியாளிகளைக் குணப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மனிதனுக்காக சிலுவையில் அறையப்பட்டிருந்தார் என்றால், அந்த “தேவன்” வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய விளக்கத்திற்கு ஒத்தவராகவும், மனிதன் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானவராகவும் இருந்தாலும், அதன் சாராம்சத்தில், தேவ ஆவியானவர் அணிந்துகொண்ட மாம்சமாக இருக்காது, மாறாக ஒரு அசுத்த ஆவி அணிந்துகொண்ட மாம்சமாகவே இருக்கும். ஏனென்றால், அவர் ஏற்கனவே முடித்ததை மீண்டும் செய்யக்கூடாது என்பது தேவனுடைய கொள்கையாக இருக்கிறது. எனவே, தேவனுடைய இரண்டாவது மனுஷரூபமெடுத்தலின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டது. கடைசி நாட்களில், ஒரு இயல்பான, சாதாரண மாம்சத்தில் ஜெயங்கொள்ளும் கிரியையை தேவன் உணர்கிறார்; அவர் பிணியாளிகளை குணப்படுத்தமாட்டார், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்படமாட்டார், ஆனால் மாம்சத்தில் வெறுமனே வார்த்தைகளைப் பேசுகிறார், மற்றும் மாம்சத்தில் மனிதனை வெற்றி கொள்கிறார். அத்தகைய மாம்சம் மட்டுமே மாம்சமாகிய தேவனுடைய மாம்சமாகும்; அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மாம்சத்தில் தேவனுடைய கிரியையை முடிக்க முடியும்.

இந்தக் கட்டத்தில் மாம்சமாகிய தேவன் பாடுகளை சகிக்கிறாரோ அல்லது அவருடைய ஊழியத்தைச் செய்கிறாரோ, மாம்சமாகியதன் அர்த்தத்தை முடிக்கவே அவர் அவ்வாறு செய்கிறார், ஏனென்றால் இது தேவனுடைய கடைசி மனுஷரூபமெடுத்தலாகும். தேவன் இரண்டு முறை மட்டுமே மனுஷனாக அவதரிக்க முடியும். மூன்றாவது முறையாக இருக்க முடியாது. முதல் அவதரிப்பு ஆண், இரண்டாவது பெண், எனவே தேவனுடைய மாம்சத்தின் உருவம் மனிதனின் மனதில் நிறைவடைகிறது; மேலும், இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஏற்கனவே மாம்சத்தில் தேவனுடைய கிரியையை முடித்துவிட்டன. முதன்முறையாக, மாம்சமாகியதன் அர்த்தத்தை நிறைவேற்றுவதற்காக மாம்சமாகிய தேவன் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருந்தார். இந்த காலத்திலும் கூட அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார், ஆனால் இந்த மாம்சமாகியதன் அர்த்தம் வேறுபட்டது: இது ஆழமானது, அவருடைய கிரியை மிகவும் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் மீண்டும் மாம்சமாக மாறியதற்கான காரணம் மாம்சமாகியதன் அர்த்தத்தை நிறைவு செய்வதாகும். தேவன் தம்முடைய கிரியையின் இந்தக் கட்டத்தை முழுவதுமாக முடித்தவுடன், மாம்சமாகியதன் முழு அர்த்தமும், அதாவது, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையடையும், மேலும் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியை எதுவும் இருக்காது. அதாவது, இனிமேல் தேவன் தம்முடைய கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வரமாட்டார். மனிதகுலத்தை இரட்சிப்பதற்கும், பரிபூரணப்படுத்துவதற்கும் மட்டுமே தேவன் மாம்சமாகியதன் கிரியையைச் செய்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையின் நிமித்தமாக அல்லாமல், தேவன் மாம்சத்திற்குள் வருவது வழக்கமல்ல. கிரியை செய்ய மாம்சத்திற்குள் வருவதன் மூலம், தேவன் ஒரு மாம்சமானவர், ஒரு சாதாரண மனிதர், ஒரு இயல்பான மனிதர் என்று சாத்தானுக்குக் காண்பிக்கிறார்—ஆனாலும் அவரால் உலகம் முழுவதையும் வெற்றிபெற முடியும், சாத்தானை வெல்ல முடியும், மனிதகுலத்தை மீட்க முடியும், மனிதகுலத்தை வெற்றி கொள்ள முடியும்! சாத்தானுடைய வேலையின் குறிக்கோள் மனிதகுலத்தை சீர்கெட்டுப்போகப் பண்ணுவதே ஆகும், அதே நேரத்தில் தேவனுடைய குறிக்கோள் மனிதகுலத்தை இரட்சிப்பதாகும். சாத்தான் மனிதனை பாதாளத்தில் சிக்க வைக்கிறான், அதே சமயம் தேவன் அவனை மீட்கிறார். சாத்தான் எல்லா மனிதர்களையும் தன்னை வணங்கச் செய்கிறான், அதே சமயம் தேவன் அவர்களைத் தம் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவார், ஏனென்றால் அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர். இந்த கிரியைகள் அனைத்தும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகள் மூலம் அடையப்படுகின்றன. முக்கியமாக, அவருடைய மாம்சம் என்பது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாகும், மற்றும் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சம் இல்லாமல், மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான முடிவுகளை தேவனால் அடைய முடியவில்லை, அவருடைய மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மை இல்லாமல், மாம்சத்தில் அவர் செய்த கிரியையால் இந்த முடிவுகளை இன்னும் அடைய முடியவில்லை. தேவன் மாம்சமாகியதன் சாராம்சம் என்னவென்றால், அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையெனில் அது மனுஷரூபமெடுத்தலில் தேவனுடைய மெய்யான நோக்கத்தை எதிர்க்கிறதாய் இருக்கும்.

இயேசுவின் கிரியையில் மாம்சமாகியதன் அர்த்தம் முற்றுபெறவில்லை என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனெனில் வார்த்தை முற்றிலும் மாம்சமாக மாறவில்லை. இயேசு செய்தது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதி மட்டுமே; அவர் மீட்பின் கிரியையை மட்டுமே செய்தார், மனிதனை முழுமையாக ஆதாயப்படுத்தும் கிரியையைச் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக, தேவன் கடைசி நாட்களில் மீண்டும் மாம்சமாகியிருக்கிறார். கிரியையின் இந்த நிலையும் கூட ஒரு சாதாரண மாம்சத்தில் செய்யப்படுகிறது; இது முற்றிலும் சாதாரணமான ஒரு மனிதனால் செய்யப்படுகிறது, அவருடைய மனிதத்தன்மையானது சிறிதளவேனும் மீறப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஒரு முழுமையான மனிதராகிவிட்டார்; அவர் தேவனுடைய அடையாளம், ஒரு முழுமையான மனிதர், கிரியையைச் செய்கிற ஒரு முழுமையான மாம்சமாவார். மனித கண்கள் ஒரு வரம்பு மீறாத மாம்ச உடலையும், பரலோக மொழியைப் பேசக்கூடிய, அதிசயமான அடையாளங்களைக் காண்பிக்காத, அதிசயங்களைச் செய்யாத, பெரிய அரங்குகளில் மதத்தைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தாத ஒரு சாதாரண மனிதரையும் காண்கின்றன. ஜனங்களைப் பொறுத்தவரை, மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையைப் போலல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் தெரிகிறது, இரண்டுக்கும் பொதுவானது எதுவுமில்லை என்று தோன்றுகிறது, முதல் கிரியையில் எதுவும் இந்த காலத்தில் காண முடியாது. மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சத்தின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றாக இல்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. அவற்றின் ஆதாரம் ஒன்றா என்பது மாம்சப்பகுதியால் செய்யப்படும் கிரியையின் தன்மையைப் பொறுத்தது, அவற்றின் வெளிப்புற தோற்றத்தில் அல்ல. அவருடைய கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் இரண்டு முறை அவதரித்திருக்கிறார், இரண்டு முறையும் மாம்சமாகிய தேவனுடைய கிரியையானது ஒரு புதிய யுகத்தைத் துவக்குகிறது, ஒரு புதிய கிரியையைத் தொடங்குகிறது; மனுஷ அவதரிப்புகள் ஒன்றையொன்று புகழுரை சூட்டிக்கொள்கின்றன. இரண்டு மாம்சங்களும் உண்மையில் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று மனித கண்களால் சொல்ல முடியாது. இது மனிதக் கண்ணிற்கும் அல்லது மனித மனதிற்கும் உள்ள திறனுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் போகிறது. ஆனால் அவற்றின் சாராம்சத்தில், அவை இரண்டும் ஒன்றே, ஏனென்றால் அவற்றின் கிரியை ஒரே ஆவியானவரிடமிருந்து உருவாகிறது. இரண்டு மனுஷரூபமெடுத்த மாம்சங்களும் ஒரே மூலத்திலிருந்து எழுகின்றனவா என்பதை யுகம் மற்றும் அவை பிறந்த இடம், அல்லது இதுபோன்ற பிற காரணிகளால் தீர்மானிக்க முடியாது, ஆனால் அவர்கள் வெளிப்படுத்திய தெய்வீகத்தன்மையின் கிரியைகளால் அறிந்துகொள்ள முடியும். மனுஷரூபமெடுத்த இரண்டாவது மாம்சம் இயேசு செய்த எந்த கிரியையும் செய்வதில்லை, ஏனென்றால் தேவனுடைய கிரியை வழக்கத்திற்கு கட்டுப்படாது, ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சம் ஜனங்களின் மனதில் முதல் மாம்சத்தின் தோற்றத்தை ஆழமாக்குவதையோ அல்லது திடப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதை பூர்த்திசெய்து முழுமையாக்குவதையும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதையும், ஜனங்களின் இதயங்களில் இருக்கும் அனைத்து விதிகளையும் முறிப்பதையும், அவர்களின் இதயங்களில் இருக்கும் தேவனுடைய தவறான உருவங்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. தேவனுடைய சொந்த கிரியையின் எந்தவொரு தனிப்பட்ட கட்டமும் மனிதனைப் பற்றிய முழுமையான அறிவை வழங்க முடியாது என்று கூறலாம்; ஒவ்வொன்றும் ஒரு பகுதியை மட்டுமே தருகிறது, முழுமையை அல்ல. தேவன் தமது மனநிலையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தாலும், மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட திறமை காரணமாக, தேவனைப் பற்றிய அவனது அறிவு இன்னும் முழுமையடையாததாக இருக்கிறது. தேவனுடைய மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த மனித மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை; மேலும், அவருடைய கிரியையின் ஒரு கட்டம் மட்டுமே எவ்வாறு தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியும்? அவர் தமது இயல்பான மனிதத்தன்மையினுடைய மறைவின் கீழ் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மேலும் ஒருவர் அவருடைய தெய்வீகத்தின் வெளிப்பாடுகளால் அவரை அறிந்திருக்க முடியும், அவருடைய உடலின் புறத்தோற்றத்தால் அல்ல. தேவன் தமது பல்வேறு வேலையின் மூலம் மனிதனை அறிந்துகொள்ள அனுமதிக்க மாம்சத்திற்குள் வருகிறார், அவருடைய கிரியையின் இரண்டு கட்டங்களும் ஒரே மாதிரியாக இல்லை. இந்த வழியில் மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடைய கிரியையைப் பற்றிய முழு அறிவைக் கொண்டிருக்க முடியும், ஒரே ஒரு அம்சத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. மனுஷரூபமெடுத்த இரண்டு மாம்சங்களின் கிரியையும் வேறுபட்டிருந்தாலும், மாம்சப் பகுதிகளின் சாராம்சமும், அவற்றின் கிரியையின் மூலமும் ஒரே மாதிரியானவை; கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்வதற்கு அவை இருக்கின்றன, இரண்டு வெவ்வேறு யுகங்களில் எழுகின்றன. எதுவாக இருந்தாலும், மனுஷரூபமெடுத்த தேவனுடைய மாம்சங்கள் ஒரே சாராம்சத்தையும் ஒரே தோற்றத்தையும் பகிர்ந்து கொள்கின்றன—இது யாராலும் மறுக்க முடியாத ஒரு சத்தியமாகும்.

முந்தைய: சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது

அடுத்த: தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக